8
அன்று அம்ருதா மிகவும் சந்தோசமாக இருந்தாள் .வைசாலி உள்ளே வரவும் வேகமாக அவளை அணைத்துக் கொண்டாள் .
” எனக்கு ஒரு விடிவு வந்துடுச்சுன்னு நினைக்கிறேன் வைசாலி “
” சந்தோசமாக இருக்கிறது மேடம் .உங்கள் நல்ல மனதுக்கு நிச்சயம் நல்லதுதான் நடக்கும் “
” என் ..நல்ல மனதா …? உன்னை போல் நல்ல உள்ளங்களை அருகில் வைத்திருப்பதால் இது போன்ற நல்லவைகள் எனக்கும் நடக்கிறது “
” நீங்கள் ரொம்ப சந்தோசமாக இருப்பது தெரிகிறது மேடம் .என் மேல் புகழுரைகளை அள்ளி வீசுகிறீர்களே ..” சிரித்தபடி தனது மேக்கப்பை ஆரம்பித்தாள் .
” அதெல்லாம் இல்லை ..உண்மையைத்தான் சொன்னேன் …பாரு வைசாலி இன்று நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன் . இன்று பார்த்து எனக்கு சோக சீன் .காதலன் பிரிந்து போகிறானாம் .குடம் குடமாக கண்ணீரை கொட்டவேண்டும் .எனக்கு எப்போதும் இப்படித்தான் நடக்கிறது ..ம் …அதற்கேற்றாற் போல் மேக்கப் போடு ….” சலித்துக்கொண்டாள் .
” அட …டா …நீங்கள் உங்கள் காதலில் ஜெயித்திருக்கிறீர்கள் .இப்போது போய் இப்படி ஒரு காதல் தோல்வி சீனா…” அவளோடு ஒட்டி பேசியபடி மேக்கப்பை தொடர்ந்தாள் .
தலையை அண்ணாந்து யோசித்து ” காதலில் ஜெயித்திருக்கிறேனா …என்று தெரியாது .ஆனால் ஜெயித்திருக்கிறேன் .சும்மா விலாங்கு போல் நழுவிக் கொண்டிருந்தான் .எப்படியோ என் வலைக்குள் இழுத்து விட்டேனென நினைக்கிறேன் …” வெற்றி பெருமிதம் அம்ருதா குரலில் .
ஏனோ வைசாலியின் மனதினை ஏதோ செய்த்து .ஒழுங்கான திருமண வாழ்வில்லை அம்ருதா சொல்வது . யாரோ ஒருவனுடைய வாழ்வில் இடை புகும் அவளது இந்த வாழ்வு நிச்சயம் வேறொரு குடும்பத்தை பாதிக்க போகிறது .
முதலில் அம்ருதாவின் மகிழ்ச்சியில் தானும் பங்கெடுத்துக் கொண்டவளுக்கு இந்த எண்ணம் வந்த்தும் ,அவளது கொண்டாட்டத்தில் சேரும் எண்ணம் வரவில்லை .எனவே மௌனமாக தன் வேலையை தொடர்ந்தாள் .
” வேதாக்காவை எங்கே மேடம் …? “
” அவள் முதலில் நான் இப்படி செட்டிலாவதற்கு மிகவும் தகராறு பண்ணினாள் ….கஷ்டப்பட்டு அழுது …அடம்பிடித்து அவளை சமாளித்து வைத்திருக்கிறேன் .இந்த வேலையாகத்தான் அவளை வெளியே அனுப்பியிருக்கிறேன் “
” ஏன் மேடம் …உங்களுக்கு பிடித்திருக்கிறதே …? இதில் அவர்கள் குறைபடவேண்டும் …? “
” அப்படியே நான் குடும்பம் , குழந்தையென்று செட்டிலாகிவிட்டால் ….பட வாய்ப்பு போய்விடுமே …வருமானம் போய்விடுமே …என பயப்படுகிறாள் .வேறென்ன …? “
” அப்படி நீங்கள் குடும்பமாக செட்டிலாகிவிட்டால் நல்லதுதானே மேடம்….” முறையற்ற வாழ்வை விடுத்து இவள் திருமணம் முடித்துக் கொள்ளலாமே என்ற எண்ணம் வைசாலிக்கு .
” ஆமாம் வைசாலி .எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது .இதோ இப்போது மாட்டியிருப்பவன் மட்டும் திருமணத்திற்கு சம்மதித்து விட்டானென்றால் பிறகு எனக்கு வாழ்க்கை முழுவதும் கவலை இல்லை …ஆனால் …அவன் …பார்ப்போம் .நிச்சயம் என் குடும்பம் பாரம்பரியம் ..என சொல்லுவான் .மெல்ல மெல்லத்தான் வசப்படுத்த வேண்டும் …”
வைசாலி நொந்து போனாள் .ஐயோ அப்படி எந்த குடும்பத்தை இவள் கலைக்க போகிறாள் ..?
” அ…அது …யார் மேடம் ….? ” திக் …திக் …மனதுடன் மெல்ல கேட்டாள் .
” உனக்கு தெரியாதா …? நம்ம பைனான்சியர் …இந்த ஸ்டுடியோ முதலாளி …அவனை தெரியாது உனக்கு …? பார்த்திருப்பாயே …? “
வைசாலி அதிர்ந்தாள் .அந்த ஸ்டுடியோ அதிபரை ஓரிரு முறை தூரத்தில் வைத்து பார்த்திருக்கிறாள் .இது போன்ற பெரிய மனிதர்கள் நடமாடும் இடத்தில் வேலை பார்த்தாலும் அவர்கள் முன் போக வைசாலி விரும்பியதில்லை .இது போல் பெரிய மனிதர்களை சமயம் வாய்க்கும் போது அறிமுகப்படுத்திக கொள்ள துடிக்கும் சில பெண்களை வெறுப்புடன் பார்த்திருக்கிறாள் .
இந்த ஸ்டுடியோ அதிபரையும் அவள் அருகே பார்த்ததில்லை .ஆனால் அவளது அதிர்ச்சிக்கு காரணம் , அவருக்கு எப்படியும் அறுபது வயதிருக்கும் .இதோ இந்த அம்ருதா வயதில் அவருக்கு மகளே இருக்கும் .அவரைப் போய் ….
” அவரா …..? ” தன்னையறியாமல் அதிர்ச்சியை வெளிப்படுத்தினாள் .
” ஆமாம் …அழகாக இருப்பானில்லையா …? ” கண் சிமிட்டினாள் அம்ருதா .
அவர் வயதுக்கேற்ற அலங்காரம் செய்து கொள்வதில்லை .தனது முடிக்கு டை அடித்து கருப்பாக்கி , ஜீன்ஸ் , டிஷர்ட் என்று தனது தோற்றத்தை இளமையாக காட்ட முயன்றிருப்பார் .அதனால் அம்ருதா இப்படி கூறிக் கொள்கிறாள் போலும் .
” அ…அவருக்கு …குடும்பம் …? ” மேலே கேட்க முடியாமல் நோக்கி திணறினாள் .
” ம் ….ம் …அதெல்லாம் இருக்கிறது …அவர்களை தாண்டி இவனை நான் என் பக்கம் இழுக்க வேண்டும் …”
வைசாலிக்கு இப்போது அந்த இடத்தில் இருக்கவே பிடிக்காமல் போனது .உடனே …உடனே ..அந்த இடத்தை விட்டு போக வேண்டுமென நினைத்தாள் .இதோ மேக்கப் முடிந்துவிட்டது .உடனே போய் விடுவோமென எண்ணிய போது வேதா உள்ளே நுழைந்தாள் .
அவளது முகத்தில் வெற்றிப் பெருமிதம் .கையிலிருந்த்தை அம்ருதாவிடம் தூக்கி போட்டாள் .” டீ …நீ சாதித்து விட்டாயடி …இதோ அந்த பங்களா சாவி …” என்றாள் .
” பார்த்தாயா வைசாலி …இதோ …எனது வீட்டிற்கான சாவி …” அந்த சாவியை மேலே தூக்கி போட்டு பிடித்தபடி குதூகலித்தாள் .
” ஏன்க்கா …அவர் எப்போது வருகிறாராம் …? ” என்றாள்
அங்கே மூச்சு முட்டுவது போலிருக்க ” மேடம் மேக்கப் முடிந்த்து .நான் வெளியே போய் ஒரு போன் பேசிவிட்டு வருகிறேன் ” என்றுவிட்டு வெளியேறினாள் வைசாலி .
வெளியே வந்தவளுக்கு மனம் மிகவும் பாரமாக தோன்றியது .போனில் மனோகரனின் நம்பரை அழுத்தினாள் .
” சாலி ..என்னடா ..என்ன பிரச்சினை …? ” மனோகரனின் வருடும் குரலில் தனது கவலைகள் உடனே காணாமல் போவதை உணர்ந்தாள் .
” ஒன்றுமில்லையே …” என்றாள் இலகுவாக .
” ஏய் …ஏதோ கவலை இல்லாமல் நீயாக போன் செய்திருக்க மாட்டாய் .சொல்லு என்ன செய்யவேண்டும் …? “
பல கோடிகளை பிஸினசில் அங்கே புரட்டிக் கொண்டிருப்பவன் .இங்கே நான் என்ன செய்ய வேண்டும்…என அவளிடம் கை கட்டுகிறான் .அவனது நேசத்தை எண்ணி பெருமைப்பட்டபடி ..
” பொய் சொல்லாதீர்கள் .நானாக உங்களை அழைத்ததே இல்லையா …? ” பொய்யாய் கோபம் கொண்டாள் .
” எப்போது மேடம் நீங்களாக அழைத்திருக்கிறீர்களோ …? நான் ஒரு நான்கு தடவையாவது போன் செய்து உங்களுக்காக ஒருத்தன் இங்கே காத்துக் கொண்டிருக்கிறேன் என ஞாபகப்படுத்திய பிறகு , நிதானமாக உங்கள் வேலைகளை முடித்துவிட்டு வந்து என்னை அழைப்பீர்கள் …ஏதோ எப்பொழுதும் என்னையே நினைத்துக் கொண்டிருப்பது போலத்தான் ”
” மனு …” என சிணுங்கினாள் வைசாலி .
” ம் …என்னை சமாதானப்படுத்த என்ன செய்வதென்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறாய் .அதில் ஒன்று இந்த ” மனு ” .இப்படி வேறு கூப்பிட்டு விட்டாயா ..? வேறு வழியில்லை நீ சொல்வதை நான் செய்தே ஆக வேண்டும் .ம் …சொல்லு ….”
ஏதோ அவன் எதுவும் செய்ய விருப்பமில்லாமல் இருப்பது போன்றும் , இவள் அதனை செய்ய கட்டாயப்படுத்துவது போன்றும் ..பேசுவதை பார் .அவனது பேச்சை நினைத்து சிரித்தபடி ” மை ஸ்வீட் மனு ” என கொஞ்சிக்கொண்டாள் .மனதிற்குள்தான் .
இதனை வெளிப்படையாக சொல்லிவிட்டாளென்றால் அவ்வளவுதான் .அவளை சீண்டியே ஒரு வழி பண்ணிவிடுவான் மனோகரன் .அதனால் இது போன்ற வார்த்தைகளை கஷ்டப்பட்டு தனக்குள்ளேயே அடக்கிக் கொள்வாள் .
” இன்னும் எத்தனை நாட்களுக்கு மனதில் நினைப்பதை இப்படி வெளியே சொல்லாமல் மறைக்கிறாய் என நானும் பார்க்கிறேன் .நான் அங்கே வரும் வரைதான் இப்படி விழுங்கி விழுங்கி பேச முடியும் .நேரில் வந்த பிறகு …” என கூறி நிறுத்தினான் .
” போதும் மனு ….” என மீண்டும் கொஞ்சினாள் .
” ஏய் ..நான் ஒன்றுமே செய்யவில்லையே .எதை போதும் போதுமென்கிறாய் …? “
இவன் ஒருத்தன் அவள் பேச்சிலிருந்தே பதில் பேசி ..அவளை பேசவிடாமலேயே செய்வான் .இந்த நினைவு தந்த நெகிழ்வுடன் சற்று முன் மனதினுள் சொல்லிக் கொண்டதை இப்போது வெளியே சொன்னாள் .
” மை ஸ்வீட் மனு “
“ம் ..இது சரி .மனதின் உணர்ச்சிகளை இது போல் மறைக்காமல் வெளிப்படுத்தி விட்டாயானால் மனது எப்போதும் லேசாக இருக்கும் . என்னடா இப்போது பரவாயில்லையா …? ” அவள் டல்லாக இருப்பதை பேச்சிலேயே கணித்திருக்கிறான் .அதனை மாற்ற இப்படியெல்லாம் பேசி அவளை சகஜமாக்கியிருக்கிறான் .
தன்னவனின் காதலில் கனிந்து நின்றாள் வைசாலி .
What’s your Reaction?
+1
5
+1
2
+1
+1
+1
+1
+1
Thanks mam