mayanginen mannan inke Serial Stories

மயங்கினேன் மன்னன் இங்கே-3

3

 

 

” வாங்கம்மா நல்லாயிருக்கீகளா …? ” விசாரித்த வேலைக்கார பெண்ணிடம் ” அண்ணன் வந்திருக்கறாரா ? ” ஆர்வமாக கேட்டாள் சொப்னா .

 

” ஆமாங்க .ராயர் எங்க ஐயாவை பார்க்க வந்தாருங்க .அங்கன ஆபிஸ் ரூம்லதான் மாமனாரும் , மருமகனும்  பேசிக்கிட்டிருக்காக. நீங்க உள்ளாற போயி உட்காருங்க .சின்னம்மா உள்ளேதான் இருக்கிறாக “

 

” ம்க்கும் ..அதானே பார்த்தேன். அண்ணனுக்காவது ரொமான்சாவது. அவருக்கு எந்நேரமும் பிசினஸ்தான் …” சொப்னா சலித்தாள் .

 

” என்னடி இப்படி சலித்துக் கொள்கிறாய் ..? “

 

” இல்லைடி இங்கே அண்ணனை பார்த்ததும் ஒரு வகையில் கொஞ்சம் எனக்கு சந்தோசமாகவே இருந்தது. அண்ணன் எப்போது பார்த்தாலும் அந்த வேலை …இந்த வேலை என்று அலைந்து கொண்டே இருப்பார் . அவரை பற்றியே யோசிக்க மாட்டார் . அம்மா , பாட்டி , பிசினஸ் , ஊர் …என இதே யோசனைகள் தான். இப்போது மேரேஜ் பிக்ஸ் ஆன பிறகாவது மற்ற வேலைகளை கொஞ்சம் குறைத்துக் கொண்டு அவரது வாழ்க்கையையும் கொஞ்சம் பார்க்க கூடாதா என எனக்கு தோன்றும் . அதுதான் இன்று இங்கே அண்ணனை பார்த்ததும் தன் வருங்கால மனைவியை பார்க்கத்தான் வந்துவிட்டாரே …என கொஞ்சம் சந்தோசப்பட்டு விட்டேன் …”

 

” ப்ச் ..என்னடி அப்படி அத்தனை வேலை இருக்கிறவர் எப்படி இது போல் வெட்டி வேலைகளையெல்லாம் பார்க்க முடியும் ..? “

 

” லவ் பண்றது வெட்டி வேலையாடி …? “

 

” ல…லவ்வா …அ …அது எதுக்கு …? அதுதான் கல்யாணமே பண்ண போறாங்களே …” ராயரின் காதலை சஷ்டியால் ஒத்துக் கொள்ளவே முடியவில்லை.

 

” முட்டாள் …லவ் பண்ணாமல் எப்படிடி கல்யாணம்…? அதுவும் சந்திராம்பிகை அண்ணியை பார்த்தால் லவ் பண்ணாமல் இருக்கவே முடியாது ….”

 

சஷ்டியின் இதழ்கள் இறுகின. அவர்கள் வீட்டிற்குள் வந்திருக்க, சந்திராம்பிகையின் தாய் அவர்களை வரவேற்று அமர வைத்தாள்.  சந்திராம்பிகை இப்போது வந்துவிடுவாள் எனச் சொல்லிவிட்டு உள்ளே போனாள் .

 

” என்னடி ஒத்துக்க முடியலையா …? நீயே பாரு …ஹாய் அண்ணி …” ரகசிய குரலில் சஷ்டியிடம் பேசி விட்டு வெளியிலிருந்து அந்த  அறைக்குள் நுழைந்த பெண்ணிற்கு ஹாய் சொன்னாள் சொப்னா .

 

வந்த பெண்ணை பார்த்ததும் உண்மையிலேயே சஷ்டியின் விழிகள் விரிந்தன. அந்தப் பெண் சொப்னாவின் பேச்சுக்கள் அதிகப்படி இல்லையென உறுதிப்படுத்தும் அளவு அத்தனை அழகாக இருந்தாள். உயரமும் , வடிவும் , நிறமுமாக கோவில் சிற்பத்தை போலிருந்தாள். பளிங்காய் மின்னின் கண்கள் . பஞ்சாய் குழைந்திருந்தன கன்னங்கள். சிப்பியாய் குவிந்திருந்தன இதழ்கள் .

 

” ஹாய் சொப்னா ” என்ற போது குயில் குடியிருந்தது குரலில் .

 

” செமஸ்டர் முடிந்ததா …? ” சொப்னாவின் கைகளை பற்றிக் கொண்டு சஷ்டியின் பக்கம் கேள்வியாய் பார்த்தாள் .

 

சஷ்டிக்கு அவசரமாக தன்னை கண்ணாடியில் பார்த்துக் கொள்ளும் உந்துதல் உண்டானது. சும்மா ஊர் சுற்றத்தானே என்று மிகச் சாதாரணமான சுடிதார் ஒன்றை அணிந்து கொண்டிருந்தாள் அவள். தலையை சேர்த்து வழித்து வாரி இறுக்கி பின்னிக்கொண்டு லேசான பவுடர் தீற்றலும் , கரு நிற சிறு ஸ்டிக்கர் பொட்டுமாக அவளது அலங்காரம் முடிந்து விட்டிருந்தது .

 

சந்திராம்பிகை அப்பொது ஏதோ விசேச வீட்டிற்கு போய் விட்டு வந்திருப்பாள் போலும். ஓரத்தில் தங்க பார்டர் ஒட்டிய வெண்ணிற கேரளா பட்டில் இருந்தாள் . அதற்கு மேட்சென அவள் அணிந்திருந்த ஆழ் ஊதா பட்டு  ஜாக்கெட் தங்க தாமரைகளை சிறிதும் பெரிதுமாக முதுகிலும் , கழுத்தோரங்களிலும் , கைகளிலும் மலர்வித்திருந்தது. கழுத்தை ஒட்டி வெண் மின்னல்களை வாரி இறைத்த படியிருந்த கழுத்தாரம் நான் வைரமென சத்தியம் செய்தது. அதனோடு கூட்டு போட்டன காது , கையணிகள். அழகும் , அழகை எடுத்துக் காட்டும் அலங்காரமுமாக தேவலோக பெண் போல் இருந்தாள் சந்திராம்பிகை .

 

” என் ப்ரெண்ட் அண்ணி. உங்கள் மேரேஜிற்கு வந்திருக்கிறாள் .” சொப்னா அறிமுகம் செய்ய , சந்திராம்பிகை ஹாய் என நீட்டிய கையை  அழுத்தி பற்றிக் கொண்டாள் சஷ்டி மலர் .

 

” நீங்க ரொம்ப அழகாக இருக்கிறீர்கள் ” உணர்ந்து சொன்னாள் .

 

” ம் …” என ஒரு மாதிரி மேல் பார்வை பார்த்து கர்வமாக தலையசைத்தாள் சந்திராம்பிகை. இது போன்ற பாராட்டுக்கள் அவளுக்கு பழக்கமாக இருந்திருக்குமாயிருக்கும் .

 

” ஏதாவது கல்யாண வீடா அண்ணி …? “

 

” ஆமாம் .எங்கள் சொந்தத்தில் ஒரு விசேசம். இந்த சேலை என்ன …இந்த நகை என்ன என்று அங்கே ஒரேடியாக என்னை பியத்து எடுத்து விட்டார்கள் .கிடைக்கும் இடத்தை சொல்லி அதை வாங்கி போட்டுக் கொண்டால் …எல்லோருக்கும் என்னை போன்றே இருக்குமா என்ன …? “




எவ்வளவு திமிர்….சஷ்டி அயர்ந்து அவளை பார்க்கும்போது , ” அதானே எல்லோருக்கும் உங்களை போல் இந்த அலங்காரங்கள் பொருந்துமா அண்ணி …” என ஜால்ரா அடித்துக் கொண்டிருந்தாள் சொப்னா .

 

” உட்காருங்கள் . உங்களுக்கு குடிக்க ஏதாவது கொண்டு வருகிறேன் ” இவர்களுக்கு சோபாவை கையசைத்து விட்டு உள்ளே போனாள் .

 

இந்த ஜால்ரா இல்லையென்றால் இங்கே தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைத்திருக்காது போலவே …நினைத்து விட்டு மானசீகமாக தன் தலையில் தானே கொட்டிக் கொண்டாள் .தவறென நினைத்து விட்டாய். எதைப் பார்த்தாலும் உனக்கு அப்படியே தோன்றுகிறது ..தன்னை தானே திட்டிக் கொண்ட போது , அவர்கள் அமர்ந்திருந்த அறைக்கு எதிரே இருந்த அறை திறந்து உள்ளிருந்து ஒருவர் வந்தார்.

 

” ஏய் உள்ளே மாப்பிள்ளை இருக்கிறார். அவருக்கு குடிக்க ஏதாவது கொண்டு வந்து கொடு …” அங்கே நின்றிருந்த வேலைக்கார பெண்ணிடம்  சொன்னபடி தன் போனை காதில் வைத்தபடி வாசலுக்கு போனார் .சிக்னல் கிடைக்கவில்லை போலும் .

 

” இவர்தான் அண்ணியோட அப்பா …” சொல்லக்கொண்டு  இருக்கும் போதே சொப்னா துள்ளினாள் .

 

துள்ளினாலென்றால் நிஜமாகவே சோபாவை விட்டு அரை அடி உயரம் குதித்து எழுந்து மீண்டும் அமர்ந்தாள் .” மலர் ஒரு ஐடியாடி . அண்ணா இப்போது உள்ளேதானே இருக்கறார். தனியாக இருக்கிறார். அவரையும் அண்ணியையும் மீட் பண்ண வைத்தால் என்ன …? “

 

சஷ்டிக்கு திக்கென்றது .” ஏய் எதற்காகடி இந்த வேண்டாத வேலை …? “

 

” இது வேண்டாத வேலையா ..? எனக்கு தெரிந்து அண்ணனும் அண்ணியும் இரண்டோ மூன்றோ தடவைகள்தான் நேருக்கு நேர் பேசியிருக்கிறார்கள் .இந்த லட்சணத்தில் அடுத்த வாரம் இருவருக்கும் திருமணம். இப்போது கூட இப்படியே விட்டோம்னா அண்ணா அவரது பிசினசை மட்டும் பேசி முடித்து விட்டு போய் கொண்டே இருப்பார். அதற்கு விடக்கூடாது .இவர்களை …” சொப்னா நெற்றிப் பொட்டை தேய்த்தபடி யோசிக்க ஆரம்பிக்க ,

 

” சொப்னா அதெல்லாம் வேண்டாம்பா. நாம் கிளம்பலாம்…” சஷ்டி அவளை அங்கிருந்து வெளியேற்றுவதில் முனைய ,

 

” ஜீஸை ஆபீஸ் ரூமுக்கு கொண்டு வரச் சொல்லி உங்க அப்பா சொன்னார் அண்ணி ” உயரமான இரண்டு கண்ணாடி டம்ளர்களில் ஜீஸ் எடுத்து வந்த சந்திராம்பிகையை எளிதாக ஆபிஸ் அறைப் பக்கம் திருப்பி விட்டாள் சொப்னா.

 

” யாரோ முக்கியமான பார்ட்டியாம் . சீக்கிரம் போங்க ” என்று துரிதப்படுத்தி அனுப்பி வைத்தாள் .

 

” இந்த அலங்காரங்களோடு அண்ணியை பார்த்தால் அண்ணன் நிச்சயம் ப்ளாட்தான் …” குதூகலித்த சொப்னாவை கன்னம் பழுக்க அறைய வேண்டும் போலிருந்தது சஷ்டிக்கு .

 

” சொப்னா நீ செய்வது உனக்கே சரின்னு தோணுதா ? “

 

” ஹன்ட்ரட் பர்சென்ட். இன்னொரு ஐடியா .இங்கே வா …” சஷ்டியின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள் .

 

” அதோ அந்த சன்னல் வழியாக பார்த்தால் ஆபீஸ் ரூம் தெரியும். வா பார்க்கலாம் …”

 

” சீ …நீ என்னடி செய்கிறாய் …? “

 

” சஷ்டி என் அண்ணனோட ரொமான்டிக் லுக்கை நான் பார்க்கனும்டி. பெரிய இவர் மாதிரி எப்போதும் மூஞ்சியை உர்ருன்னே வைத்துட்டு இருப்பார். இப்போது இவ்வளவு அழகான பொண்ணை அதுவும் வருங்கால மனைவியை பார்த்து  வழியத்தானே செய்யனும். அதை நான் பாரத்து , பிறகு அதை வைத்தே அவரை கிண்டல் செய்யனும் வாடி …”

 

சொப்னா வலுக்கட்டாயமாக சஷ்டியை இழுத்துக் கொண்டு போக , அங்கே அறைக்குள் அவள் எதிர்பார்த்த விசயங்கள். எதுவும் நடந்தாற் போல் தெரியவில்லை. திருமலைராயனும் , சந்திராம்பிகையும் வெறுமனே ஒருவரையொருவர் பார்த்து பேசிக் கொண்டருந்தனர். சன்னல் கண்ணாடி வழியே மௌனப்படமாக தெரிந்த அவர்களது பிம்பங்கள் ஏதோ ஓர் ஹை அபிசியல் மீட்டிங்கையே நனைவுறுத்தியது. 

 

பேச்சிற்கிடையே திருமலைராயன் ஒரு பைலை எடுத்து காட்ட , அதனை சந்திராம்பிகை கவனமாக பார்க்க …

 

” சுத்தம் …இங்கேயும் பிசினஸ்தானா …? ” இரு கைகளையும் தன் தலையில் வைத்துக் கொண்டி சொப்னா கீழே புல்தரையில் அமர்ந்து விட்டாள் .

 

பொங்கி வந்த சிரிப்புடன் தோழியின் புலம்பல் கோலத்தை குனிந்து பார்த்து விட்டு  சன்னலுக்கு பார்வையை திருப்பிய சஷ்டி திடுக்கிட்டாள். கையில் பைல் இருந்தாலும் திருமலைராயரும், சந்திராம்பிகையும் இப்போது மிக அருகே நெருங்கி நின்றிருந்தனர். சஷ்டி நொடியில் பாதி பொழுதே இமை சிமிட்டியிருப்பாள். மீண்டும் பார்த்தபோது இருவரும் ஒருவரையொருவர் அணைத்தபடி நின்றிருந்தனர் .

 

உச்சந்தலையை தாக்கிய மின்னலின் அதிர்வுடன் சஷ்டி தானும் தரையில் அமர்ந்து விட்டாள் .

 

” என்னடி அக்ரிமென்ட்ல சைன் போடுறாங்களா ..? ” கன்னத்தில் கை தாங்கி அமர்ந்து கேட்டவளுக்கு , பேசமாட்டாது தலையை மட்டும் ஆட்டினாள் .

 

” இவங்க இரண்டு பேரையும் …இப்பவே நேரில் போயே …நீங்கெல்லாம் ஏன்யா கல்யாணம் பண்ணிக்கிறீங்கன்னு கேட்டுட்டு வர்றேன் …” திடீர் துடிப்புடன் எழப் போன சொப்னாவின் கையை பதட்டத்துடன் பிடித்து கீழே இழுத்தாள் சஷ்டி .

 

” இப்போது நீ போனாயானால் உன்னையும் ஒரு சைன் போடச் சொல்வார்கள். நீயும் பார்ட்னர் ஆகிக் கொள்கிறாயா …எனக் கேட்பார்கள் .ஓ.கேவா உனக்கு …?” சொப்னாவின் வீக் பாயிண்ட் பார்த்து அடித்தாள் .

 

” ஐய்யய்யோ பிசினசா …எனக்கா …நான் தப்பித்தேன் …” சொன்னபடி அறைக்குள்ளிருப்பவர்கள் திரும்பி பார்த்தால்.. தான் அவர்கள்  பார்வையில் படாதாவாறு தலையை குனிந்து கொண்டே அந்த இடத்தை விட்டு ஓடினாள் சொப்னா .

 

அவளையே பின்பற்றி நடந்த சஷ்டியின் கால்களை தொடராத   கண்கள் மட்டும் அதட்டலை கேளாமல் சன்னலை விட்டு நகரும் கடைசி நொடி அங்கே பார்க்க  , சன்னலுக்கு முதுகு காட்டி நின்றிருந்த திருமலைராயனின் கழுத்தில் மாலையாகி தெரிந்தது சந்திராம்பிகையின் கைகள். வேகமாக பார்வையை திருப்பக் கொண்ட சஷ்டியின் கண்கள் எரிந்தன .

 

” நாம் கிளம்பலான்டி ” சஷ்டி சொப்னாவின் கையை பிடித்து இழுத்தாள். அவளுக்கு வெகு அவசரமாக இந்த வீட்டை வீட்டு எங்காவது தள்ளி தூரமாக போய்விட வேண்டும் போலிருந்தது.

 

” இருடி. எப்படியும் அண்ணனுக்கு நாம் இங்கு வந்திருப்பது தெரிந்திருக்கும் . அவரை பார்க்காமல் போனால் நல்லாயிருக்காது. அவர் வரட்டும் அவரோடு சேர்ந்தே போகலாம் ”  சாதாரணமாக சொல்லி விட்டு சொப்னா சாய்ந்து அமர்ந்து கொள்ள சஷ்டிக்கு திணறலாயிருந்தது .

 

இப்போது அவளுக்கு திருமலைராயனையோ , சந்திராம்பிகையையோ நேருக்கு நேர் முகம் பார்க்க ஒரு மாதிரி இருந்தது .” சொப்னா ப்ளீஸ் எனக்கு உடம்பு ஒரு மாதிரி இருக்கிறது .வாடி வீட்டிற்கு போகலாம் ….” கண்களை சொருக வைத்து , மூச்சை திணற வைத்து என ஏதேதோ பொய் சேட்டைகள் செய்து சொப்னாவை அங்கிருந்து எழ வைத்தாள் .

 

வெளியே இருந்த காரை நோக்கி சொப்னா அரை குறை மனதோடு  நடக்க , பின்னால் ” சொப்னா ” என்ற அழைத்தல் குரல் கேட்டது. அது திருமலைராயன் குரல் .

 

ஐயோ …பார்த்து விட்டானா …? சொப்னாவின் காதில் அண்ணனின் குரல் விழாமல் அவள் நடந்து கொண்டே போக, அடுத்து திருமலைராயனின் குரல் அழைத்தது .

 

” மலர் நில்லு “




What’s your Reaction?
+1
16
+1
12
+1
1
+1
0
+1
1
+1
1
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!