Serial Stories Uncategorized

கோகுலம் காலனி-15

15

அந்த வீட்டின் கதவிற்கு பெயின்ட் அடித்து மாமாங்கங்கள் கடந்திருக்கும் போலும் .என்ன வண்ணம் பூசியிருப்பார்களென  இதோ …அந்த வீட்டின் முன்புறம் சற்று மறைவாக நின்றபடி ஒரு மணி நேரமாக  வீட்டையே கண்காணித்துக் கொண்டிருந்த நந்தகுமார் , ராகவியால் கண்டுபிடிக்கவே முடியவில்லை .

” ப்ச் …எவ்வளவு நேரம்தான் இங்கே நிற்பது …? உள்ளே ஆள் இருக்கிறார்களென்று தெரிகிறதே .நான் நேராகவே போய் விசாரித்து விட்டு வந்து விடுகிறேன் …” வேகமாக உள்ளே போகப் போன ராகவியின் கையை இழுத்து மீண்டும் மரத்திற்கு பின் கொண்டு வந்தான் .நச்சென அவள் தலையில் கொட்டினான் .

” என்ன அவசரம் …? அதை அப்போதே நானே  செய்திருப்பேனே .எதற்கு இங்கே திருட்டுத்தனமாக ஒளிந்து நின்று கொண்டிருக்கிறேன் …? ” 

” யாருக்கு தெரியும் …அந்த மீனாட்சி தேவிக்காகவோ என்னவோ …? ” தன் மன எரிச்சலை குறும்பாக வெளிப்படுத்தியவளை கழுத்தை நெரிக்கலாமா எனப் பார்த்தான் நந்தகுமார் .

” என்ன முறைப்போ …? உங்களுக்குத்தானே அந்த மெய்யம்மை மகளை பற்றி கேட்கும் போதே கண் , காது , மூக்கு ,வாய் எல்லாவற்றிலும் பல்ப் எரிந்தது …” 

” ஏய் மெய்யம்மை வீட்டில் ஒரு யங் லேடி உண்டென்று எனக்கு தெரியும் .அது அவர்கள் மகளாக இருக்கலாமென்று ஒரு அனுமானத்தில் கேட்டேன் . அவர்கள் மகள் மீனாட்சி தேவிக்கு ஐம்பது வயதாகிவிட்டது …அந்த யங்லேடி அவர்கள் பேத்தி என்று அம்மா சொல்லித்தான் …இப்போது எதறகு முறைக்கிறாய் …? ” 

” இந்த வீட்டில் ஒரு யங் லேடி இருப்பது உங்களுக்கு எப்படி தெரியும் ? ” 

” அ….அது நாங்கள் ப்ரெண்ட்சாக இந்தப் பக்கம் நடந்து போகும் போது ….” 

” இந்த தெருவில் உங்களுக்கு என்ன வேலை ..? ” 

” ராகா இது அநியாயம் .சும்மா பொழுது போக்காக காலனி முழுவதும் சுத்துவோம் .அப்போது அங்கங்கே கண்ணில் பட்டாள் அந்த ரேகா …” 

” ஓஹோ …அப்போது உங்கள் கூடவே சுற்றிய என் அண்ணனும் அந்த ரேகாவை பார்த்திருக்கிறான் ” 

” கரெக்ட் ராகா .என்னைப் போலவே அவனும் ரேகாவை கவனித்திருக்கிறான் . அப்போதே அவனுக்கு அவள் மேல் ஒரு இதுவாகி …” பேசிக் கொண்டே போனவன் சட்டென நிறுத்தினான் .அவனது உடல் முழுவதும் எரிவது போலொரு உணர்வு உண்டாக …அவ்வுணர்வின் காரணம் ராகவியின் உஷ்ணப் பார்வையென தெரிந்தவன் தான் பேசிய வார்த்தைகளில் தப்புகளை தேடி உணர்ந்து அவஸ்தையுடன் எச்சில் விழுங்கினான் .




” வந்து …நான் சும்மா சாதாரணமாகத்தான் அவளை பார்ப்பேன் ராகா .உன் அண்ணன்தான் அவளை தப்பு தப்பாக பார்த்திருக்கிறான் பாரேன. …” உஷ்ண வளையத்திலிருந்து மீண்டு வர முயன்றான் .ஆனால் ஜ்வாலை அதிகமானது .

” இப்போது உள்ளே போய் ரேகாவின் பாட்டியிடமோ , அம்மாவிடமோ நேரடியாக பேச முடியாது ராகா .ரேகா அவர்களிடம் என்ன சொல்லி வைத்திருக்கிறாளோ …? நம்மை பற்றி ஜாக்கிரதை கூட சொல்லி வைத்திருக்கலாம் .நாம் அவர்கள் வீட்டில் விசாரித்தால் …தகவல் ரேகாவிற்கு போய் …அவர்கள் எச்சரிக்கையாகி …” எரிமலை மேல் ஏறி நின்று கொண்டிருந்த ராகவியை நடப்பிற்குள் இழுக்க முயன்றான் .

” இந்த ரேகாதான் அந்த அவள்னு உனக்கு ரொம்ப நிச்சயமாகி விட்டதோ …? ஒரு மணி நேரமாக என்னை இங்கே நிற்க வைத்து கழுத்தறுக்கிறாய் .சை இந்த இடத்தில் ஒரே எறும்பு .கால் முழுவதும் கடித்து விட்டது ” ராகவி காலை உதற லேசாக நுனிக்காலில் எம்பி குதிக்க , அவள் இடையை இரு கைகளால் அழுத்தி பற்றினான் நந்தகுமார்.

” ஜாக்கிரதை ராகா .விழுந்து விடாதே …” திடுமென தன் இடை யழுந்திய அவன் கைகளால் ராகவி தடுமாறி நிற்க  இரு கைகளால் அவள் இடையை பற்றி லேசாக தூக்கியவன் …” தூக்கிப் போட்டு பிடிக்கவா …? ” கிசுகிசுத்தான் .

தடுமாறி அவன் தோள்களை பற்றிக் கொண்டவள் ” பேச்சை மாற்றாதேடா …” தோளிலேயே அடித்தாள் .

” அன்றொரு பேச்சு …இன்றொரு பேச்சு எனக்கு கிடையாது ராகா .என்றைக்கும் ஒரே பேச்சுதான் …,” சொன்னபடி நிஜமாகவே அவளை தரையை விட்டு சிறிது தூக்கி  பின் இரு கைகளையும் விட்டு கண் சிமிட்டும் நேரத்தில் மீண்டும் பிடித்தான் .

” இது ஈசியாகத்தான் இருக்கிறது .ஜாலியாகவும் …” கீழே விழுந்து விடுவோமோ எனும் பய்த்தில் அவன் தோள்களை தழுவி நின்றிருந்தவளின் கன்னங்கள் கனிந்து சிவந்தன .

” கெட்ட பயடா நீ …” 

” தேங்க் யூ …” 

” கெட்டவன்னு சொன்னால் நன்றி சொல்வாயா …? ” 

” ஏன்னா அது உனக்கு மட்டுமான ஸ்பெசல் என்பதால் …” 

” புரியவில்லை …” 

” இந்த காலனியில் எல்லா பெண்களுக்கும் நான் ஹீரோ .நல்லவன் .உனக்கு மட்டும் வித்தியாசம் .நான் கெட்டவன் . வில்லன் ..என்னுடைய தேவையும் அதுதான் .நான் உனக்கு மட்டும் ஸ்பெசலாக இருக்க வேண்டும் …நல்லவனாகவோ …கெட்டவனாகவோ …” 

” சை என்ன கண்றாவி திங்கிங் உங்களுக்கு …? ” ராகவியின் குரலில் கோபம் இல்லை .குறைந்து குழைந்த்து.

” இன்னமும் நான் உனக்கு கெட்டவனாகத்தான் தெரிகிறேனா ராகா …வில்லனாக …ம் ..? ” 

” வில்லத்தனம் செய்தால் கெட்டவன்தான் …” 

” ஹையோ அப்படி என்ன வில்லத்தனம் செய்தேன் …? ” 

” எப்போதும் கையிலிருப்பதை பிடுங்கி தின்பது , பலூனை பிடித்து உடைப்பது , ஹோம் ஒர்க் நோட்டை ஒளித்து வைப்பது , பென்சிலை பிடுங்கி உடைத்து போடுவது ….” 

” ஏய் இதெல்லாம் நாம் சின்னப்பிள்ளகைளாக இருந்த போது நடந்தது .அப்போதெல்லாம் நீ என்னை கண்டு கொள்ளவே மாட்டாய் ராகா .எனக்கு உன்னோடு பேச , விளையாட ஆசையாக இருக்கும் .நீ என்னைப் பார்த்தாலே ஓடி ஒளிந்து கொள்வாய் .உன் கவனத்தை கவர்வதற்காகத்தான் இப்படியெல்லாம் செய்து கொண்டிருந்தேன் ….” 




” என் கவனத்தை பெற இப்படித்தான் செய்வார்களாக்கும் …? ” 

” அப்போது எனக்கு தெரியவில்லை ராகா .சிறு பிள்ளைதானே …நீ என்னை கவனிக்க வேண்டும் .அதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று மட்டும்தான் தோன்றியது .எதையெதையோ செய்தேன் ….” 

” ம் …முதல் கோணல் …முற்றிலும் கோணல்தான் போ ..நீ.எப்போதும் கெட்டவன்தான் …” சிணுக்கமாய் தெறித்தன ராகவி வாய்  வார்த்தைகள் . 

” சரிதான் கெட்டவன்னே உறுதி  வாங்கியாச்சு .இன்னமும் எதற்கு கஷ்டப்பட்டு நல்லவன் வேசம் …” சொன்னபடி தன்னை நெருங்கியவனின் ஜ்வலிக்கும் விழிகளில் மிரண்டாள் ராகவி .

” ஐய்யோ நந்தா தெருவில் நிற்கிறோம் .இங்கே வைத்து என்ன செய்ய போகிறீர்கள் …? ” இடையை சுற்றி வளைத்த அவன் கரங்களால் மேலும் மிரண்டாள் .

” இதோ …இதைத்தான் செய்ய போகிறேன் …” சொன்னபடி அவளை தூக்கி மரத்தின் தாழ்வான கிளை ஒன்றின் மேல் அமர்த்தினான் .

” கால் வலி , எறும்பு தொந்தரவு இருக்காது .கொஞ்ச நேரம் இங்கேயே உட்கார்ந்திரு .நான் இப்போது வருகிறேன்…” மறைவாக அவளை விட்டு விட்டு தெருவிற்கு நடந்தான் .

” ஹாய் சுகன்யா …” எதிரே நடந்து வந்து கொண்டிருந்த பெண்ணை இடைமறித்து பேசினான் .

” கண்ணா …சீ …நந்தா …நீங்களா …? நீங்கள் எங்கே எங்கள் தெருப் பக்கம் …? ” பரவசம் குற்றாலமாக வழிந்த்து சுகன்யாவிற்கு .

” சும்மா ஒரு வாக் மாதிரி வந்தேன் .நீ எப்படி இருக்கிறாய் …? உன் வீடு இந்த தெருதானா …? ” 

” ஆமாம் ஆமாம் .அதோ அந்த ஆறாவது வீடு .எங்கள் வீட்டிற்கு வருகிறீர்களா …? ” 

” இருக்கட்டும் .நம்ம ப்ரெண்ட்ஸ் வேறு யார் இந்த தெருவில் இருக்கிறார்கள் …? ” 

” பூங்கொடி , பாமா , ரேகா , சந்தனா ….” 

” அவுங்க வீடெல்லாம் எது …? ” 

” இதோ இதுதான் ரேகா வீடு …அடுத்த வீடு …” 

” ஏய் ரேகான்னா கொஞ்சம் குட்டையாக , சுருள் முடியோடு , நல்ல தங்க கலரில் இருப்பாளே அவள்தானே …? ” 

” அவளேதான் ….” 

” அவள் நல்லா பாடுவாள்ல .எனக்கு அவளை பார்க்கனுமே .ஒரு பங்சன்ல அவளை பாட வைக்கலாம்னு ஐடியா …” 

அந்த சுகன்யாவின் முகம் ஒளியிழந்த்து.” ம்க்கும் அவளையெல்லாம் நீங்க பார்க்க முடியாது .அவளுக்கு வெளியூரில் வேலை கிடைத்து போய்விட்டாள் 

” அட அப்படியா …எந்த ஊருக்கு போனாள் …? ” 

” ஏதோ ஊருக்கு …இன்னைக்கு எங்கேயோ இன்டர்வியூன்னு போனாள் … .இருக்கிறவங்களை விட்டுடுங்க .இல்லாதவளை விசாரிங்க ….” 

நந்தகுமாரின் போன் ஒலிக்க எடுத்து பார்த்தவன் ” பரவாயில்லை சிஸ்டர் .நான் அவுங்க அம்மாவிடமே விசாரித்துக் கொள்கிறேன் …” என்று விட்டு ரேகாவின் வீட்டிற்குள் நடந்தான் .

” சிஸ்டரா …? உனக்கு கல்யாணமே நடக்காமல் போக …” வெளிப்படையாக விரல் நெரித்து சாபம் விட்டு போனாள் சுகன்யா .




 

What’s your Reaction?
+1
18
+1
12
+1
1
+1
2
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!