19
வாசல் கதவு தள்ளப்படும் சத்தத்தை வைத்தே தெய்வானை தோழியை உணர்ந்துவிட்டாள். “மகி வாடி” துவண்டு போய் படுக்கையில் கிடந்து கைநீட்டிய தோழியை கண்டதும்,தன் மனத்தில் இத்தனை வருடங்களாக குமுறிக் கொண்டிருந்த வெறுப்பை வார்த்தைகளில் கொட்டி விட வேண்டும் என்றெண்ணி வந்திருந்த மகேஸ்வரி தயங்கினாள்.
“உனக்கு உடம்பு சரியில்லையா?” தயக்கமாக கேட்டாள்.
“உடல் பலவீனமாக படுக்கையில் கிடந்த உனக்கு முன்னால் திமிரும் தினவுமாக நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு திரிந்தேனே, அந்த தினவை கடவுள் ஒடுக்கி விட்டார்”
“உடம்புக்கு என்ன?”
ஒரு நிமிடம் மௌனமாக விட்டத்தை பார்த்துக் கொண்டிருந்த தெய்வானை திடுமென கைகளால் தன்நெஞ்சில் அறைந்து கொண்டாள்.”என் வினை… நான் செய்த பாவம்”
தள்ளி நின்றிருந்த மகேஸ்வரி மனது கேட்காமல் அருகே போய் கைகளை பற்றினாள் “போதும் நிறுத்து. என்னவென்று சொல்”
“பிரஸ்ட் கேன்சர்” தெய்வானை வறண்ட குரலில் சொல்ல மகேஸ்வரியின் கைகள் நடுங்கின. கடவுள் என்று ஒருவன் இருக்கிறானோ? பழியும் பாவங்களும் உலகத்தில் உண்டுதானோ?
“இரண்டு மார்பகங்களிலும். மொத்தமாக அறுத்து எடுத்துவிட வேண்டும் என்று டாக்டர்கள் சொல்லிவிட்டனர். ஆப்ரேஷனுக்கு நாள் குறித்து விட்டு கடைசியாக உங்கள் எல்லோரையும் பார்த்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்றுதான் இங்கே வந்து கிடக்கிறேன்”
“இது எப்போதிருந்து ?இதெல்லாம் அவருக்குத் தெரியாதா?”
“இரண்டு வருடங்களாக. அவருக்கு தெரியாமல் நானாக சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன்”
“ஏன் அவரிடம் சொல்லியிருந்தால் வெளிநாட்டிற்கே கூட்டிப் போய் ட்ரீட்மென்ட் கொடுத்திருப்பாரே?”
வறட்சியாய் ஒரு சிரிப்பு தெய்வானையிடம். “இதோ இப்போது இங்கே கிடக்கிறேனே… அது இரண்டு வருடங்களுக்கு முன்பே நடந்திருக்கும்”
“தெய்வா என்ன சொல்கிறாய்?”
“மிஸ்டர் சுந்தர்ராமனை பற்றி சொல்கிறேன். அவருக்கு நான், மனைவியாக வீட்டிற்கு தலைவியாக மகளுக்கு அம்மாவாக சிறு பிசிறலும் இல்லாமல் இருக்கும்
வரைதான் என்னை வீட்டிற்குள் வைத்திருப்பார். சின்ன இடைஞ்சல் வந்தாலும் உடனே தூக்கி எறிய தயங்கமாட்டார்”
“சீ என்ன மனுஷன்டி அந்த ஆளு?” வயிற்றெரிச்சல் பட்ட மகேஸ்வரி தோழியின் தலையை தன் மடியில் தாங்கிக் கொண்டாள்.
தாரை தாரையாக கண்ணீர் வடிய மகேஸ்வரியின் மடியிலிருந்து புரண்டு கீழே விழுந்து அவள் கால்களை பற்றினாள் தெய்வானை.
“மன்னித்து விட்டேன்னு ஒரு வார்த்தை சொல்லு மகி”
“என் மகளை என்னிடம் இருந்து பிரித்து விட்டாயே?” மகேஸ்வரி கேட்க தயங்கவில்லை.
“சுந்தர்ராமனுடன் எப்படி வாழ்ந்தேனோ என்னால் கணிக்க முடியவில்லை. ஆனால் வாணியுடன் என்னுடைய வாழ்க்கை உண்மையானது. நம்பி உள்ளே விட்ட தோழியின் வாழ்வை கெடுத்த என் பாதகத்தை ஓரிரு வருடங்களிலேயே உணர்ந்து கொண்ட நான் உன்னை தேடி வராததன் காரணம் வாணிதான். அவள் மீதுள்ள தாய் உரிமையை நான் இதோ இப்போது வரை விட்டுக் கொடுக்க விரும்பவில்லை”
“அமுதவாணி என்று பெயரிட்டு அம்மு என்று செல்லமாக அழைத்து வந்தாயே அந்த அழைப்பு கூட ஒரு வயது குழந்தையாகவே இருந்தாலும் அவள் மன மூலையிலும் இருக்கக் கூடாதென்றே வெறும் வாணி ஆக்கினேன். அவள் அப்பாவுடன் காதலாகி கனிந்து வாழ்ந்தவள் நான்தான், நானே அவளுடைய தாய் என்பதையும் உறுதிப்படுத்தவே, உங்கள் காதல் சம்பவங்களை உன் இடத்தில் என்னை நிறுத்தி அவள் மனதில் அதிக கற்பனைகள் பரவும்படி விதைத்தேன்”
“எனது இந்த சுயநல செயல்கள் அத்தனைக்குமான தண்டனை இரண்டு வருடங்களுக்கு முன்பே எனக்கு தெரிந்து விட்டது.பல வருடங்களாக எனக்கு உள்ளே வளர்ந்திருக்கிறது இந்த புற்று. இப்போதும் வாணிக்காகவே என் வேதனையை தாங்கிக் கொண்டு சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தேன்.என் கடைசி காலம்வரை வாணி என்னுடனேயே இருக்கவேண்டுமென நினைத்தேன்”
“ஆனால் விதி வலியது.செய்த பாவம் கொடியது.நீ புயல் போல் வந்து வாணியை உன் வசப்படுத்திக் கொண்டாய்.
நான் உடல் நோவுடன் அநாதையாக சாகப் போகிறேன்” தெய்வானை குலுங்கி அழ ஆரம்பித்தாள்.
மகேஸ்வரி எல்லாவற்றையும் சொல்லி முடிக்க, அனைவரும் கனத்த இதயத்துடன் மௌனமாக அமர்ந்திருந்தனர்.
ஓர் ஓரமாக அமர்ந்திருந்த அமுதவாணியை அனைவரும் நெகிழ்வாய் பார்த்தனர்.மகேஸ்வரி அவள் அருகே போய் அமர்ந்து ” உன் செயல்களில் குற்றமில்லை அம்மு.அன்று தத்தக்கா புத்தக்கா என தடுமாறி நடந்த
என் மகள் இன்று எவ்வளவு பொறுப்பானவளாகி விட்டாள்!” இரு கையால் கன்னம் வழித்து நெற்றியில் திருஷ்டி சொடுக்கினாள்.
அடுத்து என்ன செய்யவென ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளக் கூட பயந்து எல்லோரும் அவரவர் வேலையை பார்த்தபடி இருந்தனர்.
மறுநாள் ஆபரேசன் என்ற நிலையில் அமுதவாணி அன்று நெடு நேரம் தெய்வானையுடன் இருந்து விட்டு வந்தாள். சன்னல் வழியாக வெளிப்புற இருளை பாரத்தபடி நின்றவளின் அருகே வந்த விபீசன் ” சாப்பிட வா அம்மு” அழைத்தான்.
அவள் அசையாமல் நிற்கவே பெருமூச்சுடன் நகரப் போனான்.அமுதவாணி அவன் கை பற்றி தடுத்தாள்.அப்படியே அவன் தோளில் சாய்ந்து முகத்தை அழுத்திக் கொண்டாள்.
“அவுங்களுக்கு ஒன்றும் ஆகாது அம்மு.நாளை ஆபரேசன் முடிந்ததும் பழையபடி வரப் போகிறார்கள் பாரேன்” தலை வருடி ஆறுதலளித்தான்.
“எ…எனக்கு பயமாக இருக்கிறது” அவள் குரல் நடுங்கியது. அமுதவாணியின் பயத்தை போன்றே
அன்று இரவு தெய்வானை உலகை விட்டு மறைந்தாள்.
பழைய வஞ்சம் பகை அனைத்தையும் மறந்து மாணிக்கவேலின் குடும்பமே பதறியபடி தெய்வானை வீட்டிற்குள் போக,
அமுதவாணி மட்டும் அங்கே வர மறுத்துவிட்டாள்.
What’s your Reaction?
+1
29
+1
25
+1
1
+1
+1
+1
3
+1
5