Cinema Entertainment விமர்சனம்

‘மகளிர் மட்டும்’ விமர்சனம்

பியூசி படிக்கும் காலத்தில் துடுக்குத் தனமான ஹாஸ்டல் தோழிகளாக இருந்து பிரிந்து குடும்பம் , குழந்தை ,குட்டி ,கணவன் , கடமை என தங்கள் வாழ்க்கையை மறந்து கடனே என வாழும் மூன்று நடுத்தர வயது பெண்மணிகளை மீண்டும் ஒன்று சேர்த்து ஒரு மூன்று நாட்கள் அவர்களது வாழ்க்கையை வாழ வைக்கும் கரு வை உள்ளடக்கி வந்திருக்கும் படமே “மகளிர் மட்டும்.”




Magalir Mattum tamil Movie - Overview

கதை : கோமாதா – ஊர்வசி , ராணி அமிர்தகுமாரி – பானுப்ரியா , சுப்புலட்சுமி சரண்யா பொன்வண்ணன் … கல்லூரியில் , பியூசி படிக்கும் காலத்தில்., இரவில் ஹாஸ்டல் சுவர் ஏறி குதித்து , சினிமாவுக்கு போகும் அளவிற்கு நெருங்கிய குறும்புக்கார தோழிகள். அந்த அளவிற்கு மிஞ்சிய குறும்புத்தனமே தோழிகள் மூவரில் ., யார்? எங்கிருக்கிறார் ..? எனத் தெரியாத அளவிற்கு அவர்களை பல ஆண்டுகள் …பிரித்து வைக்கிறது .இந்நிலையில் அந்த மூவரில் ஒருவரான ஊர்வசிக்கு மருமகளாக வர இருக்கும் பிரபாவதி ஜோதிகா ., தன் மாமியாராக வரப்போகும் ஊர்வசியின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் விதமாக ., பேஸ்புக் மற்றும் வாட்ஸ் – அப் வாயிலாக அத்தையின் தோழிகள் இருவரையும் தேடிப் பிடித்து அவர்கள் மூவரையும் அவர்கள் விரும்பிய வாழ்க்கையை ஒரு மூன்று நாட்கள் வாழ வைக்க தனக்குள் சபதம் ஏற்று தன் புரட்சி தோழர் தோழிகளின் உதவியுடன் களம் இறங்குகிறார்.

அதற்கு முதலில் ஒப்புக் கொள்ள மறுக்கும் ஜோதிகாவின் பிஸி டியூஷன் டீச்சர் மாமியார் ஊர்வசியும் , தன் குடிகார கணவன் மற்றும் படுத்த படுக்கை மாமியாருடன் போராடும் சரண்யா பொன்வண்ணனும் , ஆக்ராவில் அரசியல் பேமிலியில் வீட்டுக்காரம்மாவாக செட்டிலானாலும் ,கிட்டத்தட்ட, அவரது குடும்பத்தாராலேயே ஒரு வேலைக்கார அம்மா போன்று நடத்தப்படும் பானுப்ரியாவும் அதன் பின் ஒப்புக் கொண்டு ஜோதிகா காட்டிய வழியில் மூவரும் மூன்று நாட்கள் வாழ்ந்து காட்டினார்களா ? இல்லையா ..? இவர்களை மூன்று நாட்கள் பிரிந்ததால் ., அவர்களது குடும்பத்தினர் பெண் அடிமைத்தனத்தில் இருந்து திருந்தி, அதன் பின் இவர்களை மரியாதையுடன் நடத்தினார்களா ..?இல்லையா …? என்பதுடன் ஜோதிகா – மாதவனின் இந்த தலைமுறை பெண் அடிமைத்தனம் இல்லா பெருந்தன்மையையும் பறைசாற்றும் விதமாக வந்திருக்கும் படம் தான் “மகளிர் மட்டும் .”




காட்சிப்படுத்தல் : தனது “2 டி’ எண்டர்டெயின்மென்ட் பேனரில் நடிகர் சூர்யா ., தனது காதல் மனைவி ஜோதிகா கதாநாயகியாக நடிக்க ., 36 + படம் தயாரித்தார். அதைத் தொடர்ந்து , “குற்றம் கடிதல்” பிரம்மாவின் எழுத்து , இயக்கத்தில், அடுத்து அவர் தயாரித்திருக்கும் இந்த ,”மகளிர் மட்டும் ” திரைப்படத்தில் , பெண் அடிமைதனத்தில் இருந்து பெண்களை மீட்டு வரும் முயற்சியாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் புதுமையானது பாராட்டிற்குரியது . என்றாலும் ., ஊர்வசி , பானுப்ரியா , சரண்யா மூன்று பேரின் முதல் காதல் அனுபவங்கள் …தேவையே இல்லாமல் சற்றே வல்கராக திணிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருப்பதை தவிர்த்திருந்தால் ., இத்திரைப்படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

கதாநாயகி : கதாநாயகி பிரபா எனும் பிரபாவதியாக ஜோதிகா , தனது முந்தைய 36 + படம் அளவிற்கு இல்லை என்றாலும் பிரபா எனும் பெயருக்கு ஏற்ப , புல்லட் எல்லாம் ஓட்டி , புரட்சி காதல் – கலப்பு திருமணங்கள் எல்லாம் நடத்தி வைத்து தைரியசாலி பெண்மணியாக ரசிகனை வசீகரிக்கிறார்.

கதாநாயகர் : ஜோதிகாவை திருமணம் செய்து கொள்ள இருக்கும் துபாய் மாப்பிள்ளை சூரி எனும் சுரேந்தராக மாதவன் , வரப்போகும் மனைவி ஜோதிகாவை வரப்பிரசாதமாக கருதி , அவர் போனில் உத்தர விடும் விஷயங்களைக் கூட சிரமேற்கொண்டு செய்து விட்டு காத்திருக்கும் அவதார புருஷனாக க்ளைமாக்ஸில் கொஞ்ச நேரமே வந்து கிளு கிளுப்பூட்டுகிறார். வாவ்! ஆனால் , யாருக்கும் இப்படி ஒரு கணவர் வாய்க்கப் போவதில்லை… என்பது மட்டும் நிதர்சனம் .

பிற நட்சத்திரங்கள் : ஆக்ரா அரசியல் பிரமுகராக வரும் நாசர் , முன்னாள் காதலியை நினைத்து அனுதினமும் குடித்தபடி , சோக கீதம் பாடிடும் லிவிங்ஸ்டன் , நாசரின் அடாவடி அரசியல் வாரிசு பாவல் நவகீதன் , நாசர் -பானுப்ரியாவின் இளைய மகனாக வரும் “அம்புலி ” கோகுல்… உள்ளிட்ட அனைவரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டுள்ளனர் .




தொழில்நுட்பகலைஞர்கள் : சி.எஸ்.பிரேமின் படத்தொகுப்பு முன்பாதியில் தொங்கினாலும் பின் பாதியில் பாஸ்ட் , டேஸ்ட்

மணிகண்டனின் ஒளிப்பதிவில் சட்டீஸ்கர் -சித்ரா குட் நீர்வீழ்ச்சியும் , உ.பி , சட்டீஸ்கர் மாநில காடு மலைகளும் , இயற்கை வளங்களும் பின் பாதியில் பிரமிப்பூட்டுகின்றன .ஆமாம் , ஆக்ரா போன படக் குழு அழகிய தாஜ் மஹாலை காட்டாது டயலாக்கிலேயே ஓடவிட்டது ஏனோ ? என்பது இயக்குனருக்கும் ஒளிப்பதிவா ளருக்குமே வெளிச்சம்.

ஜிப்ரானின் இசையில் “அடி வாடி திமிரா ….”, “காந்தாரி யாரோ… “, “காராட்டு பொட்டழகா …” , “குபுகுபுகுபு …” , “கரு கருன்னு ..”, “டைம்பாசுக்கோசரம் … ” உள்ளிட்ட ஆறு பாடல்களும் , பின்னணி இசையும் ஒ.கே.

பலம் : திருமணத்திற்கு பிந்தைய ஜோதிகாவின் நடிப்பிலும் , நடை , உடை , பாவனைகளிலும் எந்த வித மாற்றமும் பெரிதாக இல்லாதது பெரும் பலம்.

பலவீனம் : ஜோதிகா , சரண்யா , ஊர்வசி , பானுப்ரியா நாலு பேருமே சற்று ஒவர் ஆக்டிங் கொடுத்திருப்பதும் ,ஊர்வசி , பானுப்ரியா , சரண்யா மூன்று பேரின் முதல் காதல் அனுபவங்கள் …தேவையே இல்லாமல் ஜோதிகாவால் கேட்கப்படுவதும் .,அவர்களும் வெட்கமே இல்லாமல் ஜோதிகா எப்போது அது மாதிரி கேட்பார் ? என காத்திருந்தது மாதிரி ., தங்கள் காதல் அனுபவங்களை போட்டு தாக்குவதும் (அதுவும் மருமகளாக போகும் பெண்ணிடம் எந்த மாமியாராவது இப்படி உளறி கொட்டுவார்களா ? எனக் கேட்கும் அளவிற்கு ஊர்வசி உளறுவது ஒவரோ ஒவர் ….. அதையெல்லாம் சற்றே வல்கராக திணித்து இந்தப் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் பெரும் பலவீனம்.

இயக்கம் : பிரம்மாவின் எழுத்து , இயக்கத்தில் பெண் அடிமைத்தனத்தை போக்குகிறேன் … பேர்வழி… என , ஆம்பளைகள் அனைவரையும் மோசமான வர்களாகவும் , பெண்கள் எல்லோரையும் மேலும் , மேலும் சுதந்திரம் விரும்பிடும் திருப்தி இல்லாதவர்களாகவும் காட்டி .,குடும்ப உறவுகளை சிதைக்கும் முயற்சியாகவே இப்படம் பெரும்பாலான காட்சியமைப்புகளில் சித்தரிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

பைனல்” பன்ச் ” : ஆக மொத்தத்தில் ., “மகளிர் மட்டும்’ – ஒரு வேளை, ‘மகளிர் மட்டும் …
பார்க்கலாம் ! ரசிக்கலாம் ! “




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!