gowri panchangam Sprituality

அருள்தரும் சக்தி பீடங்கள் – 9 ஸ்ரீசைலம் பிரமராம்பாள்

ஆந்திர மாநிலத்தின் கர்னூல் மாவட்டத்தில், நந்தியால் புகைவண்டி நிலையம் அருகே அமைந்துள்ளது ஸ்ரீசைலம் (திருப்பதம்). இத் தலத்தில் அம்பிகையின் கழுத்துப் பகுதி விழுந்ததாகக் கூறப்படுகிறது. சமயக் குரவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோரால் பாடல்பெற்ற இத்தலம் பன்னிரு ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகிறது.

பருப்பதநாதர் என்று அழைக்கப்படும் இத்தல ஈசன், மல்லிகார்ஜுனர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். பருப்பத நாயகி, பிரமராம்பாள் என்று இத்தல அம்பிகை அழைக்கப்படுகிறார். ‘செல்லூர் வரிய சிவன் ஸ்ரீ பர்ப்பத மலையை’ என்று சுந்தரமூர்த்தி நாயனார் ஸ்ரீசைல மலையைப் போற்றிப் பாடியுள்ளார்.

திருவாரூரில் பிறந்தால் முக்தி, காஞ்சியில் வாழ்ந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி, காசியில் இறந்தால் முக்தி, அண்ணாமலையை நினைத்தால் முக்தி என்று சிவபெருமானின் புனிதத் தலங்களின் பெருமைகளைக் கூறுவதுபோல, ஸ்ரீசைல ஈசனை தூரத்தில் இருந்தே வணங்கினாலும் வீடுபேறு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.




தல வரலாறு

சிலாதர் என்ற மகரிஷி, பிள்ளைப்பேறு வேண்டி சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார். சிவபெருமான் மகரிஷியின் தவத்தில் மகிழ்ந்து வரம் அளித்தார். மகரிஷிக்கு நந்திதேவர், பர்வதன் ஆகிய இரு மகன்கள் பிறந்த நேரத்தில், நந்திதேவர் குறைந்த ஆயுளே இவ்வுலகில் இருப்பார் என்று சனகாதி முனிவர்கள் கூறினர். சிலாதர் மகரிஷி இதுகுறித்து வருந்தினார்.

தந்தையின் வருத்தத்தை உணர்ந்த நந்திதேவர், அதுகுறித்து வருந்த வேண்டாம் என்று கூறி, சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவபெருமானும் நந்திதேவருக்கு சாகா வரமளித்து அவரை தன் வாகனமாக்கிக் கொண்டார். மேலும், நந்திதேவர் அனுமதியின்றி தன்னை யாரும் காண இயலாது என்ற உத்தரவையும் பிறப்பித்தார்.

நந்திதேவர் தவம் புரிந்த மலை ‘நந்தியால் மலை’ என்று அழைக்கப்பட்டது. நந்திதேவர் அவதரித்த தலம் என்பதால் இத்தலத்தில் சிவபெருமானை வணங்கினால், எளிதில் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. நந்திதேவரின் தம்பி பர்வதனும் சிவபெருமானை நோக்கி தவம் இருந்து பர்வத மலையாக மாறும் வரம் பெற்றார்.




கோயில் சிறப்பு

ஸ்ரீசைலம் மலை 1,560 அடி உயரத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது. வேதாந்திகள், சித்தி பெற்ற புருஷர்கள், பரமயோகிகள் இத்தலத்தில் வசிப்பதால் இதற்கு ‘தட்சிண கைலாயம்’ என்ற பெயரும் உண்டு. கிருதாயுகத்தில் இரணியனும், திரேதாயுகத்தில் ஸ்ரீராமரும், துவாபரயுகத்தில் பாண்டவர்களும், கலியுகத்தில் ஆதிசங்கரரும் இங்கே சிறப்பு ஆராதனைகள் செய்துள்ளனர்.

மல்லம்மா என்ற பக்தை இறைவன் மீது கொண்ட பக்தியால், கண்ணீருடன் காட்சியளிக்கும் சிலை இங்குள்ளது. பாண்டவர்கள் தங்கிய மடம், மலைப்பாறை மீது செதுக்கப்பட்டுள்ள பீமனின் பாதங்கள் இங்குள்ளன. சிவபெருமான் தன் சூலத்தை ஊன்றி நின்று அருள்பாலித்த தலம் என்பதால், இத்தலத்து மூலவர் விமானத்தின் மீது சூலம் வைக்கப்பட்டுள்ளது.

இங்கு, எவ்வித நித்திய கர்மங்களையும் செய்யாமலேயே (நீராடாமல்) இறைவனுக்கு பக்தர்களே அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். இதற்கு ‘தூளி தரிசனம்’ என்று பெயர். தூய மனதுடன், சாதி, மத பேதமின்றி யாரும் இறைவனை அணுகலாம் என்பதே இதன் விளக்கம்.

இத்தலத்தில் மிக பிரம்மாண்டமான நந்திதேவர் சிலை அமைந்துள்ளது. மல்லிகார்ஜுனர் சந்நிதி கீழே இருக்க, 30 படிகள் உயரத்தில் பிரமராம்பாள் தேவி சந்நிதி அமைந்துள்ளது. சாட்சி விநாயகருக்கு தனிக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. திருவிடை மருதூர், திருப்புடை மருதூர் ஆகிய தலங்களில் இருப்பதுபோல, இத்தலத்திலும் மருத மரமே ஸ்தல விருட்சமாக அமைந்துள்ளது. சஹஸ்ரலிங்கத்துக்கு தனி சந்நிதி உள்ளது. கிருஷ்ணா நதி, ஸ்ரீசைலத்தில் ‘பாதாள கங்கை’ என்று அழைக்கப்படுகிறது.




மல்லிகார்ஜுனர்

மல்லிகாபுரியில் ஆட்சி புரிந்த மன்னர் சந்திரகுப்தனுக்கு சந்திரலேகா என்ற மகள் உண்டு. அவர் தினமும் மல்லிகை மற்றும் அர்ஜுனா மலர்களால் சிவபெருமானை பூஜித்து வந்தார். இதன்காரணமாகவே இத்தல ஈசனுக்கு ‘மல்லிகார்ஜுனர்’ என்ற பெயர் விளங்கியதாகக் கூறப்படுகிறது. மல்லிகார்ஜுனருக்கு பக்தர்களே அபிஷேக ஆராதனைகள் செய்யலாம். கைலாயத்துக்கு அடுத்தபடியாக ஸ்ரீசைலம் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. காசியில் பல ஆண்டுகள் தவமிருந்து கிடைத்த பலன், மல்லிகார்ஜுனரை ஒருமுறை தரிசனம் செய்தால் கிடைத்துவிடும் என்று கந்த புராணம் உரைக்கிறது.




திருவிழாக்கள்

யுகாதி (தெலுங்கு வருடப் பிறப்பு) ஆவணி மாத சப்தமி, மஹா சிவராத்திரி, கார்த்திகை சோமவாரம், பிரதோஷ தினங்களில் மல்லிகார்ஜுனருக்கும் பிரமராம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். பல்வேறு வாகனங்களில் வீதியுலாவும் நடைபெறும்.

இதைத் தொடர்ந்து, பக்தர்கள் திருமணத் தடைகள் நீங்க, பிள்ளைப்பேறு கிட்ட, வழக்குகளில் வெற்றிபெற, லட்சியம் நிறைவேற அம்மை, அப்பனின் அருள்வேண்டி அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து, வஸ்திரம் அணிவித்து, திருக்கல்யாண உற்சவம் செய்வது வழக்கமாக உள்ளது.




What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!