லேப்டாப், இன்டர்நெட் இருந்தால்போதும். ஐ.டி ஊழியர் கடைக்கோடி கிராமத்தில் இருந்தும்கூட வேலை செய்யலாம். லாக்டெளனால் அதிக பாதிப்பை சந்திக்காத துறையும் ஐ.டி-தான். ஆனால், இத்துறையிலுள்ள பலரின் வேலைக்கும் ஆபத்து ஏற்படப்போகிறது என்ற பேச்சு ஐ.டி ஊழியர்களை அச்சப்படவைத்துள்ளது.
கொரோனா லாக்டெளனால் பல துறையினர் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறைக்கு மாறியிருக்கின்றனர். அதில் முன்னிலையில் இருப்பது ஐ.டி துறைதான். லேப்டாப், இன்டர்நெட் இருந்தால் போதும். இத்துறையின் ஊழியர் கடைக்கோடி கிராமத்தில் இருந்தும்கூட வேலை செய்ய முடியும். எனவே, லாக்டெளனால் தற்சமயம் அதிக பாதிப்பை சந்திக்காத முதல் துறையும் ஐ.டி-தான். ஆனால், கொரோனாவால் உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பு ஐ.டி துறையையும் பாதிக்காமல் இல்லை. இதனால், வேலை என்னவோ நடந்துகொண்டிருந்தாலும் கைவசம் இருக்கும் பல புராஜெக்ட்டுகள் ரத்து செய்யப்படுவதும், புதிய புராஜெக்ட் தடையில்லாமல் கிடைக்குமா என்ற அச்சமும் இத்துறையில் அதிகம் எதிரொளிக்க ஆரம்பித்துள்ளது. இதனால், அடுத்த சில மாதங்களில் இத்துறையிலுள்ள பலரின் வேலைக்கும் ஆபத்து ஏற்படப்போகிறது என்ற பேச்சு ஐ.டி ஊழியர்களை அச்சப்பட வைத்துள்ளது. அதற்கான ஆரம்பகட்டப் பணிகள் தொடங்கிவிட்டதாக ஐ.டி ஊழியர்கள் பலரும் புலம்புகின்றனர்.
அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகள்ல கொரோனாவால் அதிக பாதிப்பு ஏற்பட்டிருக்கு. எனவே, அந்த நாடுகளைச் சேர்ந்த சில க்ளையன்ட் நிறுவனங்கள் முந்தைய புராஜெக்ட்டுகள்ல பலவற்றையும் நிரந்தரமாகவும் தற்காலிகமாகவும் ரத்து செய்திருக்காங்க. எனவே, அந்த புராஜெக்ட்டுகளைச் செய்துகொண்டிருந்த நிறுவன ஊழியர்கள்ல பலரையும் சில புராஜெக்ட்ல இருந்து ரிலீஸ் பண்ற பணிகள் நடக்குது. இதை ரேம்ப் டெளன்னு (ramp down) சொல்வாங்க. இதன் பிறகு அடுத்த புராஜெக்ட்ல சேரும்வரை இருக்கும் இடைப்பட்ட காலம்தான் பெஞ்ச் பீரியட்னு சொல்லபடுது .
புராஜெக்ட் கைவசம் இருந்து, அதன் க்ளையன்ட் நிறுவனத்துக்கும் நிதிச்சுமை ஏற்படாமல் இருந்தால் அந்த ஊழியர்களுக்குப் பிரச்னையில்லை.இல்லாவிட்டால் பெஞ்ச் பீரியடுக்கு மாற்றப்படும் ஊழியர்களை கம்பெனியின் வேறு புராஜெக்ட்ல மாத்துவாங்க. நிறுவனத்துல வேறு புராஜெக்ட் இல்லையென்றால் ஊழியர்களே புது புராஜெக்ட் தேட வேண்டும் . அதுவரை நிறுவனமே அவர்களுக்கு சம்பளம் கொடுக்கும். அதன்படி புது புராஜெக்ட் பிடிச்சுட்டா, அதுக்கான பயிற்சி எடுத்துக்கணும். பிறகு, தேவைப்பட்டால் அந்த புராஜெக்ட்ல நிறுவன ஊழியர்களையும் சேர்த்துக்கலாம். பிறகு, நிறுவன ஊழியராகவே அந்த புராஜெக்ட்ல வேலை செய்யலாம். அந்த புராஜெக்ட் முடிந்ததும், நிலைமை சரியாகிட்டா, நிறுவனம் கொடுக்கும் புராஜெக்ட்லயே வேலையைத் தொடரலாம். ஒருவேளை புராஜெக்ட் பிடிக்க முடியாத சூழல் வந்தால்? ஆட்கள் தேவைப்படுற நிறுவனத்தின் வேறு கிளையில் (பிராஞ்ச்) இடமாற்றம் செய்யவும் வாய்ப்பிருக்கு. அல்லது வேலையிலிருந்து நீக்கலாம். எது நடந்தாலும், ஏத்துக்க ஊழியர்கள் தயாராக இருக்கணும்.
“எங்க நிறுவனத்துல பெரும்பாலான ஊழியர்களுக்கு ஏப்ரல் மாத சம்பளத்துடன், அடிப்படை சம்பளத்துல (Basic Pay) சராசரியாக 25 சதவிகிதம் சேர்த்துக் கொடுத்திருக்காங்க. எனக்கும் போன மாசத்துக்கு கூடுதலான சம்பளம் கிடைச்சுது. உயர் பொறுப்பில் உள்ளவங்களுக்கு கொஞ்சம் சம்பளம் குறைச்சுக் கொடுத்திருக்கிறதா பேசிக்கிறாங்க. தற்போதைய மே மாதத்துக்கு என்ன நிலவரம்னு தெரியலை. ஆனாலும், இனி சிக்கனமா இருந்தால்தான் வருங்காலத்துல ஏற்படும் இடர்பாடுகளைச் சமாளிக்க முடியும். எனக்கு ரெண்டு குழந்தைகள். குடும்பம் பெரிசாகிடுச்சு. அதனால கணவருடன் நானும் வேலைக்குப் போனாதான் நிதிப் பிரச்னைகளை சமாளிக்க முடியும். அதனால சிரமப்பட்டாவது புது புராஜெக்ட் பிடிச்சாகணும். அதுக்குதான் தினமும் பல நிறுவனங்கள்கிட்ட பேசிட்டிருக்கேன்” என்கிறார் ஐ டி நிறுவனத்தில் வேலை பார்க்கும் அர்ச்சனா
சென்னையில் பல்லாயிரக்கணக்கான ஊழியர்களுடன் பல கிளைகளைக் கொண்டுள்ள பன்னாட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றின் மனிதவள மேம்பாட்டு அதிகாரி ஒருவர், தன் பெயரை குறிப்பிட விரும்பாமல், தங்கள் நிறுவனத்தின் தற்போதைய நிலை குறித்துப் பேசினார். “ஊழியர்களின் ஊதியத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கைவசம் புராஜெக்ட் இருந்தாலும், புது புராஜெக்ட் வருவது குறைந்திருப்பது உண்மைதான். இதனால் வருங்காலம் சற்றே சிக்கலாக இருக்கக்கூடும். தவிர, வேலைப்பளு கூடியிருப்பதாக ஊழியர்கள் சொல்கிறார்கள்.
மனச்சோர்வு ஏற்படுவதைத் தடுக்கவும், உற்சாகப்படுத்தவும் ஊழியர்களுக்கு ஆன்லைன் வாயிலாக சில ஆக்டிவிட்டி நிகழ்ச்சிகளை நடத்துகிறோம். கொரோனா பாதிப்பு சரியான பிறகும் ‘வொர்க் ஃப்ரம் ஹோம்’ முறையில் கணிசமான ஊழியர்கள் வேலை செய்வார்கள். ஐ.டி துறையின் எதிர்காலம் எப்படி இருக்கும் என கணிக்க முடியவில்லை. கொரோனாவின் பாதிப்பால் ஐ.டி துறையின் பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்பட்டால், அதனால் ஏற்படும் விளைவுகளைச் சரிசெய்துகொள்ள எதிர்காலத்தில் சில நடவடிக்கைகள் எடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. ஆனால், தற்சமயம்வரை ஊழியர்களின் வேலைக்கு ஆபத்தில்லை” என்றார்.
தற்போதைய சூழலைப் பதற்றமின்றி எதிர்கொள்வது மற்றும் ஐ.டி துறையின் எதிர்காலம் குறித்து விரிவாகப் பேசுகிறார், எழுத்தாளர் மற்றும் தனியார் ஐ.டி நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குநர் ஷான் கருப்பசாமி.
அதனை நாளை விரிவாக பார்க்கலாம்….
What’s your Reaction?
+1
2
+1
1
+1
+1
+1
+1
+1