வினாடி…4.
“கார்த்திக்!!”
கதவு படபடவென தட்டப்பட்டதும் எரிச்சலானான் கார்த்திக்.
‘’ஐயோ இந்த மம்மி தொல்லை தாங்கல.என்னை டிஸ்டர்ப் பண்ணாட்டி தூக்கமே வராது.எப்ப பாரு நொய்..நொய் னு.இருங்கடா கொஞ்ச நேரம் கழிச்சு பேசறேன்.”
மனசில்லாமல் ஃபோனை கட் செய்தவன்
இம்முறை டாடி வந்ததும் அவரை இங்கேயே இருக்க சொல்லணும்.இல்லைனா மம்மியை அழைச்சிட்டு போக சொல்லிடணும்.நாம ஹாஸ்டலில் கூட இருந்துக்கலாம்.
“இதோ வரேன் மா.”
கதவைத் திறந்தவன் ரோஜாமணியின் கோலத்தைப் பார்த்து திகைத்தான்.
“கார்த்திக்! வாடா! பாட்டியை ஆஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருக்காங்களாம்..பாட்டி மாடிப்படியிலிருந்து கீழே விழுந்துட்டாங்களாம்.உடனே போய் பார்க்கணும்.”
“என்ன மம்மி ஆச்சு? கிராண்ட்மாவுக்கு ரொம்பவும் அடிபட்டிடுச்சா”
“நீ கிளம்பு டா. மண்டை உடைஞ்சு ரத்தமாக வருதாம்.”
இவர்கள் வீட்டிலிருந்து இரண்டு தெரு தள்ளிதான் பாட்டி வீடு. மாமா அத்தை அவர்களுடைய இரண்டு வயது மகளோடு தாத்தாவும் பாட்டியும் இருக்கிறார்கள்.தாத்தா கொஞ்சம் கெடுபிடியாகப் பேசுவார்.பாட்டி பாசமாய் இருப்பார்.
உண்மையிலேயே கார்த்திக்கு கவலையாய் இருந்தது.
பாட்டி இரண்டு மூன்று நாட்கள் ஆஸ்பிடலில் இருக்க வேண்டுமாம். தலையில் தையல் போட்டிருந்தது. காலிலும் மாவு கட்டு போட்டிருந்தார்கள். ரோஜாமணி ஆஸ்பிடலில் தங்க வேண்டியதாயிற்று.
“கார்த்திக் நீ மாமாவோட தங்கிக்க. தனியா இருக்க வேண்டாம்.”
“இல்லை தாத்தா எக்ஸாம் நெருங்குது.நான் படிக்கணும்.”
“அதனாலென்ன அங்கே படிக்க இடமா இல்லை?”
அடடா முதலுக்கே மோசமாயிடுமே. இங்கே மாட்டினா எதுவும் பார்க்க முடியாது.பசங்க அதுக்குள்ளே சானல் ஆரம்பிச்சு வீடியோவே அப்லோட் பண்ணிடுவாங்க.
யோசித்தவன் அம்மாவைப் பார்த்தான்
“மாமாவோட தங்கினா ஹர்னிகா பாப்பா படிக்க விடமாட்டா. எனக்கும் அவளோட விளையாட தான் புத்தி போகும்.மார்க் குறைஞ்சா அப்பா கோபிப்பார்.
“சரிடா! தனியா எப்படி இருப்ப?
கோபி வீட்டுக்கு போறியா?அவங்கம்மா கிட்டே சொல்றேன்.”
‘கோபி வீட்டுக்கா? ஐயோ டா அவங்கம்மா நம்ம மம்மியை விட மோசம்.நடுநடுவில வந்து கொஸ்டின் கேட்பாங்களே!’
“டோன்ட் ட்ரீட் மீ லைக் எ சைல்ட் மம்மி.உங்களுக்கு பயமாயிருந்தா
.கண்ணனை தங்க வச்சுக்கிறேன்.”
“கண்ணனா?” என்று வினவிய தெய்வ நாயகத்துக்கு பதில் தந்தாள் ரோஜாமணி.
“ஆமாம் பா .காய்கறி கனகத்தோட பையன்.”
“ரொம்ப பொறுப்பான பையன் ஆச்சே. ஆனாலும் ஜாக்ரதையா இருக்கணும் கார்த்திக்.”
“சரி தாத்தா.நான் வீட்டுக்கு கிளம்பறேன்.கிராண்ட்மாவைப் பத்திரமா பார்த்துக்குங்க.”
ஆமோதிப்பாக தலையசைத்த தெய்வநாயகம் பேரனைக் கவலையோடு பார்த்தார்.
இந்த காலத்து பசங்க ஏன் சொந்த பந்தங்களோடு ஒட்டுவதேயில்லை? ஏற்கனவே ஒற்றை பிள்ளையாய் வளர்கிறார்கள்.இதில் உறவுகளும் இல்லையென்றால்…பெருமூச்செறிந்தார்
அதே நேரம் கார்த்திக்கோ சந்தோஷத்தில் மிதந்தான். கண்ணா இரண்டு மூன்று நாள் என்னோட தங்கு.நான் நினைச்சதை உன்னோட உதவியில்தான் முடிக்கணும்.’
விஷயத்தைக் கேள்விப்பட்டதும் கோபிக்கு சற்று பொறாமையாய் இருந்தது.
“இரண்டு பேரும் ஜாலியா இருப்பீங்க டா.”
“நீயும் வாயேண்டா.”
“ம்க்கும்.உனக்கு தான் தெரியுமே. எங்கப்பா பாதிநாள் ஊரிலேயே இருக்கமாட்டார்.இப்பவும் ஹைதராபாத் போயிருக்கார்.அம்மாவும் தங்கச்சியும் தனியா இருக்கமாட்டாங்க!”
கோபியின் அப்பா பிரபல எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டிங் மானேஜர்.அதனால் பாதிநாள் டூரில் தான் இருப்பார்.கோபியின் அம்மா ஒரு நர்ஸரி ஸ்கூலில் வேலை பார்த்தார். இப்போது வேலையை விட்டுவிட்டார். இப்போது கோபியை கவனிப்பது மட்டுமே அவர் ஃபுல் டைம் வொர்க். அவ்வப்போது அவர்கள் குரூப் ஸ்டடியில் நுழைந்து கண்டபடி கேள்வி கேட்பார். அதனால் கார்த்திக்கும் பார்த்தாவும் கோபி வீட்டுக்கு அதிகம் போக மாட்டார்கள். கண்ணன் அதற்கெல்லாம் அஞ்சுபவனல்ல.
இப்போதும் கண்ணனிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள் கோபியின் அம்மா ரேவதி
“எக்ஸாம் வருதே! நல்லா படிச்சிருக்கீங்களா? எல்லா பாடமும் கவர் பண்ணியாச்சா? ஏதோ சேனல் அதுஇதுன்னு பேசினீங்களே அது என்னடா?”
“ஐயோ ஆன்ட்டீ கோபி மாதிரி பாடம் சொல்லி கொடுக்க யாராலும் முடியாது. அதிலும் கெமிஸ்ட்ரி ஈக்குவேஷன்ஸ் எல்லாம் சூப்பரா சொல்லி கொடுத்தான்.”
ரேவதி எம்எஸ்ஸி கெமிஸ்ட்ரி படித்தவள்.பிள்ளையை உசத்தியாக யாராவது சொன்னால் போதும்.அவ்வளவு தான் பாகாய் கரைந்து விடுவாள். அவ்வப்போது அவளைப் பார்க்க வரும் அவள் அண்ணனிடம் மூன்று நாளுக்கு நாலைந்து அத்யாயம் பேச அவளுக்கு கன்டென்ட் கொடுத்துவிடுவான் கண்ணன். ரேவதியும் அவள் குடும்பமும் கொஞ்சம் அலட்டல் டைப். சின்ன விஷயத்தைக் கூட பில்டப் கொடுத்து பீற்றிக் கொள்வார்கள்.
நகை புடவை மாதிரி இப்போது கோபி தான் அவள் டார்கெட். ஏதோ கோபியை நம்பி தான் அவன் ஸ்கூலே நடப்பது போல் அலப்பறை.அவளைப் பொறுத்தவரை கோபி +2 வில் நல்ல மார்க் எடுத்து பெரிய கல்லூரியில் சேர்ந்துவிட்டால் போதும். டிகிரி முடித்தகையோடு அவனை யுஎஸ் அனுப்பி எம்எஸ் படிக்க வைத்து விடுவாள்.அவன் சாக்கில் அமெரிக்கா போய் வரவேண்டும். சுற்றத்தாரிடம் அலட்ட வேண்டும்.அதற்காகவே கோபியை படிபடியென்று துரத்துகிறாள்.
.
“சரி தான் பா.அதென்ன வீ டியூப் னு இன்னும் சொல்லலையே.”
“அதுவா? இட்லி தோசை செய்றது எப்படின்னு சமையல் யூடியூப் மாதிரி பாடங்களை நடத்தி சேனல்லில் போட்டாங்கனா நல்லாயிருக்கும் னு சொன்னேன் ஆன்ட்டீ.
ரோஜாமணி கனகத்துக்கு போன் செய்து நிலைமையைக்கூறி கண்ணனை துணைக்கு அனுப்பும்படி சொல்லிக் கொண்டிருக்க
கனகம் மகனை அனுப்ப யோசித்தாள்.’அவர்கள் வீட்டில் போய் படிப்பதெல்லாம் சரிதான். தங்குவது சரிப்பட்டு வருமா?’
“அவங்க எல்லாம் பெரிய இடம்.நீ கையை கால வச்சுகிட்டு ஒளுங்கா இருக்கணுமே.ஏதாச்சும் பிரச்சினை வந்துடப் போவுது.”
வெண்மதி தான் வக்காலத்து வாங்கினாள்.
“பரீட்சை நேரம்.இங்கே வச்சுகிட்டு அவனை ஏதாச்சும் வேலை வாங்குற. அங்கன போயாவது வசதியா படிச்சிட்டு வரட்டும். கரண்ட்டும் போய்போய் வருது.அதோடு உதவினு கேட்கறவங்களுக்கு மாட்டேன்னு சொல்லக்கூடாது மா.”
கண்ணனுக்கு கார்த்திக்கின் வசதியான வாழ்வைப் பார்த்ததும் ஏக்கமாக இருந்தது.தன்னிடம் ஒரு நல்ல ஃபோன் கூட இல்லை. மனம் கழிவிரக்கத்தில் கசந்தது.
“இங்கே பார் கண்ணா.நாம சேனல் ஆரம்பிச்சு த்ரில்லர் ஷார்ட்ஸ் போட்டா வியூஸ் அள்ளும். ஒரே நாள்ல பாப்புலராயிடுவோம்.காசும் கொட்டும்.”
கார்த்திக்கின் ஆசை வார்த்தைகள் மெல்ல மெல்ல கண்ணனை அசைத்தது.
‘சரிதான்.முதல் கட்டமாக எஜுகேஷன் சானல் ஆரம்பிப்போம்.பிறகு பார்ப்போம் ‘
அதற்கான வேலையைத் தொடங்கினார்கள்.
“நல்லபேரா வைக்கணும் டா.
டேக் ரிஸ்க் ஈட் ரஸ்க் னு வைப்போமா?”
“அதெல்லாம் வேண்டாம் டா.பேரைப் பார்த்தா நம்ம பேரண்ட்ஸ் டீச்சர்ஸ் னு எல்லோரும் நம்மை பொறுப்பானவங்க னு நினைக்கனும்.யாராவது ஒருத்தருக்கு தப்பா தோணினாலும் தடுத்திடுவாங்க.”
“நீ சொல்றது சரிதான்.”
நான்கு பேரும் பேரை பற்றி யோசித்து யோசித்து மண்டைகாய்ந்து போனார்கள்.நெட்டில் சர்ச் செய்து தேடினார்கள்.
“இப்போதைக்கு “ ட்ரிக்ஸ் அண்ட் டிராக்ஸ் சேனல்” னு வைப்போம்.அப்புறம் மாத்திக்கலாம் டா.”
கண்ணனும் கார்த்திக்கும் ஏகமனதாக முடிவெடுத்து பேர் வைத்தார்கள்.
“லோகோ சூப்பரா வைப்போம்.
ஒரு கார்ட்டூன் கேரக்டர் மலையிலிருந்து கடலில் குதிச்சு நெருப்பில் நீந்தி வர்றது மாதிரி…
அந்த லோகோவே நம்ம ஐடியாவை ஹைலைட் பண்ணிடும்.”
“அதை வச்சு கண்டுபிடிக்க மாட்டாங்களா?”
“நாம் பாடம் படிச்சு எக்ஸாம் எழுதறது இத்தனை கஷ்டம் னு அடிச்சுவிடுவோம் டா.”
நான்கு பேரும் ஒன்று கூடி ஓகே செய்ய..
கார்த்திக் பிஸிக்ஸ் பாடத்தை எளிதாகப் படிப்பது எப்படி என முகம் காட்டாமல் பல்வேறு உபாயங்களோடு சொல்லி கொடுக்க கண்ணன் சந்தேகங்களை கேட்டு தெளிவானது போன்ற முதல் வீடியோவை வெற்றிகரமாக அப்லோட் செய்தார்கள்.
ஒரே பாடத்தை திரும்ப திரும்ப நடத்தி ஷுட் செய்து எடிட் செய்து….
நடுவில் இரண்டுமுறை தெய்வநாயகம் வீட்டுக்கு வந்த போது கூட புத்தகமும் கையுமாய் ஹாலில் அமர்ந்து டிஸ்கஸ் செய்யும் பேரனைப் பார்த்து பூரித்து போனார்.
பார்த்தாவுக்கு அவன் வீட்டில் இருப்பே கொள்ளவில்லை. அடிக்கடி கார்த்திக் வீட்டுக்கு வந்து போனான்.
வீடியோவுக்கு எத்தனை வியூஸ் வந்திருக்கிறது என பார்ப்பதிலேயே இரண்டு மூன்று நாள் கழிந்தது.
கண்ணனுக்கு மனநிறைவாக இருந்தது.உண்மையிலேயே அந்த பிஸிக்ஸ் பாடம் அவனுக்கு புரியாமல் இருந்தது. கார்த்திக் இடம் கேட்ட பொழுது அவன் ஏனோ தானா என்று சொல்லிக் கொடுத்துவிட்டு 24 மணி நேரமும் சேனல் ஆரம்பிப்பதை பற்றியே பேசிக் கொண்டிருந்தான். ஆனால் இந்த சாக்கில் அவன் தன்னுடைய சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொண்டான், அந்தப் பாடம் நன்றாக புரிந்து போனது கண்ணனுக்கு பரவாயில்ல இது மாதிரி இன்னும் ரெண்டு மூணு பாடத்தை அப்லோட் பண்ணா நமக்கு படிச்ச மாதிரி ஆச்சு அவனோட சேனல் ஆசையும் நிறைவேறிடும் மனசுக்குள்ள நினைத்துக் கொண்டான் கண்ணன்.
ஆனால் நேர் மாறாக கார்த்திக்கு ஆரம்பத்தில் இருந்த சூரத்தனம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து போனது அந்தப் பாட வீடியோவை அதிகமாக யாரும் பார்க்கவில்லை ஆயிரம் வியூஸ் இல்லைனா இந்த வீடியோ ரொம்ப ரீச் ஆகாது சப்ஸ்கிரைப்பர்ஸ் அதிகமாக இல்லை.
“இப்ப என்னடா பண்றது?”
“நம்ம ப்ரெண்ட்ஸ் தெரிஞ்சவங்க கிட்டே சொல்லி சப்ஸ்கிரைப் செய்ய சொல்வோம்..”
“எங்க ஏரியா ஜனா அண்ணாகிட்டே சொல்வோமா?
அவர் கேங் லைக் பண்ணா போதும் நாம் வேற லெவல்ல ரீச் ஆயிடுவோம்..”
கண்ணனின் மூலம் விதி தன் விபரீதத்தைத் துவங்கி வைத்தது.
யாரந்த ஜனா?
(விபரீதங்கள் தொடரும்)
What’s your Reaction?
+1
4
+1
3
+1
+1
+1
+1
+1