13
” ஈஸ்வரி , முத்து எப்படி இருக்கீக…? ” சத்தமான குரலில் கேட்டபடி வீட்டிற்குள் வந்தார் அந்த பாட்டி .கூனல் முதுகுடன் கையில் கம்பை ஊன்றியபடி நடந்து வந்தார்.
” கூனி கிழவி வந்திருச்சி ” சுமித்ரா முணுமுணுத்தாள்.
” யார் சுமி இந்த பாட்டி ? ஏன் அவர்களை இப்படி சொல்கிறாய் ? ” நர்மதா விசாரித்தாள்.
உனக்கு ஏன் நான் பதில் சொல்ல வேண்டும் …என்ற பாவனையோடு முகத்தை திருப்பிக்கொண்டாள் சுமித்ரா.
” மெல்ல …மெல்ல கழுத்து சுளுக்கிக்க போகுது .இப்படித்தான் மூஞ்சிய திருப்பிக்கொண்டு அங்க இருந்து வந்துட்டியா ? ” நர்மதா மெல்ல நோட்டம் விட்டாள்.
” எங்க இருந்து ? ” சுமித்ராவின் கண்களில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணின் பொறியொன்று உருவானது.
” அதான் சுமி…அந்த கீழசெக்காரக்குடியிலிருந்து …உன் புகுந்த வீட்டிலிருந்து… இப்படித்தான் ஓடி வந்தாயா ? ”
” என்னை சொல்வதற்கு உங்களுக்கு தகுதி கிடையாது. சொல்லாமல் கொள்ளாமல் இங்கிருந்து பெட்டியை தூக்கிக் கொண்டு போனவர்தானே நீங்கள் ? ” சுமித்ரா எகிறினாள்.
சொல்லாமல் கொள்ளாமல் போனேனா நர்மதாவின் மனம் நொந்தது .இங்கே இப்படி ஒரு பெயர் இவள் வாங்கி வைத்திருக்கிறாளா ?
” சரி நான் அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன் .நீ எப்படியாம் ? ”
” என்னை அங்கே இருக்கக்கூடாது என்று அவர்களேதான் , அதிலும் முக்கியமாக உங்களுடைய ஆருயிர் நண்பர்தான் விரட்டி விட்டார் தெரியுமா ? ”
எனக்கு மட்டும் என்னவாம் …அதே நிலைமைதான் .நர்மதா மனதிற்குள் நினைத்துக் கொண்டாள் .” நண்பரென்றால் நீ யாரை சொல்கிறாய் ? சந்திரனையா ? ”
” இப்படி மூஞ்சில அடிப்பதுபோல் அவர் பெயரை சொல்லாதீர்கள் என்று முன்பே சொல்லியிருக்கிறேனே ” எரிந்து விழுந்தாள்.
சரிதான்… வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டாள் நர்மதா.” அவர் உன் கணவ‘ர் ‘சந்திர‘ர் ‘அப்படி சொன்னா‘ரா‘ ஒவ்வொரு “ர்” ருக்கும் அழுத்தம் கொடுத்தாள்.
” அந்த “ர்” தான் அவருடைய குடும்பம்தான் முக்கியம் என்று சொல்லி் என்னை வீட்டை விட்டு விரட்டியவர்.அவர் நல்லவர் வல்லவர் என்று புகழ்ந்து பேசியதோடு , தயக்கத்தோடு இருந்த எங்கள் இருவரையும் சமாதானப்படுத்தி திருமணம் செய்து வைத்து நீங்கள்தான் தப்பு செய்து விட்டீர்கள் ” குற்றம்சாட்டினாள் .
சுமித்ராவிற்கு தன்மீது இந்த கோபம் இருப்பது நர்மதாவிற்கு தெரியும் .அவள் திருமணத்திற்கு பின் வாழாமல் தன் புகுந்த வீட்டிற்கு திரும்பி விட்டது கேள்விப்பட்டு அவளுடன் போனில் பேச சிலமுறை நர்மதா முயன்றாள் .ஆனால் ஒற்றை வார்த்தை பேசுவதற்கும் சுமித்ரா தயாராக இருக்கவில்லை.
” என் அண்ணன் வரட்டும் .அவரிடமே நான் நியாயம் கேட்கிறேன் ” என்ற பேச்சுடன் நர்மதாவின் போனை கட் செய்து விட்டாள் .இதோ இப்போதும் அண்ணன் தனக்குச் சொல்லும் நியாயத்திற்கான அவளது எதிர்பார்ப்பு என்னவென்று நர்மதாவால் புரிந்து கொள்ள முடியவில்லை.
” சந்திரனைப் போல உன் அண்ணனும் என்னை வீட்டை விட்டு விரட்டி விட வேண்டும் என்று எதிர்பார்க்கிறாயா சுமித்ரா ? ”
சுமித்ரா திடுக்கிட்டாள் .அவள் எதிர்பார்ப்பு அதுவா …? ” இல்லை… அப்படி இல்லை …” தடுமாறினாள்.
அப்படி ஒரு எண்ணம் அவளுக்கு இருக்கிறதோ இல்லையோ …ஆனால் தன் வயதை ஒத்த அண்ணன் மனைவி தான் இந்த நிலையில் இருக்கும்போது அண்ணனுடன் மகிழ்வாக இருப்பதை அவள் விரும்பவில்லை.
” நீயும் , சந்திரனும் எத்தனை நாட்கள் சேர்ந்து வாழ்ந்து இருப்பீர்கள் ? ” சுமித்ராவின் கண்கள் கலங்கியது
” பத்தே நாட்கள் ்அதற்குள் வீட்டிற்குள் ஏதோ சண்டைகள், சச்சரவுகள் .என் பக்கத்து நியாயத்தை அவர் கேட்கவே இல்லை .ஒரே வார்த்தையில் வீட்டை விட்டு வெளியே போ என்று விட்டார் ”
” ம் , உனக்கு பத்து நாட்கள் .எனக்கு ஒரே ஒரு நாள். என்ன பார்க்கிறாய் …நான் உன் அண்ணனோடு வாழ்ந்தது ஒரே ஒரு நாள்தான் .மறுநாளே அவர் ஊருக்கு கிளம்பி போய்விட்டார் . அங்கிருந்து போனில் என்னை வீட்டை விட்டு வெளியே போ என்கிறார் .நான் என்ன செய்வது….? ”
” ஆனால் நீங்கள் தப்பு செய்தீர்கள்தானே ? அதற்காகத்தானே அண்ணன் அப்படி சொன்னார் ? ”
” என்ன தப்பு செய்தேன் ? காதலித்தவர்களை சேர்த்து வைத்தேனே அதுதான் நான் செய்த தவறா ? ”
” எங்கள் இரு ஊர்களுக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகள் தெரிந்த பிறகும் நாங்கள் திருமணம் செய்தால் சேர்ந்து வாழ முடியாது என்று நன்றாக தெரிந்தும் நாங்கள் தயக்கத்துடன் இருந்தபோதும் எங்கள் இருவரையும் திருமணம் செய்துகொள்ள தூண்டினீர்களே அது உங்கள் தவறு தானே ? ”
” இரு ஊர்களுக்கு இடையையும் பிரச்சனைகள் இருப்பது தெரிந்த பிறகும் , காதலித்தது உங்கள் இருவருடைய குற்றம் இல்லையாக்கும் .அந்த காதலை சேர்த்து வைக்க நினைத்த நான் தவறு செய்தவளாக்கும் ? ”
” அது …கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள் என்று நீங்கள்தான் சொல்லியிருக்க வேண்டும் ” சுமித்ரா தடுமாறினாள்.
” அவ்வளவு பொறுமை உங்கள் இருவருக்கும் இருந்ததா சுமி ? ” நர்மதா கிண்டலாக கேட்க சுமித்ரா சங்கடத்துடன் உதட்டை கடித்தாள்.
நர்மதாவை துணையாக வைத்துக்கொண்டு சந்திரனும் சுமித்ராவும் அடிக்கடி சந்தித்து வந்தனர். அந்த சமயங்களில் எல்லாம் அவள் சற்று அந்தப்பக்கம் நகர்ந்த உடனேயே மடைதிறந்த வெள்ளம் கரைமேல் பரவுவது போல ஒருவரை ஒருவர் அள்ளிக் கொள்ள துடிக்கும் அவர்களது காதலை கொஞ்சம் கவலை உடனேயே பார்த்து வந்தாள் நர்மதா.
இத்தனை ஆசையுடன் இருப்பவர்களை அதிக நாட்கள் பிரித்து வைத்திருக்க வேண்டாம் என்ற எண்ணத்துடனேயே அவள் இருவரது திருமணத்திற்கான யோசனையைச் சொன்னாள் .அத்தோடு காதல் என்ற ஒன்று அறியாது இருந்த தன்னுடைய வாழ்வை போல் அல்லாமல் சுமித்ராவின் வாழ்வு காதலோடு பசுமையாக இருக்க வேண்டும் என விரும்பினாள் .
அவளுடைய மனதில் முதல் நாள் இரவு ஆசையும் காதலுமாக அவளுடன் இருந்துவிட்டு, மறுநாளே முகத்தை திருப்பிக் கொண்டு போன கணவன் இருந்தான் .காதலித்து மணமுடித்து இருந்தால் இப்படி ஒரு முகம் திருப்பல் அவளுக்கு கிடைத்திருக்காது தானே …இரவில் அவனுக்கான தேவை கிடைத்துவிட்டது .பகலில் அவளை பார்க்கவும் விரும்பவில்லை. இப்படித்தான் அவள் கணவனை கணித்து வைத்திருந்தாள் .
இதுபோல் கடமைக்கான கணவன்–மனைவியாக இல்லாமல் காதல் கனிய இணைந்து வாழும் வாழ்வு சுமித்ராவிற்கு கிடைக்க வேண்டும் என்று அவள் நினைத்தாள் .எனவே ஊர் பகை , சண்டை என்று ஏதாவது காரணங்களை காட்டி சந்திரன் , சுமித்ரா திருமணம் நடக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் அவசரமாக அவர்கள் திருமணத்தை நடத்தி முடித்தாள் .திருமணம் முடிந்ததும் எல்லாம் சரியாகி போகும் என்ற அவளுடைய கணக்கு தப்பிதம் ஆனது.
” நீங்கள் இருவரும் மிகவும் அவசரத்தில் இருந்தீர்கள் .உங்களுக்குள் கட்டுப்பாடுகள் இருப்பது போல் தெரியவில்லை .அதனால்தான் நான் திருமணத்திற்கு அவசரப் பட்டேன்” உண்மையை புட்டு வைத்த அண்ணன் மனைவி மேல் இப்போது சுமித்ரா விற்கு கோபம் வரவில்லை. மாறாக அழுகை வந்தது.
” நான் தப்பு செய்து விட்டேன் ” தன்னை தான் ஒத்துக் கொண்டாள்.
” ம் , இது சரி. இதுதான் நல்ல பிள்ளைக்கு அழகு .இப்போது செய்த தப்பை சரி செய்ய பார்ப்போமா ? ” கேட்டபடி சுமித்ராவின் கன்னத்தில் தட்டினாள் நர்மதா.
” என்ன மதினியும் , நாத்தனாரும் ஒரே கொஞ்சலா கிடக்கு ? ” கேட்டபடி உள்ளே வந்தார் அந்த பாட்டி.
” அய்யய்யோ இந்த பாட்டிகிட்ட பேச்சு கொடுக்காதீங்க மதினி. நம்மள ஒரு வழி பண்ணிவிடும் இது .வாங்க உள்ளே போயிடலாம் ” சுமித்ரா முனுமுணுக்க…
” ஏட்டி எங்கட்டி போற ? ” என போன சுமித்ராவை அதட்டி உட்கார வைத்தார் பாட்டி.
” இப்பதேன் ஈஸ்வரிகிட்டயும் முத்துகிட்டயும் பேசிட்டு வந்தேன் .உங்க ரெண்டு பேர பத்தியுந்தேன் வண்டி வண்டியாக பேசினேன் .சொல்லுங்க புது பொண்ணுங்க ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க ? ”
” நல்லா இருக்கோம் பாட்டி. நீங்க உள்ள போயி சாப்பிட்டுட்டு வீட்டுக்கு போங்க ” சுமித்ரா மீண்டும் நழுவ பார்க்க , ” அட நான் சாப்புட்டேன்டி .உக்காரு …உன்கிட்ட பேசுறதுக்கு தான் வந்து இருக்கேன் ” அவள் தோளை அழுத்தி உட்கார வைத்த பாட்டி தானும் அவர்கள் அருகில் அமர்ந்துகொண்டு இருவரின் முகத்தையும் கூர்ந்து பார்த்தார் .நர்மதாவின் முகத்தை கையால் தொட்டு இப்படியும் அப்படியும் திருப்பி பார்த்தவர்…
” முகம் நல்லா மினுமினுன்னு பூரிச்சு போய் இருக்குதே .எந்தாயி ஏதாவது விசேஷமா ?” பாட்டி கேட்கவும் நர்மதாவிற்கு திக்கென்றது .இதென்ன இந்த பாட்டி இப்படி முகம் பார்த்தே கண்டுபிடிக்கிறார் ?
” எதையாவது உளராதீர்கள் பாட்டி .அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை ” பதில் சொன்னாள் சுமித்ரா.
“அப்படியா சொல்லுற …? ” பாட்டிக்கு சந்தேகம் போகவில்லை அவரது கண்கள் நர்மதாவின் முகத்தையே வட்டமிட்டன.
” ஏட்டி ஈஸ்வரி இங்கன செத்த வா .உன் மருமகளுக்கு எதுவும் விசேஷம் இல்லையா ? ”
அங்கே வந்த சர்வேஸ்வரியின் முகத்தில் கோபம் இருந்தது ” எதையாவது உளராமல் சும்மா இருங்கள் பெரியம்மா . கல்யாணம் முடிஞ்ச மறுநாளே பையன் ராணுவத்திற்கு போயிட்டான் .பிறகு எப்படி…? ”
” அப்படிங்கிற…? ” பாட்டிக்கு இன்னமும் சந்தேகம் போகவில்லை .
” மறுநாள் தானே போனான் ? ” என்றபடி நர்மதாவை பாட்டி பார்த்த பார்வையில் குறும்பு இருந்தது.
மாட்டிக்கொண்ட பாவனையில் விழிகளை ஓரிடத்தில் நிறுத்தாமல் அங்குமிங்கும் அலை பாய விட்டபடி நர்மதா இருந்தபோது, அறையின் வாசலில் நின்று இங்கு நடக்கும் பேச்சை கவனித்துக்கொண்டிருந்த மாதீரன் அவள் கண்களில் பட்டான். வெட்கத்தில் உடல் முழுவதும் கூசியது நர்மதாவிற்கு .மாதீரனின் கண்கள் நர்மதாவை கூர்மையாக பார்த்தபடி இருந்தன.
” இங்க பாரு ஈஸ்வரி , மகன் வீட்டுக்கு வந்துட்டான் …இனியாவது ரெண்டு பேருக்கும் மாசி கருவாடு வச்சி கொடு. எல்லாம் நல்லபடியா முடியும் .நான் உன் மகன் மருமகளுக்கு மட்டும் சொல்லல, சண்டை போட்டுட்டு ஓடிவந்து இங்க உட்கார்ந்து இருக்காளே உன் மகள் அவளுக்கும் சேர்த்துதான் சொல்றேன் ”
” சும்மா இருங்க பெரியம்மா .இப்போ கருவாட்டுக் குழம்பு வச்சு கொடுக்குற நிலைமைலையா நான் இருக்கிறேன் ? ” சர்வேஸ்வரி சலித்தாள்.
” ஏட்டி நான் சொல்லுறத கேளு .புது கண்ணாலம் கட்டின இரண்டு ஜோடிக்கும் மாசிக்கருவாடு வச்சு போடு. எல்லாம் நல்லபடியா நடக்கும் ”
” ஐயோ பெரியம்மா …சுமியை இப்போ…”
” எல்லாம் எனக்கும் தெரியுன்டி …புருஷன விட்டுட்டு இருந்தாலென்ன… பிரிஞ்சி இருக்கிற எத்தன புருஷன் பொண்டாட்டிய இந்த மாசி கருவாடு சேர்த்து வச்சிருக்கு தெரியுமா ? இதோட அருமை எல்லாம் உங்கள மாதிரி இளந்தாரிகளுக்கு எங்க தெரியப்போவுது ? கண்ட மருந்து மாத்திரைய வாங்கி போட்டு உடம்ப கெடுத்துக்கிறீக … இந்தா உனக்கு குடுக்கத்தான் இந்த கருவாட கொண்டு வந்தேன் ” பழுப்பேறி போயிருந்த மஞ்சள் பை ஒன்றை எடுத்து சர்வேஸ்வரியிடம் கொடுத்தார் பாட்டி.
” நிறைய இருக்குது .தினமும் வச்சு கொடு ” என்று கண் சிமிட்டி விட்டு போய்விட்டார் பாட்டி. சர்வேஸ்வரி எரிச்சலுடன் அந்த கருவாட்டு பையை எடுத்துக்கொண்டு உள்ளே போக , நர்மதா குரலைத் தழைத்துக் கொண்டு சுமித்ராவிடம் விசாரித்தாள்.
” அது என்ன கருவாடு சுமி ? ஏன் பாட்டி அதைப் பற்றி இவ்வளவு பேசுகிறார் ? ”
சுமித்ராவின் முகம் சிவந்தது .அவள் பேச்சு தடுமாறியது .” அ…அது வந்து நம்மூர் பக்கம் அந்த கருவாட்டை புதிதாக திருமணம் முடித்த தம்பதிகளுக்கு தினமும் செய்து கொடுப்பார்கள் .வ …வந்து …அது வந்து ” என்றவள் இன்னமும் குரலை தாழ்த்தி ” வயாகரா போல் என்று சொல்வார்கள் ” சொல்லிவிட்டு கூச்சத்துடன் எழுந்து போய்விட்டாள்.
நர்மதாவின் உடல் ரத்தம் முழுவதும் முகத்திற்கு பாய , இன்னமும் அங்கேயே ஏதோ யோசனையுடன் நின்று கொண்டிருந்த மாதீரனின் முகம் பார்க்க முடியாமல் தலை குனிந்தாள் . பெண்களாக பேசிக்கொண்டிருக்கும் இடத்திற்கு இவன் ஏன் இப்படி வந்து நிற்கிறான் தனக்குள் அவனை வைது கொண்டாள்.
மாதீரன் அவளை நோக்கி மெல்ல நடந்து வரலானான். இவன் ஏன் இப்போது இங்கே வருகிறான் …நாங்கள் பேசியது எல்லாவற்றையும் இவனும் கேட்டு விட்டானா ? குரலை குறைத்து மிகவும் மெல்லத்தானே பேசிக்கொண்டிருந்தோம்… ஐயோ கிட்டே வந்து விட்டானே… வந்து ஏதாவது கேட்டால் என்ன சொல்வது…? நர்மதா பதட்டத்துடன் நகம் கடிக்க மாதீரன் அழுத்தமான காலடிகளுடன் அவளை நெருங்கிக் கொண்டிருந்தான்.
பேசாமல் ஓடிவிட வேண்டியதுதான் என்ற முடிவை நர்மதா எடுத்து நகர்ந்தபோது அவள் பாதையில் வந்து நின்றான் ” பாட்டி என்ன சொன்னார்கள் ? ” நெற்றியில் அடித்ததுபோல் வந்து விழுந்தது அவனுடைய கேள்வி.
நர்மதாவிற்கு மூச்சடைத்தது.
பாட்டி ஏதேதோ சொன்னார்கள். கண்டபடி பேசினார்கள் .அதையெல்லாம் இவனிடம் சொல்ல முடியுமா…?
” ஒ … ஒன்றும் சொல்லவில்லையே ” தடுமாறியது அவள் குரல்.
” ஏதோ விபரம் கேட்டார்களே …? ” எதிர்பார்ப்பிருந்த்து அவன் குரலில் .
என்ன விபரம் கேட்டார்கள் …?நர்மதாவின் மூளையில் ஒன்றும் உறைக்கவில்லை .” இல்லையே… அப்படி ஒன்றும் கேட்கவில்லையே …சும்மா ஏதோ பொதுப்படையாக பேசிக்கொண்டிருந்தார்கள் .அவ்வளவுதான் ”
” ஓ முக்கியமான விஷயம் எதுவுமே கிடையாதா ? ” அவன் கண்கள் அவளைக் கூர்ந்தன.
” இல்லையே …அப்படி எதுவும் கிடையாது .வெளியே சொல்கிற அளவு முக்கியமான விஷயம் எதுவும் என்னிடம் இல்லை ” சொல்லிவிட்டு வேகமாக உள்ளறைக்கு போய்விட்டாள். அங்கிருந்து பார்த்தபோது மாதீரன் யோசனையுடன் அதே இடத்தில் அங்குமிங்கும் நடந்து கொண்டிருப்பது தெரிந்தது.
சாதாரண மாசி கருவாட்டிற்கு இவனுக்கு இவ்வளவு யோசனையா ? என்று நினைத்துவிட்டு அந்த கருவாட்டை பற்றிய நினைவில் முகம் சிவக்க வேகமாக பின்கட்டுக்கு ஓடிவிட்டாள்.
” ம்க்கும் குடியும் குடித்தனமும் இங்கே நடக்குதாக்கும் ? மாசி கருவாடு வச்சி கொண்டாடுறதுக்கு …? ‘ சொன்னபடி முத்தாச்சி அந்த கருவாட்டு பையை தூக்கி பரண்மேல் போட்டுக்கொண்டிருந்தாள் .அவளது வெறுப்பில் மனம் வருந்திய நர்மதா அடுப்படியில் இருந்து கிணற்றடிக்குப் போய் அமர்ந்து கொண்டாள் .இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வீட்டை விட்டு வெளியே போக வேண்டி வருமோ என்று வருத்தத்துடன் நினைத்துக்கொண்டாள்.
” அப்பா உன்னை கூப்பிடுகிறார் வா ” என்றபடி திடுமென்று அவன் பின்னால் வந்து கூப்பிடவும் திடுக்கிட்டுத் திரும்பியவள் அந்த வேகத்தில் கிணற்றடியில் இருந்த பாசியில் கால் வழுக்க தடுமாறினாள் .நொடியில் வேகமாக வந்து அவளை தாங்கிப் பிடித்தான் .
” கொஞ்சம் கவனமாக இருக்க மாட்டாயா ? அப்படி என்ன அலட்சியம் உனக்கு ? ” அதட்டலாக கேட்டான் .
அரை வினாடிக்குள் நடந்துவிட்ட இந்த தடுமாற்றத்திற்கு உடல் பதற நர்மதாவின் கை வேகமாக பாதுகாத்தது அவளது வயிற்றைத்தான் .இறுக்கமாய் வயிற்றின் மீது படிந்திருந்த அவள் கைகளை ஓரப் பார்வையால் பார்த்தவன் , ஜாக்கிரதையாக அவளை நிமிர்த்தி நிற்க வைத்துவிட்டு மெல்ல வயிற்றில் படிந்திருந்த அவள் கைகளின் மேலே ஒற்றை விரலால் வருடினான்.
பின் ஐந்து விரல்களையும் ஒன்றாக்கி தன் கையை மடித்து கொண்டவனின் புறங்கையில் தெறித்த நரம்புகளில் ரத்தத்தின் வேகப் பாய்ச்சல்கள்.
அவள் இடையை மென்மையாக பற்றி தூக்கி கிணற்றடி ஈரத்தைவிட்டு பத்திரமாக தள்ளி நிறுத்தியவன் ” ஜாக்கிரதையாக வா ” என்றுவிட்டு நடந்தான்.
ரொம்ப அக்கறை தான் உதடு பிதுக்கிக் கொண்ட நர்மதா அவனை பின் தொடர்ந்தாள்.
வாசல் திண்ணையில் அமர்ந்திருந்தனர் சடையாண்டி , முனியாண்டி .சொம்பு நிறைய அவர்கள் இருவருக்கும் ஏதோ பானத்தை கொடுத்துக்கொண்டிருந்தாள் சர்வேஸ்வரி .அந்த பானத்தில் இருந்து எழுந்த வாசம் நர்மதாவிற்கு பிடித்தமானதாக இருக்க லேசாக அதனை எட்டிப் பார்த்தாள் .
” உனக்கு இந்தி தெரியுமா ? ” சடையாண்டி கேட்டார்
” ம் . தெரியும் ” என்றவளின் பார்வை அந்த சொம்புகளில் இருந்தது .என்ன இது கறுப்பாக….இல்லை பழுப்பாக….?
” படிக்க தெரியுமா ? எழுதத் தெரியுமா ? கத்துக் கொடுப்பாயா ? ” வரிசையாக கேள்விகள் வர புரியாமல் பார்த்தாள் .
” எதற்கு கேட்கிறீர்கள் ? ”
” நம்ம பசங்களுக்கு இந்தி சொல்லிக் கொடுக்கிறாயா ? ”
எந்த உணவுப் பண்டத்தையும் ஒழுங்காக சாப்பிட முடியாத நிலையில், இதோ இந்த சொம்பில் இருக்கும் பானம் அவளுக்கு உண்ணும் ஆசையைக் கொடுக்க, இந்த நேரத்தில் இவர் எதை எதையோ கேட்கிறாரே சலிப்பாய் பார்த்தாள்.
” ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் நம் ஊர் பசங்களுக்கு எழுத்துத் தேர்வுக்கு பயிற்சி கொடுக்கிறாயா என்று அப்பா கேட்கிறார் ” மாதீரன் அவளுக்கு விளக்கமாய் சொன்னான்.
” ஓ கொடுப்பேனே .எனக்கு இந்தி நன்றாகத் தெரியும் .இது என்ன ஜூஸ் அத்தை ? ” சர்வேஸ்வரியிடம் கேட்டாள்.
” பானக்கரசம். இனிப்பும் புளிப்புமாக இருக்கும் .உனக்கு பிடிக்காது ”
” இல்லை எனக்கு பிடிக்கும். கொடுங்களேன்…” என்றவள் மாமியாரின் கையிலிருந்த சொம்பை வாங்கி ஆவலுடன் குடிக்க துவங்கினாள்.
” உன் வீட்டுக்காரியை இந்தி சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய் மாது .” சடையாண்டி சொல்ல அவருக்கு தலையசைத்தபடி ஆர்வமுடன் பானக்கரசம் குடிக்கும் மனைவியை பார்த்தபடி இருந்தான் மாதீரன் .
What’s your Reaction?
+1
4
+1
1
+1
+1
+1
1
+1
+1