தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து, இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 56 வயதாகும் மாரிமுத்து, இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பேசிக்கொண்டிருந்த போது திடீரென மயக்கம் போட்டு விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை அருகில் இருந்த வடபழனி சூர்யா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நெஞ்சுவலி காரணமாக அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். அவரின் மறைவு செய்தி திரையுலகம் மட்டுமின்றி ரசிகர்களையும், பொதுமக்களையும் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மாரிமுத்து சில தமிழ் படங்களை இயக்கியிருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலப்படுத்தியது ‘எதிர்நீச்சல்’ தொடர்தான். இதில், அவர் ஆதி குணசேகரன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். “ஏய் இந்தாம்மா ஜனனி..” என்று இவர் கூறும் டைலாக் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த தொடருக்கான டப்பிங் பணியின் போதுதான் இவர் உயிரிழந்துள்ளார். சமீப காலமாக இணையதளம் முழுவதும் பார்க்கப்படும் ட்ரெண்டிங் டெம்ப்ளேட்டாக இருந்தார் மாரிமுத்து. இவர், எதிர்நீச்சல் தொடரில் நடிப்பதற்கு முன்னர் 3 நிபந்தனைகளை அத்தாெடரின் இயக்குநர் திருசெல்வத்திடம் போட்டாராம். அவை என்னென்ன தெரியுமா..?
மாரிமுத்து போட்ட நிபந்தனைகள்..
மாரிமுத்து கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல நேர்காணல்களில் கலந்து கொண்டு வந்தார். அப்போது, தான் எதிர்நீச்சல் தொடரில் நடிப்பதற்கு முன்னர் கூறிய கண்டீஷன்களை கூறினார்.
எதிர்நீச்சல் தொடர் கிட்டத்தட்ட 4 முதல் 5 வருடங்கள் வரை போகும் என்பதால் மாதம் 12 முதல் 15 நாட்கள் கால்ஷீட் தர வேண்டும் என இயக்குநர் திருச்செல்வம் தன்னிடம் கேட்டதாக மாரிமுத்து கூறினார். இதையடுத்து தனது கதாப்பாத்திரம் முக்கியமானது என்பதால் வசனங்களை பார்த்து பார்த்து அப்படியே பேசமாட்டேன் என்று கூறியதாகவும் சினிமாவில் வாங்கும் சம்பளத்தை விட தனக்கு இதில் சம்பளம் அதிகம் வேண்டும் என்று கேட்டதாகவும் கூறினார்.
தனது நிபந்தனைகளை திருச்செல்வத்திடம் கூறியவுடன் அவரும் ஓகே சொன்னதாகவும் அதன் பிறகுதான் முழுமூச்சாக சின்னத்திரையில் நடித்து வருவதாகவும் அவர் அந்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
எதிர்நீச்சல் தொடரின் தூண்..
தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் தொடர்களுள் மிகவும் பிரபலமான தொடர்,எதிர்நீச்சல். இந்த தொடரில் நடிக்கும் ஹீரோ, நாயகிகளை விட இவரைத்தான் ரசிகர்கள் அதிகம் விரும்பி பார்த்தனர். இவரது கிண்டலான பேச்சும், நகைச்சுவையான முகம் மற்றும் உடல் பாவனைகளும் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தன. இதுவரை எதிர்நீச்சல் தொடரில் 500 எபிசோடுகளுக்கும் மேல் ஒளிபரப்பாகியுள்ளன. அதில் கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட எபிசோடுகளில் மாரிமுத்து நடித்துள்ளார். இவர் ஒரு எபிசோடில் வரவில்லை என்றால் கூட அதில் பெரிதும் சுவாரஸ்யம் இல்லாதது போல உணர்ந்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்ததுண்டு.
சில எபிசோடுகளுக்கு முன்னதாக அவருக்கு நெஞ்சு வலி வருவது பாேன்ற ஒரு காட்சி எதிர்நீச்சல் தொடரில் இடம் பெற்றிருந்தது. இப்போது அவர் உண்மையாகவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இது, ரசிகர்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இனி அவரை தொடரில் பார்க்கும் போது அவர் செய்யும் காமெடி கூட சோகமாகத்தான் தெரியும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர்.
What’s your Reaction?
+1
1
+1
2
+1
+1
+1
+1
1
+1
3