Serial Stories

நந்தனின் மீரா-16

16

சிக்கிய வார்த்தைகளை சிரமமாய் கோர்த்து ,
வெள்ளை விழி சிவப்பாக்கி
நாக்கை துருத்தி …ஒற்றை விரலாட்டி
முறைப்பென முயல்கிறாய் ,
ஏனிந்த குழந்தை குறுவாளெடுக்கிறது…?
விழிக்கிறேன் நான் ….

கன்னத்திலிருந்து தன் இதழ்களை எடுத்துக்கொண்டவள் கணவனின் மார்பில் முகம் புதைத்தாள் .

ஆழ்ந்து இழுத்து அவன் வாசனையை தன்னுள் நிரப்பிக்கொண்டவள் ” என் புருசன் …” என்றாள் .குரல் பெருமிதத்தில் கரகரத்து நெகிழ்ந்தது .தனது அணைப்பை மேலும் இறுக்கிக் கொண்டபோதுதான் மீரா அதை உணர்ந்தாள் .

இவ்வளவு நேரத்திற்கு அவளுடன் அணைப்பில் ஒன்றி குழையாமல் நந்தகுமாரின் உடல் இறுகி விரைத்திருந்தது .கணவனின் விருப்பமற்ற நிலையை உணர்ந்தவள் ..சிறு அவமானம் தோன்ற அவனை விட்டு விலக முயன்றபோது அவள் தலையை மென்மையாக வருடியவன் …

” அக்கா புறப்பட்டுவிட்டதாக சொன்னார்கள் மீரா .உடனே வந்துவிடுவார்கள் .அம்மா , அப்பா , மச்சான்  அடுத்தடுத்து வந்து விடுவார்கள் . இரவு நிறைய சடங்குகள் இருக்கிறதாமே .அதற்குள் நீ வீட்டை கொஞ்சம் ஒதுக்கி வைக்கிறாயா …? ” என்றான் .

ஒரு கணவனாக இல்லை …திவ்யாவின் தாய்மாமாவாக இருந்தது அவனது பேச்சு .உதட்டை கடித்து தன்னை அடக்கிக்கொண்ட மீரா அவனிடமிருந்து விலகிக்கொண்டு ….

” சாரி …” என்றாள் .

” எதற்கு சாரி …அதற்கெல்லாம் அவசியமில்லை …நான் போய் கடையை பூட்டிவிட்டு வருகிறேன் .நீ வேலையைப்பார் ….” அவள் கன்னத்தில் தட்டிவிட்டு போய்விட்டான் .

கவலை எதற்கு …அவன்தான் தன் நிலையை தெளிவாக சொல்லியிருக்கிறானே ….என்று நினைத்து …நினைத்து தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டபோதும் …கணவனின் இந்த ஒட்டாத தன்மை மீராவை மிகவும் வருத்தப்படுத்தவே செய்தது .

” மீரா …திவ்யாவை எங்கே …? ” பரபரத்தபடி வந்த பிரவீணாவிடம் முதன்முதலாக தன் மகளை பெண்ணாக மாற்றிய இயற்கைக்கான பயத்துடன் கூடிய தடுமாற்றம் இருந்தது .

” எதற்கண்ணி இந்த டென்ஷன் …? அவளுக்கு எல்லா விபரமும் சொல்லிவிட்டேன் .சாப்பாடும் கொடுத்து தூங்கவும் வைத்துவிட்டேன் .போய் பாருங்கள் …” என்றாள் மீரா .

உள்ளே போய் உறங்கும் மகளை பார்த்து விட்டு வந்த பிரவீணா ” ரொம்ப நன்றி மீரா .நீ பொறுப்பாக எல்லாவற்றையும் பார்த்துவிட்டாய் .நானாக இருந்தால் இந்த நேரம் நிச்சயம் தடுமாறி இருப்பேன் .நானும் பயந்து குழந்தையையும் பயமுறுத்தியிருப்பேன் …” என்றாள் .

நம்நாட்டில் நிறைய பெண்களின் நிலைமை இதுதான் .தான் அனுபவித்ததுதான் ….ஆனாலும் தங்கள் பிள்ளைக்கென்று வரும்போது குழம்பிவிடுகிறார்கள் .செய்வதறியாது குழந்தையாய் மாறி விழித்துக்கொண்டு நிற்கிறார்கள் .

” நானா …? நான் இல்லை அண்ணி .அழுது கொண்டிருந்த பிள்ளையை தேற்றி அவளுக்கு ஆறுதல் சொல்லி அந்த வலியிலிருந்து மீட்டு வந்து …என்று எல்லாம் செய்தது உங்கள் தம்பிதான் அண்ணி …” மீராவின் குரலில் கணவனுக்கான பெருமை இருந்தது .

” ஆமாம் நந்து எப்பவும் அப்படித்தான் .பெண்களை அவர்களின் வேதனைகளை புரிந்துகொள்வான் .சின்ன பிள்ளையிலிருந்தே எனக்கும் , மாளவிகாவிற்கும் எல்லாவித உதவிகளையும் நாங்கள் கேட்க கூசிக்கொண்டு இருக்கும் போதே அவனாக உணர்ந்தே செய்வான் ….” மனைவியின் பெருமை இப்போது அக்காவினுடையதாயிருந்தது .




” நான் நிறைய தடவை நினைப்பேன் மீரா .இவனுக்கு மனைவியாக வரும் பெண்ணும் மகளாக பிறக்கும் பெண்ணும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்று ….”

பிரவீணாவின் இந்த சொற்கள் மீராவை ஏதோ ஒரு வகையில் பாதிக்க அவள் மௌனமானாள் .

அந்த மௌனத்தை உணர்ந்து கொண்ட பிரவீணா அவள் கைகளை பற்றிக்கொண்டு ” நந்து ஒரு வைரம் மீரா .எந்த அளவு கடினமானவனோ அந்த அளவு மென்மையானவன் .அமைதியான ஓடையாய் ஓடிக்கொண்டிருக்கும் அவன் அன்பு பிரவாகமெடுத்துவிட்டால் அந்த வேகத்தை நம்மால் தாங்கமுடியாது ….அன்பால் கொல்லுவதாக சொல்வார்களே …அது இவனுக்கு அப்படியே பொருந்தும் …” என்றாள் .

” ஐயோ …என்ன அண்ணி இது …வேகம் ….கொல்வது …என்று ஏதேதோ சொல்லி பயமுறுத்துகிறீர்களே ….” கேலி போல் சொல்லி சிரித்தாள் .

அப்போது பரவசத்துடன் சுந்தரி வந்தாள் .

” அப்பனே முருகா , தாங்காத மனத்துயரத்துடன் இன்று உன்னை பார்க்க வந்தேன் .அதற்கு எனக்கு இன்று ஒரு நல்ல செய்தி சொல்லிவிட்டாய் …”தூங்கிய பேத்தியை பார்த்துவிட்டு வந்தவள்  போய்வந்த கோவில் தெய்வத்திற்கு நன்றி கூறினாள் .

தன் மாமியாரை  போய் பார்த்து சடங்கு சம்பிரதாயங்களை கேட்டுக்கொண்டாள் .பிறகு மருமகளுக்கு செய்ய வேண்டிய வேலைக்கான உத்தரவுகளை சொல்ல தொடங்கினாள் .

தூங்கி எழுந்த திவ்யாவை கூட்டிக்கொண்டு  பாட்டியை
போய் பார்த்தாள் பிரவீணா . பெரிய பெண்ணாகி விட்ட கொள்ளு பேத்திக்கான  பத்திரங்களையும் ,பாதுகாப்பையும் விளக்கி சொன்னார் பாட்டி .

இரவு தலைக்கு தண்ணீர் ஊற்றுவதற்கான சம்பிரதாயங்களை விளக்கினார். சுந்தரி அக்கம் , பக்கத்தினரை விபரம் சொல்லி அழைத்தாள் .இரவு சாப்பாட்டிற்கு பக்கத்து ஹோட்டலில் சொல்லப்பட்டது .மாளவிகா கணவன் குழந்தையுடன் வந்தாள் .படபடவென திவ்யாவிடம் அவள் உடல் நிலையை விசாரித்துவிட்டு தன்னால் இயன்ற ஆலோசனைகளை சொல்ல ஆரம்பித்தாள் .




குருநாதன் கண்கள் கலங்க பேத்தியை ஆசீர்வதித்தார்.
” ஹேய் குட்டி …டேக் கேர் ….” என்றான் சசிகுமார் .

பிரவீணாவும் , நந்தகுமாரும் திவ்யாவிற்கான புது உடைகளுக்காக கடைக்கு போக , சுந்தரியும் , சசிகுமாரும் சீர்தட்டில் அடுக்க சாமான்கள் வாங்க போக , குருநாதன் போட்டோ, வீடியோ ..என சொல்ல போக ….ஒரு மணிநேரத்தில் வீடு ஒரு விசேஷ தினத்திற்கான சுவடோடு கலகலத்தது .

மாளவிகா திவ்யாவின் அருகே அமர்ந்து வளவளத்துக் கொண்டிருக்க , வீட்டை ஒதுக்கி வரும் விருந்தினருக்கேற்றாற் போல் மாற்றி அமைத்துக் கொண்டிருந்தாள் மீரா .

வீடு முழுவதும் கழுவி தள்ளி , சோபாக்களை ஓரம் ஒதுக்கி , கிணற்றடியை ஒதுக்கி வைத்து …வாசலில் அழகாக ரங்கோலி வரைந்து  என வியர்க்க விறுவிறுக்க முகம் கழுவ நேரமின்றி  விருந்தினர்கள் வரும்வரை வேலை இருந்து கொண்டே இருந்தது மீராவிற்கு .

ஹோட்டலில் சாப்பிட சொன்ன சாமான்களோடு அவித்த முட்டை ஒன்றை ஒவ்வொரு இலையிலும் வைக்கலாமென கடைசி நேரம் யோசித்து முட்டைகளை அவித்து வைக்கும்படி மீராவிடம் கூறிவிட்டு சென்றிருந்தாள் சுந்தரி .

வாசல் கோலத்தை முடித்துவிட்டு அடுப்பு வேலைக்காக மீரா அவசரமாக உள்ளே செல்ல திரும்பிய போது …சர்ரென சடன் பிரேக்குடன் பைக்கில் வந்து நின்றான் குமரேசன் .

மகளின் நல்ல செய்திக்கான சந்தோசத்தை அவன் முகத்தில் எதிர்பார்த்து நிமிர்ந்த மீரா ,அதில் தெரிந்த கோபத்தில் திகைத்தாள் .

” பிரவீணாவை எங்கே …? கூப்பிடு அவளை ….”

” அண்ணி கடைக்கு போயிருக்காங்க .உள்ளே வாங்க அண்ணா .திவ்யா உள்ளே இருக்கா …”

” நீங்க எல்லாரும் மனசில் என்ன நினைச்சிட்டு இருக்கீங்க …? என் பொண்ணுக்கு ஒரு நல்லது நடக்கறப்ப நீங்க இங்கே கூட்டி வச்சிக்கிட்டீங்கன்னா என்ன அர்த்தம் ..? “

” அதனால் என்ன அண்ணா …? இது உங்கள் வீடில்லையா …? நல்ல காரியம் எங்கு நடந்தால் என்ன …?வீட்ல இப்போ எல்லோரும் வெளியே போயிருக்காங்க . நீங்க உள்ளே வாங்க பேசலாம் …”

” ஓஹோ …மகளை உள்ளே தனியா விட்டுட்டு அம்மா ஊர் சுத்த போயிட்டாளா …? “

மீராவிற்கு வெறுத்து போனது .

” என்ன அண்ணா …நாங்கெல்லாம் இருக்கோமே .நீங்க முதல்ல உள்ளே வாங்களேன் …” அக்கம் பக்கத்தினர் இந்த சத்தத்திற்கு வந்துவிடுவார்களோ என்ற கவலை அவளுக்கு .

” இல்லை நான் வரவில்லை .என் மகளை வரச்சொல் நான் அவளை கூட்டிக்கொண்டு போகிறேன் ….”

ஆணித்தரமாக குமரேசன் பேச …மீரா அதிர்ந்து நின்றாள் .




What’s your Reaction?
+1
18
+1
25
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
14 days ago

Nice

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!