4
” ஹையோ அம்மா ! நிச்சயமா சொல்றேன்மா . மதியம் வயிறு நிறைய சாப்பிட்டுட்டேன் ” சுகந்தியை அலர்மேல்நங்கை நம்பத் தயாரில்லை .சுடச்சுட சோறு , சாம்பார் ,அவியல் ,பொறியல் , அப்பளம் எனும் முழு சாப்பாட்டுடன் மாலை வேலை முடிந்து வந்த மகளுக்காக காத்திருந்தாள் அவள் .
.
” அம்மா சமைத்துவிட்டார்களே , சாப்பிடும்மா ”
” அப்பா நீங்களுமா ? ஏழு மணிக்கு இவ்வளவு சாப்பாடு எப்படிப்பா சாப்பிட முடியும் ? சாமி இதெல்லாம் உங்க வேலையா ? ” வீட்டிற்குள் நுழைந்த மாடசாமி மேல் பாய்ந்தாள் .
” நீங்க மூன்று மணி வரை சாப்பிட காண்டீன் வரவில்லை டாக்டர் .அதைத்தான் உங்கள் அம்மாவிடம் சொன்னேன் ”
.
” அம்மா நான் சாப்பிட்டுவிட்டேன்மா ”
” எங்கே சாப்பிட்டாய்மா ? ”
சுகந்தியின் முகம் மிக லேசாக சிவந்தது. ” எங்க சீப் டாக்டரோடு சேர்ந்து சாப்பிட்டேன்பா ”
” யார் ? டாக்டர் ஷ்யாம் சார் கூடவா ? ” மாடசாமியின் குரலில் நம்பிக்கையின்மை .
” ம் .அவர் பேமிலியோடு .” சொல்லும் போதே அவள் ஞாபகம் சாத்விக்கிடம் சென்றது .
சாப்பிட்டாயா ? என்று கேட்ட கையோடு , வா சாப்பிடலாம் என்றும் அழைத்தான் அவன் .
” நான் சாப்பிட்டுவிட்டேன் டாக்டர் ”
.
” பொய் .உன் …உங்கள் முகம் இல்லை என்கிறது .இனி காண்டீனில் எதுவும் இருக்காது .என்னோடு சாப்பிட வா…வாருங்கள் ” தனது உணவை பிரிக்க ஆரம்பித்தான் .
” அதிகப்படி வேலைக்கான பணத்தை , அதாவது உணவுப்படியை அவளுக்கு கொடுத்துவிட்டால் , அவளே வெளியே போய் சாப்பிட்டுக் கொள்வாள் சாத்வி ” எரிச்சலாக குரல் கொடுத்த அன்னையை திரும்பி அவன் ஒரு பார்வை பார்க்க ,
” பேசாமலிரு ஸ்வா ” ஷ்யாம் எச்சரித்தார்.
பாயில் பேக் செய்திருந்த சூடு ஆறாத உணவுகளை அவளுக்குமென தட்டில் பங்கிட்டு வைத்தவனுடன் , இயல்பாக உணவருந்த அமர சுகந்தியால் முடிந்தது.ஆனால் …
” காலையில் எனது போட்டோவை பார்த்து என்ன பேசிக் கொண்டிருந்தாய் ? ” தாய் , தந்தை காதில் விழாமல் மெல்லிய குரலில் அவன் கேட்டபோது , அவளுக்கு விக்கியது
” நா…நானா …? இ…இல்லையே …ஒன்றுமில்லையே …”
உண்மையில் அன்று காலை மின்மினி அவளது பார்வையை கவனித்து கேலி செய்த போது ,அவனது போட்டோவை சுட்டிக் காட்டி ” சாத்விக் ” இன்னொரு ” எஸ் “என்று யோசித்துக் கொண்டிருந்தேன் என்று சமாளித்துக் கொண்டிருந்தாள் .அதனை கேட்டுவிட்டானா ?
” சாத்விக் ..எஸ் …எஸ் …எப்படியோ சமாளித்து விட்டாய் போல ? ”
கடவுளே ! இவன் எல்லாவற்றையும் கேட்டுவிட்டான் போலவே !
” சாத்விக் இன்னொரு எஸ் . இந்த ஆஸ்பிடல் நேமோடு ஒத்து போகிறதுதானே ? அதைத்தான் பேசிக் கொண்டிருந்தோம் ” இப்போது சமாளித்துகொண்டாள் .
” ம் …எப்போது சாத்விக்கிற்கு எஸ் ? ” அவனது கேள்விக்கு சுகந்தியிடம் பதிலில்லை .எழுந்து கை கழுவினாள் .
” அந்த மாடசாமியிடம் எதற்கு அவ்வளவு குழைவு ? ” அவளுக்கு டிஷ்யு நீட்டியவனின் கேள்வி அவளுக்குள் அமிலமாய் விழுந்தது.
” அவர் என் ப்ரெண்ட் ”
” ஓஹோ …எதற்கும் ஜாக்கிரதை ”
போடா …என வையத் துடித்த நாவை அடக்கியபடி வந்துவிட்டாள் .
அன்று இரவு உணவிற்கு பிறகு வீட்டைச் சுற்றி சிறிது நடந்தவளோடு வந்து இணைந்து கொண்டான் மாடசாமி .
” ஸ்வேதா மேடத்திற்கும் , உங்களுக்கும் ஏதாவது முன் பகையா டாக்டர் ? ”
எதை ..எப்படி சொல்வது ? மாடசாமியின் முகத்தை உற்று பார்த்து தலையசைத்தாள் .
” அப்படி ஒன்றும் இல்லை ”
” அவர்கள் அடிக்கடி உங்களையே குறி வைத்து தாக்குவது போல் தெரிகிறதே ”
” அது ….ஒன்றுமில்லை சாமி .அவர்களுக்கு என் மேல் சிறு மனத்தாங்கல் .நான் மற்றவர்களைப் போல் சரி சரியென்று போகாமல் எதிர்த்துக் கேள்வி கேட்கிறேன் பாருங்கள் ”
” ஆனால் நீங்கள் ஏன் அப்படிக் கேட்கிறீர்கள் ? ”
மாடசாமியின் கேள்விக்கு சிரித்தாள் .” என்னால் அப்படி கண் முன் நடக்கும் அநியாயங்களை பார்த்துக் கொண்டிருக்க முடியாது சாமி .என் அப்பாவைப் போல் நான் .என்னிடம் ஸ்வேதா மேடம் அப்பாவை பார்க்கலாம் .அதனால் அதிக கோபம் வரலாமாயிருக்கும் ”
” ஓ …அப்பாவை அவர்களுக்குத் தெரியுமா ? ”
” ஆமாம் .மேடம் முதன் முதலில் படிப்பு முடித்ததும் கடலூர் அரசு மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார் .அப்போது அங்கேதான் என் அப்பாவும் கம்பௌன்டராக இருந்தார் .கொஞ்சம் அனுபவசாலியான அப்பாவின் யோசனைகள் தலைமை டாக்டரால் ஏற்றுக் கொள்ளப்பட்டு , மேடம் பின்தள்ளப்பட அந்த கோபம் அவர்களுக்கு .வேறு இடத்திற்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள் .பிறகு அரசாங்க வேலையை விட்டு விட்டு தனியாருக்கு மாறிவிட்டார்கள் .ஆனாலும் அவர்களால் அப்பாவின் இடையூறை மறக்க முடியவில்லை .அப்பாவின் மகளான என் மீதும் அந்த கோபம் அவ்வப்போது பாயும் ”
” ஓ …இப்படி ஓரு பின்கதையா ? ஆனால் சின்ன டாக்டரும் அம்மாவோடு சேர்ந்து உங்கள் மேல் கோபப்படுகிறாரே ? ”
சாத்விக்கின் கோபத்தின் காரணம் சுகந்தி மட்டுமே அறிந்தது . அதை யாரிடம் விளக்க முடியும் ?
” அம்மாவிற்கு மகன் சப்போர்ட் .தவிர எங்களுக்குள் வேறு ஒன்றும் இல்லை சாமி ”
” ஜாக்கிரதை டாக்டர் . நம் மருத்துவமனையில் முன்பு வேலை பார்த்த செலினா சின்ன டாக்டரை பற்றி ஏதேதோ சொல்லியிருக்கிறாள் ” மாடசாமியின் எச்சரிக்கைக்கு பின்புலமாக செலினாவின் குரல் சுகந்தியின் காதுகளில் ஒலித்தது.
” ட்ரிப்ஸ் பாட்டில்ஸ் எடுத்துட்டு எட்டாம் நம்பர் ஆபரேசன் தியேட்டர் வான்னு கூப்பிட்டார் டாக்டர் .அங்கே எந்த ஆபரேசனும் இல்லை .இந்த ரூம் இப்போ ப்ரீதான்னு கை பிடித்து இழுக்கிறார் ”
சுகந்தியின் முகம் இறுகியது .இது போன்ற அந்தரங்க உண்மைகளை வெளியே சொன்னதாலோ என்னவோ …அடுத்த மாதமே செலினா வேலையை விட்டு விரட்டப்பட்டு விட்டாள் .போன வாரம் அவளை பஸ் ஸ்டாப்பில் பார்த்த போது கூட , அதன்பிறகு வேலை கிடைக்கவேயில்லை ,எஸ்.எஸ் குடும்பம் அவளுக்கு வேலை கிடைக்க விடவில்லை .தற்போது குடும்பத்தோடு பட்டினி கிடக்கும் நிலையில் இருப்பதாக அழுதாள் .சுகந்தி பரிதாபத்தோடு அவளுக்கு ஐயாயிரம் ருபாயை ஜி பே பண்ணிவிட்டு வந்தாள் .
” ரொம்பவே மோசமான குடும்பம்தான் ” வெறுப்பில் வந்து விழுந்த அவளது வார்த்தைகளின் பின்னே ஸ்வேதாவும் அவளது மகனும் இருந்தனர் .
” ம் ….அதுதான் அவர்களோடு நெருங்கிப் பழக வேண்டாம் டாக்டர் .” இறைஞ்சலாக
ஒலித்த மாடசாமியின் குரலில் தெரிந்த தோழமையில் மனம் கனிந்தாள்
” அவ்வளவு சீக்கிரம் என்னை யாரும் நெருங்க முடியாது சாமி .அதை விடுங்க , உங்களை முகநூல் கணக்கு ஒன்று தொடங்க சொன்னேனே ? தொடங்கி விட்டீர்களா ? ”
என் ஊர் , என் வீடென இருக்கும் மாடசாமியை இன்றைய நாகரீக உலகத்திற்குள் இழுக்க முயன்றிருந்தாள் . இது போன்ற சமூக ஊடகங்கள் இப்போது அனைவருக்குமே தவிர்க்க முடியாதவை ஆகி விட்டனவே !
” ஓ…ஆரம்பித்துவிட்டேனே ! ஐநூறு ப்ரெண்ட்ஸ் கூட சேர்த்துவிட்டேன் .அதில் நிறைய பாரின் பசங்க கூட இருக்காங்களே ! ”
” அட , இது எப்படி ? ”
” நான் டாக்டர் .இங்கே வேலை பார்க்கிறேன்னு சொன்னதுமே நிறைய ப்ரெண்ட்ஸ் ரிக்வெஸ்ட் .எல்லாவற்றையுமே ஏற்றுக் கொண்டேன் ”
ம்கூம் …இவனது சமூக ஊடக அறிவை இன்னும் கொஞ்சம் சரி செய்ய வேண்டுமே .எல்லாவற்றிலும் நல்லதும் ,தீயதும் இருக்கும்தானே ? இவனது ஆர்வம் தீயவை பக்கம் போய்விடக் கூடாதே .
” சாமி முகநூல் பற்றி உங்களிடம் தெளிவாக பேச வேண்டும் .வரும் ஞாயிற்றுக்கிழமை எனக்கு லீவ் .உங்களுக்கு….? ”
” எனக்கு அன்று ட்யூட்டி டாக்டர் ”
” ஓ…சரி பரவாயில்லை . இருவருக்கும் லீவ் இருக்கும் போது , இதைப் பற்றி பேசலாம் .அது வரை புது நண்பர்கள் யாரையும் சேர்க்க வேண்டாம் ”
” சரி டாக்டர் .” ஏன் எதற்கென்று கேளாமல் உடனே சரியென்றவனை வாஞ்சையாக பார்த்த போது , உள்ளிருந்து சுந்தரபுருசன் அழைத்தார் .
” இந்த நோய் உலகம் முழுவதும் வேகமாக பரவுகிறதாம் சுகா . எனக்கு கொஞ்சம் பயமாக இருக்கிறது ” டிவி திரையைக் காட்டிக் கூற , சுகந்தி டிவியை பார்த்தாள் .
கோவிட் 19 எனும் உயிர்க்கொல்லி வைரஸ் சைனாவிலிருந்து உலக நாடுகள் முழுவதும் அதி வேகமாக பரவி வருவதாக டிவி செய்தி சொன்னது .