பாண்டிய நாட்டில் இளையான்குடி என்ற ஓர் ஊர் உண்டு.வேளாளர் குலத்தில் மாற நாயனார் என்னும் சிவனடியார் ஒருவர் தோன்றினார். அவர் உழுதொழிலாள் மிகுந்த செல்வம் படைத்து அச்செல்வத்தைக் கொண்டு சிவனடியாரைப் பெரிதும் விரும்பி உபசரித்து வந்தார். அவர் தமக்கு எதிர்ப்படும் சிவனடியாரைக் கைகூப்பி எதிர் கொண்டழைத்து இன்சொல் கூறித் தம் இல்லத்திற்கு அழைத்துச் செல்வார். அங்கு அவர்தம் அடிகளைத் தூய நீரால் கழுவி உயரிய ஆசனத்தில் அமர்வித்து, அவர்தம் பாதங்களைப் பூசித்து அறுசுவை உணவுகளை வழங்குவார். இதனால் மாறனாருடைய செல்வமும் பன்மடங்கு வளர்ந்து பெருகிற்று.
இத்தகைய செல்வச் சிறப்புடன் பலராலும் போற்றப்பட்ட மாறனாரின் பெருமையைச் சிவபெருமான் மக்களறியச் செய்ய விரும்பினார். அதன் விளைவாக மாறனாருடைய செல்வம் சிறிது சிறிதாகச் சுருங்கத் தொடங்கிற்று. செவ்வம் சுருங்கிய பின்னும் மாறனார் மனம் சுருங்கவில்லை. அவர்தம் நிலங்களை ஒவ்வொன்றாக விற்றுத் தம்மை நாடி வரும் அடியார்களுக்கு உணவளித்துக் குறைவின்றி உபசரித்துவந்தார். ஒரு நாள் அவ்வூரில் காலையில் தொடங்கிய மழை விடாமல் பெய்துகொண்டிருந்தது. அன்று மாறனார் வீட்டில் உணவுப் பொருள் ஏதும் இல்லையாதலின், தம்முடைய கடும் பசியைத் தாங்கிக் கொண்டு தெருக் கதவைத் தாளிட்டுப் படுத்துறங்கலானார்.
நள்ளிரவில் தெருக்கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டுப் படுக்கையில் இருந்த நாயனார் எழுந்து வந்து கதவைத் திறந்தார். அப்போது வாயிற்படியில் மழை நீரால் நளைந்து குளிரால் நடுங்கிக் கொண்டிருந்த பெரியவரொருவரைக் கண்ட நாயனார், அவரை வீட்டினுள் அழைத்துச் சென்று அவருடைய உடலைத் துடைத்து வெண்மையான ஆடைகளை உடுக்கச் செய்து இருக்கையும் தந்தார்.
பின்னர் அந்நாயனார் தம் மனைவியிடம் சென்று “இப்பெரியார் பெரிதும் பசியுடனிருக்கின்றார். என் முடிந்தவரை செய்வோம்?” என்றார். அது கேட்ட அவர்தம் அன்பு மனைவியார், “இன்று காலை நாற்றங்காலில் தூவிய முனை நெல்லை வாரிக் கொண்டு வந்தால் அதை பக்குவப்படுத்திச் சோறு சமைக்கலாம்” என்றார். மாறனாரும் அந்நள்ளிரவில் தட்டுத் தடுமாறித் தம் நாற்றங்காலை அடைந்து அதில் படிந்திருந்த முனைநெல்லைச் சேற்றோடும் வாரிக்கூடையிற் போட்டுத் தம் தலைமேல் தூக்கி வந்து மனைவியிடம் கொடுத்தார்.. அவ்வம்மையாரும் மனமகிழ்வுடன் அதனைக் கழுவி வறுத்து அரிசியாக்கிச் சோறு சமைத்தார். இதற்குள் மாறளார் தம் வீட்டு புறத்தில் முளைத்திருந்த பலவிதமான கீரைகளைப் பிடுங்கி வந்து மனைவியாரிடம் கொடுத்தார். மனைவியாரும் அவற்றைக் கழுவி ஆய்ந்து இன்சுவைக் கறியாக்கி வைத்தார்.
நாயனார் உடனே இளைப்புற்றிருந்த விருத்திளரை அமுது உண்ண அழைப்பதற்காக அவர் இருப்பிடத்தை அடைந்தார். அச்சமயம். அப்பெரியார் சோதிவடிவாய் மேலெழுந்து தோன்றி நின்றதைக் கண்ட மாறனாரும் அவர் தம் மனைவியாரும் திகைத்து நின்றனர். உடனே சிவபெருமான் தம் அடியவர்களுக்கெல்லாம் அன்புடன் உணவனித்த அவ்வடியார்முன் உமையம்மையாரோடும் விடைமீதிருந்து வானவீதியல் காட்சியளித்து, “அன்பனே, அடியார்க்குக் குறைவின்றி உண்டி வழங்கி உபசரித்த நீ, நின் மனையாளுடன் சிவபதம் அடைத்து அங்குக் குபேரனும் நின் ஏவல் கேட்டு நிற்க இன்ப வாழ்வு பெறுவாய்” என்று திருவாய் மலர்ந்தருளி மறைந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1