தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு வெளியாகி இருக்கிறது. இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை குறித்து பார்க்கலாம்.
தனுஷ் நடித்திருக்கும் கேப்டன் மில்லர் படத்தை ராக்கி, சாணிக் காகிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இயக்கியிருக்கிறார். இதில் தனுசுடன் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், குமரவேல், பிரியங்கா மோகன், ஜெயபிரகாஷ், ஜாஜ் கொக்கேன், நிவேதா சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
மரியாதையை எதிர்பார்க்கும் ஒரு இளைஞனின் வாழ்க்கை பின்னணியில் கேப்டன் மில்லர் படத்தின் கதையை எழுதி படமாக்கியிருக்கிறார் இயக்குனர்.
தமிழகத்தில் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம். அங்கு வெள்ளைக்காரனுக்கு அடிமையாக இருக்கும் ஜமீன், ஜமீனுக்கு அடிமையாக இருக்கும் கிராம மக்கள், அவர்களின் எதிர்பார்ப்பு, அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவையே இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தின் திரைக்கதை. இதை 5 Chapter-களாக கூறியுள்ளார் அருண் மாதேஸ்வரன்.
ஜமீனுக்கு அடிமையாக இருப்பதை விட வெள்ளைக்காரனுக்கு அடிமையாக இருக்கலாம் என்ற முடிவை தனுஷ் எடுக்கிறார். ஆனால் அது இன்னும் கொடுமையாக இருக்கிறது. அதற்குப்பிறகு தன்னுடைய பாதையை மாற்றுகிறார். கிராம மக்களால் புறக்கணிக்கப்படுகிறார், இறுதியில் அந்த கிராமத்திற்கு இவர் என்ன செய்தார் என்ற இடத்தில் கேப்டன் மில்லர் முடிகிறது.
இந்தப் படத்தில் ஒரு தரப்பு மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுக்கின்றனர் என்ற நாம் ஏற்கனவே பல படங்களில் பார்த்த விஷயத்தை எந்த புதுமையும் இல்லாமல் புகுத்தியுள்ளனர். அதற்கு பதிலாக சுயமரியாதை என்பதை முன்னிலைப்படுத்தி, ஆழமான திரைக்கதை மூலம் சொல்லியிருக்கலாம். ஆனால் காட்சிகளை படமாக்கிய விதம் சிறப்பாக அமைந்துள்ளது. அதற்கு இன்னும் ரசிக்கும் படியான காட்சிகளும், அழுத்தமான காரணங்களும் அமைந்திருந்தால் கூடுதல் வலுசேர்ந்திருக்கும்.
கேப்டன் மில்லர் கதைகளும் நடைபெறும் காலகட்டம் சுதந்திரத்திற்கு முந்தையது என்பதை முடிந்தவரை நம்பகத் தன்மையோடு காட்டியுள்ளனர். ஆனால் படத்தில் வெள்ளைக்காரர்களை விட, போராட்டக்காரர்கள் அனைத்து விதமான ஆயுதங்களை வைத்து போரிடுகின்றனர். ஆனால் அந்த காலகட்டத்தில் உண்மை நிலை வேறு விதமாக இருந்தது. இது எப்படி சாத்தியம் என்ற கேள்வியை எழுப்புகிறது.
மேலும் இதில் இடம்பெறும் கதை, 5 அத்தியாயங்களாக நகர்கிறது. இதை சாதாரண வெகுஜன பார்வையாளர்கள் புரிந்து கொள்வது சிரமம். அத்துடன் படத்தில் வசனங்களை விட துப்பாக்கி சத்தங்கள் அதிகமாக இருக்கின்றன. சிலருக்கு காது வலிக்கிறது என்ற எண்ணமும் தோன்றலாம். அதேபோல் வில்லன் கதாபாத்திரங்கள் மீதான கோபம் ரசிகர்களுக்கு வரவில்லை.
கேப்டன் மிலராக வரும் தனுஷ் வழக்கம் போல நடிப்பில் பிரமாதப்படுத்துகிறார். ஜெயிலர் திரைப்படத்தில் இரண்டு காட்சிகளில் நடந்தே வந்து மாஸ் காட்டிய சிவ்ராஜ்குமார் இந்த திரைப்படத்தில் இருந்தாலும், அவரின் கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் மிகக் குறைவு. இவர்களை தவிர சந்திப் கிஷன், குமரவேல், நிவேதா சதீஷ் உள்ளிட்டோர் தங்கள் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்திருக்கின்றனர். படத்தின் தொடக்கத்தில் புரட்சி செய்யும் பிரியங்கா மோகனுக்கு முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகள் கொடுத்திருக்கலாம். ஒரு கட்டத்திற்கு மேல் அவர் படத்தில் இருக்கிறார் என்பதற்காகவே சில காட்சிகள் வைத்தது போல தோன்றுகிறது.
கேப்டன் மில்லர் திரைப்படம் மேக்கிங் ரீதியில் சிறப்பாக அமைந்திருக்கிறது. அத்துடன் தொழில்நுட்ப கலைஞர்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக ஒளிப்பதிவு, இசை, சவுண்ட் மிக்சிங் என அனைத்திலும் கவனம் செலுத்தி இருக்கின்றனர்.
இந்தப் படத்தை உருவாக்குவதில் செலுத்திய கவனத்தை கதை களத்தில் செலுத்தியிருந்தால், நிச்சயம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கும். ஆனால் அது இந்த திரைப்படத்தில் மிஸாகி உள்ளது. எனவே, கேப்டன் மில்லர் ஸ்டார் வாங்க தவறுகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1