5
வெளேரென்று வெளித்தெரிந்த தன் தோளை பதட்டமாக மூடினாள் நிலானி .எப்படி …எப்படி… மறைக்க ? இவன் கண்களிலிருந்து எப்படித் தப்ப ? அவள் விழிகள் அலைபாய்ந்தன .அவனோ நிதானமான நடையுடன் அவளை நெருங்கி அவள் தோள்களில் தன் இருகைகளையும் வைத்தான்.
” வெண்ணை போல் என்ன நிறம் உனக்கு ? ” ரசித்து வந்த அவன் குரலில் நிலானியின் நெஞ்சு படபடப்பு கூட்டியது. பட்டன்று அவன் கைகளை தட்டிவிட்டு பின்னால் நகர்ந்தாள். ” என்னைத் தொடாதே ” கத்தினாள்.
” உன்னை அலங்காரம் செய்து கொலுவிலேற்றி அம்மன் என்று கும்பிட இங்கே அழைத்து வந்தேனென்றா நினைத்தாய் ? ” கோணலான சிரிப்பு ஒன்றுடன் கேட்டபடி அவளை நெருங்கினான் அவன்.
” வேண்டாம் …வேண்டாம்… என்னை விட்டுவிடு ” நடுங்கிய குரலுடன் பின்னடைந்து கொண்டிருந்தவள் , மாடிக்குப் போகும் படிகளில் இடறி அப்படியே கீழே உட்கார்ந்தாள் .சட்டென குனிந்து படிகளில் அவளுக்கு இருபுறமும் தன் கைகளை ஊன்றி கொண்டவன் அவள் முகத்தை நோக்கி தன் முகத்தை இறக்கினான் .நிலானி அவன் தோள்களை பலமாக குத்தி அவனை தள்ள முயன்றாள் .கடுகளவு கூட அவனை நகர்த்த முடியவில்லை என்பதே உண்மை .
அவள் முகத்தின் மிக அருகே முகத்தால் நெருங்கியவன் திடுமென ஒரு கையால் அவள் கன்னத்தை வருடினான் . பின் மெல்ல அவள் தலையை வருடி பார்த்தான் . தொடர்ந்து அவன் கை அவள் தோள்களை வருடி கைகளின் மேல் நீண்டது.
” ஒரே தூசு நூறுகிலோமீட்டர் பைக்கிலேயே வந்திருக்கிறோமே …அதுதான் .நீ போய் குளித்து சுத்தமாக வா .அதற்குப் பிறகு எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வோம் ” கண்சிமிட்டலுடன் கைகளை அவன் எடுத்துக்கொள்ள , அவனைப் பார்த்தபடியே தன் உடலை பின்னால் நகர்த்தியபடியே நிலானி வேகமாக படிகளில் ஏறினாள்.
” அவ்வளவு அவசரம் வேண்டாம் டார்லிங் .நான் இங்கே தான் இருப்பேன். நீயும் இங்கே தான் இருக்கப் போகிறாய். நமக்கு நிறைய நேரமும் , நிறைய தனிமையும் இருக்கப்போகிறது .அலுக்கும் மட்டும் நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருக்கலாம் .இப்போது முன்னால் பார்த்து மேலே போய் இடது பக்கம் இரண்டாவது அறைக்குப்போய் குளித்து தயாராகி வா ” பேசி முடித்து கையில் இதழ் பதித்து ஒரு பறக்கும் முத்தத்தை அவனுக்கு அனுப்பினான் .
நிலானி அரண்டு போய் அவசரமாக முன்னால் திரும்பி அலையக் குலைய படிகளில் ஓடி மேலே வந்து அவன் சொன்ன அறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டாள். ஐந்து நிமிடம் மூடிய கதவின் மேலேயே சாய்ந்து நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டவள்
பின்னால் திரும்பி அறையை அழுத்தமாக தாளிட்டாள். இனி இந்த அறையை விட்டு வெளியே போக போவதில்லை முடிவு செய்த பிறகே அந்த அறையை கவனித்தாள் .
மிகவும் அழகான அறை. அறையின் நடு மையத்தில் இருந்த அந்த பெரிய கட்டில் அவளுக்கு மிரட்சியைக் கொடுத்தது. அதை தவிர்த்து பார்த்தால் அந்த அறையில் குறை சொல்வதற்கு எதுவும் இல்லை .கட்டிலின் பின்னால் இருந்த ஆளுயரக் கண்ணாடியில் அவள் உருவம் தெரிய திகைத்தாள். இது நான் தானா ? வேகமாக கண்ணாடி அருகே போய் பார்த்தாள். உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை புழுதியால் குளிப்பாட்டியது போல மண் படிந்து இன்னமும் முழுதாக முடிக்கப்படாத சிற்பத்தைப் போல் நின்றிருந்தாள் அவள் .
தன்மேல் படிந்திருந்த தூசுக்கு அசூசையுற்று வேகமாக குளியல் அறைக்குள் நுழைந்தாள்.” சே … எவ்வளவு மோசமான டிராவல் ?” முனுமுனுத்தபடி ஷவரை திறந்துவிட்டு அதனடியே நின்றாள் .
குளிர்நீர் ஊசியாய் உடலை குத்த உடனே தனது தவறுணர்ந்து அதனை நிறுத்தி விட்டு ஹீட்டரை ஆன் செய்து கொண்டு சிறிது நேரம் காத்திருந்து மீண்டும் குளித்து முடித்தாள் .குளித்து முடித்ததும் தான் தனது உடையின் நினைவு அவளுக்கு வந்தது .ஐயோ பெட்டி கீழே அல்லவா இருக்கிறது .எப்படி வெளியே போவது யோசித்தபடி அங்கே செல்ஃபில் மடித்து வைத்திருந்த துண்டுகளில் ஒன்றை எடுத்து துடைத்துக் கொண்டு மற்றொரு கனத்த துண்டை உடலில் சுற்றியபடி லேசாக கதவை திறந்து பார்த்தாள். உடனே அதிர்ந்தாள் .
அங்கே பாத்ரூமிற்கு நேராக அவளது ட்ராலி வைக்கப்பட்டிருந்தது. இதன் அர்த்தம் அவள் குளித்துக் கொண்டிருக்கும் போது அவன் அறைக்கு உள்ளே வந்திருக்கிறான். அப்படியானால் இந்த அறையை அவள் உள்ளே பூட்டியது வீண்தான் .அவனால் வெளியிலிருந்து திறக்க முடிகிறது .சோர்ந்த உடலை தைரியப்படுத்திக் கொண்டு பெட்டியை உள்ளே இழுத்து தனது உடையை எடுத்து அணிந்துகொண்டு வெளியே வந்தவள் ஏனோ அந்த கட்டிலின் புறம் போக விருப்பமற்று அகலமாய் நீளமாய் கிடந்த சோபாவில் போய் விழுந்தாள் .இரண்டே நிமிடங்களில் அடித்துப் போட்டதுபோல் தூங்கியும் போனாள்.
மீண்டும் உறக்கம் கலைந்தபோது சூழலை மிகவும் குளிராக உணர்ந்தாள் நிலானி . ” ஏய் சுமதி அந்த ஏசி டெம்பரேச்சரை குறைத்து வை ” சொன்னபடியே புரண்டவள் தனது உடல் தரையில் விழ போவதை உணர்ந்து பட்டென விழி திறந்து சமாளிக்க காலை தரையில் ஊனும் முன் அவள் உடலை இரு கைகள் தாங்கி மீண்டும் சோபாவில் படுக்க வைத்தன.
பட்டென கண்களை திறந்து பார்த்தவள் ராட்சசனை போல் எதிரே உயரமாக நின்றிருந்தவனை அரை இருளில் வரிவடிவமாக பார்க்கவும் வீல் என்று அலறினாள் . ” யூ ராஸ்கல்… போ… போய் விடு…”
பளீரென அறைக்குள் விளக்குகள் எரிந்தன .சுவிட்சை தட்டியபடி சுவரோரம் நின்றிருந்தவன் நான்கெட்டுகளில் அவள் அருகே வந்து அவள் தலையில் நொட் நொட்டென இரண்டு கொட்டுகள் வைத்தான். ” கீழே விழுந்து இடுப்பை உடைத்துக் கொள்ளட்டும் என்று விட்டிருக்கவேண்டும் பாவம் என்று தாங்கி படுக்க வைத்தால் காள் காளென்று கத்துவாயா நீ ? ”
” கீழே விழுந்தாலும் பரவாயில்லை .நீ என்னை தொடாதே ” அவளது பதில் அவன் விழிகள் மின்னின. வேட்டை நாயின் குரூரம் அவற்றில்.
” நான் தொட்டால் உனக்கு பிடிக்காதா ? அப்படி என்றால் அதனை நான் கண்டிப்பாக செய்தே தீர வேண்டும் ” அவள் முகத்தை அழுந்த பற்றி அப்படியே அவளை தூக்கி நிறுத்தினான்.
” விடு… விடு …”
நிலானி அவன் மார்பில் குத்தினாள் .அவன் அந்த குத்துக்களை தாண்டி அவளை அணைக்க முயன்றான்.
போராடிய இருவரும் சற்று நகர நிலானியின் காலில் எதுவோ இடற திரும்பிப் பார்த்தாள். அங்கே சிறு தள்ளுவண்டியில் மேலே மூடிய பாத்திரங்கள் . சாப்பாடா ….? இங்கே எப்படி வந்தன ? என அவள் யோசிக்கும் போதே அவனது பார்வையும் அவற்றின் மேல் பட்டது .அவன் விழிகள் விரிந்தன .
திமிறிக் கொண்டிருந்தவளை இரு தோள்களையும் பற்றி துண்டாக தூக்கி சோபாவில் எறிந்தவன், அவள் சுதாரித்து எழும் முன் அந்த உணவுப் பாத்திரங்களை அணுகி தட்டில் உணவைப் பரிமாறிக் கொண்டு அவளை நெருங்கி எழவிடாமல் அவளுக்கு குறுக்காக கால்களை வைத்து தடுத்து கொண்டு சோற்றைப் பிசைந்து அவள் வாயில் திணித்தான்.
” தொடக்கூடாதா உன்னை ? “கறுவியபடி அவள் திணற திணற , விழுங்குவதற்கு இடம் கொடாமல் மேலும் மேலும் சோற்றை அவள் வாயில் திணித்தான் .வாய்க்குள் இடம் இல்லாமல் போக முகம் கழுத்து என்று பூசினான். நிலானி திணறி விக்க
” தண்ணீர் குடி ” என்று ஜக்கோடு சேர்த்து அவள் வாயில் சரித்தான் .முகம் முழுவதும் பாழாக உணவை விழுங்க முடியாமல் கண்களில் நீர் கோர்க்க விக்கலும் விசும்பலுமாக திணறினாள் நிலானி. அவள் கண்கள் நிற்காமல் கண்ணீரை வடிக்கத் துவங்கியது.
அவன் கையிலிருந்த உணவுப் பாத்திரம் காலியாகும் வரை அவளை விடவில்லை .முழுவதுமாக அவள் வாய்க்குள்ளும் , அவள் மேலும் உணவை தெளித்துவிட்டு பின்பு பாத்திரத்தை கீழே வைத்து அதிலேயே கையைக் கழுவினான்.
” போ போய் சுத்தம் பண்ணிக் கொண்டு வா ” பாத்ரூம் பக்கம் கையைக் காட்டிவிட்டு நிதானமாக இன்னொரு தட்டில் தனக்கு பரிமாறிக்கொண்டு உண்ணத் துவங்கினான்.
வெடிக்கும் விம்மலுடன் நிலானி பாத்ரூம் கதவை மூடிக்கொள்ள போனபோது ” பாத்ரூமிற்கும் என்னிடம் சாவி உண்டு ” அறிவித்தான் . உடல் கூச உள்ளே தன்னை சுத்தம் செய்துகொண்டு அழத்துவங்கினாள் நிலானி.
” என்ன நீ வெளியே வருகிறாயா ? நான் உள்ளே வரட்டுமா ” பாத்ரூம் சுவர்கள் அதிர்ந்தன அவனது குரலுக்கு.
பலியாடு போல் விழித்தபடி உள்ளேயே இருந்த நிலானியை அடுத்த இரண்டாவது நிமிடமே பாத்ரூமிற்குள் வந்து தரதரவென வெளியே இழுத்து வந்தான்.
” அதென்ன இவ்வளவு பெரிய கட்டில் இருக்கும்போது சோபாவில் படுத்து தூங்குகிறாய். ம் ….” சரியாக மழிக்கப்படாத அவனது தாடை நிலானியின் கன்னத்தில் உரச அவள் உடல் குறுகியது.
“அந்தத் கட்டிலை பார்த்தாலே எனக்கு அருவருப்பாக இருக்கிறது ” முகத்தைக் கோணியபடி நிலானி சொன்ன பதில் அவனுள் இருந்த மிருகத்தை கட்டவிழ்த்துவிட சட்டென குனிந்து அவளை மிக எளிதாக இரு கைகளிலும் தூக்கினான்.
” இதோ இப்போது அருவருப்பு போய் ஆனந்தம் வந்துவிடும் ” கட்டில் மேல் அவளைஉருட்டிவிட்டு தானும் பாய்ந்து அவள் அருகில் படுத்தான். எழப் போனவளை விடாமல் சிறை செய்தான்.
ரோஜாக்களால் செய்து பஞ்சுக்குள் பொதித்து வைத்தவள் போலிருந்த அவளை கரும் பாறை மேல் முளைத்த பனைமரம் போல் இருந்த அவனால்
மிகச் சுலபமாக ஆக்கிரமிக்க முடிந்தது .
தன் மேலே பாறை குவியலாய் படிந்திருந்த அவனிடமிருந்து விலக முடியாமல் நிலானிக்கு மூச்சு இறைத்தது .இதோ இன்றைய இரவு தான் தனது வாழ்நாளின் கடைசி நாள் என்ற முடிவுக்கு அவள் வந்து மெல்ல கண்கள் சொருக மயக்கத்திற்கு போனபோது ஏதோ மணிச் சத்தம் கேட்டது.
யோசனையுடன் அவளை விட்டு விலகியவன் படுக்கை அருகே இருந்த இன்டர்காமை ஆன் செய்தான்.” ஐயா உடனே வாசலுக்கு வாங்க ” ஒரு ஆண் குரல் ஒலித்தது.
” இப்போதா ? என்ன விஷயம் ? அதட்டலாக கேட்டான் .
” ஐயா ஊருக்குள் போலீஸ் புகுந்து விட்டார்கள் .என் புருஷனை கைது செய்யப் போறேன்னு சொல்றாங்க. நீங்கதான் வந்து அவரை காப்பாத்தனும் ” இப்போது அழுகையுடன் பேசியது ஒரு பெண் குரல்.
” இன்று தப்பித்தாய் ” இன்னமும் ஒரு கையால் தான் பிடித்துக்கொண்டிருந்தவளை கட்டிலில் தள்ளிவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினான் அவன்.
புயல் வந்து அலைக்கழித்து போட்ட குடிசை போல வலிவிழந்து படுக்கையில் சரிந்து விம்மினாள் நிலானி.
What’s your Reaction?
+1
5
+1
3
+1
+1
+1
+1
+1
2