Serial Stories என் காதல் ராட்சசி

என் காதல் ராட்சசி-22 (நிறைவு)

22

“எப்படியோ கடைசியில் என்னை ஜெயித்து விட்டாயம்மா நீ “சத்யேந்திரன் சொல்ல மகிதா விளையாட்டு போல் கன்னத்தில் போட்டுக் கொண்டாள்.

” இல்லை மாமா நான் என்றுமே அப்படி நினைத்ததில்லை .இதோ நீங்கள் பார்த்து நிச்சயித்து முடித்து வைத்த திருமணம்தான் எங்களுடையது .நாங்கள் சந்தோஷமாக தானே இருக்கிறோம்”

“காதலித்து கல்யாணம் முடித்துக் கொண்டவர்கள்தானே இவர்கள்? ரொம்பவே சந்தோஷமாகத்தானே இருக்கிறார்கள்” பாட்டி திவ்யாவையும் கதிரவனையும் காட்டினார்.

“ஆனால் அம்மா இதில் நீங்கள் செய்த தில்லுமுல்லுகள்தான் உச்சக்கட்டம். இப்படியா என்னை பயமுறுத்துவீர்கள்?”

“எனக்கு வேறு வழி தெரியவில்லைடா. நாரதர் போல கலகம் செய்தால்தான் நல்லது நடக்கும் என்று துணிந்து இறங்கினேன். கணவனையும் மனைவியையும் அப்பாவையும் மகளையும் அருகருகே வைத்தால் உள்மன  பாசம் வெளிவந்து சேர்ந்து விடுவார்கள் என்று கணக்கிட்டேன்.எல்லாம் நல்லபடியாகத்தான் போய்க்கொண்டிருந்தது. ஆனாலும் இதோ இவள் இருக்கிறாளே ராட்சசி என்னை கண்டுபிடித்து விட்டாள்”. 




 

“என்ன மகிதாவிற்கு உங்களை பற்றி முதலிலேயே தெரியுமா? “எல்லோரும் கேள்வியாக அவளைப் பார்க்க, மகிதா அவஸ்தையாக தலையை சொறிந்தாள்.

” எனக்கு மட்டுமில்லை. இதோ இவருக்கும் தெரியும்” ஆதித்யனையும் போட்டுக் கொடுத்தாள்.

 சத்யேந்திரன் இடுப்பில் கைதாங்கி மகனை முறைக்க “ஐயோ அப்பா எனக்கு இவள் தான் சொன்னாள் .அதற்கு முன்பு  தெரியாது”

“மாமா பாட்டி நன்றாகத்தான் நடித்தார்கள். ஆனால் என்னையும் உங்கள் மகனையும் சேர்த்து வைக்கும் ஆவலில் அன்று ஒரு நாள் இரவு எங்களிடம் தன்னை மறந்து வாய்விட்டு பேசி விட்டார்கள். எனக்கு அன்று இருந்த குழப்பத்தில் நாங்கள் இருவருமே அதனை கவனிக்கவில்லை. பிறகு யோசித்தபோது நெருடவே பாட்டியை கண்காணித்து கண்டுபிடித்தேன்”

“பாட்டியை மட்டுமல்ல அப்பா என் மன துயரையும் கண்டுபிடித்தது அண்ணிதான்” திவ்யா பாசமாக மகிதாவை பார்த்தாள்.

“பிறந்த நாளிற்காக திவ்யாவை கூப்பிட அவள் அறைக் கதவை தட்டிய போது அழுதது போல சோகமாக இருந்தது அவள் முகம். அவளை அணைத்துக் கொள்வது போல் உள்ளே மாப்பிள்ளையை பார்க்க அவர் தெனாவட்டாக உட்கார்ந்திருந்தார். இருவருக்கும் ஏதோ நடந்திருக்கிறது என்று முடிவு செய்து பிறகு அவர்கள் பேச்சை ஒட்டு கேட்டேன்”

மகிதா எளிதாக சொல்ல,கதிரவன் இருளடைந்த முகத்துடன் ஆதித்யனை திரும்பி பார்த்தான் .என்ன இந்த பொண்ணு இப்படி …என்று பார்வையால் கேட்டான்.

ஆதித்யன் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டான்.என்ன செய்வது? அவள் அப்படித்தான் .நான் பாவம்… மூக்குறிஞ்சிக் கொண்டான்.

இந்தப் பெண் ரொம்பவே அபாயகரமானவள். சந்தேகம் என்றால் அடுத்தவரை வேவு பார்க்கவும் ஒட்டு கேட்கவும் தயங்குவதில்லை. தெனாவட்டாகவா இருக்கிறாய் ? ஜாக்கிரதை எங்கள் வீட்டுப் பெண் ஒழுங்காக பார்த்துக் கொள் என்ற அறிவிப்பையும் அவள் குரலில் கண்ட கதிரவனுக்கு இப்போது சத்தியேந்திரனை விட மகிதா மேல்தான் அதிக பயம் உண்டானது.

 வியர்த்து விட்ட நெற்றியை துடைத்துக் கொண்ட கதிரவனுக்கு அந்த நேரம் அவன் மனைவி தேவதையாக தோன்றினாள்.

“சரி எல்லோரும் போய் படுங்கள்” கதிரவனின் பார்வை மனைவி மேல் காதலாய் படிந்ததை கண்டுவிட்ட பாட்டி அனைவரையும் கிளப்பினார்.

சீக்கிரம் வா என்ற கண்ணசைவோடு ஆதித்யன் மாடியேற இரண்டு படிகள் ஏறிய பின் நின்ற மகிதா அறைக்குள் நுழையப் போன சத்யேந்திரனை அழைத்தாள் .”மாமா”

என்னவென்று அருகில் வந்தவரிடம் குனிந்து ரகசியமாக “உங்களுக்கு ஒன்று தெரியுமா. உங்கள் மகனும் நானும் காதலித்தோம். ஆக எங்கள் திருமணமும் காதல் திருமணம்தான் “என்று சொல்லிவிட்டு ஸ்தம்பித்து நின்று விட்டவரை பார்த்து சிரித்தபடி மாடி ஏறினாள்.

“ஏய் அந்த விஷயத்தை அப்பாவிடம் சொல்ல வேண்டாம் என்று நாம் பேசி இருந்தோமே ,எதற்காக போட்டு உடைத்தாய்?” ஆதித்யன் அவள் தலையில் கொட்டினான்.

“எதற்காக மறைக்க வேண்டுமோ? காதல் இல்லாமல் கல்யாணம் இல்லை என்றுஅவருக்கு தெரியட்டுமே..”

“இவ்வளவு வாய் பேசுகிறாயே… நம்முடைய காதலையே உனக்கு நான்தான் விளக்க வேண்டியிருந்தது. நம் திருமணத்திற்கு முன்பு உன்னை தேடி வந்து நான் உன்னை காதலிப்பதாகவும் அதனால்  இது காதல் திருமணம்தான் என்றும் உன்னை நம்ப வைப்பதற்குள் நான் பட்ட பாடு எனக்குத்தான் தெரியும். அப்போதும் எனக்கெல்லாம் காதல் இல்லை என்று தானே சொல்லி திருமணம் செய்ய வந்தாய்”

“ஆமாம் அப்போது அப்படித்தான் நினைத்திருந்தேன். இப்போதுதான் உங்கள் மேலுள்ள காதல் தெரிந்தது. அதனை யாரிடமாவது சொல்ல வேண்டும்போல் இருந்தது. உங்கள் அப்பாவிடம் சொல்லிவிட்டு வந்தேன்”

“எவ்வளவு திமிர் ?சரியான ராட்சசிடி நீ”

“இப்படி கொஞ்சமேனும் ராட்சசத்தனம் இல்லாவிட்டால் இந்த காலத்தில் பெண்கள் பிழைக்கவே முடியாது தெரியுமா?”

“சரிதான் உன்னுடைய அந்த ராட்சச வேகத்தை நம் காதலிலும் காட்டினால் நான் பிழைத்து போவேன் “கெஞ்சியபடி கொஞ்சிய கணவனை ஏமாற்றவில்லை மகிதா.

அவர்கள் கூடலின் முடிவில் ஆதித்யனின் இதழ்கள் முனங்கின “என் காதல் ராட்சசியே”

நிறைவு 




What’s your Reaction?
+1
58
+1
19
+1
2
+1
4
+1
2
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!