gowri panchangam Sprituality Uncategorized

மகாபாரதக் கதைகள்/ பிதாமகரின் பெருமையைக் கூறிய கண்ணன்

அரசாட்சியை ஏற்ற தருமர், வியாசர், நாரதர், தேவ ரிஷிகள், தந்தை எம தர்மர், ஆகியோரின் ஆசியை பெற்றார். பின், நீல வண்ண கண்ணன் உறையும் இடம் சென்றார். தன் அவதாரத்தின் நோக்கத்தை முடித்த கண்ணன், அப்போது ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அது கண்டு வியந்த தருமர் “ மூவுலக நாயகனே…!!! உலக உயிர் அனைததும் உம்மை நோக்கி தியானம் செய்கையில், நீர் மட்டும் யாரை எண்ணி தியானிக்கிறீர்..? “ என வினவினார்.




Bheeshmar - Mahabharatham - மகாபாராதம்

தருமரை நோக்கி கிருஷ்ணர், தன் அடையாளமான மெல்லிய, சாந்தமான, என்றும் மாறாத புனகையுடன் “ யுதிஷ்டிரா! அம்பு படுக்கையில் இருக்கும் பீஷ்மர் என்னை நோக்கி தியானம் செய்துக் கொண்டிருக்கிறார். ஆகவே, எனது உள்ளமும் அவரிடம் சென்றிருந்தது. எவரது நாணொலிக் கேட்டு இந்திரனும் நடுங்குவானோ, அந்த பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.

முன்னொரு சமயம், மூன்று கன்னியர் பொருட்டு அரசர்கள் அனைவரையும் வீழ்த்தி வெற்றி கண்ட அந்தப் பீஷ்மரிடம் மனம் சென்றிருந்தது. தெய்வ மங்கை கங்கையின் மைந்தரும், வசிஷ்டரின் சீடருமான பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது. எவர் வேத வேதாங்கங்களையும் உணர்ந்தவரோ அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது. எவர் தேவகுருவிடம் அரச நீதியையும், பிரம புத்திரரான சனத்குமாரரிடம் ஆத்ம வித்தைகளையும், மார்க்கண்டேயரிடம் சந்நியாச தர்மத்தையும் அறிந்தவரோ, அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது.




எவர் தனது மரணத்தைத் தடுத்து நிறுத்தும் தவ மேன்மை மிக்கவரோ, எவர் புதல்வனின்றியும் புண்ணியம் பெறத் தக்கவரோ அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது. யுதிஷ்டிரா…!! அந்தப் பீஷ்மர் மறைந்தால் நல்லறங்களும் மறைந்து விடும். ஆகவே அவர் மரணம் அடைவதற்குள் அவரிடம் உள்ள ஞான நல்லறிவை அறிந்து கொள்வாயாக ” என்றார் கண்ணன்.

பீஷ்மப் பிதாமகரின் பெருமையைக் கண்ணன் வாயால் சொல்லக் கேட்ட தருமர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். சிறு வயது நினைவுகளும், பிதாமகர் பீஷ்மருடன் தானும் தன் தம்பிகளும் விளையாடி கழித்த நகழ்ச்சிகளும் அவரை வாட்டியது. மனம் பீஷ்மரின் பால் லயித்தது. அவரை வெல்ல தான் மேற்கொண்ட யுக்தி தருமரை மேலும் வாட்டியது. பகவானை நோக்கி “ வஞ்சனையால் அவரை வதைக்கச் செய்த நான் எந்த முகத்துடன் அவரைக் காண்பேன்…? “ என நா தழுதழுக்க வினவினார். கிருஷ்ணரோ பீஷ்மரின் பிறப்பு ரகசியத்தையும், சிகண்டிகையின் சபதத்தையும் மீண்டும் ஒருமுறை கூறி தருமரை சாந்தப்படுத்தினார். பின்னர், கண்ணனும், பாண்டவர்களும் பீஷ்மரைக் காணத் தேரேறிக் குருக்ஷேத்திரம் சென்றனர்.




அங்கே அம்பு படுக்கையில் கங்கை மைந்தன் பரந்தாமனின் நாமங்களை ஜபித்தவாறே அவர்களின் வருகைக்காக காத்திருந்தார். ஆம். பாண்டவர்களும் கிருஷ்ண பரமாத்வாவும் நிச்சயம் வருவார்கள் என்று அவர் யூகித்திருந்தார். பீஷ்மரின் மனதிற்குள் தன் செல்ல பேரன்களை மீண்டும் ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. முக்கியமாக தன்னை வீழ்த்தி வில்லுக்கு விஜயன் என்ற பெயரை அடைந்த அர்ஜுனனை. (இந்த தருணத்தில் அர்ஜுனனின் அம்புகளை தன் மார்பில் தாங்கிய போது பீஷ்மர் “ வாழ்த்துக்கள் அர்ஜுனா..!!!! உன் குருவிற்கு பெருமை சேர்த்து விட்டாய்..!! “ என்று வாழ்த்திய அவரின் குரலை நினைவு கூறுகிறேன். இந்த பகுதியை நான் குருக்ஷேத்திர பதிவில் குறிப்பிடும் போது என் கண்கள் குளமாக மாறியதையும் இங்கு நினைவில் கொள்கிறேன். பீஷ்மரால் மிகவும் ஈர்க்கப்பட்டவன் நான்.)




பீஷ்மர் – தமிழ் சிந்தனை

கங்கை மைந்தனுடன் நெஞ்சை உருக்கும் சந்திப்பு:

குருக்ஷேத்திரம் நோக்கிச் சென்றவர்கள் ஓகவதி என்னும் நதிக் கரையில், அம்பு படுக்கையில் மாலை நேர சூரியன் போல இருந்த பீஷ்மரை கண்டனர். கண்ணனும், பாண்டவர்களும், கிருபரும் சிறிது தூரத்திலேயே பீஷ்மரைக் கண்டதும் வாகனங்களிலிருந்து இறங்கி நடந்து அவரை நோக்கிச் சென்றனர்.
அன்று அர்ஜுனன் ஏற்படுத்திய நீர் ஊற்று மூலம் தாய் கங்கா தேவி அவரின் தாகத்தை தனித்து கொண்டிருந்தாள். சோர்வுடன் காணப்பட்டார் வில்லின் வேந்தன். அவரின் நிலை கண்ட பாண்டவர்கள் துயரத்தின் உச்சிக்கே சென்றனர். மதிப்பிற்குரிய பீஷ்மரை இந்த நிலையில் ஆழ்த்திவிட்டு நாம் நாட்டை ஆள்வதா..? இது தர்மத்திற்கும், நீதிக்கும், சத்தியத்திற்கும் செய்யும் துரோகம் அல்லவா? வேண்டாம் இனி இந்த ராஜ்ஜியம். பீஷ்மர் உயிர்த்தெழ பரந்தாமனை வேண்டினார்கள். எல்லாம் உயிராகவும், உயிர்களின் செயலாகவும், அந்த செயல்களின் பாவ புண்ணிய விளைவாகவும் இருக்கும் கிருஷ்ணனோ மீண்டும் ஒரு முறை தன் சாந்த சிரிப்பை வெளிப்படுத்தி, பாண்டவர்களை அமைதி காக்க வைத்தான். அணையும் தீபம் போல் இருந்த பீஷ்மரைப் பார்த்து கண்ணன் வருத்தத்தோடு சொல்லத் தொடங்கினார்.




“ அறிவின் சிகரமே…!!!அம்புகளால் தாக்கப்பட்ட உங்கள் உடம்பு வலியின்றி இருக்கிறதா? உமது அறிவு தெளிவாக உள்ளதா? உம் தந்தையாகிய சந்தனு கொடுத்த வரத்தால் உங்கள் மரணத்தைத் தள்ளிப் போடும் ஆற்றல் பெற்றுள்ளீர். நீர் அனைத்தும் அறிந்தவர். சத்தியத்திலும், தவத்திலும், தானத்திலும் தனுர் வேதத்திலும், அறம் பொருள் இன்பங்களை உணர்ந்த மேன்மையிலும், உம்மைப் போன்ற ஒருவரை நான் மூவுலகிலும் காணவில்லை. தேவாசுரர்கள் அனைவரையும் நீர் ஒருவரே தனியாக நின்று போரிட்டு வெல்ல வல்லமை படைத்தவர் நீர். எட்டு வசுக்களின் அம்சங்களும் ஒன்று சேர்ந்த ஒன்பதாம் வசு என உலகம் உம்மைப் போற்றுவதை நான் அறிவேன். பூமியில் உள்ள மனிதர்களில் உமக்கு ஒப்பான ஒரு மாமனிதன் யாரும் இல்லை. இதிகாச புராணங்களில் உள்ள தரும சாத்திரங்கள் அனைத்தும் உம் உள்ளத்தில் நிலைப் பெற்றுள்ளன. இவ்வுலகில் தோன்றும் சந்தேகம் அனைத்தையும் உம்மால் தான் போக்க முடியும். மனித குல மாணிக்கமே..!!! தருமரின் மனதில் உதித்த சோகத்தையும், சந்தேகத்தையும் நீங்களே விலக்க வேண்டும். உங்களால் மட்டுமே அது முடியும் ” என்று மூவுலகுக்கும் முதன்மையானவன் வேண்டினான்.

கண்ணனின் உரையைக் கேட்ட பீஷ்மர் கை கூப்பித் தொழுதார். மெல்லத் தலையை உயர்த்திச் சொன்னார் “ உலக உயிர்களின் பிறப்புக்கும், இறப்புக்கும் காரணமான நாயகரே…..!!! உம்மை நான் சரணடைந்தேன். உமது அருளால் உமது விசுவரூபத்தை நான் காணும் பேறு பெற்றேன். உமது திருமுடி ஆகாயத்தை அளாவியிருக்கிறது. உமது திருப்பாதங்கள் பூமியில் தங்கியிருக்கின்றன. திக்குகள் உமது கைகளாக விளங்குகின்றன. சூரியன் உமது கண் ஆவான். காயாம்பூ மேனி உடையவரே, மின்னல் போல் ஒளி வீசும் உமது மேனியைக் கண்டு வியப்படைகிறேன். தாமரைக்கண்ணனே….!! பக்தியுடன் உம்மைச் சரண் அடைந்த எனக்கு நற்கதியை அருள வேண்டும்’” எனத் துதிச் செய்தார்.




கண்ணபிரான், “ எம்மிடத்தில் உமக்கு மேலான பக்தி இருப்பதால் எனது விசுவரூபத்தைக் காட்டினேன். இன்று முதல் மேலும் 30 நாட்கள் நீங்கள் உயிருடன் இருக்கப் போகிறீர்கள். இந்த முப்பது நாட்களும் நூறு நாட்களுக்கு நிகரானவை. சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் (உத்தராயணம்) காலத்தை எதிர்ப்பார்க்கும் உம்மைத் தேவர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உமக்கு உயர்ந்த கதி கிடைக்கும். நீர் அழிவற்ற உலகத்தை அடைய போகிறீர் பீஷ்மரே…!! நீர் மேலுலகம் சென்றதும் இந்த உலகத்தில் உள்ள ஞானங்கள் எல்லாம் குறைந்து போகும். அதனால் யாவரும் தருமத்தை அறிந்துக் கொள்ள உம்மைச் சூழ்ந்து இருக்கின்றனர். தருமரின் சோகம் போக, அவர் சந்தேகம் அகல, சகல ஞானத்தையும் அவருக்கு உபதேசம் செய்வீராக. தருமர் உம்மிடம் பெறும் ஞானச் செல்வத்தை உலகுக்கு வாரி வழங்குவார்” என்று கூறினார்.

கண்ணன் கூறியதைக் கேட்ட பீஷ்மர் மகிழ்ந்தார். பின் கண்ணனை நோக்கி “கண்ணா….உமது சந்நிதானத்தில் நான் என்ன சொல்வேன் ? உமது வாக்கன்றோ வேத வாக்கு. என் அங்கமெல்லாம் அம்புகளால் துளைக்கப்பட்டு வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறேன். எனது உள்ளத்திலும் தெளிவு இல்லை. இந்நிலையில் தருமங்களை என்னால் எப்படி எடுத்துரைக்க முடியும்? மன்னிக்க வேண்டும். உம் எதிரே நின்று பேசும் ஆற்றல் வியாழ பகவானுக்குக்கூட கிடையாதே. எனவே வேதங்களுக்கு வேதமாக விளங்கும் நீரே எல்லாத் தருமங்களையும் யுதிஷ்டருக்கு அருளவேண்டும்” என உரைத்தார்.

அது கேட்டு கண்ணன் “ கௌரவர்களில் சிறந்தவரே…..உமது தகுதிக்கு ஏற்ப நீர் பேசினீர். அம்புகளால் தாக்கப்பட்டு வேதனைப்படுவதாக உரைத்தீர். இதோ நான் அருள் புரிகிறேன். உமது உடலில் உள்ள எரிச்சலும், சோர்வும், தளர்வும் உடனே நீங்கிவிடும். உம்மிடம் உள்ள மயக்கமும் தொலையும். இனி நீர் தெளிந்த சிந்தனையுடன் அறநெறிகளை தருமருக்கு எடுத்துரைக்கலாம். உமக்கு ஞானவழியையும் காட்டுகிறேன். “ என்றார்.

அப்போது கங்கை மைந்தனை வியாசர் முதலான மகரிஷிகள் துதித்தனர். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். வனம் தூய்மையாக காட்சி அளித்தது. எங்கும் சாந்தி நிலவியது. சூரியன் மறைந்தான். அனைவரும் “ நாளை வருகிறோம் ” என்று பீஷ்மரிடம் விடை பெற்று திரும்பினர்.




What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!