Serial Stories Thereri vantha nila தேரேறி வந்த நிலா

தேரேறி வந்த நிலா – 17

17

                                                       

சொல்ல முடியாதோர் இன்ப உணர்வு உடலெங்கும் பரவியிருக்க , தூக்கமின்றி படுக்கையில் புரண்டாள் வைசாலி .உள்ளத்தில் மட்டுமின்றி உடலின் ஒவ்வொரு அணுவிலும் மனோகரனே நிரம்பியிருந்தான் .கொஞ்சமும் கருணையின்றி தூக்கத்தை பிடுங்கி , அவளை படுக்கையில் புரள வைத்துக்கொண்டிருந்தான் .மேலும் ..மேலும் புரண்டு பார்த்துவிட்டு படுக்கையில் எழுந்து அமர்ந்து கால்களை மடித்து வைத்து அதில் தலையை சாய்த்துக்கொண்டாள் .




எத்தனையோ முறை மனதினுள் படமாக ஓட்டிப்பார்த்து விட்டாலும் , அது சலிக்காமல் போக மீண்டுமொரு முறை மனோகரன் தன்னை காக்க கதவை திறந்து கொண்டு தூணுடைத்து வந்த நரசிம்மமாய் வந்தானே …அதிலிருந்து மனத்திரையில் ஓடவிட்டாள் .அவனது ஒவ்வொரு அடியும் கர்ஜிக்கும் சிம்மத்தின் அறையாய் விழுந்தன அந்த அஸிஸ்டென்ட் டின் மீது .ஜென்மத்திற்கும் அவன் இதுபோல் ஒரு பெண்ணை விரட்ட துணிவானோ …? என்னவோ …? அறை வாசலில் போய் விழுந்தவன் கையெடுத்து கும்பிட்டு விட்டு ஓடியேபோனான் .

தனது தாமத்தினால் வைசாலிக்கு நேர்ந்து விட்ட துயருக்காக மன்னிப்பு கேட்டபடி அவள் எழுவதற்காக கை நீட்டினான் .

” ம்ஹூம் ” தலையசைத்து மறுத்தாள் வைசாலி .

புருவம் சுருக்கி யோசித்தான் மனோகரன் .” ஏன் …? …ஓ…என் கைகளை தொட பிடிக்கவில்லையென்றால் இதோ இதனை பிடித்துக்கொண்டேனும் ..”என கீழே கிடந்த எதையோ எடுத்து நீட்டினான் .அவன் முகம் அப்போது மிகுந்த வேதனையை காட்டியது .

வைசாலி இப்போதும் தலையசைத்து மறுத்தாள் .சிறு கூச்சத்துடன் தலையை குனிந்து கொண்டாள் .சுவரோடு அழுத்தி சாய்ந்துகொண்டாள் .

அவளருகில் குனிந்து அமர்ந்த மனோகரன் ” சாலி ..என்னடா..? ” என்றான் .

உதட்டை ஈரமாக்கிக் கொண்டு தலையை குனிந்தபடி ” எனது டிரஸ் பின்னால் …கி..கிழிந்து…விட்டது ….” தயங்கி ..தயங்கி சொன்னாள் .

” ராஸ்கல் …” என பற்களை கடித்தான் .

” எனது சட்டையை …” என்றபடி தனது டி ஷர்ட்டை சுழட்ட போனவன் ” மாடியிலிருந்து கீழே கார் பார்க்கிங் வரை இருவருமே போக வேண்டும் .யாருடைய பார்வையிலும் தவறாக தெரிந்து விடக்கூடாதே …” யோசித்தான் .வைசாலி அவன் முகத்தை பார்த்தவாறே அமர்ந்திருந்தாள் .

” சாலி …காரில் ஒரு சட்டை வைத்திருக்கிறேன் .நான் போய் எடுத்து வருகிறேன் .நீ அதுவரை இங்கே ….” எனவும் , பயத்துடன் அவன் கைகளை பற்றினாள் வைசாலி .

” எனக்கு பயமாக இருக்கிறது ..”




” ஒண்ணுமில்லடா ….இங்கே கேமிரா எல்லாவற்றையும் அடித்து நொறுக்கிவிட்டேன் .கதவை நான் வெளிப்புறமாக பூட்டிக்கொண்டு போகிறேன் .நீயும் உள்ளே தாழ்பாள் போட்டுக்கொள் …வா …”  அவளை தைரியப்படுத்தி கைகளை பற்றி எழுப்பினான் .மேலே எழுந்தவளின் முதுகு சுவரோடு உராய , அந்த நகக்காயம் பட்டு எரிய , ” ஷ் ” என்றாள் .

” என்னடா ..? என்னாச்சு ..? ” பதறியபடி அவசரமாக அவள் தோள்களை பற்றியவன் , அவளை திருப்பி முதுகை பார்த்தான் .” பாஸ்டர்ட் ” என முனகினான் .

” சரி .இரு நான் வருகிறேன் …”

முன்னால் நடந்து வெளியே சென்று நின்றபடி கண்ணால் அழைத்தான் .வைசாலி மெல்ல நடந்து வரவும் கதவினை வெளியிலிருந்து பூட்டினான் .தானும் உள்புறம் தாழ் போட்டுவிட்டு துடிக்கும் இதயத்துடன் காத்திருந்தாள் வைசாலி .

இரண்டே நிமிடங்களில் திரும்பி வந்தவனின் கைகளில் இருந்த்து ஒரு ஜெர்கின் .” குளிருக்கு போட்டுக்கொள்ள காரில் எப்போதும் ஒன்று வைத்திருப்பேன் ” என கூறியபடி கதவை மீண்டும் உட்புறம் பூட்டினான் .வைசாலி சுவரில் சாய்ந்தபடி தலைகுனிந்து நின்றாள் .ஆதரவாக அவள் தலையை வருடியவன் தனது டி ஷர்ட்டை சுழட்டி நீட்டினான் .

” நீ இதை போட்டுக்கொள் .இந்த ஜெர்க்கின் நான் போட்டுக்கொள்கிறேன் …”

வைசாலி அதனை வாங்க கை நீட்டும்போது , அவள் கையில் ஒரு ஆயின்மென்டை வைத்தான் .” முதலில் இதை தடவிக்கொள் .எரிச்சல் குறையும் .காரில் பர்ஸ்ட் எய்ட் பாக்ஸில் வைத்திருப்பது ” கொடுத்துவிட்டு தனது போனை எடுத்துக் கொண்டு அவளுக்கு முதுகு காட்டி நின்றபடி ஏதோ பேசத்தொடங்கினான் .




தலையாட்டி வாங்கியவள் ,முதுகிலுள்ள காயத்திற்கு நான் எப்படி மருந்து போடுவது …?  , பனியன் அணிந்திருந்த அவனது பரந்த முதுகினை பார்த்தபடி அப்படியே விழித்துக்கொண்டு  நின்றிருந்தாள் .

தாழ்ந்த குரலில் யாரிடமோ பேசிவி்ட்டு திரும்பியவன் ” என்னடா …? போட்டுக்கொண்டாயா …? எனக் கேட்டுவிட்டு , சட்டென நிலைமையை உணர்ந்து கொண்டான் .

” நான் பிறகு போட்டுக்கொள்கிறேன. ” தலையை குனிந்து கொண்டு மெல்ல கூறினாள் வைசாலி.

,” சாலி ..உனக்கு ஆட்சேபனை இல்லையென்றால் ….” கைகளை நீட்டினான் .

நிறைய தயக்கமிருந்தாலும் காயத்தின் எரிச்சல் ஆயின்மென்டை அவனிடம் கொடுக்க வைத்தது .அதனை வாங்கிக்கொண்டவன் வைசாலியின் தோள்களை பற்றி  மென்மையாக தன் மார்பில் சரித்துக்கொண்டான் .மருந்தினை காயத்திற்கு போடத்துவங்கினான் .

இவ்வளவு நேரம் சுழன்றடிக்கும் காற்றின் பாய்ச்சலில் , உயர்ந்த மலை உச்சியில் தடுமாறியபடி நிற்கும் உணர்வில் இருந்தவள் , அவனது இந்த அன்பான அரவணைப்பில் மிகப் பாதுகாப்பான இடம் சேர்ந்து விட்ட உணர்வில் மெய் சிலிர்த்தாள் .இந்த அருகாமை சற்று முன் அவள் பட்ட துன்பத்தின் நினைவுகளை தூண்டி விட லேசாக தலை சாய்த்திருந்த அவனது திண்ணென்ற தோள்களை மெல்லிய கரங்களால் பற்றியபடி  தன்னை மறந்து கதறிவிட்டாள் .

மனோகரன் ஆதரவுடன் அவள் தலை கோதியபடி நின்றிருந்தான் .சிறிது நேரம் கழித்து அவளை நிமிர்த்தியவன் அவள் கண்களை துடைத்துவிட்டு ” சாலி போதும்டா .இனி சிரிப்பதற்கு மட்டும்தான் உனக்கு அனுமதி .அழுவதென்றால்  என்னிடம் முன்அனுமதி வாங்கவேண்டும் .ஆனால் அந்த அனுமதி நான் உனக்கு தரவே மாட்டேன் தெரியுமா …? ” கொஞ்சலும் , சரசமுமாக கூறியவன் .தனது கையிலிருந்த டி ஷர்ட்டை அவள் தலையில் நுழைத்து போட்டு விட்டான் .ஜெர்கினை தான் அணிந்து கொண்டான் .

” சாலி கார் பார்க்கிங் வரை சாதாரணமாக பேசிக்கொண்டு போவோம் .முகத்தில் பதட்டத்தை காட்டிக்கொள்ள வேண்டாம் .” அவள் தலைமுடியை தன் கைகளால் கோதி சரி செய்துவிட்டு , நகர்ந்து ஒட்டிக்கொண்டிருந்த அவளது பொட்டினை சரியாக நெற்றியில் ஒட்டி விட்டான் .அவள் கைகளுடன் தன் கைகளை கோர்த்துக்கொண்டு வெளியேறினான் .வாசல் வரை யாரும் இடையில் வரவில்லை .பார்க்கிங்கை நெருங்கும் போதே …கையிலிருந்த ரிமோட்டினால் கார் கதவை திறந்தவன் , முதலில் வேகமாக அவளுக்கு கார் கதவை திறந்துவிட்டான் .

உள்ளே ஏறி அமர்ந்த பின்பே வைசாலி பதட்டம் தணிந்து அமைதியானாள் .கார் ஸ்டுடியோவை விட்டு வெளியேறும் போது , வந்து நின்ற ஆட்டோவிலிருந்து ஒரு உருவம் இறங்கியது .மனோகரன் காரை நிறுத்தினான் .அவன்புறம் நின்று குனிந்து பேசிய அந்த உருவத்தை முதலில் இருளில் வைசாலியால் சரியாக பார்க்க முடியவில்லை .ஆனால் குரலை அடையாளம் தெரிந்த்தும் ….பதட்டத்துடன் அருகிலிருந்த மனோகரனின் கைகளை பற்றினாள் .

வைசாலியின் பதட்டத்தை உணர்ந்து கொண்ட மனோகரன் , தன் கைகளை அவள் தோளை சுற்றி போட்டு தன்னருகில் இழுத்து ஆதரவாக அணைத்தபடி ” சாலி பயப்படாதடா …வேதா நம்ம பக்கம்தான் …” என்றான் .




நன்கு குனிந்து அவளை பார்த்த வேதா ” என்னங்க மேடம் ..எப்படியிருக்கீங்க …? சாரி மேடம் நானும் கண்கொத்திப் பாம்பு போல கவனித்துக்கொண்டுதான் இருந்தேன் .ஆனால் அம்ருதா என்னை உணர்ந்து கொண்டாளோ …என்னவோ …என்னை தள்ளி அனுப்பவிட்டு உங்களுக்கு போன் போட்டு வரவைத்திருக்கிறாள் .நான் போன இடத்தில் கொஞ்சநேரம் கழித்துதான் எனக்கு சந்தேகம் வந்த்து .மனோ சாருக்கு போன் பண்ணி சொல்லிட்டு , இதோ நானும் ஓடி வர்றேன் .உங்களுக்கு ஒன்றுமில்லையே ….”

” என்ன அம்ருதாவா …? அவர்கள் ஏன் இப்படி …? ” வைசாலியால் நம்பமுடியவில்லை .

” நீயே சொல்லு வேதா .நான் சொன்னால் மேடம் நம்பமாட்டார்கள் . ” மனோகரன் கேலி போல் தன் ஆதங்கம் சொன்னான் .

” முதலில் நிறைய தவறான பார்வைகளிலிருந்து என்னை காப்பாற்றியதே அம்ருதா தானே …இப்போது ஏன் இப்படி …? ” வைசாலியால் நம்பமுடியவில்லை .

” அது… உங்களை இந்த பீல்டில் விட்டால் அவளது மார்கெட் போய்விடும்னு அவளுக்கு தெரியும் .ஏன்னா …அவளை பார்க்க வர்றவங்க முதலில் உங்களைத்தான் விசாரித்தாங்க .நடிக்க வருவியான்னு …கொஞ்சநாள் அவளுக்கு மார்கெட் இருக்கிற வரை அவள் நடிக்கனும் .அதற்கு பிறகு உங்களை பீல்டில் இறக்கி விடனும் .அதுவரை யார் பார்வையும் படாமல் உங்களை பத்திரமாக பாதுகாக்கனும் .இதுதான் அவள் திட்டம் .இதை தெரிந்து கொண்டுதான் நான் உங்களை  வேலையை விட்டு போக வைக்க  விரட்டிக்கொண்டே இருந்தேன் .ஆனால் நீங்கள் அசையவில்லை .உங்கள் ் விதி இந்த சீரழிந்த வாழ்வுதான் போலன்னு நான் நினைக்கும் போதுதான் மனோகரன் சார் உங்கள் ் வாழ்வில் வந்தார் .அன்று அவர் உங்களுக்கு போன் பண்ணும் போதே அவர் நம்பரை பார்த்து அவரை தெரிந்து கொண்டேன்  .பிறகு அவரே உங்களை  மீட்க என்னிடம் பேசியபோது  உதவினேன் ….” 

” அம்ருதாவை அடக்க அவரை விட்டால் வேறு ஆள் கிடையாது .உங்க நல்லநேரம் மேடம் ,…சார் உங்களுக்கு கிடைத்தது .நீங்கள் இரண்டு பேரும் சந்தோசமாக வாழவேண்டும் .”

” இப்போது திடீரென்று என் மேல் ஏன் இவ்வளவு கோபம் …? ” வைசாலியின் குரல் நடுங்கியது .

” ஏனென்றால் இரண்டு நாட்களுக்கு முன்பு நான் அம்ருதாவிடம் உன்னை காதலிப்பதாக , கல்யாணம் செய்து கொள்ள போவதாக உறுதியாக கூறினேன் ” என்றான் மனோகரன் .

” இவளை திருமணம் முடிக்க போகிறானாம் …எப்படி என்று பார்க்கிறேன் .திருமணம் என்ற ஒன்றே அவளுக்கு நடக்காமல் செய்கிறேன் என்று இரண்டு நாட்களாக புலம்பிக்கொண்டிருந்தாள் …உன்னை இது போல் படமெடுத்து நெட்டில் ரிலீஸ் பண்ணிவிட்டால் ..பிறகு திருமணம் நடக்காது என்ற எண்ணம் அவளுக்கு …” என்றாள் வேதா .வைசாலியின் உடலும் இப்போது நடுங்க தொடங்கியது .அந்த நடுக்கத்தை உணர்ந்த மனோகரன் தனது அணைப்பை இறுக்கி , தன்னுடன் அவளை சேர்த்துக்கொண்டான் .




சார் …நான் அம்ருதாவை இழுத்துக்கொண்டு ஆந்திரா பக்கமே போய்விடுகிறேன் சார் .ஏற்கெனவே அங்கே இரண்டு தெலுங்கு படம் அவளுக்கு புக் ஆகியிருக்கிறது .அதை வைத்து அவளை அங்கேயே தங்க வைத்துவிடுவேன் .நீங்கள் கவலைப்படாதீர்கள் .உங்கள் பங்களா ….”

” அந்த பங்களாவோடு போகட்டும் என்றுதான் அதை அவள் பெயருக்கு அன்றே கொடுக்க ஏற்பாடு செய்தேன் வேதா …அவளை அத்தோடு திருப்தி கொள்ள சொல்லு .இப்போது அவள் செய்திருக்கும் காரியத்திற்கு , இனி அவள் முகத்தில் விழிக்க கூட நான் தயாரில்லை .அப்படியின்றி எதையாவது சொல்லி யபடி இனியொருமுறை அவள் என் முன் வந்து நின்றாள் என்றால் , அந்த நாள்தான் அவளது வாழ்வின் கடைசி நாளாக இருக்கும் …” மனோகரனின் குரலில் தெரிந்த குரூரத்தில் வைசாலிக்கு உதறலெடுத்தது.

What’s your Reaction?
+1
5
+1
5
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!