ஊரில் உள்ள மக்களை காக்கும் தெய்வங்களை வணங்கும் வழக்கத்திற்கு ஊர்த்தெய்வ வழிபாடு என்று பெயர். பெரும்பாலும் காவல் தெய்வங்களே இந்த ஊர்த்தெய்வங்களாக வணங்கப்படுகிறார்கள்.
ரோதை முனி என்பது இலங்கையில் மலையகத் தேயிலைத் தோட்டங்களில் வழிபடப்படும் சிறு தெய்வமாகும். தேயிலைத் தோட்டங்களில் பணியாற்றும் தமிழத் தொழிலாளர்களால் நீண்டகாலமாக இச்சிறுதெய்வம் வழிபடப்பட்டு வருகிறது.
ரோதை என்பது சில்லு என்ற பொருளில் தமிழில் வழங்கும் ஒரு திசைச் சொல்லாகும். பிரித்தானியக் குடியேற்றக் காலத்தில் தேயிலைத் தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்பட்ட அரைக்கும் பொறிகளும் ஏனைய பொறிகளும் பாதுகாப்பற்றனவாக இருந்தன. இதனால் தொழிற்சாலைத் தொழிலாளர்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வந்தனர். இவ்வாறான விபத்துக்களைத் தவிர்க்கும் முகமாக, தொழிற்சாலையில் தொழிலைத் தொடங்குவதற்கு முன்னர், பொறிகளின் சில்லுகளையும் வெட்டும் சுழற்பொறிகளையும் உருவகப்படுத்தும் ரோதை முனியை வழிபடும் வழக்கம் ஏற்பட்டது.
விடுமுறைக்குப் பின்னர் தொழிற்சாலையைக் கழுவிச் சுத்தப்படுத்தி புதிதாகப் பணிகளைத் தொடங்குவதற்கு முன்னர் ரோதை முனிக்கு படையல் வைக்கும் வழக்கம் இருந்து வந்ததாக அறியப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1