திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தின் ஆலயத்தில் இணைந்து அமைந்துள்ள மாரியம்மன் கோவிலாகும். முன் மண்டபம், அதைத் தொடர்ந்து கொடி மரம், பலிபீடம் அடுத்து இவ் வாலயத்தின் கருவறையில் முத்துமாரியம்மன் அமர்ந்த கோலத்தில் உள்ளார்.கோவிலின் திருச்சுற்றில் மதுரை மீனாட்சியம்மன்,காஞ்சி காமாட்சியம்மன் சிலைகள் உள்ளன.
தல வரலாறு :
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் புதைந்து கிடந்து பூசாரி ஒருவரின்அருள்வாக்கின்படி அம்மனின் திருவுருவை பூமியில் இருந்து தோண்டி எடுத்து பச்சை கூடாரத்தில் பிரதிஷ்டை செய்து அப்பகுதிமக்கள் வழிபட்டு வந்துள்ளனர். அந்த சமயத்தில் புதுக்கோட்டை மாவட்டம் மன்னருக்கு இந்த கோவில் சொந்தமானதாக இருந்ததால் சமஸ்தானம் பெரும் புகழோடு விளங்கியது.
பொருளாதார செலவாணிக்காக அம்மன் காசு அடித்து தனியாக நிர்வாகம் செய்த திறமையும், அந்தஸ்தும் புதுக்கோட்டைக்கே உரியதாக இருந்தது. புதுக்கோட்டையை அப்போது ஆண்டு வந்த மன்னரின் மகனுக்கு கடுமையான அம்மை நோய் கண்டு உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்ட போது, முத்துமாரியம்மன் கோவிலுக்கு வந்து தனது மகனை காப்பாற்றி தருமாறு மன்னர் மன்றாடியுள்ளார்.
ஆனால் விதிப்பயன் காரணமாக மன்னரின் மகன் மரணமடைந்தான். மன்னர் ஆத்திரத்திலும், அதிர்ச்சியிலும் தன் நிலை மறந்தார். அந்த இடத்தில் இருந்து அம்மனை வேறு இடம் மாற்ற உத்தரவிட்டார். அரசின் ஆணைப்படி அம்மன் சிலையை வேறு இடம் கொண்டு செல்லுகையில் திருவப்பூர் கிராமத்தினர் வழிமறித்து கெஞ்சி அம்பாளை மீட்டு பாதுகாப்பான இடத்தில் வைத்தனர். அந்த இடம் தற்போது காட்டுமாரியம்மன் கோவில் என்று பக்தர்களால் அழைக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து அன்று இரவு மன்னரின் கனவில் முத்துமாரியம்மன் தோன்றி உனது மகன் விதி வசத்தால் உன்னை விட்டு பிரிந்தாலும் அவனை எனது மகனாக ஏற்றுக்கொண்டேன் எனக்கூறியதாகவும் தவறை உணர்ந்த மன்னர் அம்மனை முன்பு இருந்த இடத்திலேயே அதாவது தற்போது கோவில் அமைந்துள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்யுமாறு உத்தரவிட்டதாகவும் கூறப்படுகிறது. அன்றிலிருந்து மக்கள் தொன்று தொட்டு இந்த அம்மனை வழிபட்டு வருகின்றனர்.
மேலும் இக்கோவிலுக்கு குழந்தை வரம் வேண்டுவோர், தீராத நோய்கள் நீங்கிட வருவோர், வேலை வாய்ப்பு கேட்டு வருவோர், குடும்ப பிரச்சினைகள் தீர்த்திட வேண்டி வருவோர், திருமணம் கைகூட, தடைப்பட்ட திருமணம் நடந்தேற வருவோர், என அனைவரது குறைகளையும் நீக்கி அருள் மாறிப் பொழிகின்றாள் அன்னை முத்துமாரி என்றும் மேலும் அம்மை நோய் கண்டவர்கள் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் வந்து தினமும் வழிபட அம்மை நோய் விரைவில் குணமடையும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
திருவிழா
இக்கோவிலில் ஆண்டு தோறும்மாசித்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்மாசித்திருவிழாவுக்கு முன்பாக பூச்சொரிதல் விழா நடைபெறும் என்றும் இக்கோவில் குருக்கள் தெரிவிக்கின்றனர். புதுக்கோட்டை மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் விரதம் இருந்து கோவிலுக்கு ஊர்வலமாக பால்குடம் எடுத்து வந்து, சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது நேர்த்திக் கடனை செலுத்துவார்கள். இதேபோல பக்தர்கள் அலகு குத்தியும், பறவை காவடி எடுத்தும், தம்பதிகள் கரும்புத் தொட்டில் கட்டி கோவிலுக்கு மேள தாளங்கள், வாண வேடிக்கைகள் முழங்க, ஆட்டம், பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்து வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். தண்ணீர்ப்பந்தல்கள் மற்றும் பல ஆண்டுகள் தொடர்ந்து பாரம்பரிய வழக்கப்படி அன்னதானம் எல்லாம் உண்டு. வாருங்கள் வழிபடுங்கள்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1