14
” காலையில் 5 மணிக்கு எழுந்து கொள்ள வேண்டும் ” என்ற மாமனாரை கொலை பார்வை பார்த்தாள் நர்மதா .அடப்பாவிகளா உங்களுக்கு கொஞ்சம் கூட கருணையே கிடையாதா… மனதிற்குள் புலம்பியபடி வெளியே தலையை ஆட்டி வைத்தாள்.
ராணுவ வீரர்களுக்கு அதிகாலை விழிப்பு என்பது மிகவும் பழக்கமான ஒன்று. ராணுவ குடும்பமான முனியாண்டி குடும்பத்திற்கு காலை விழிப்பு சாதாரணமானதாக இருந்தது .ஆனால் 7 மணி வரை உறங்கி பழக்கப்பட்ட நர்மதாவிற்கு அது பெரும் கொடுமையாக இருந்தது.
” காலையில பாடம் சொல்லிக் கொடுக்க எந்திரிக்கணும் நேத்தே சொல்லியாச்சில்ல ? இன்னும் என்ன தூக்கம் …? ” கத்தலாய் கேட்ட சர்வேஸ்வரியின் குரலுக்கு விழித்துக்கொண்ட நர்மதாவின் இமைகள் பிரிய மறுத்தன .மிகச் சிரமப்பட்டு விழி பிரித்து பார்த்தவள் இன்னமும் இருளாய் இருந்த சுற்றுப்புறத்திற்கு நொந்து மீண்டும் விழி சொருகிக் கொள்ள முயல…
” என்ன எழுந்திருக்கிறாயா ? இல்லையா ? ” என்ற முத்தாட்சியின் குரலுக்கு கஷ்டப்பட்டு விழி திறந்தாள் .அருகில் பார்க்க படுத்து போர்வையை இதமாக போர்த்திக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்த சுமித்ராவும் சங்கரியும் நர்மதாவிற்கு பொறாமையையும் , கடுப்பையும் கொடுத்தனர்.
இவர்கள் இரண்டு பேரும் தூங்க , நான் மட்டும் எழுந்திருக்க வேண்டுமா ? பேசாமல் எனக்கு இந்தி தெரியாது என்று சொல்லி விடுவோமா …என்று யோசிக்கத் தொடங்கினாள்.
” அக்கா தண்ணி கொதிச்சிருச்சான்னு பாருங்க ” என்று கேட்ட முத்தாச்சியின் குரலுக்கு அவளுக்கு தூக்கி வாரி போட்டது .அந்த கொதிக்கும் தண்ணீர் யாருக்கு …? அவளுடைய தூக்கத்தை கலைப்பதற்காக இருந்தாலும் இருக்கலாம் .இந்த முத்தாச்சி அத்தைக்கு என் மேல் இருக்கும் கோபத்தை இந்த வழியில் தீர்த்துக்கொள்ள நினைத்தார்களானால்…. இப்படி எண்ணம் தோன்றிய மறு நிமிடமே அவள் எழுந்துகொண்டாள்.
வீட்டின் பின்பக்கம் நடந்தவளின் தலை சுழலுவதன் காரணம் உறக்கமா ? மயக்கமா ? என்று அவளுக்கு புரியவில்லை .தளர்ந்த நடையுடன் கிணற்றடியில் பல்தேய்த்து முகம் கழுவிக்கொண்டிருந்தவளுக்கு தலை சுற்றல் அதிகமாக இருப்பது போல் தோன்ற , உடல் தடுமாறியது .அதோ அந்த துவைக்கும் கல்லில் உட்கார்ந்து கொள்ளலாம் என்று அவள் நினைத்த போது அவள் உடல் மென்மையாக தாங்கி அந்தக் கல்லில் உட்கார வைக்கப்பட்டது.
” மயக்கமாக இருக்கிறதா ? ” அக்கறையாக கேட்டபடி அவளருகே நின்றவன் மாதீரன்.
” இ…இல்லை …அ…ஆமாம் …லேசாக தலை சுற்றுவது போல்…” தடுமாறியவளின் பார்வை அவளின் மிக அருகே வெற்று தோள்களுடன் நின்றிருந்தவனின் வலிமையான புஜங்களின் மீது பட்டு …பட்டு உருண்டது .
” வீட்டிற்குள் நடந்து வர முடியுமா அல்லது இங்கேயே இருக்கிறாயா ? அம்மாவிடம் உனக்கு குடிக்க ஏதாவது வாங்கி வருகிறேன் ”
” அ…அதெல்லாம் வேண்டாம் .நானே வருகிறேன் ” எழுந்து கொண்டாள் . என் மகனை ஏவல் வேலை சொல்கிறாயா …எனும் சர்வேஸ்வரியின் முறைப்புகளை வாங்க அவள் தயாராக இல்லை .
ஆதரவு போல் மிக லேசாக அவள் தோளுரசும் அருகாமையில் நடந்து வந்தவனின் நெருக்கம் அந்நேரம் நர்மதாவிற்கு மிகத் தேவையாகவே இருந்த்து .அவன் சற்று விலகினாலும் மயங்கி கீழே விழுந்து விடுவோமென பயந்தாள் .
இதோ இப்படி அருகே நடந்து வருபவன் பக்கம் திரும்பி அவன் மார்பில் முகம் பதித்துக் கொள்ளலாம் .அவன் கையை எடுத்து தன் வயிற்றில் பதித்துக் கொண்டு ,உன் பிள்ளையால்தான் எனக்கு இத்தனை உடல் தொந்தரவு என மிழற்றலாம் .ஆனால் …நர்மதா பெருமூச்சு விட்டாள் .
இருக்கட்டும் சந்திரன் – சுமித்ரா வாழ்வை சரி படுத்திவிட்டு , என்னை சில நிமிடமேனும் தவறாக நினைத்ததற்காக இவனை கொஞ்ச நேரம் கதற கதற வைத்துவிட்டு , பிறகுதான் இவனிடம் இந்த விசயத்தை சொல்லவேண்டும் .தனக்குள் ஒரு உறுதி எடுத்துக் கொண்டாள் .
” என்னவாம் மகாராணிக்கு ? அசைஞ்சு அசைஞ்சு வர்றாக ? ” சர்வேஸ்வரி் நக்கலாக கேட்டாள் .
” மயக்கம் போல் இருக்கிறதம்மா .ஏதாவது குடிக்க கொடுங்கள் ”
” பத்து மணி வரை படுக்கையில் உருண்டு கிடப்பவளை ஐந்து மணிக்கு எழுப்பி விட்டால் மயக்கம் , கிறக்கம் எல்லாம் வரும் ” முத்தாச்சி முகத்தை நொடிக்க நர்மதாவிற்கு கோபம் வந்த்து .
நான் பத்து மணி வரை தூங்கியதை நீங்கள் பார்த்தீர்களா …என்று ஒரு சண்டையை ஆரம்பிக்கலாமா என யோசித்தவள் பலவீனமான தனது உடல்நிலையால் அந்த யோசனையை கை விட்டாள் .
” நீசுத்தண்ணி குடிக்கிறியா ? ” கேட்டபடி மருமகளை ஆராய்ந்த சர்வேஸ்வரியின் முகத்தில் யோசனை இருந்தது.
” அப்படி என்றால் என்ன ? ” புரியாமல் மாமியாரை பார்த்த நர்மதாவிற்கு ” முதல் நாள் மீதமிருக்கும் சோற்றில் ஊற்றி வைக்கும் தண்ணீரின் பையர் . நீராகாரம் என்றும் சொல்வார்கள் .உடம்பிற்கு மிகவும் நல்லது .லேசான புளிப்புடன் வாய்க்கு நன்றாக இருக்கும் ” விளக்கினான் மாதீரன்.
அவன் சொன்ன புளிப்பு நாக்கிற்கு தேவையாக இருக்க வேகமாக தலையசைத்தாள் நர்மதா .” கூடுதலாக இரண்டு கல் உப்பு போட்டு எடுத்து வருகிறேன் ” சொன்னபடி நர்மதாவை ஆராய்தலுடன் பார்த்துக் கொண்டே உள்ளே சென்றாள் சர்வேஸ்வரி.
உப்பும் , புளிப்புமாக மாமியார் கொண்டு வந்து கொடுத்த நீராகாரம் நர்மதாவிற்கு மிகவும் நன்றாக இருந்தது .வேகமாக குடித்தாள் .” பானையில் இருக்கு தண்ணி .இந்த அம்மா மொண்டு குடிக்க மாட்டார்களா ? கையில் கொண்டு போய் கொடுக்கீகளே அக்கா .நீங்கள் அவளுடைய மாமியார் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் ” முத்தாச்சி சொல்ல நர்மதாவிற்கு எரிச்சல் வந்தது.
பதில் பேச வாய் திறந்தவளின் தோளில் தட்டினான் மாதீரன் ” நாம் போகலாம் ”
சர்வேஸ்வரி முத்தாச்சியிடம் ஏதோ சமாதானமாக பேசி கொண்டிருப்பதை பார்த்தபடி நர்மதா கிளம்பினாள்.
” சுமித்ராவின் வாழ்க்கையை நினைத்து சித்திக்கு கவலை .அந்த கோபத்தை உன்மீது காட்டுகிறார்கள் .பெரிதாக மனதில் வைத்துக்கொள்ள வேண்டாம் ” அரை இருளாய் இருந்த தெருக்களில் நடந்தபடி மாதீரன் அவளிடம் பேசினான்.
மகளிடம் ஏண்டி திரும்ப வந்தாய் என்று கேட்க வழியில்லை என்னை கோபிக்கிறார்களாக்கும் ? மனதிற்குள் நினைத்தபடி மாதீரனுக்கு பதில் சொல்ல பிடிக்காமல் தெருவின் இருபுறமும் பார்த்தபடி வந்தாள்.
போடா நீயும் உன் ஓட்டை குடும்பமும் …இப்படித்தான் வாய் திறந்து சொல்லும் ஆசை அவளுக்கு .ஆனால் இப்போது நிலைமை சரியில்லை .வாய் திறந்தால் அப்படியே பேசி விடுவோமோ என பயந்து வாயை மூடிக் கொண்டு வந்தாள்.
மைதானத்தை அவர்கள் அடைந்தபோது வெளிச்சம் பரவத் துவங்கியது .அங்கே நடந்துகொண்டிருந்த பயிற்சிகளை பார்த்து விழிகளை விரித்தாள் நர்மதா. கிட்டத்தட்ட 50 பேர் வரை அங்கே பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் .சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை.
” இவ்வளவு சின்ன பசங்களும் ராணுவத்தில் சேரப் போகிறார்களா ? ” ஆச்சரியமாகக் கேட்டாள்.
” ராணுவ வேலையில் மிகவும் ஆவல் உள்ளவர்கள் இது போல் சிறு வயதில் இருந்தே பயிற்சி எடுக்க ஆரம்பித்து விடுவார்கள் ” மாதீரன் விளக்கினான்.
” இங்கே உட்கார் ” சதுரமான கருங்கல் ஒன்றை அவளுக்கு காட்டிவிட்டு பயிற்சிகள் எடுத்துக் கொண்டிருந்தவர்களிடம் போனான் .முன்பே இருவர் அங்கே பயிற்சிகள் கொடுத்துக் கொண்டிருக்க மூன்றாவதாக மாதீரனும் அவர்களுடன் சேர்ந்து கொண்டான்.
.
” அண்ணா ” என்று கத்தியபடி ஓடிவந்த இருபது வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் வரும் வழியிலேயே இரண்டு முறை தரையில் கையூன்றி பல்டி அடித்து மிக நேராக மாதீரனின் கழுத்தில் தனது கால்களை கோர்த்துக்கொண்டு அப்படியே தலைகீழாக அவன் மேல் தொங்கினான்.
அவன் அழைக்கும் போதே தன் கால்களை அகற்றி வைத்து தயாராகிவிட்ட மாதீரன் ஓடிவந்து விழுந்தவனை தாங்கிக் கொண்டு நின்றான்” டேய் ராசு தேறிட்டடா ” அவனை சுமந்தபடியே பாராட்டியவன் அவன் இடுப்பின் கீழ் தன் இருகைகளையும் கொடுத்தான் .உடன் அந்த ராசு தன் தலைக்கு கீழே இரு கைகளையும் வைத்தபடி எழுந்து விழுந்து என பயிற்சியை ஆரம்பித்தான்.
நர்மதா ‘ ஆ‘ வென்று அவர்களை பார்த்தாள் .மற்றொரு பக்கம் 10 பேர் தரையில் குப்புறப்படுத்து கையையும் காலையும் தரையில் ஊன்றி தங்கள் உடலை கோபுரம் போல் உயர்த்திக்கொள்ள , அவர்களுக்கு அடியில் மற்றவர்கள் படுத்தபடியே தத்தித்தத்தி நடந்து மறுபக்கம் வந்தனர் .இன்னொருபுறம் தொங்கவிடப்பட்டிருந்த கயிற்றில் மேலே வரை ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர் சிலர் .
எவ்வளவு கடினமான பயிற்சிகள் இவையெல்லாம்… இவற்றையெல்லாம் இவர்கள் எவ்வளவு உற்சாகமாக செய்கின்றனர் …அவர்களுக்கு நம் நாட்டை காப்பதில் இருக்கும் ஆர்வம் ஒவ்வொரு செயலிலும் தெரிவதை உணர்ந்தாள் நர்மதா .அந்த சமயத்தில் இது என்னுடைய ஊர்… என் ஊர் மக்கள் நம் நாட்டிற்காக தங்களை மெருகேற்றிக் கொண்டு இருக்கின்றனர் என பெருமையாக நினைத்தாள்.
ஒரு மணிநேரம் தீவிரமான பயிற்சியின் பின்னால் வியர்வை வழிய வழிய நின்ற அனைவரும் கொஞ்சம் ஓய்வாக நிற்க , ” என்னம்லே பயிற்சி எல்லாம் முடிஞ்சதா ? ” என்றபடி மைதானத்திற்குள் வந்தார் சடையாண்டி.
” எல்லாம் முடிந்தது ” கோரசாக கத்தியவர்களிடம் ” உடம்பை தேற்றினால் மட்டும் போதாதுலே. மூளையையும் கவனிக்க வேண்டும் .எழுத்து பரிட்சையில் பாஸ் ஆனால் தான் உங்கள ராணுவத்தில் எடுப்பாங்க. தெரியுமில்ல ? ” எனக் கேட்டார்.
” அந்தப் பரீட்சைதானே எங்களுக்கு சிம்ம சொப்பனமாய் இருக்கு ? ” என தலையை சொறிந்தான் ஒரு இளைஞன்.
” அதற்காகத்தான் இவங்க வந்திருக்காங்க ” சடையாண்டி பெருமையாக நர்மதா பக்கம் கை காட்ட, அவள் மெல்ல எழுந்து நின்றாள் .
” எங்க வீட்டு மருமகப் பொண்ணு .நிறைய படிச்சவங்க .உங்களுக்கு அந்த எழுத்துப் பரீட்சையில் எப்படி எழுதுவது என்று சொல்லிக் கொடுப்பார்கள் .இந்தி , இங்கிலிசு எல்லாமே அவுங்களுக்கு தெரியும் .அக்கறையா அவங்ககிட்ட கேட்டு படிச்சுக்கோங்க ” சடையாண்டி சொல்லவும் அங்கிருந்த இளைஞர்கள் எல்லோரும் சந்தோசமாக தலையாட்டினார்கள்.
” சொல்லிக் கொடுங்க அக்கா ” என்றபடி நர்மதாவை சூழ்ந்துகொண்டனர் .நர்மதா திகைத்தாள் .திடீரென்று இப்படி கேட்டால் அவள் எதனை சொல்லிக் கொடுப்பாள்…?
” உனக்கு நான் நாளை மிலிட்டரி எக்ஸாமினேஷன் கொஸ்டின் பேப்பர் மாடல் சொல்கிறேன். அதுபடி சொல்லிக்கொடு ..இப்போது கொஞ்சம் பொதுவான ஆங்கில , இந்தி வார்த்தைகளை இவர்களுக்கு சொல்லிக் கொடு .” மாதீரன் சொன்னான் .
” இங்கிலீசுமா ? ”
” ஆமாம் இங்கே இருப்பவர்கள் பத்து அல்லது பனிரெண்டு வரை படித்தவர்கள்தான் .அதுவும் தமிழ்வழி கல்விதான் .இவர்களுக்கு ஆங்கிலமே தடுமாற்றம்தான் . அதனால் நீ ஆங்கிலம் , இந்தி இரண்டுமே அடிப்படை வார்த்தைகளை சொல்லிக் கொடுக்க வேண்டியதிருக்கும் ”
அவள் மௌனமாக நிற்க ” உனக்கு கஷ்டமாக இருக்குமா ? ” மெல்லிய குரலில் கேட்டான் .
‘ ஊஹூம் …நாட்டைக் காக்க துடித்துக் கொண்டிருக்கும் இந்த இளைஞர்களுக்கு ஆரம்ப கல்வி கூட அளிக்க முடியாத நிலையில் இருக்கும் நம் நாட்டு நிலைமையை நினைத்தேன் .கொஞ்சம் வருத்தமாக இருந்த்து . நான் தயார் …” நர்மதா உற்சாகமாக தயாராக மாதீரன் முகம் மலர்ந்தான்
” ம் …பாடத்தை ஆரம்பிங்க அக்கா ” கேட்டபடி அவளுக்கு கீழ் மண் தரையில் சுற்றி அமர்ந்து கொண்டார்கள் எல்லோரும் .
” இந்தக் குச்சியை கையில் வச்சிக்கோங்க்க்கா .ஒழுங்காக படிக்காதவனுங்க முதுகில் சுளீர்னு ஒண்ணு குடுங்க .அப்பத்தான் இவனுங்களுக்கு படிப்பு மண்டயில ஏறும் ” சொன்னபடி அங்கிருந்த வேப்பமர குச்சி ஒன்றை ஒடித்துக் கொண்டு வந்து கொடுத்தான் ஒருவன் .சிரித்தபடி அதனை வாங்கிக் கொண்ட நர்மதா ஆசிரியையின் கம்பீரத்துடன் அந்தக் கல்லிருக்கையில் அமர்ந்து கொண்டாள் .பாடம் ஆரம்பமானது .
மாதீரனும் , சடையாண்டியும் தள்ளி நின்று அவளது கற்பித்தலை பெருமையோடு பார்த்திருந்தனர் .கிட்டதட்ட ஒரு மணி நேர பாடத்திற்கு பிறகு மீதி நாளை என்று சொல்லி எழுந்த பிறகே நர்மதா கவனித்தாள் .மாதீரன் அவளுக்காக வேப்பமரத்தடியில் காத்திருந்தான் .
” வீட்டிற்கு போயிருக்கலாமே .பக்கத்தில்தானே …நானே வந்திருப்பேனே …? ” அவனை தேவையில்லாமல் காக்க வைத்த குற்றவுணர்வுடன் கேட்டாள் .
” விட்டுப் போக சொல்கிறாயா ? ” கூர் பார்வை அவளைக் கொத்தியது .
” வீட்டுக்கு போகச் சொன்னேன் ” அழுத்தினாள் அவள் .
” பரவாயில்லை வா ” அவன் நடக்க தொடங்க தானும் நடந்தாள் .
” இவர்களுக்கு உடல் பயிற்சியை ராணுவத்திலிருந்து ரிட்டயர்ட் ஆன சிலர் மற்றும் என்னைப் போல் ராணுவத்தில் இப்போது பணியாற்றும் சிலர் ஆக மிக தெளிவாக கொடுத்து உடல் ரீதியாக பக்காவாக தயார்படுத்தி விடுகிறோம் .ஆனால் எழுத்து தேர்வு …? அது ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருக்கிறது .அதில் எல்லோருமே சறுக்கி விடுகிறார்கள். ராணுவ நுழைவுத் தேர்வுக்கென மட்டுமே இவர்களுக்கு படிப்பு சொல்லிக் கொடுக்க யாரும் முன் வருவதில்லை .இப்போது நீ இதற்கு ஒத்துக் கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி ”
” நாட்டுக்கு சேவை செய்ய தங்களையே அர்ப்பணித்திருக்கும் இவர்களுக்கு , இந்த சிறிய உதவி செய்வதை பெருமையாக நினைக்கிறேன் ” என்றவளின் விழிகள் சாலையோர மரங்களின் மேல் ஆவலோடு படிந்து மீண்டது .
அவள் பார்வை வழி பார்த்தவன் ” மாங்காய் வேண்டுமா ? ” கனிவாக கேட்டான் .
” ம் …” எனத் தலையாட்டிவளின் கண்கள் பேராசையாய் மரத்தில் தொங்கிய மாஙகாய்களை மொய்த்தது.
” தெரிந்தவர் தோப்புதான் .இரு பறித்துக் கொண்டு வருகிறேன் ” வேலியோரம் போய் நொடியில் மரத்தின் மேல் தாவி ஏறி இரு கை நிறைய மாங்காய்களை பறித்து வந்தான் .
அவற்றின் வாசனைக்கே எச்சில் ஊறிய நர்மதா அவசரமாக அவன் கையிலிருந்து ஒரு மாங்காயை பிடுங்கி கடித்து தின்னத் துவங்கினாள் .
” வீட்டிற்கு போய் வெட்டி சாப்பிடலாமே …” என்ற அவனது கேள்வியை கவனிக்காமல் வேகமாக முதல் மாங்காயை முடித்தவள். நிதானமாக இரண்டாவது மாங்காயை கடித்தபடி நடக்க தொடங்கினாள் .
அவள் எடுத்து உண்ண வசதியாக தன் கைகளில் மாங்காய்களை ஏந்தியபடி அவளுடன் மெல்ல நடந்தான் மாதீரன் .
” இப்போதெல்லாம் புளிப்பு உனக்கு ரொம்ப பிடிக்கிறதோ ? ” அவனது கேள்விக்கு திடுக்கிட்டு நின்றாள் .
ஐய்யய்யோ …கண்டுபிடித்து விட்டானா ?திருதிருவென விழித்தாள் .” அ…அப்படி இல்லையே .எனக்கு மாங்காய் எப்போதுமே பிடிக்கும் ”
” ம் …உன்னுடன் சில விசயங்கள் பேச வேண்டும் நர்மதா. நம் திருமணம் …அது …திடீரென நம் வீட்டு பெரியவர்கள் பேசி முடித்து …” மனம் ஆழ்ந்து சொல்லிக் கொண்டிருக்கும் போதே நர்மதாவின் கவனம் தன் பேச்சில் இல்லை என உணர்ந்தான் .
” நர்மதா ” அதட்டலாக அவன் அழைக்க ,
” சந்திரா ” எனக் கத்தியபடி ஓடினாள் நர்மதா .
பைக்கில் சென்று கொண்டிருந்த சந்திரனின் பின் ஓடியவளை முகம் கறுக்க பார்த்து நின்றான் மாதீரன் .
What’s your Reaction?
+1
4
+1
2
+1
+1
+1
+1
+1
1