23
“வணக்கம்மா.. நான் அகல்யா.. உங்க பக்கத்து வீட்டில் தான் இருக்கிறேன்..” கை குவித்தபடி வந்த அந்த பெண்ணிற்கு முப்பது வயதிருக்கலாம்… நறுவிசான உடைகளில் பார்த்ததும் கண்ணியம் காட்டும் தோற்றத்தில் இருந்தாள்..
ஒரு சிறிய காம்பவுண்டிற்குள் அடுத்தடுத்து அமைந்திருந்த அந்த இரு வீடுகளும் ஒன்று போல் இருந்தன.. அதில் ஒரு வீட்டைத்தான் அவர்களுக்காக காட்டியிருந்தான் திவாகர்..
அவள் வெளியேறுவதாக சொன்னதும் மிகப்பெரிய அதிர்ச்சி எதனையும் பாலகுமரனிடமிருந்து எதிர் பார்க்கவில்லை சஸாக்கி.. அதைப் போலவே மிக சாதாரணமாகவே அவளது வீட்டை விட்டும் வெளியேறும் பேச்சை கேட்டான் அவன்..
அபிராமி சிறிது தயக்கமாக பார்க்க, கார்த்திகாதான் முதல் ஆளாக வாய் திறந்தாள்..
“நீங்கள் வீட்டை விட்டு வெளியேறுவதாக இருந்தால்.. நான் என் அம்மா வீட்டிற்கு வருவதற்கு மிகவும் வசதியாக இருக்கும்..”
“நிச்சயம் கார்த்திகா.. அதற்காகவாது நான் நிச்சயம் வெளியேறவே போகிறேன்..” சஸாக்கி புன்னகைக்க..
“எங்கே போக போகிறீர்கள்..?” வாய் திறந்தான் பாலகுமரன்..
ஆக உனக்கு நாங்கள் வெளியேறுவதில் ஆட்சேபனை இல்லை.. கனத்த மனத்தை வெளிக் காட்டாமல் புன்னகைத்தாள் சஸாக்கி..
“ஜப்பானுக்கே போய்விடுகிறோம்..”
அபிராமி அவசரமாக இடையிட்டாள்..
“குழந்தையை என்ன செய்ய போகிறீர்கள்..?”
“நிச்சயம் உங்களிடம் கொடுத்து போகமாட்டோம்..” அன்னலட்சுமி கோபமாக கூறினாள்..
“ம்மா.. நீங்க சும்மா இருங்க..” கண்டித்த சஸாக்கி..
“என்ன செய்யட்டும்..?” பாலகுமரனை பார்த்துத்தான் இந்த கேள்வியை கேட்டாள்.. அவன் வாயை திறப்பதாக இல்லை..
சஸாக்கி அபிராமியிடம் திரும்பினாள்..
“குழந்தையை என்ன செய்ய ஆன்டடி..?”
“குழந்தை எங்கள் குடும்ப வாரிசு..” முனங்கினாள் அபிராமி..
“அப்போ குழந்தையை நீங்களே வைத்துக் கொள்கிறீர்களா..?”
“இல்லை முடியாது..” அன்னலட்சுமி அலறினாள்..
“அபிராமிம்மா பால் மணம் மாறாத பச்சைக் குழந்தை.. அம்மா இல்லாமல் அந்த குழந்தை எப்படி வளரும்..? என் மகளின் குழந்தையை எங்களுக்கு கொடுத்து விடுங்கம்மா..”
“ம்ஹூம் அதெல்லாம் முடியாது.. என் அண்ணனின் குழந்தை எங்களுக்கு வேண்டும்..” கார்த்திகா சண்டைக்கு தயாரானாள்..
“வேண்டாம்மா கார்த்திகா.. இனி என் மகளின் வாழ்வே இந்த குழந்தையை வைத்துத்தான்..
அவள் வாழ்க்கையைத்தான் பறித்து விட்டாய்.. குழந்தையையாவது கொடுத்து விடு..”
“அண்ணா என்ன பேசுகிறார்கள் பாருங்கள்.. கார்த்திகா அலறினாள்..”
“யார் வாழ்க்கையை யார் பறித்தது..? நீங்கள் முதலில் இந்த வீட்டை விட்டு வெளியேறுங்கள்..” இரும்பாய் ஒலித்தது பாலகுமரனது குரல்.
“நிச்சயம் போய்விடுவோம் பாலா.. உங்களுக்கு பிடிக்காத எதையும் நான் உங்கள் மேல் திணிக்கமாட்டேன்.. அது என்னையாக இருந்தாலும்.. நம் குழந்தையாக இருந்தாலும்..”
“ஏய் சஸி ஏன்டி உன் தலைiயில் நீயே மண்ணள்ளி போட்டுக் கொள்கிறாய்..? இங்கே பாருங்கள் குழந்தையை தர நான் சம்மதிக்க மாட்டேன்.. நீங்கள் குழந்தையை பிடுங்க முயன்றால் நிச்சயம் போலிசிற்கு போவேன்..”
“எவ்வளவு திமிர் உனக்கு.. போலிசில் கம்ப்ளைன்ட் கொடுப்பாயா..?” அபிராமி கத்த ஆரம்பித்தாள்.. அன்னலட்சுமியும் பதிலுக்கு கத்தினாள்..
அவரவர் பிள்ளைகளின் வாழ்வு பற்றிய ஆதங்கம் இரு தாய்களிடமும்..
“இரண்டு பேரும் வாயை மூடுங்கள்..” அதட்டியபடி உள்ளே வந்தான் திவாகரன்..
“பாலா ஒரு நிமிடம் இங்கே வா..” பாலகுமரனை அவன் அழைக்க, மற்ற இருவரும் அவன் பின்னாலேயே சென்றனர்..
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
1
+1