அத்தியாயம் -3
வீட்டிற்கு வந்தும் கூட மோகனாவிற்கு அவனைப் பற்றின சிந்தனையாகவே இருந்தது. மூளையைக் கசக்கி யோசித்தாள்.
அவனை எங்கே பார்த்தோம்? எப்பொழுது பார்த்தோம்? என்று மீண்டும் மீண்டும் அதே கேள்வி மூளைக்குள் புகுந்து குடைந்துக்கொண்டிருந்தது.
“மோகனா சாப்பிட வா…” அம்மாவின் அழைப்பு காதில் விழவே
“இதோ… வரேம்மா” என்று பதில் சொல்லியவாறு அவசர அவசரமாக கீழே இறங்கி டைனிங் ஹாலுக்கு சென்றாள் .
“என்னம்மா ஸ்பெஷல்…?”
“உனக்கு பிடித்த ஆப்பமும் அவியலும்தான் செஞ்சிருக்கேன்”
“மோகனா…மறந்தே போயிட்டேன் பாரு உனக்கு ரெண்டு லிட்டர் வந்துச்சு… நான் தான் கையெழுத்து போட்டு வாங்கினேன்.”
“எங்க இருக்குன்னு சொல்லுங்க நான் எடுத்துக்கிறேன். நீங்க சிரமப்பட வேணாம் சொல்லுங்க நான் எடுத்துக்குறேன்”
“இதோ இங்க இருக்கு இந்தா…” அம்மா கையிலிருந்த அந்த கவரை வாங்கும்போது தெரிந்தது அது ஒரு இன்விடேஷன் என்று யாருக்கு கல்யாணம் யோசனையோடு வாங்கினாள்.
தியாகு வெட்ஸ் ரேவதி… ரேவதிக்கு கல்யாணமா என்ன திடீர்னு? ஒரு வார்த்தை போன் பண்ணிக்கூட சொல்லலையே? யோசனையோட பரபரவென்று இன்விடேஷனை பிரித்து கண்களை படரவிட்டாள். திருமணத்திற்கு இன்னும் பத்து நாட்கள் தான் இருந்தது. பத்தே நாளில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. திடீர் திருமணமாகத்தான் இருக்கும். ரேவதி இதுவரை இந்த திருமணத்தைப் பற்றி சொன்னதே இல்லையே?
“அம்மா ரேவதிக்கு கல்யாணம் நாம பேமிலியோட கண்டிப்பாக கல்யாணத்துக்குப் போகணும் சரியா?”
“எப்பமா கல்யாணம்?”
“இந்த மாசம் 13ஆம் தேதி”
“போகலாம்தான் ஆனா அன்னைக்கு முதல் நாள் உன் தங்கைக்கு பரிட்ச்சை இருக்குதே அதனாலதான் என்ன பண்ணுறதுன்னு யோசிக்கிறேன். வேணுன்னா நீ மட்டும் போய்ட்டு வாயேன்.”
“நா மட்டுமா? அது சரிப்பட்டுவராது. போனா மூணு பேரும் சேர்ந்து போவோம். அப்படியே அத்தை வீட்டுக்கு போயிட்டு மதுரையில் இருக்கிற கோவில்களை எல்லாம் சுத்தி பார்த்துட்டு வர்ற மாதிரி ஒரு ரெண்டு நாளைக்கு முன்னாடி கிளம்பினால் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன். உங்க வேலை எல்லாம் கொஞ்சம் ஒதுக்கி வைத்துவிட்டு கோவிலுக்கு எங்களை கூட்டிட்டு போய் காட்டுங்க அம்மா..”
என்று தாயின் தோளில் செல்லமாக சாய்ந்துக்கொண்டு கேட்டாள் மோகனா.
“முதல் நாள் நீ போ… அடுத்த நாள் கல்யாணத்துக்கு நாங்க மூனு பேரும் வந்து கலந்துக்குறோம். கல்யாணத்தை முடிச்சிட்டு அப்படியே கோயிலுக்கு போயிட்டு வருவோம். எதுக்கும் அப்பாகிட்ட ஒரு வார்த்தை கேட்டுடு “ என்று அம்மா சொல்லவே சந்தோஷத்தோடு தலையாட்டினாள்.
அப்பாவிடம் கேட்டப்போது அவர் ஒன்றும் மறுப்பு தெரிக்கவில்லை.
“போகலாம்…கண்டிப்பாக போகலாம் அங்கு எனக்கும் கொஞ்சம் வேலை அதையும் அப்படியே முடிச்சமாதிரி இருக்கும்” என்று உடனே சம்மதித்தார்.
“ஓகே டாடி குட்நைட்” குட்நைட் சொல்லிவிட்டு தன் அறைக்கு சென்றவள் தோழி ரேவதிக்கு என்ன கிப்ட் வாங்குவது? தான் திருமணத்திற்கு என்ன புடவை கட்டுவது என்ற பலத்த யோசனையில் இறங்கினாள்.
பாவம் ரேவதி அவளுடைய குடும்பம் கொஞ்சம் கஷ்டமான குடும்பம்தான். காலேஜ் பீஸ் கட்டக் கூட முடியாத ஒரு சூழ்நிலையில்தான் படித்தாள். அப்பா ஒருவரோட உழைப்பிலே நானும் படிக்கணும் என் தம்பியும் படிக்கனுன்னா எப்படிமுடியும்? அப்பாவை நினைச்சா கஷ்டமா இருக்குன்னு அடிக்கடி தன் குடும்ப கஷ்டத்தை சொல்லி வேதனைப்படுவாள். அவளுக்கு கிப்ட் வாங்கித்தருவதை விட பணமா கொடுத்தா உதவியா இருக்கும். அப்பாகிட்ட சொல்லி ஒரு அம்பதாயிரத்தை மொய்யா கொடுத்துட வேண்டியதுதான். என்ற முடிவுக்கு வந்தாள்.
அந்த ரேவதியின் திருமணம் தன் வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப்போகிறது என்பதை உணராமலேயே மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் படுக்கையில் சாய்ந்து கண்களை மூடினாள்.
ஆழ்ந்த தூக்கம் அதில் அழகான கனவு. கனவில் அழகான இளைஞன் ஒரு வெண்ணிற குதிரையில் வந்து அவளை அலாக்காக தூக்கி முன்னால் அமர வைத்துக்கொண்டு சூரியன் மலரும் சிவந்த கிழக்கு திசையை நோக்கி அதி வேகமாக பறக்கிறான். குதிரையின் கனைப்பு சத்தமும் அவனின் சிரிப்பு சத்தத்திற்கும் நடுவே வெட்கத்தோடு முகம் கவிழ்ந்து அமர்ந்திருக்கிறாள் மோகனா.
What’s your Reaction?
+1
15
+1
16
+1
+1
+1
+1
+1