திருவெம்பாவையின் பாடல்களும் பொருளும்
பாடல் 3 /20
முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தன்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழஅடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்துஆட் கொண்டாற் பொல்லாதே
எத்தோ நின் அன்புடமை எல்லோம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்
சொற்பொருள்:
அத்தன் –தந்தை; உள்ளூற – வாய் ஊற; கடை –வாயிற் கதவு; பத்து – பத்து வகையான சிவ கருமங்கள்; பழ –பழமையான; புன்மை –குற்றம், சிறுமை; சித்தம் –அறிவு.
பொருள் விளக்கம்:
“முத்துகள் போன்ற பற்களையும் அழகிய புன்முறுவலையும் உடைய பெண்ணே! எப்போதும் நீதான் முதலில் எழுந்து வெளியே வந்து, எங்கள் முன் நின்று, சிவபெருமான் குறித்து, ‘என் அப்பன், நான் விரும்பும் நாயகன், நிறைவாக வீடு பேறு அளிக்கும் அமுதன்’ என்று வாய் ஊற, இனிமையாகப் பேசுவாய்! இன்றைக்கு என்ன ஆயிற்று உனக்கு? எழுந்து வா! வாயிற் கதவைத் திற!”
“வெண்ணீறு அணிதல், உருத்திராக்க மாலை அணிதல், சிவனை வழிபடுதல், சிவனைப் பாடுதல், சிவ நாமாவளி சொல்லல், சிவனடியாரை வழிபடுதல், சிவ தருமங்கள் செய்தல், சிவன் கதை கேட்டல், சிவன் கோவிலில் உழவாரப்பணி செய்தல், சிவனடியார்க்குத் தொண்டு செய்தல் என்னும் பத்தினையும் பாங்குறச் செய்யும் பெண்களே!
சிவபெருமானின் நெடுநாள் அடியவர்களாகிய நீங்கள், என்னிடம் உள்ள குறைகளைக் கருதாமல், இந்தப் புதிய அடியவளாகிய என்னையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டால் குறைந்தா போவீர்கள்?”
“என்னமாய் பேசுகிறாய்! அடியே, சிவன்பால் நீ கொண்டுள்ள மாறாத அன்பினை நாங்கள் அறிவோம். மார்கழி மாதத்தில் இளங்காலைப் பொழுதில் எழுந்து நீராடி, அறிவின் அழகு வடிவாய்த் திகழும் ஞானசீலனை நாம் பாடுவது வழக்கம் என்பது உனக்குத் தெரியாதா? நீ அதற்கு அணியமாய் இருக்க வேண்டாமா? ம்ம்..பேசு பேசு. எங்களுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.”
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1