13
“ஹாய் சகி…”
“பாலா..” வட்டமாய் விரிந்த அவள் இமைகளின் வளைந்த உரோமங்களை தடவிப் பார்க்க துடித்தன பாலகுமரனின் விரல் நுனிகள்..
“இன்று உன்னை காணோம்.. நானே தேடி வந்துவிட்டேன்..”
“அது.. கொஞ்சம் வேலை நாளை பார்க்கலாமே..”
“நாளை பார்க்கலாம்.. ஆனால் இப்போது உள்ளே கூப்பிட மாட்டாயா..?”
“ஓ.. அது சரி வாங்க.. வீட்டில் அப்பா இருக்கிறார்..”
“இருக்கட்டுமே.. உன் அப்பா அம்மாவிடம் நான் அறிமுகமாகிக் கொள்கிறேனே..”
குறுகலான ஜப்பான் தெருக்களை போல் அந்த வீடும் சந்து போல் நீண்டு போனது..
“வந்து.. எப்படி சொல்ல..?” அவள் நகம் கடிக்க..
“ம், எப்படி அறிமுகமாகிக் கொள்ள சகி..? நீயே சொல்லேன்..?” குறும்பாய் கேட்டுவிட்டு குறுகுறுப்பாய் அவளை பார்த்தான்..
“ப்ரெண்டுன்னு சொல்றேன்..”
“நான் உன் ப்ரெண்டா சகி..?” மெல்லிய குரலில் கேட்டான்..
கிசுகிசுப்பான அவன் குரல் சஸாக்கியின் உள்ளம் ஊடுறுவி உடல் சிலிர்க்க வைத்தது.. அவள் நடை நின்று விட, வழி சுவரில் சாய்ந்து அந்த சுவரில் மாட்டியிருந்த வால் ஹேங்கரில் அடியில் தொங்கிக் கொண்டிருந்த மணிகளை சுண்டி விளையாடினாள்..
“நான் உன் ப்ரெண்டேதானா சகி..?” கீற்றாய் ஏக்கம் வெளியானது அக்குரலில்.
“வேறு என்ன..?” சஸாக்கியின் குரல் பள்ளத்தில் விழுந்த யானையின் குரலாய் நடுங்கியது.. ஆனால் அந்த யானை பள்ளத்தை விட்டு வெளியேற பிரியப்படுவதை போல் தெரியவில்லை..
ஒற்றை விரலை அவளது முகத்தினடியில் கொடுத்து தாழ்ந்திருந்த அவள் தலையை உயர்த்தினான் பாலகுமரன்..
“உன் ப்ரெண்டாக மட்டும் நின்றுவிட நான் விரும்பவில்லை சகி..” சொல்லிவிட்டு..
சஸாக்கியின் விழிகளின் படபடப்பை.. எச்சில் விழுங்கிய தொண்டையை வேடிக்கை பார்த்தான்.. மெருகேற்றிய தங்க சங்கென மாசற்று மின்னிய, அவஸ்தை எச்சில் விழுங்கிய அவளது கழுத்தை ஒற்றை விரலால் வருடினான்.
.
சஸாக்கி அந்த தீண்டல் தாளாமல் விழிகளை மூடினாள்..
“எனக்கு பதில் சொல்லு சகி..”
திடுமென பின்னால் ஆத்திரமாக ஒரு குரல் கேட்க இருவரும் விலகி திரும்பி பார்த்தனர்..
ஒசோயோ.. சஸாக்கியின் அப்பா.. கோபம் மின்ன நின்றார்..
“வணக்கம் சார்.. நான் பாலகுமரன்.. இந்தியன்.. உங்கள் மகளின் தோழன்..” ஆங்கிலத்தில் அறிமுகமாகிய படி ஜப்பானியரகளின் வழக்கம் போல் இடை வரை குனிந்து வணங்கினான் பாலகுமரன்..
ஒசாயோவின் கோபம் மறைந்தது.. பாலகுமரனின் வணக்கத்தை ஏற்று பதில் வணக்கம் சொன்னவர், நட்போடு அவன் தோளணைத்து உள்ளே அழைத்தார்..
சஸாக்கியின் தாய் சீஸூகோ ஒரு வார்த்தை கூட ஆங்கிலம் தெரியாதவளாக இருந்தாள்.. முழுக்க ஜப்பானிய மொழியில் மட்டுமே பேசினாள்.. பாரம்பரிய ஜப்பானிய உடையில் இருந்தாள் சாதமும், அவித்த மீனும், மீசோ சூப்பும் அவனுக்கு பரிமாறினாள்..
ஒசாயோ பாலகுமரன் ஒரு இந்தியன் அதிலும் தமிழன் என்பது தனக்கு மகிழ்ச்சியை தருகிறதென்றார்.. தனது இந்திய பயணத்தை நினைவு கூர்ந்தார்.. ஒரு மணி நேரம் வரை அவர்கள் வீட்டில் உண்டு, உரையாடி நிறைந்த மனதுடன் பாலகுமரன் வெளியில் வந்தான்..
மறுநாள் வந்து விடுமாறு சஸாக்கிக்கு கண்களால் தகவல் சொல்லி வந்தான்.. அவர்களது வழக்கமான இடத்தில் சஸாக்கியை மறுநாள் சந்தித்த போது அவளது தோளணைத்து வரவேற்றான்..
“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் சகி..” அவள் விரலோடு விரல் கோர்த்துக் கொண்டான்..
“என்ன ஹெல்ப்..?”
“என் நண்பர் ஒருவரிடம் உன்னை அழைத்து போகிறேன்.. அங்கே என் சொல் பேச்சுகேட்டு நடக்க வேண்டும்..” செல்லமான மிரட்டல் ஒன்றை வைத்தான்..
“நான் உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டும்..”
“நிறைய பேசலாம்.. அதற்கு முன் இதனை நீ எனக்காக செய்யவேண்டும்.. ப்ளீஸ் சகி.. ரொம்ப அவசரம்..” அவனது கெஞ்சலில் உடனே தலையாட்டி விட்டாள் சஸாக்கி..
“இவள்தான் என் லவ்வர் அகிரோட்டோ.. பெயர் சஸாக்கி..” பாலகுமரனுடன் தன் முன் வந்து நின்ற பெண்ணை ஆராய்ந்தார் அகிரோட்டோ..
பாலகுமரனது லவ்வர் என்ற வார்த்தையில் அதிர்ந்து அவனை பார்த்த சஸாக்கியின் கைகளை இழுத்து தன் கைகளுக்குள் கோர்த்து அவளை நிதானப்படுத்தினான் அவன்..
“ஜப்பானிய பெண்ணா..??”
“ஆமாம் சார்..”
“வெளிநாட்டு பெண்ணென்றால் எல்லாவற்றிற்கும் சம்மதிப்பாள்.. உங்கள் தேவை தீர்ந்ததும் விட்டுப் போய்விடலாமென நினைத்தீர்களா..?” அகிரோட்டோவின் குரல் கடுமையாக ஒளித்தது..
“சார் இதென்ன அபாண்டமாக பழி போடுகிறீர்கள்.. அப்படி எந்த கெட்ட எண்ணமும் எனக்கு கிடையாது..” தன் தோள் இழுத்து அணைத்துக் கொண்டவனை அண்ணாந்து பார்த்தாள் சஸாக்கி..
“இவர் சொல்வது நிஜமா..?” அகிரோட்டோ சஸாக்கி பக்கம் விசாரணையை மாற்றினார்..
“உண்மைதான் சார்.. இவர் மிகவும் நல்லவர்..” சஸாக்கியின் ஒப்புதலில் அவள் தோள்களில் அழுந்த படிந்து இறுகியது பாலகுமரனின் கை..
“ம்.. உன் நல்லவரின் உண்மை தன்மையை இப்போது பார்க்கிறேன்..” சஸாக்கியிடம் ஜப்பானிய மொழியில் பேசிய அகிரோட்டோ உள்ளே திரும்பி குரல் கொடுக்க, அவரது மனைவி ஒரு டிரேயில் சில சாமான்களோடு வந்தாள்..
“உங்களை மிக உயர்ந்தவராக நினைத்திருந்தேன் பாலகுமார்.. அதனால்தான் என் வீட்டிலேயே உங்களுக்கு இடம் கொடுத்தேன்.. உங்களுடன் தொழில் செய்யவும் நினைத்திருந்தேன்.. ஆனால் இப்போது உங்களை பற்றி கேள்விப்படும் விசயங்கள் எனக்கு திருப்தியாக இல்லை.. என்னுடன் தொழிலில் பார்ட்னராவதற்கோ, தொடர்ந்து என் வீட்டில் தங்குவதற்கோ நீங்கள்.. உங்களை நிரூபிக்க வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள்..”
“உங்களிடம் என்னை நிரூபித்து உங்களது தொழில் தொடர்புகளை நீடித்துக் கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை அகிரோட்டோ.. அந்த அளவு இந்த தொழில் எனக்கு முக்கியமல்ல.. கையை உதறிவிட்டு போய்விடுவேன்.. ஆனால்.. இதோ இந்த பெண்ணிற்காக அதனை நான் செய்கிறேன்.. சொல்லுங்கள் என்ன செய்யவேண்டும்..?”
சஸாக்கிக்கு இவர்களது உரையாடல் புரிந்தும் புரியாமலும் குழப்பமாக இருந்தது..
“இந்த பெண் உங்களது காதலிதானே..?”
“நிச்சயமாக ஆமாம்..” பாலகுமரன் சஸாக்கியை இன்னமும் இறுக்கமாக தனது தோள் சேர்த்தான்..
“மிக நல்லது.. இந்த பரிசை நீங்கள் இருவரும் வாங்கிக் கொள்ளுங்கள்.. இது உங்களுக்கு எனது திருமண பரிசாக இருக்கட்டும்..”
அகிரோட்டோவும் அவரது மனைவியும் கொடுத்த டிரேயில் பட்டு வேட்டியும், பட்டு சேலையும் இருந்தன..
“போய் அணிந்து கொண்டு வாருங்கள்..” அருகே இருந்த அறையை காட்டினார்..
“ஒன்றும் பிரச்சனை இல்லை சகி.. இவை எங்கள் தமிழ்நாட்டு பாரம்பரிய உடைகள்.. போட்டுக் கொள்..”
சேலையை பிரித்து பாலகுமரன் நீட்ட அதனை வாங்காமல் அவனை பார்த்தபடி நின்றாள் சஸாக்கி.. அவளது பார்வை கேள்வி தாளாமல் இழுத்து
அணைத்துக் கொண்டான் பாலகுமரன்.. நெற்றியில் முத்தமிட்டான்..
“நம் காதல் மேல் ஆணையாக இங்கு நடப்பதெல்லாம் உண்மையானவை சகி.. இந்த அகிரோட்டோவிடம் உன் மீதான அன்பை நான் நிரூபித்தாக வேண்டும்..”
“நம் காதலா..?” உலர்ந்த குரலில் கேட்டவளை பார்த்து புன்னகைத்தான்..
“நமக்கே நமக்கான நமது காதல் சகி.. மறைக்காதே..” கரகரத்த குரலில் கூறியவன் அவளை இறுக்கி அணைத்து இதழோடு இதழ் சேர்த்து தன் காதலை சொன்னான்.. மறுக்காமல் உடன்பட்டு தன் பதில் காதலை காட்டினாள் சஸாக்கி..
“அடுத்த வாரமே நான் இந்தியா போகிறேன் சகி.. என் அம்மாவிடம் உன்னை பற்றி சொல்லி அம்மா, தங்கையோடு இங்கே வருகிறேன்.. உன்னை திருமணம் முடித்து அழைத்து போகிறேன்..”
சஸாக்கி கண்ணீர் வடிய தலையாட்டினாள்..
“இப்போது இதனை உடுத்திக்கொள்.. வெளியே எல்லோரும் காத்திருக்கிறார்கள்..”
பாலகுமரன் தன் பேன்ட், சட்டையை களைத்து வேட்டி, சட்டைக்கு மாறிய பிறகும் சஸாக்கி அப்படியே நிற்க,
“என்னடா இன்னமும் நம்பிக்கை வரவில்லையா..?” வருத்தமாக கேட்டான்..
“ம்ஹூம்.. எனக்கு இந்த உடை அணிய தெரியாது..” விழித்தபடி அவள் சொல்ல, பாலகுமரனுக்கு சிரிப்பு வந்தது..
“நான் சொல்லி தருகிறேன்..” என்றபடி சேலையை பிரித்து தன் மீது போட்டு கட்டிக் காட்டினான்..
ஆனாலும் சஸாக்கி தடுமாற, அவனே அவளுக்குகட்டி விட நேர்ந்தது..
“எனக்கும் இதிலெல்லாம் அனுபவம் இல்லை சகி.. ஏதோ பார்த்தது, கேட்டதை வைத்து டிரை பண்ணுகிறேன்..” லேசான தடுமாற்றத்தோடு சஸாக்கி அணிந்திருந்த பேன்ட்டின் மேலேயே அவன் புடவையை சொருகி கட்ட ஆரம்பிக்க அவளது முகம் சிவக்க தொடங்கியது..
“வழக்கமாக பெட்டிகோட் மேல் கட்டுவார்கள்.. இப்போது அது இல்லாமல் எப்படி.. என்று..” பாலகுமரனின் கைகள் தடுமாற்றமாய் சேலையோடு சேர்ந்து சஸாக்கியின் உடலின் மீது வலம் வந்தன..
கலைத்து கலைத்து அவன் மீண்டும் மீண்டும் முயன்று ஓரளவு அவளுக்கு சேலை போலொன்றை கட்டி முடித்திருந்த போது, சஸாக்கியின் கன்னி மனம் அவனது ஆண் தொடுகையில் சிணுங்கி சிவந்து களைத்து சோர்ந்து அவனோடு மிக நெருக்கமாகியிருந்தது.. பாலகுமரனின் ஆளுமை மனமும் குழைந்து நெளிந்து அவளிடம் குவிந்திருந்தது..
அந்த காதல் மயக்கத்தினால் தானோ என்னவோ அகிரோட்டோ அடுத்ததாக அவர்கள் தமிழ் முறைப்படி மஞ்சள் கயிறை குடுத்து தாலி கட்ட சொன்ன போதோ, புது மணமக்களாக அவர்களை அறிவித்து விருந்து வைத்த போதோ.. எதையுமே இருவரும் மறுக்கவில்லை..
அந்நேரம் இருவர் மனதிலும் ஒருவருக்கொருவரென அவர்கள் மட்டுமே இருந்தனர் உற்றாருக்கோ, பெற்றோருக்கோ அங்கே இடமில்லை
What’s your Reaction?
+1
3
+1
1
+1
+1
+1
2
+1
+1
1