14
உதயன் மல்லிகை பந்தலுக்கு வந்த போது சூரியன் கனகாம்பர நிறத்தை கடன் வாங்கிக்கொண்டு மேற்கு நோக்கி இறங்கிக் கொண்டிருந்தான். அவன் முன் கோபமாக வந்து நின்றான் குமரன்.
“என் தங்கைக்கு மறைக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. எப்படியும் அவளிடம் சொல்லத்தான் இருந்தேன். அவளும் என் வாழ்வை மறுக்க போவதில்லை.இதில் இடையில் நீ புகுந்து கொண்டு இருவருக்குமிடையே சண்டை மூட்டி என் வாழ்வை கெடுக்க பார்க்கிறாயா?”
“உன் வாழ்வை கெடுக்க வேண்டுமென்று நினைத்திருந்தால் அதனை எப்போதோ செய்திருப்பேன்”
“ஆமாம் நீ கெடுக்கட்டும் என்று என் வாழ்வை உன் கையில் கொடுத்து விட்டு உட்கார்ந்திருப்பேனோ?என் வாழ்வை எப்படி காக்க வேண்டுமென எனக்கு தெரியும்”
“கிழித்தாய்.இங்கே வந்து பத்து நாட்களாக உன் மனைவியை தொடர்பு கொண்டாயா? தாலி கட்டியதோடு கடமை முடிந்ததென்று நினைத்தாயோ? அரவம் தெரியாமல் மறைந்தவனோடு எதற்கு வாழ்வென்ற முடிவை உன் மனைவி எடுத்தாளானால்…?”
குமரனின் முகம் வெளுத்தது.”இ…இல்லை…நா…நான்” குழறினான்.
உதயன் தோழமையோடு அவன் தோள் தட்டினான்.”கவலைப்படாதே குமரா.உன் சார்பாக உன் மனைவியை சந்தித்து உன் அப்பா இறப்பை சொல்லி,நீ வர சிறிது நாட்களாகுமென சொல்லிவிட்டே வந்திருக்கிறேன்.இருக்கும் இடத்தோடு ஒன்றி உனக்குரிய கடமைகளை மறந்து விடுவது உனது இயல்பு போலும்.இதனை நீ மாற்றிக் கொள்ள வேண்டும்”
“எனக்கு அறிவுரை சொல்லும் தகுதி உனக்கு இல்லை”
உதயன் தோள்களை குலுக்கினான்” பிறகு உன் விருப்பம்.நம் நாட்டின் பெரும்பாலான ஆண்கள் உன் போலத்தான்.அம்மாவிடம் அவர்களுக்கேற்ற பேச்சு.மனைவியிடம் அவளுக்கேற்றபடி.இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கின்றன”
“உன் பிரசங்கத்தை நிறுத்து.பொய் சொல்லி குடும்பத்திற்குள் நுழைந்தவன்தானே நீ?என்னைப் பற்றி பாரியிடம் சொன்னாயல்லவா?
உன் திருட்டுத்தனத்தை பாரியிடம் சொல்லிவிட்டேன்.இனி அவளிடம் உன் பாச்சா பலிக்காது”
உதயன் பாய்ந்து குமரனை பற்றி உலுக்கினான்”பாருவிடம் என்ன சொன்னாய்,?”
“நீ யாரென்று சொன்னேன்.இத்தனை நாட்களாக அவளை ஏமாற்றியதை சொன்னேன்.சிறு வயதிலிருந்து எத்தனையோ துயரங்களை சந்தித்த போதும் கண்களை தாண்டி நீரை வழிய விடாதவள்.உன் துரோகத்தை சொல்லவும் கண்ணீர் விட்டு கதறி விட்டாளடா”
வேகத்துடன் பேசிய குமரன் சட்டென உதயன் கண் கலங்க கண்டு திகைத்தான்.
“டேய் ஏன்டா இப்படி செய்தாய்? நான் உன் வாழ்வையும் சேர்த்து யோசிக்க,நீயோ என் வாழ்க்கையை முடிக்க நினைத்து விட்டாயே”
“நான் இல்லாத நேரம் பாரியிடம் என் திருமண விசயத்தை போட்டுக் கொடுத்தவன் தானே நீ?”
“முட்டாள். மனம் போல் பேசாதே,எதையும் யாரையும் உணர்ந்து கொள்ள பழகு.பாரு என் உயிர்.அவளிடம் என்னை மறைக்க நான் ஒரு போதும் நினைக்கவில்லை.எனது சூழ்நிலைகளை பக்குவமாக அவளுக்கு சொல்லவே காத்திருந்தேன்.நீ உன் அவசர புத்தியில் கொட்டி கவிழ்ந்து விட்டு நிற்கிறாய்”
இருவரும் ஒருவரையொருவர் தள்ளியபடி நிற்க,குமரனின் போன் ஒலித்தது.இவர்கள் தள்ளுமுள்ளுவில் போன் கீழே விழ,வெண்ணிலா காலிங் என்றது அது.இருவருமே வேகமாக போனை எடுக்க முயல ஸ்பீக்கர் பட்டனில் பட்டு போன் சத்தமாக பேசத் தொடங்கியது.
“வெண்ணிலா இந்த உதயன் உன்னிடம் என்ன சொல்லியிருந்தாலும் நம்பாதே” குமரன் கத்தினான்.
“எதை நம்ப வேண்டாம்?குமரன் போலொரு பாந்தமான கணவன் உனக்கு கிடைக்க மாட்டானென மணிக் கணக்கில் என்னிடம் பேசி சமாதானம் செய்து விட்டு வந்தாரே…அதனை நம்ப வேண்டாமா?'” வெண்ணிலாவின் நிதானமான குரலில் ஙே என விழித்து நின்றான் குமரன்.
“நிலா…அது…வ…வந்து…”
“உதயன் போல் ஒரு நண்பன் கிடைக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.சீக்கிரமே அங்குள்ள பிரச்சனைகளை முடித்து விட்டு சொல்லுங்கள்.உங்கள் மனைவியாக அங்கே நான் வர வேண்டும்.அது வரை என் போனையோ…மெசேஜையோ தவிர்த்தீர்களானால் ஜாக்கிரதை…” போன் கட்டானது.
குமரன் தலை குனிந்திருக்க உதயன் “பாரிஜாதத்தை எங்கே?” என்றான்.
“வெ…வெளியே போவதாக…”
வேகமாக வெளியேறியவனுடன் குமரனும் சேர்ந்து கொண்டான்.முதலில் சாதாரணமாக ஆரம்பித்து பின் தீவிரமான பின்தான் அவர்கள் உணர்ந்தனர்.
மல்லிகைபந்தல் முழுவதும் தேடியும் பாரிஜாதத்தை காணவில்லை.
What’s your Reaction?
+1
33
+1
25
+1
+1
+1
1
+1
+1
3