gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள்- 12 அரசுரி அம்பிகா மாதா

அம்மனின் சக்தி பீட வரிசையில், குஜராத் மாநிலம், பனஸ்கந்தா பகுதியில் அரசுரி என்ற ஊரில் அமைந்துள்ள அம்பிகா மாதா கோயில் மிகவும் முக்கியமானது. அம்பிகையின் தனங்களுள் ஒன்று விழுந்ததாகக் கூறப்படும் இத்தலத்தில் தேவி, யந்திர வடிவில் விளங்கி அருள் பாலிக்கிறார்.

ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரின் மூன்று பக்கங்களிலும் மலைத் தொடர்கள் உள்ளன. அதில் ஒன்று அபு மலை ஆகும். அபு மலைக்கு அருகில் உள்ள அரசுரி என்ற ஊரில், அம்பிகா, அம்பே மா அம்மன், அம்பாஜி, சச்சார் சவுக்வாலி ஆகிய பெயர்களைத் தாங்கி தேவி அருள்பாலித்து வருகிறார்.




தல வரலாறு

மகிஷாசுரன் என்ற அசுரன் அக்னிதேவனை நோக்கி தவம் புரிந்தான். அவனது தவத்தில் மகிழ்ந்த அக்னிதேவன், அவன் வேண்டியபடி, எந்த ஆயுதத்தாலும் அவனுக்கு அழிவு வரக்கூடாது என்ற வரத்தை அருளினார்.

இந்த வரத்தைப் பெற்றதும் மகிஷாசுரன் இந்திரலோகம், வைகுண்டம், கயிலாலத்தை அடைய விருப்பினான். இந்திரலோகம் மகிஷாசுரனின் வசம் ஆனது. அசுரனின் எண்ணத்தை உணர்ந்த தேவர்கள், இதுகுறித்து தேவியிடம் முறையிட்டனர். தேவியும் அவர்களுக்கு உதவுவதாகக் கூறி, மகிஷாசுரனை அழித்து, இத்தலத்தில் கோயில் கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

மற்றொரு சமயம், சீதையைத் தேடி ராமபிரானும், லட்சுமணனரும் கானகத்தில் அலைந்து கொண்டிருந்தபோது, சிருங்கி முனிவரை தரிசித்தனர். அவரின் ஆலோசனைப்படி அம்பிகா மாதாவை வணங்கினர். தேவியும் ராம சகோதரர்களுக்கு ‘அஜய்’ என்ற அஸ்திரத்தை அளித்து அருள்பாலித்தார். இருவரும், அந்த அஸ்திரத்துடன், இலங்கைக்குச் சென்று ராவணனை வதம் செய்து சீதையை மீட்டு அயோத்தி திரும்பினர்.




அம்பிகா மாதா

அரசுரியில் கோயில் கொண்டிருக்கும் தேவிக்கு, சிலை வடிவம் இல்லை. ‘விஷா ஸ்ரீ எந்திரம்’ என்ற தங்கத்தால் ஆன எந்திரமே இங்கு வழிபடப்படுகிறது. இந்த எந்திரமே சிலை போன்று தோற்றம் கொண்டதாக அமைந்துள்ளது.

51 எழுத்துகள் கொண்ட ஸ்ரீ எந்திரம் ஆமை வாகனத்தின் மீது வைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ எந்திரத்தை தரிசித்தால் செல்வ வளம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஒரு மார்பிள் தகட்டில் பொருத்தி நகைகளால் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ எந்திரம், மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதால், அருகில் சென்று தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அம்மனின் பாதம், ஒரு விளக்கு மட்டுமே சந்நிதியில் உண்டு.




கோயில் அமைப்பு

அம்பிகா மாதா கோயில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கூறப்படுகிறது. கிருஷ்ண பரமாத்மா. அவரது மூன்றாவது வயதில், நந்தகோபர், யசோதையுடன் இத்தலத்துக்கு வந்து, வேண்டுதல் நிறைவேற்றியதாகக் கூறப்படுகிறது.

ஜெய்ப்பூர் மன்னர்கள் கட்டிய அரண்மனைகள், கோயில்கள் கலை அம்சங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் அம்பிகா மாதாவுக்கும் கோயில் எழுப்பப்பட்டது. கோயிலின் வாயிற் கதவு, முரசு ஆகியன வெள்ளியால் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலும் வெள்ளியால் அமைக்கப்பட்டது போன்ற ஓர் உணர்வை ஏற்படுத்துகிறது. சலவைக் கற்களின் வெண்மையும், தன்மையும் அத்தகைய உணர்வை அளிக்கின்றன.

விநாயகர் சித்தி, புத்தி ஆகிய மனைவியருடனும், சுப், லாப் (சுபம், லாபம்) ஆகிய மகன்களுடனும், குஷல், சாம் ஆகிய பேரன்களுடன் இருப்பது போன்று, அவரது சந்நிதியில் விக்கிரகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேவியின் சந்நிதிக்கு எதிரில் நாகேஸ்வரர், அனுமன், நாகராஜர் விக்கிரகங்கள் உள்ளன. 900 படிக்கட்டுகள் கொண்ட இக்கோயிலுக்கு ரோப்கார் வசதி உண்டு.




திருவிழாக்கள்

நவராத்திரி நாட்களில் இந்த தலத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஜூலை மாதத்தில் பத்ராவி பூர்ணிமா கொண்டாடப்படும். தீபாவளி நாளில் கோயில் முழுவதும் விளக்குகளால் அலங்கரிக்கப்படும். லட்சுமி தேவி எண்ணெயில் வாழ்வதால், ராஜஸ்தான் மக்களும், தீபாவளித் திருநாளில் எண்ணெய் குளியல் எடுப்பது வழக்கமாக உள்ளது. அன்றைய தினத்தில் லட்சுமி பூஜை செய்வதுண்டு.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!