அம்மனின் சக்தி பீட வரிசையில், மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் திருவெண்காடு பிரம்மவித்யா சமேத சுவேதாரண்யேஸ்வரர் கோயில், விமலை பீடமாகப் போற்றப்படுகிறது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 11-வது தலம் ஆகும்.
பிராண சக்தி பீடம் என்றும் அழைக்கப்படும் இத்தலத்தில் சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகர் ஆகியோர் பதிகங்கள் பாடியுள்ளனர், நவக்கிரக தலங்களில் இது புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது.
தல வரலாறு
மருத்துவன் என்ற அசுரன் பிரம்மதேவரை நோக்கி கடும் தவம் புரிந்து, வரம் பெற்றான். இதன் காரணமாக, தேவர்களுக்கு பல இன்னல்களை அளித்து வந்தான். இதுகுறித்து கவலை அடைந்த தேவர்கள், சிவபெருமானிடம் முறையிட்டனர்.
சிவபெருமானின் ஆலோசனைப்படி தேவர்கள், வேற்று உருவில் திருவெண்காட்டில் வாழ்ந்து வந்தனர். தேவர்களைத் தேடி திருவெண்காட்டுக்கும் வந்தான் அசுரன். சிவபெருமானை நோக்கித் தவம் புரிந்து, அவரது அருளால் சூலாயுதத்தைப் பெற்றான். சூலாயுதத்தை வைத்து ரிஷபதேவருக்கு துன்பம் விளைவித்து அவரைக் காயப்படுத்தினான்.
வருத்தமடைந்த ரிஷபதேவர், சிவபெருமானிடம் முறையிட்டார். கோபம் கொண்ட சிவபெருமான், தனது ஐந்து முகங்களில் (சத்யோஜாதம், வாமதேவம் அகோரம், தத்புருஷம், ஈசானம்) ஈசான முகத்தில் இருந்து அகோர மூர்த்தியை தோன்றச் செய்தார். அகோர உருவத்தைப் பார்த்தவுடன் அசுரன், சிவபெருமானிடம் சரண் புகுந்தான்.
அப்படி சரணடைந்த அசுரனை, அகோர மூர்த்தியின் காலடியின் இன்றும் காணலாம். சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி நிறுத்த மண்டபத்தில், காயம்பட்ட ரிஷப தேவரைக் காணலாம்.
அகோர மூர்த்தி
சுவேதாரண்யர், திருவெண்காடர், திருவெண்காட்டு தேவர், திருவெண்காடையார், திருவெண்காடுடைய நாயனார், திருவெண்காட்டு பெருமான் ஆகிய பெயர்களால் அழைக்கப்படும் இத்தல ஈசன், லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
அகோர மூர்த்தியின் வீரக் கோலம் இத்தலத்தில் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. 64 சிவ மூர்த்தங்களில் இந்த உருவம் 43-வது உருவம் ஆகும். நடப்பவர் ஒருவர் இடது காலை முன்வைத்து, வலது காலை பெயர்த்து அடியெடுத்து முன்வைக்க முனைவது போன்று தன் நடையழகை, சிவபெருமான் காட்டி அருள்கிறார். மூலவரைப் போன்று உற்சவரும் வீரச் செறிவைக் காட்டும் கடுமையான கோலத்தில் இருந்தாலும், பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிலையில்தான் உள்ளார்.
சரணடைந்தவர்களைக் காப்பதில் இவருக்கு நிகர் இவரே என்பதால், ‘அகோரமூர்த்தி’ என்று அழைக்கப்படுகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் இரவு 12 மணிக்கு இவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
திருவிழாக்கள்
திருவெண்காட்டு கோயிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை திருவோணத்தில் நடராஜர் அபிஷேகம், வைகாசியில் வெள்ளை யானைக்கு சாப விமோசனம் அளித்தல், ஆனி உத்திரத்தில் நடராஜர் அபிஷேகம், ஆடியில் பட்டினத்தாருக்கு சிவ தீட்சை அளித்தல், அம்பாளுக்கு ஆடிப்பூர உற்சவம் ஆகியவை நடைபெறுகின்றன.
What’s your Reaction?
+1
1
+1
1
+1
+1
+1
+1
+1