8
“மீட்டிங் ஆரம்பிச்சு அரை மணி நேரம் ஆயிடுச்சும்மா” அட்டெண்டர் தகவல் தர, கிருஷ்ணதுளசி அதிர்ந்தாள். அது எப்படி அவள் இல்லாமல் மீட்டிங் நடக்கும்?
நேற்றுடன் அவர்கள் எடுத்திருந்த ப்ராஜெக்ட் முடிவடைந்திருந்தது. க்ளையன்டுக்கு அந்த ப்ராஜெக்ட் மிகவும் பிடித்து விட,ப்ராஜெக்டில் வேலை செய்தவர்களை பாராட்டி ஒரு மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்திருந்தது கம்பெனி. கடந்த இரண்டு மாதங்களாக இந்த ப்ராஜெக்ட்காக கடுமையாக உழைத்த அவள் இல்லாமலேயே அந்த மீட்டிங் நடந்து கொண்டிருக்கிறது.
இரவும் பகலுமாக பட்ட பாடு நினைவு வர கிருஷ்ணதுளசிக்கு கண்கள் கலங்கிவிட்டன.மீட்டிங் ஹாலுக்கு வெளியிலேயே தளர்ந்து அமர்ந்து விட்டாள். எவ்வளவு பெரிய அவமானம் இது! மீட்டிங் நடந்து முடிந்த ஒரு மணி நேரமும் அப்படியே அசையாமல் அமர்ந்திருந்தாள்.
அந்தப் பக்கமாக சென்ற அலுவலக ஊழியர்கள் அவளை பரிதாபமாக பார்க்கு, அதனை உணரும் நிலையில் கூட அவள் இல்லை. மீட்டிங் ஹால் கதவை திறந்து க்ளைன்ட்ஸ் இருவருடன் முதலில் வெளியே வந்தவன் நிரஞ்சன். ஒரு மாதிரி கோணல் சிரிப்புடன் இகழ்ச்சியாக இவளை பார்த்து கடந்து போனான்.
பின்னாலேயே வந்த முரளி, தனுஷ், பிரியா, ரஞ்சனி இவளை பார்த்து தயங்கி நிற்க, அவர்களை அடுத்து வந்த நீலவண்ணன் “வேலையை பாருங்கள், இங்கே என்ன நிற்கிறீர்கள்?” என்று அகற்றினான்.
கிருஷ்ணதுளசி கோபத்துடன் எழுந்து நீலவண்ணனிடம் வந்தாள். “சார் நானும்தான் இந்த ப்ராஜெக்ட்டில் ஒர்க் செய்து இருக்கிறேன். என்னை விட்டுவிட்டு மற்றவர்களை மட்டும் அறிமுகம் செய்திருக்கிறீர்கள்”
” நீதான் கடைசி ஒரு வாரமாக ப்ராஜெக்ட் இருந்து விலகிக் கொண்டாயே! உன்னை எப்படி நான் சேர்க்க முடியும்?”
இரண்டு மாதங்களாக இரவும் பகலுமாக வேலை செய்த ப்ராஜெக்ட். கடைசி ஒரு வாரம் மட்டும், அதிலும் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டுதான் இருந்தாள், வீட்டில் மட்டுமே கொஞ்சம் இவளுக்கு வேலை தரப்படவில்லை. இதிலேயே இந்த ப்ராஜெக்ட்டில் வேலை செய்யாதவள் ஆகி விடுவாளா?
” உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்று இருக்கிறதா சார்?” குமுறலுடன் கேட்டாள்.
” உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது .போய் எம்.டியை பாரு” நீலவண்ணன் ஒரு துள்ளலுடன் போனது போல் இவளுக்கு தோன்றியது.
இப்போது வரும் புது ப்ராஜெக்டுகளுக்கு டீம் லீடராக இருப்பதற்கு இவன் தகுதியற்றவன்.பழைய ஸ்கில்லை(skill) வைத்தே ஓட்டிக் கொண்டிருப்பவன். அந்த நிரஞ்சனுக்கு கூழைக் கும்பிடு போடுவதாலேயே இந்த பதவியில் இருந்தான்.
சரியாக சொல்வதானால் அவ்வப்போது தேவையான கோர்ஸ்களை படித்து,உடனுக்குடன் தன்னை அப்டேட் செய்து கொண்டு லீடர் பதவிக்கு தகுதியானவளாக தன்னை வளர்த்துக் கொண்டிருப்பவள் கிருஷ்ணதுளசிதான். தகுதிகளை வளர்த்துக் கொண்டதாலேயே இங்கிருந்து ஒதுக்கப்படுகிறேனோ?
வருந்தினாள்.
“உங்கள் எண்ணம் என்ன சார்? நானாக இந்த வேலையை விட்டு போக வேண்டும் என்று நினைக்கிறீர்களா?” நேரடியாக நிரஞ்சன் முன் நின்று கேட்டாள்.
“உனக்கு நம் கம்பெனியில் மூன்று வருட அக்ரீமெண்ட் இருக்கிறது. அப்படியெல்லாம் திடீரென்று வேலையை விட்டு போக முடியாது. போய் உன் இடத்தில் உட்கார்ந்து வேலையை பார் .அடுத்த ப்ராஜெக்ட் வந்துவிட்டது” அதிகாரமாக பேசினான்.
கிருஷ்ணதுளசிக்கு புரிந்தது. கம்பெனியில் நன்றாக வேலை வாங்கப்படுவாள், ஆனால் அதற்குரிய அங்கீகாரம் எதுவும் அவளுக்கு கொடுக்கப்படாது. காரணமாக வீட்டிற்கு கொடுக்கப்படும் வேலைகளை அவள் பார்ப்பதில்லை என்று சொல்லப்படும்.
சே…கொஞ்சம் முன்னேற நினைப்பவளை எப்படி காலை பிடித்து இழுக்கிறார்கள்! கலங்கிய கண்களை அவனுக்கு காட்ட மனதின்றி வேகமாக தனது இடத்தில் வந்து அமர்ந்தாள். ஆதரவாக கைப்பற்றிய தோழிகளை ஊதறினாள். தலைவலி லீவ் வேண்டும் என்று நீலவண்ணனுக்கு மெயில் அனுப்பிவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறினாள்.
சாலையின் உள்ளே ஒதுங்கி இருந்த அந்த உணவகத்தின் உள்ளே நுழைந்தாள். சிறு சிறு குடிலாக சாப்பிடும் இடங்களை பிரித்து கார்டனுக்குள் ஆங்காங்கே ஒளித்து வைத்திருப்பர் அந்த ஹோட்டலில். தனிமைக்காக இங்கே வந்தவள், ஒரு குடிலை தேர்ந்தெடுத்து அமர்ந்தாள்.
“பிரண்ட் வருவார் அரை மணி நேரம் கழித்து வா” என்று வந்த சர்வரை அனுப்பி விட்டு தன் அலுவலக கவலைகளில் ஆழ்ந்தாள்.
“கிருஷ்ணா யாருக்காகவும் வெயிட் செய்கிறாயா?” கேட்டபடி அவள் முன் வந்தமர்ந்த முகமூடி மனிதனைக் கண்டு முதலில் பயந்தவள், பிறகு அவன் குரலில் தெளிந்து பார்த்தாள். முகம் முழுவதும் மறைக்கும்படியான மாஸ்க் போன்ற ஒன்றை அணிந்திருந்தான் அஸ்வத். தலையில் நெற்றியை மறைக்கும்படி கருப்பு நிற தொப்பி.
அவனது துறு துறு கண்கள் மட்டுமே வெளியே தெரிந்தன. சிறு கவலையும் நிறைய ஆறுதலையும் சுமந்து அவளை பார்த்த அந்த கண்களினுள் அரை நிமிடம் தன்னை மறந்து விழுந்திருந்தவள், திடுமென சுதாரித்துக் கொண்டாள்.
“எங்கே போனாலும் என்னை விட மாட்டீர்களா? கொஞ்ச நேரம் நிம்மதியாக இருக்க விடுங்களேன்”
அவள் விழிகளை ஊடுருவியவன் மெல்ல தலையசைத்தான் “இப்போது போய் விடுகிறேன் கிருஷ்ணா, ஒரே ஒரு காபி மட்டும் குடிப்போமா?” மயிலிறகாய் மனதை வருடியது அவனுடைய மென் வார்த்தைகள். தன்னை அறியாமல் தலையசைத்திருந்தாள்
கிருஷ்ணதுளசி.
சர்வர் காபியை வைத்துவிட்டு போனதும், மாஸ்க்கை சுழற்றி வைத்துவிட்டு அவளுக்கும் சேர்த்து காபி கலந்தான். “நம் இந்தியர்கள் நிறைய பேருக்கு இந்த காபி மன அழுத்தத்தை குறைக்கும் அற்புதமான மருந்து தெரியுமா? ருசித்து ஒவ்வொரு சொட்டாக காபியை அவர்கள் குடித்து முடிக்கும் ஐந்து நிமிடங்கள் போதும்,அவர்கள் கவலை போவதற்கு” சொன்னபடி அவளுக்கு காபியை நீட்டினான்.
கப்புடன் தன்னை நோக்கி நீண்ட அவனுடைய நீள கைகள் முதல் நாள் அவளை அணைக்க தயார் போல் விரிந்திருந்த்து அவள் நினைவில் வந்தது.
அப்போது அவன் நின்றிருந்த தோற்றத்திற்கு வீல் என்று கத்தும் உத்வேகத்தை கஷ்டப்பட்டு அடக்கி முறைத்தாள் கிருஷ்ணதுளசி. “என்ன செய்யப் போகிறீர்கள்?” வேக மூச்சுடன் கண்களை உருட்டினாள்.
” எப்போது பார்த்தாலும் இது என்னம்மா கண்ணகி வேஷம்? உன்னைப் போல் என் கையில் குடை எதுவும் இல்லை என்று காட்டுவதற்காக கைகளை விரித்து வைத்திருக்கிறேன்” அற்புதமான விளக்கம் ஒன்றை அப்பாவியாக சொன்னவனின் வாய்க்குள் கள்ளச் சிரிப்பு.
எத்தன்! வாய் சொல்வது ஒன்று,கை சொல்வது ஒன்று!
“ஆன்ட்டிக்கு மூட்டு வலி.படியேற எவ்வளவு கஷ்டப்படுவார்கள் தெரியுமா?”
” நன்றாக தெரியுமே, ஆனாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை கிருஷ்ணா, உன்னை சமாதானம் செய்ய வேண்டுமே” இலகுவாக அவன் சொல்ல கிருஷ்ணதுளசிக்கு ஆத்திரம் வந்தது.
” உங்கள் சுயநலத்திற்காக ஒரு வயதானவர்களை கஷ்டப்படுத்துவீர்களா?”
” போதும் கிருஷ்ணா! எப்போது பார்த்தாலும் என்னை பழி சொல்லிக் கொண்டு… இப்படியும் இருக்கலாமோ என்று என்னை பற்றி கொஞ்சம் மாற்றித்தான் யோசித்துப் பாரேன்”
இவனை… இந்த வில்லனை… வேறு மாதிரி மாற்றி யோசிப்பதாவது! “உங்கள் அடுத்த படத்தில் வில்லன் வேஷம் போடுங்கள். அதுதான் உங்களுக்கு பொருந்தும். ஹீரோவாக நினைக்காதீர்கள்” அறைக்குள் போய் பூட்டிக் கொண்டாள்.
இதோ இப்போது அவளுடைய துயரம் புரிந்து காரணம் அறியாமலேயே மென்மையான வார்த்தைகளை கவனமாக கோர்த்து ஆறுதல் அளித்துக் கொண்டிருக்கிறானே இவன் வில்லனா? ஹீரோவா?
கிருஷ்ணதுளசி அவனைப் பார்த்தபடி அமர்ந்திருந்தாள்.
What’s your Reaction?
+1
39
+1
16
+1
4
+1
+1
2
+1
+1
2