நன்கு படிக்கும் மாணவர்கள் கூட தேர்வு நேரங்களில் சரியாக படித்ததை எழுத முடியாமல் திணறும் நிலை உள்ளது. இது மாணவர்களின் நினைவாற்றல் பிரச்சினை. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நமது கல்வி நிபுணர்கள் சில டிப்ஸ்களைத் தருகின்றனர். ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலமும், மூளை பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலமும், மாணவர்கள் விரிவான அறிவாற்றலை, நினைவாற்றலையும் பெற முடியும் என்று கல்வியாளர்கள் டிப்ஸ்கள் தருகின்றனர்.
பள்ளிக் கூடங்களில் பாடங்களை ஒழுங்காகக் கவனித்து படிக்கும் மாணவர்கள் சில நேரங்களில் தேர்வுகளில் சரியாக எழுத முடியாமல் போய்விடுகிறது. ஆசிரியர்களுடனான தொடர்பு குறைதல், அதிக அளவில் ஆன்லைன் பயன்பாடு போன்ற காரணிகளால் மாணவர்களின் நினைவு திறன் பாதிக்கப்படுகிறது. சில மாணவர்கள், நான் நன்றாகத்தான் படித்தேன். சிறந்த முறையில் பயின்றேன். ஆனால் தேர்வு நேரங்களில் தேர்வு எழுதும் போது பதில்கள், விளக்கங்கள் மறந்துவிடுகின்றன. அதனால் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற முடியாமல் போய் பிரச்சினை ஏற்படுகின்றது என்று தெரிவிக்கின்றனர்.
தியானம், புதிர்கள், மூளைக்கு ஊக்கமளிக்கும் விளையாட்டுகள், உடல் பயிற்சி, புதிய திறன்கள் அல்லது மொழிகளைக் கற்றல், காட்சிப்படுத்தல் நுட்பங்கள், மைண்ட் மேப்பிங் மற்றும் மூளைச்சலவை செய்தல், இசைச் செயல்பாடுகள், வாசிப்பு மற்றும் எழுதுதல், மற்றும் நடைமுறைகளில் புதுமையை அறிமுகப்படுத்துதல் போன்ற மூளைப் பயிற்சிகளில் ஈடுபடுவது மூளையின் ஆற்றலை கணிசமாக அதிகரிக்கவும், நினைவாற்றலை பெருக்கவும் முடியும் என்பது நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலமும், மூளை பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலமும், மாணவர்கள் விரிவான அறிவாற்றலை, நினைவாற்றலையும் பெற முடியும்.
படித்ததை மறக்காமல் இருக்க என்ன செய்யலாம்…. நீங்கள் படிக்கும் பாடங்களை மிகவும் ஆர்வத்துடனும் விருப்பத்துடனும், படித்தால் எப்போதுமே மறதி ஏற்படாது. நமது நினைவாற்றலில் அது நிச்சயம் இருக்கும். நாம் படித்ததை சீராக வரிசைப்படுத்தி வைத்திருந்தால் அவற்றை நாம் தேர்வின்போது நினைவுக்கு கொண்டு வர முடியும். நினைவுகளை பதிவுகளாக மாற்றி ஒழுங்காக வரிசைப்படுத்தி வைக்க வேண்டும்.
அப்படியானால் அது நீண்டகாலம் வரை நம் நினைவில் இருக்கும். நினைவு பதிவுகளை வரிசைப்படுத்தியவர்கள் சிறந்த நினைவாற்றல் மிக்கவர்களாக தமது வாழ்க்கையில் ஜொலிப்பார்கள். மிகக் குறைந்த வயதில் உலக சாதனை புரிந்தவர்கள் சிறப்பான நினைவாற்றல் உள்ளவர்கள் என்பதை நீங்கள் மறக்கக்கூடாது. தேர்வை சிறப்பாக எழுத, நினைவுத்திறன் என்பது மிக மிக அவசியமானது. மனப்பாடம் செய்து எழுதும் அம்சமாக நமது தேர்வுகள் இருப்பதால், படித்தவை அனைத்தும் நினைவில் இருந்தால் மட்டுமே, நாம் முதல் மதிப்பெண்களைப் பெற முடியும். நினைவுத்திறன், சிலருக்கு, இயல்பாகவே அதிகம் இருக்கும். எனவே, அவர்களுக்கு எந்தப் பிரச்சினையுமில்லை. நினைவுத்திறனை அதிகரிக்க, தியானம் மற்றும் யோகா போன்றவை உதவுகின்றன.
படித்ததை, திரும்ப திரும்ப படித்தாலே, அது மறக்காது நினைவில் நிற்கும் என்றும் சில ஆலோசகர்கள் வலியுறுத்துகிறார்கள். மேலும், படித்ததை எழுதிப் பாருங்கள் என்ற ஆலோசனையும் முக்கியமானது. அதேசமயம், அனைத்தையுமே எழுதிப் பார்த்துக்கொண்டிருக்கவும் முடியாது. ஒரு பாடத்தை, வெறுமனே மொட்டையாக மனப்பாடம் செய்யாமல், அதை முடிந்தளவிற்கு புரிந்து, வேறு அம்சங்களோடு சம்பந்தப்படுத்தி மனப்பாடம் செய்தால், அது எளிதில் மறக்காது.
தினசரி செயல்கள், தினசரி படிக்கும் பாடங்களை அன்றைய இரவில் அசை போட்டு பார்க்கவேண்டும். காலை 8 மணிக்கு என்ன சாப்பிட்டோம். 9 மணிக்கு என்ன செய்தோம். காலை 10 மணிக்கு பள்ளியில் ஆசிரியர் என்ன தெரிவித்தார்.
அவர் இன்று புதிதாக நடத்திய பாடம் குறித்து ஒரு படம் வரைந்து காண்பித்தாரே. அதில் இருந்த பாகங்கள் என்ன, மாலையில் என்ன விளையாட்டு விளையாடினோம் என்பதை ஒரு அட்டவணை போல் தயார் செய்யவேண்டும். இதை மனதளவிலேயே செய்யலாம். பாடங்களை வேண்டுமானால் எழுதிப் பார்க்கலாம். நாம் ஒரு தடவை எழுதிப் பார்த்த விஷயங்கள் என்றென்றும் மறக்காது. நீங்கள் செய்த செயல்களை தூங்குவதற்கு முன் வரிசையாக நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும்.
இந்த நினைவாற்றல் பயிற்சியை ஒருமாத காலம் செய்தாலே போதும். உங்கள் நினைவாற்றல் நம்ப முடியாத அளவுக்கு வளர்ந்து இருப்பதை நீங்கள் உணர முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த பயிற்சி முறை உங்கள் நினைவாற்றலை மட்டுமல்லாமல் உங்களது நேர மேலாண்மையையும் அதிகரிக்கும் என்பது நிச்சயம். பள்ளிப் பாடங்களை நமக்கு புரியும் வகையில் பகுதி வாரியாக பிரித்து படித்து நினைவில் கொள்ளலாம். இதனால் நமது நினைவில் அது நிச்சயம் நிற்கும்.
பகுதி பகுதியாக பிரித்து வைத்து சிறு பகுதியாக படிப்பதால் மறந்து விடாமல் அனைத்தையும் தேர்வில் எழுத முடியும். படித்த பாடங்களை நண்பர்களிடம் பகிர்வது, சொல்வது மிகவும் சிறந்த நினைவாற்றல் பயிற்சியாக இருக்கும். இதனால் நினைவில் உள்ளது வாய்மொழியாக வெளிப்படும் போது ஐந்து முறை படித்ததற்கு சமம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பாடங்களை புரிந்து கொண்டு படிக்கும் முறையை பழகவேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் சில உணவுகள், பழங்களை எடுத்துக் கொள்வதாலும் நமது நினைவாற்றல் அதிகரிக்கும். ஞாபக சக்தி குறைபாடுகளுக்கு, சரியான உணவுகளை சாப்பிடாததும் ஒரு காரணம். எனவே ஞாபக சக்தியை அதிகரிக்கவும், மூளையை சுறுசுறுப்புடனும் வைத்துக் கொள்ள உதவும் உணவு வகைகளை சரியாக சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, உடலையும் ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம். மாணவர்களினின் நினைவாற்றலும் அதிகரிக்கும்.
வாழைப்பழம்: நேந்திரம் வாழைப்பழம் சாப்பிடுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும். நேந்திரம் பழம் சாப்பிடுவதால் மூளை சுறுசுறுப்பாக வேலை செய்ய உதவுகிறது. தொடர்ந்து நேந்திரம் பழம் சாப்பிட்டு வந்தால் மூளையின் செல்கள் பலமடைந்து நினைவாற்றல் பெருகும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக படிக்கும் மாணவர்கள் தொடர்ந்து நேந்திரம் பழம் சாப்பிட்டு வந்தால் அவர்களுடைய நினைவு திறன் அதிகரித்து மூளை சுறுசுறுப்பாக வேலை செய்யும் என்று தெரிவிக்கின்றனர்.
பால் பொருள்கள்: பால் உணவு பொருள்களில் அதிகமாக புரோட்டீன், கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் டி ஆகியவை உள்ளது. இவை நரம்புத்தசை மண்டலத்தை நல்ல முறையில் இயக்குவதோடு மட்டுமல்லாமல் மூளை செல்களை நன்கு செயல்பட வைக்கிறது.மேலும் வளரும் குழந்தைகளுக்கு பால் உணவு பொருள்கள் நல்ல ஒரு உடல் வளர்ச்சியைத் தருவதோடு, மூளையையும் சுறுசுறுப்பாக வைக்கிறது. இதனால் மாணவர்கள் சுறுசுறுப்பாக செயல்பட்டு நல்ல நினைவுத் திறனுடன் செயலாற்ற முடியும்.
கோதுமை: ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ள உணவுகளான முழு கோதுமை தயாரிப்புகள், பழுப்பு அரிசி, ஓட்ஸ், சோயா பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், முட்டை, பால், தயிர், சீஸ், நட்ஸ், காய்கறி எண்ணெய்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது நல்ல நினைவாற்றலும் வழிவகுக்கும்.
வல்லாரை கீரை: வாரம் ஒருமுறை வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்து கொள்ளவதால் நல்ல பலன் கிடைக்கும். இக்கீரையை நிழலில் காயவைத்துப் பொடியாக்கி, தினமும் அரை தேக்கரண்டியைப் பாலுடன் சேர்த்து அருந்தி வந்தால் மாணவர்கள் நல்ல நினைவாற்றலுடன், சுறுசுறுப்பாகத் திகழ முடியும். வல்லாரை கீரை கிடைக்காதவர்கள் வல்லாரை மாத்திரைகளை பயன்படுத்தலாம்.
மிளகு, சீரகம்: சமைக்கும் போது மிளகு சீரகம், ஆகியவை கண்டிப்பாக சேர்த்து கொள்ள வேண்டும். இவை மூளையில் சோர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இவைதவிர, மூலிகை மருந்துகள் உள்ளிட்ட சிலவகை மருந்துகளும் பரிந்துரை செய்யப்படுகின்றன.
முட்டை வகை உணவுகள்: மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன் சத்து. இது முட்டையில் அதிகம் இருக்கிறது. மேலும் இதை அதிகம் உண்பதால், ஞாபக சக்தி அதிகரிப்பதோடு, மூளையானது களைப்படையாமல் சுறுசுறுப்பாக இருக்கும் என்பது நிச்சயம்.
பாதாம் சாப்பிடுதல்: தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீரில் ஊறவைத்து காலையில் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கி பருப்பை அரைத்து சாப்பிட வேண்டும். இதனால் நினைவாற்றல், அதிகரிக்கும். பச்சை காய்கறிகள் : பொதுவாக கீரைகள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும். இவை ஞாபக சக்தியை அதிகரிக்கும் பொருள் இருப்பதோடு, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் இருப்பதால், உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும். மேலும் நினைவாற்றல் பல்கிப் பெருகும். முறையான உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் மனக் கூர்மையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடல் செயல்பாடு மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
படித்தல் மற்றும் எழுதுதல் வழக்கமான வாசிப்பு மற்றும் எழுதும் பயிற்சிகள் மூளையின் மொழி மையங்களைத் தூண்டுகிறது. சொல்லகராதி, புரிந்துகொள்ளுதல் மற்றும் பகுப்பாய்வு திறன்களை இவை மேம்படுத்துகிறது. பல்வேறு வகைகளைப் படிப்பதன் மூலமோ அல்லது ஆக்கப்பூர்வமான எழுத்தைப் பயிற்சி செய்வதன் மூலமோ மாணவர்கள் தங்களைத் தாங்களே மதிப்பிட்டுக் கொள்ளலாம்.
தினசரி வழக்கங்களில் புதுமையை அறிமுகப்படுத்துவது மூளையின் பல்வேறு பகுதிகளைச் செயல்படுத்தத் தூண்டும். புதிய செயல்பாடுகளை முயற்சிப்பது அல்லது வெவ்வேறு கோணங்களில் பணிகளை அணுகுவது படைப்பாற்றல் மற்றும் அறிவாற்றல் நெகிழ்வுத்தன்மையைத் தூண்டுவதோடு, ஒட்டுமொத்த மூளைத்திறனை அதிகரிக்கும். இந்த மூளைப் பயிற்சிகளை தினசரி நடைமுறைகளில் சேர்ப்பதன் மூலம் மூளைத்திறனை கணிசமாக அதிகரிக்கலாம்.
நினைவாற்றல், அறிவாற்றல் திறன்களை மேம்படுத்தலாம். இதனால் சுமாராகப் படிக்கும் மாணவர்களின் ஒட்டுமொத்த கல்வி செயல்திறனையும் மேம்படுத்தலாம். இந்த பயிற்சிகளில் நிலைத்தன்மையும் பல்வேறு வகைகளும் அவற்றின் செயல்திறனை அதிகரிக்க முக்கியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
விரிவான அறிவாற்றல் நன்மைகளை அனுபவிப்பதற்காக மாணவர்கள் இந்த நடவடிக்கைகளின் கலவையை தங்கள் அட்டவணையில் ஒருங்கிணைத்து அதன்படி செயல்பட வேண்டும். மேலும், சரியான ஊட்டச்சத்து, வழக்கமான தூக்கம் மற்றும் மன அழுத்த மேலாண்மை ஆகியவற்றின் மூலம் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் ஆரோக்கியமாக இருப்பது இந்த மூளை பயிற்சிகளை நிறைவு செய்ய செய்கிறது.
ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலமும், மாணவர்கள் தங்கள் மனதின் முழு திறனையும் பயன்படுத்தி, மூளைத்திறனை, ஞாபகத்திறனை அதிகரிக்கவும், கல்வியில் வெற்றியை அடையவும் முடியும் என்று கல்வி நிபுணர்கள் அடித்துச் சொல்கின்றனர். எனவே, மாணவச் செல்வங்களே நீங்கள் விதிமுறைகளைப் பின்பற்றி வாழ்வில் சிறப்பதற்கு வாழ்த்துக்கள்….!!
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1