பாண்டவர்கள் திரவுபதியை மணந்து கொண்டு வாழ்வதை அறிந்த திருதராஷ்டிரன், காண்டவபிரஸ்தம் என்னும் நிலப்பரப்பை அளித்து சுதந்திரமாக ஆட்சி செய்ய அனுமதித்தான்.
உண்மையில் காண்டவபிரஸ்தம் ஒரு களர்நிலம். அங்கே நாட்டை உருவாக்குவது என்பது அசாத்தியமானது. ஆனால், கிருஷ்ணனின் உதவியுடன், மயன், விஸ்வகர்மா ஆகியவர்களையும் சேர்த்துக் கொண்டு இந்திரலோகத்துக்கு இணையாக இந்திரபிரஸ்தம் என்னும் நகரை நிர்மாணித்தனர்.
“”அற்புதமான மாடமாளிகைகள், தேரோடும் வீதிகள், உயர்ந்த விருட்சங்கள், தடாகங்கள், குளங்கள், அதில் அன்னம் முதலிய பறவைகள், நகரைச் சுற்றிலும் ஓடும் நந்தினி ஆறு’ என அந்த நகரின் எழிலோடு கவுரவர்களின் ஹஸ்தினாபுரம் கூட தோற்றுப் போனது.
தர்மருடைய தலைமையில் மக்களும் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். இந்நிலையில் நாரதர், பாண்டவர்கள் ஐவரும் திரவுபதியுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்திட “சுந்தோபசுந்தர்’ என்னும் இரட்டை அசுரர்களின் கதையைக் கூறினார்.
இவர்கள் அபூர்வமான இரட்டையர்கள்!
இருவரும் தங்களுக்கென தனிப்பெயர் வைத்துக் கொள்ளாமல் ஒரு பெயராலேயே வழங்கும் விதத்தில் ஒற்றுமையுடன் இருந்து வந்தனர். ஆனால், அவர்களே திலோத்தமையின் அழகில் ஈடுபட்டு, தங்களுக்குள் பகைமை கொண்டனர். ஒருவரோடு ஒருவர் மோதிக் கொண்டு மடிந்தே போயினர்.
ஒரு பெண்ணின் அழகு இப்படி ஒன்று பட்டவர்களையே கொன்றிருக்கிறது என்பதை நாரதர் கூறி பாண்டவர்கள் திரவுபதியை மையமாக வைத்து சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது என்று உபதேசம் செய்தார்.
அதைத் தொடர்ந்து பாண்டவர்கள் ஐவரும் தர்மரின் தலைமையில் திரவுபதி வரையில் ஒன்றுபட்ட கணவர்களாக திகழ ஒரு நல்லவழியை தங்களுக்குள் கண்டறிந்தனர். அதன்படி பாண்டவர்கள் ஒவ்வொருவரோடும் திரவுபதி ஓராண்டு வாழ வேண்டும். ஒருவரோடு அவள் வாழும் போது மற்ற நால்வர் அவர்கள் இருவரையும் பார்க்கவோ, பேசவோ கூடாது. ராஜ்ய கடமைகளை ஐவரும் ஒன்றுபட்டு நிறைவேற்றலாம். இந்த கட்டுப்பாட்டை எந்த காரணம் கொண்டு மீறினாலும், மீறியவர் ஒரு வருட காலம் வனவாசம் சென்று விட வேண்டும் – என்று தங்களுக்குள்ளேயே ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கி அதை பின்பற்றும் சத்யபிரமாணமும் செய்து கொண்டனர்.
அவள் ஐவரை அடைந்த நிலையிலும் அவரவர்களிடமும் அவள் கட்டுப்பாட்டோடும், கற்பு நெறி தவறாமலும் திகழ்ந்திடக் காரணம் யோனி வழி வந்தவளாக அவள் இல்லாது, அக்னியில் உடம்பெடுத்த காரணத்தால் ஐவருக்கு பத்தினியாக இருந்த போதும் கற்புநிலை தவறாமல் இருந்தாள்.
இப்படி வாழ்ந்த காலத்தில் பாண்டவர்கள் விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டிற்கு ஒரு சோதனை ஏற்பட்டது.
காண்டவபிரஸ்தத்தில் பிராமணர் ஒருவரின் பூஜைக்குரிய பசுக்களை சில கயவர்கள் திருடிச் சென்று விட, அவர் பாண்டவர்களின் அரசவைக்கு வந்து கண்ணீர் விட்டார். இந்நிலையில் அர்ஜூனன் அந்த கயவர்களைப் பிடிக்க சபதம் செய்து காண்டீபத்தோடு புறப்பட்டான். சில நாட்களிலேயே அந்த கயவர்களைப் பிடித்து பசுக்களை மீட்டு வந்து ஒப்படைத்தான். பின் அந்த கயவர்களுக்கு தண்டனை வழங்கும் நேரம் வந்தபோது, அதை தர்மர் செய்வதே முறை என்று எண்ணி, கட்டுப்பாட்டை மறந்து அவரைத் தேடிச் சென்றான். காண்டவபிரஸ்த அரண்மனையின் ஒரு குறிப்பிட்ட பாகத்தில் தர்மர் திரவுபதியோடு இருந்தார். அப்போது அவர்கள் இருவரையும் ஒருசேரப் பார்த்து நடந்ததைக் கூறினான்.
தர்மரும் கயவர்களுக்குத் தண்டனை அளித்தார்.
அப்போது அர்ஜூனன்,””அண்ணா! நானும் தவறு செய்து விட்டவனே! நாம் விதித்துக் கொண்ட கட்டுப்பாட்டை நான் மீறி விட்டேன். எனவே, எனக்கு நானே தண்டனை அளித்துக் கொள்வதே சரி”
– என்றவனாக வனவாசமாக காட்டுக்குப் புறப்பட்டான்.
தர்மரும் மற்றவர்களும் கண்ணீரோடு விடை தந்தனர்.
அர்ஜூனனின் வனவாச பர்வம் தொடங்கியது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1