26
” உங்கள் அண்ணியைத்தான் சொன்னேன் .நீங்கள் ஏதோ நினைத்துக் கொண்டால் நான் பொறுப்பில்லை .” சுள்ளென பேசினாள் .
” நான் என்ன நினைத்தேனென்று நீ நினைத்தாய் ? ” நேரடியாக அவள் மனதை துருவிய இந்தக் கேள்விக்கு சோர்ந்தாள் கமலினி .
” இப்பொது வேலை பார்க்க போகிறோமா இல்லை இப்படியே பேசிக் கொண்டே இருக்க போகிறோமா …? “
விஸ்வேஸ்வரன் மௌனமாக அவளுக்கு தன் அருகாமை இருக்கையை காட்டினான் .” இங்கே வந்து உட்கார் .டிசைன் பார்க்க வசதியாக இருக்கும் “
முடியாதென சொல்ல நினைத்தாலும் அவன் சொன்ன வசதி நியாயத்தில் பேசாமல் போய் அவனருகே அமர்ந்தாள் .
” அண்ணிக்கு இந்த தொழிலில் கொஞ்சமும் இன்வால்வ்மென்ட் இல்லை கமலினி .யாருடையதோ எப்படி போனால் எனக்கென்ன ரீதியிலேயே எப்போதும் இருக்கிறார்கள் .அவர்களை பொறுப்பிற்குள் இழுக்கத்தான் எம்டி போஸ்ட் கொடுத்து உட்கார வைத்தேன் .ஆனாலும் அவர்களுக்கு இன்னமும் பொறுப்பே வரவில்லை . நீ கொஞ்சம் அவர்களுக்கு எடுத்து சொல்லேன் ” லேப்டாப்பை அழுத்தியபடி விஸ்வேஸ்வரன் கேட்ட வேண்டலில் கமலினிக்கு எரிச்சல் வந்த்து .
ஆமாம் உங்கள் குடும்பத்தினர் ஒவ்வொருவருக்காகவும் அடுத்தவரிடம் பேசுவதுதான் என் வேலை பார் …மகா சலிப்பு வந்த்து அவளுக்கு . இது விசயமாக அவனுக்கு எந்த உத்தரவாதமும் கொடுக்க அவள் தயாராக இல்லை .
” இந்த வேலை விபரம் சொல்கிறீர்களா ? ” அவன கவனத்தை திருப்ப விஸ்வேஸ்வரனுள் சட்டென ஓர் புத்துணர்வு வந்து ஒட்டிக் கொண்டது .மின்னும் கண்களுடன் தன் வேலையை விவரிக்க தொடங்கினான் .
” தங்கத்தகடுகளை மெலிதாக்கி லிங்கத்தின் மேல் போர்த்தும் கவச வேலை இது கமலினி .திருவிழா காலங்களிலும் , விசேச தினங்களில் மட்டுமே இந்தக் கவசம் சுவாமியின் மீது இருக்கும் . இதற்கு கோவிலிலிருந்து எல்லா நகை வியாபாரிகளிடமும் டென்டர் கேட்டிருந்தார்கள் .அதில் நாம் கோட் பண்ணிய தொகை வென்று இந்த வேலை நமக்கு கிடைத்திருக்கிறது . இதனை நாம் எந்த அளவு சிறப்பாக செய்கிறோமோ அந்த அளவு நமக்கு இது போன்ற ஆர்டர்கள் மேலும் தேடி வரும் …”
விஸ்வேஸ்வரனின் உற்சாகம் கமலினிக்கும் தொற்றிக் கொண்டது , ” நிச்சயம் சார் .பார்ப்பவர்கள் வியந்து விசாரிக்கும் அளவு இந்த வேலையை அருமையாக செய்து விடுவோம் . வெறும் தங்கப் போர்த்தலோடு சேர்த்து வித்தியாசமாக ஏதாவது யோசிக்கலாமே சார் .? அப்போதுதான் நம் வேலை தனித்து தெரியும் “
” எப்படி …? ” கேட்டவனின் குரலில் எதிர்பார்ப்பு தெரிந்த்து
” ம் …” தலை சரித்து யோசித்தவள் ” இரண்டு நாள் டைம் கொடுங்கள் சார் .யோசித்து சொல்கிறேன் ” என்றாள் .
” ஓ.கே .டன் “
” இப்போது நான் என் வேலையை பார்க்க போகிறேன் ” கமலினி எழுந்தாள் .
” கமலி …” கதவு வரை போனவள் மெலிதாய் அதிர்ந்து நின்றாள் . இவனெதறகு இப்படி கூப்பிடுகிறான். ? இவனுக்கென்ன அந்த உரிமை …?
” நாம் இன்னும் பேசவேயில்லையே கமலி ? நம்மை பற்றி …” இருவருக்குமிடையே அங்குமிங்கென கை சாடை காட்டினான் .
” முதலில் முழுதாக பெயர் சொல்லி கூப்பிடுங்கள் சார் .வேலை விசயம் தவிர நமக்கிடையே பேச எதுவுமில்லை சார் ..” சாரில் அதிக அழுத்தம் கொடுத்தாள் .
புருவம் சுருக்கி அவளை ஒரு நொடி பார்த்தவன் பிறகு கை அசைத்தான் .” சரி போ …” ஆளை விடுடா சாமி என்று ஓடி வந்துவிட்டாள் கமலினி .
அன்று இரவு அப்பாவிடம் தங்களுக்கு வந்திருக்கும் புது ஆர்டரை பற்றி பேசினாள் .வேலாயுத்த்தின் கண்கள் மின்னியது . விஸ்வேஸ்வரனின் கண்களை போன்றே …உற்சாகமாக பேசும் , விளக்கங்கள் தரும் தந்தையை பார்த்தபடி புன்னகையோடு அமர்ந்திருந்தாள் மகள் . புது விதமான யோசனைகள் அவளுள் ஐக்கியமாயின .
மறுநாள் நகை தயாரிப்பு கூடத்திற்கு சென்று அங்கு இருப்பில் இருக்கும் தங்கம் பற்றிய விபரங்களோடு சில தயாரிப்புகளுக்கான தங்க அளவீடுகளையும் பணியாளர்களிடம் கேட்டு குறித்து வாங்கிக் கொண்டு கடைக்கு சென்றாள் .
” முதலாளி வந்த்தும் அவரை போய் பாரும்மா ” சரோஜா உள்ளே வரவும் சொல்ல , இதுதான் இப்போது வழக்கமாயிற்றே சலிப்பாய் நினைத்தபடி , அன்றைய தனது சேலையை எடுக்க கமலினி முயல , டேபிளிலிருந்த சேலையை எடுத்து தள்ளி வைத்தாள் சரோஜா .
” முதலில் முதலாளியை பார்த்து விட்டு வா .பிறகுதான் இதுவெல்லாம் …”
கமலினி குழப்பத்தோடு அப்படியே நின்று விட்டாள் . என்ன நடக்கிறது …?
முதலில் இந்த மேடத்திற்கு இங்கே வேலை இருக்கிறதாவென்று பார்ப்போம் …பின்னால் சில சேல்ஸ்கேர்ள்ஸ் குசுகுசுத்து சிரிப்பது கேட்க , அதிர்ந்தாள் .வேலையில்லையா …எதற்கு …?
” என்ன சார் நடக்கிறது இங்கே ? ” நேரடியாக சதாசிவத்தின் முன் போய் நின்றாள் . அவர் இவளை பரிதாபமாக பார்த்தார் .
” உன் மேல் கையாடல் குற்றச்சாட்டு சுமத்துகிறார்களம்மா “
” என்ன …? என் மீதா …? யார் …? “
” நம் நகைகூடத்தின் பொற்கொல்லர் , கணக்காளர் , பொறுப்பாளர் …என சிலர் “
” நானா …? என்ன ஆதாரம் வைத்திருக்கிறார்களாம் ? “
” கொஞ்ச நாட்களுக்கு முன்பு நிறைய தங்கம் வாங்கி போனாயாமே ? “
” அது …விஸ்வா சார் சொல்லித்தான் …அவரிடம் கேட்டுத்தான் வாங்கினேன் .அவருக்காக ஒரு கிப்ட் செய்ய …”
” அதைத்தான் இப்போது காரணமாக சொல்கிறார்கள் .வாங்கியது அதிகம் .கணக்கில் கொண்டு வந்த்து குறைவென்கிறார்கள் . ஏதோ ஆதாரம் வைத்திருக்கிறார்களாம் “
கமலினி உடனே முடிவெடுத்தாள் . இது விசயம் அவள் பேச முடியாது . பேசினாலும் பலன் கிடையாது . தன் போனை எடுத்து விஸ்வேஸ்வரனுக்கு அழுத்தினாள் .
” கொஞ்சம் வெளி வேலைகள் .கடைக்கு வர லேட்டாகும் ” ரத்தினமாக உரைத்து விட்டு போனை கட் செய்துவிட்டான் .
இதென்ன சரியான நேரத்தில் இப்படி செய்கிறான் .எரிச்சலோடு நின்றபடி இருந்தவள் கடைக்குள் நுழைந்த பாரிஜாத்த்தை கண்டதும் முகம் மலர்ந்தாள் .இவர்களை மறந்து போனேனே …என்னை முழுமையாக நம்பும் இன்னொரு ஜீவனல்லவா …?
அறைக்குள் போய் கொஞ்சம் தன னை ஆசுவாசித்துக் கொள்ளும் அவகாசத்தை பாரிஜாத்த்திற்கு அளித்து விட்டு , பிறகு போனாள் . ஆனால் காலம் கடந்து விட்டது . அங்கே பாரிஜாத்த்தின் அறைக்குள் கமலினிக்கு எதிரான கும்பல் வந்து நின்று விட்டிருந்த்து . மொத்தம் எட்டு பேர் .கமலினி கையாடல் செய்த்தாக அவர்கள் சொன்ன தங்கத்தின் அளவு முப்பது கிராம் .தங்களிடமிருந்து ஐம்பது கிராம் தங்கத்தை வாங்கிக் கொண்டு போய்விட்டு வெறுமனே இருபது கிராமில் ஆலிழை கண்ணனை உருவாக்கியிருப்பதாக பதிவு விபரங்களை காட்டினர் .
மாதாந்திர தங்க கணக்கெடுப்பின் போதே இந்த குறைந்த தங்க விபரம் தெரிய வந்த்தாகவும் , அதன் பின் கணக்குகளை சரி பார்த்தால் கமலினி சரியான கணக்குகள் காட்டவில்லையென்றும் சொன்னார்கள் . இதற்கான ஆதாரமென விஸ்வேஸ்வரனின் கையெழுத்து போட்ட பேப்பர்களை காட்டினர் .
அவை விஸ்வேஸ்வரனே அவனது கடை லெட்டர் பேடில் கையெழுத்திட டு கமலினிக்கு கொடுத்தவைகள்தான் .ஆனால் அதில் இந்த தவறான கணக்கு எப்படி வந்த்து ? கமலினியை குழப்பிய விசயமே பாரிஜாத்த்தையும் யோசிக்க வைத்தது .ஆராய்ந்த அவளது பார்வையை சந்தித்ததுமே கமலினி அவள் அறையை விட்டு வெளியே வந்துவிட்டாள் .
” பார்த்தீங்களாம்மா கொஞ்சம் கூட உங்களுக்கு மரியாதை தராமல் அந்தப் பொண்ணு எப்படி போகுதுன்னு …? ” பின்னால் கேட்ட குறை கூறல்கள் கமலினியின் மனதை கலக்க , அவள் கண்கள் கலங்க தொடங்கின .நீர் தெரியாமல் கண் சிமிட்டி மறைத்தபடி தன் போனை எடுத்து விஸ்வேஸ்வரனுக்கு போன் செய்ய நினைத்தவள் , இறுதி நேரத்தில் மனதை மாற்றிக் கொண்டாள் .
” சேவ் மீ ” இரண்டே வார்த்தைகள் .அவனுக்கு டெக்ஸ்ட் செய்து விட்டு காத்திருந்தாள் .அடுத்த அரைமணியில் உள்ளே வந்த விஸ்வேஸ்வரனின் பார்வையில் கேள்வி இருந்த்து .ஏதோ ஒரு ஆராய்தலும் …
” இவர்கள் நம்மிடம் பணியாற்றும் முக்கியமானவர்கள் கமலினி . இவர்களுக்கான விளக்கத்தை நாம் கொடுத்தே ஆக வேண்டும் ” விஸ்வேஸ்வரன் சொல்ல அவனை இமைக்காது பார்த்தாள் .
என்னையா …? நீயா …? நம்பாமை தொக்கி நின்ற அவள் விழிகளை அவன் சந்திக்கவே இல்லை .
” ம் ..சொல்லுங்க ” அவர்களிடம் திரும்பி விசாரிக்க ஆரம்பித்திருந்தான் .
“உங்களிடம் ஒரு கணக்கு …எங்களிடம் ஒரு கணக்கு .இதை பாருங்கள் சார் …”
” ம் …இது நான் எழுதி கையெழுத்திட்டு கொடுத்ததுதானே …? இதில் என்ன பொய் இருக்கும் …? “
” இதோ பாருங்கள் சார் .அடித்து திருத்தியிருக்கிறார்கள் ” மேலே மேலே அழுத்தி எழுதியிருந்த கிராம் அளவுகளை காட்டினர் .
” யெஸ் கன்பார்ம் .திருத்தியிருக்கிறார்கள் ” அவர்கள் காட்டிய பேப்பரை ஆழ்ந்து பார்த்துவிட்டு உறுதி சொன்னான் .
” பாருங்கள் ” பாரிஜாதம் பக்கமும் பேப்பரை தள்ளினான் .அவளும் பார்த்துவிட்டு தலையசைத்தாள் .
” மொத்தமாக வாங்காமல் ஐந்து தடவையாக கொஞ்சம் கொஞ்சமாக வந்து வாங்கி போனார்கள் .நீங்களும் ஐந்து தடவைகள் கையெழுத்து போட்டு தந்திருக்கிறீர்கள் .ஒவ்வொரு தடவையும் ஆறு ஆறு கிராமாக கூட்டி எழுதி , முப்பது கிராம் கூட்டி வாங்கி விட்டார்கள் .இந்த திருட்டு தோணாமல் இருப்பதற்காகத்தான் ஐந்து தடவைகளாக வாங்கியிருக்கிறாள் …” அவர்கள் உச்சரித்த திருட்டு என்ற வார்த்தையில் கமலினியின் உடல் குலுங்கியது .
இல்லை அழக்கூடாது …தனக்குள் உருப் போட்டபடி பற்களை கடித்தபடி நின்றிருந்தாள் .
” நிச்சயம் இது திருட்டுதான் ” விஸ்வேஸ்வரனின் ஒப்புக் கொடுத்தல் அவளை வேதனையுற வைத்தது .
“‘ஆமாம் சார் .திருட்டு சார் .இவளிடம் திருடிய தங்கத்தை கேளுங்கள் சார் .போலீசில் சொல்லுங்க சார் .வேலையை விட்டு நிறுத்துங்கள் சார் …” ஆளாளுக்கு பேச ,கமலினிக்கு கொடுத்து வந்த மரியாதையும் தேய தொடங்கியது .
கமலினி கண்களை இறுக மூடி தன்னைக் கட்டுப்படுத்தி நிற்க , விஸ்வேஸ்வரன் அவளருகே வந்து நின்று அவள் முகம் பார்த்தான் .பொங்க துடித்த கடலை அவள் கண்களில் கண்டவனின் முகத்தில் சலனங்கள் .
” சரிதான் .திருடர்களை போலீசில் பிடித்துக் கொடுப்பதுதான் சரி .ஆனால் … அதற்கு முன் என் சொத்தில் கை வைத்தவர்களை நான் சும்மா விட மாட்டேன் …நன்றாக அடி அடியென அடித்து நைய புடைத்து விட்டே…” அவனது குரலின் ரௌத்ரத்தில் அங்கிருந்த அனைவரின் ரத்த ஓட்டமும் உறை நிலைக்கு போனது .விஸ்வேஸ்வரனின் ருத்ரசிவ தோற்றத்தில் கமலினியுமே அதிர்ந்து நின்றாள் .
விருக்கென அவர்கள் பக்கம் திரும்பியவன் , திரும்பிய வேகத்தில் கூட்டத்தில் பின்னால் நின்றிருந்த ஒரு நடுத்தர வயது ஆளையும் , சிறு வயது பையனையும் இழுத்து அறைந்தான் . அங்கிருந்த பெரிய டேபிளின் மீது குப்புற தள்ளி இருவர் முதுகிலும் குத்தினான் . கீழே இழுத்துப் போட்டு இடுப்பில் மிதித்தான் .இருவரும் அலற அலற அவனது வேகம் குறையவில்லை .
கமலினி அவனது ரௌத்ரத்தில் அதிர்ந்து பின் வாங்கி நின்று சுற்றிலும் கவனித்த போது தொழிலாளர்கள் உடல் நடுங்க பதறியபடி ஒதுங்கி நிற்பதை பார்த்தாள் . பாரிஜாதம் பக்கம் பார்வையை திருப்ப அவள் சொல்லவே வேண்டாம் …தந்தியடிக்கும் கை கால்களை மறைத்தபடி சேரின் கைப்பிடியை அழுத்தி பிடித்துக் கொண்டு பயம் மறைத்து அமர்ந்திருப்பது பார்க்கும் போதே தெரிந்த்து .
ம்ஹீம் இவர்கள் யாரும் உபயோகப்பட மாட்டார்கள் …கமலினி வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன் , உடல் நடுக்கத்தை மறைத்துக் கொண்டு விஸ்வேஸ்வரன் அருகில் போய் அவன் கையை பற்றினாள் .
” ஙேண்டாம் சார் .விட்டுடுங்க “
அவன் யாரையும் , எதையும் கவனிப்பவனாக இல்லை . வெறி கொண்ட வேங்கையாக சுழன்றடித்துக் கொண்டிருந்தான் .கமலினி அவன் கைகளை தன் இரு கைகளாலும் கோர்த்து பிடித்து தன் பக்கம் இழுத்து ” ப்ளீஸ் விஸ்வா .விட்டுடுங்க …” கெஞ்சுதலாக பேச , இதற்கு அவனிடம் பலன் இருந்த்து .தன் வேகத்தை குறைத்து அவர்களை உதைத்து தள்ளினான் .
” திருட்டு நாய்களா …போய் ஜெயில்ல களி தின்னுங்கடா .அப்பத்தான் உங்களுக்கு புத்தி வரும் ” அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அறைக் கதவை திறந்து போலீஸ்கார்ர்கள் உள்ளே நுழைந்தனர் .
” கம்ப்ளென்ட்தான் கொடுத்துட்டீங்களே சார் .நாங்க பார்த்துக்க மாட்டோமோ …? நீங்க ஏன் டென்சன் ஆகுறீங்க ? ” கேட்டபடி கீழே கிடந்தவர்களின் கழுத்தை பிடித்து தள்ளிக் கொண்டு போனார் இன்ஸ்பெக்டர் .
இதெல்லாம் இவனது ஏற்பாடுதானா…? இதுதான் இவன் சொன்ன வெளி வேலைகளா ? இவற்றை முடித்து விட்டு வரத்தான் இவனுக்கு தாமதமானதா …? கமலினி கனிந்த கண்களுடன் அவனை விழுங்க தொடங்கினாள் . அவளது கனிவை உணரந்து கொள்ளும் நிலைமையில் விஸ்வேஸ்வரன் இல்லை .அவன் வதம் முடித்த சிவனாகவே இன்னமும் நின்று கொண்டிருந்தான் .
” விஸ்வாவை சமாதானப்படுத்து கமலினி ” இவள் காதில் முணுமுணுத்து விட்டு பாரிஜாதம் அறையை விட்டு வெளியேறி விட்டாள் .ருத்ரம் குறையாமலிருப்பவனிடம் நெருங்க அவள் தயாரில்லை .
பாரிஜாதம் மூடி விட்டுப் போன அறைக்கதவை சலிப்புடன் பார்த்து விட்டு , திரும்பிய கமலினி விஸ்வேஸ்வரின் வித்தியாசமான பார்வையில் திகைத்தாள் . நெருப்பு குழம்புகளை அடக்கிக் கொண்டிருக்கும் எரிமலையாக நின்றவன் , இவள் பார்வையை சந்தித்ததும் இரு கைகளையும் நீட்டினான் .
What’s your Reaction?
+1
32
+1
13
+1
2
+1
2
+1
3
+1
+1