Entertainment News

தூக்கத்தைக் கெடுக்கும் குறட்டையை விரட்டுங்கள்

 




நம் பக்கத்தில் யாராவது தூங்கும் போது குறட்டை விட்டால் எப்படி இருக்கும். கண்டிப்பாக எரிச்சலாக இருக்கும். இதுவே உங்க வீட்டில் இருக்கும் ஒரு நபர் என்றால் அவரது பிரச்சனையை களைய முற்படுவோம்.

வயது, புகைப்பிடித்தல், மனஅழுத்தம் இப்படி பல காரணங்கள் இதற்குப் பின்னால் இருக்கின்றன. உங்களுக்குக் குறட்டை வருவதை நிறுத்த வேண்டுமென்றால், அதற்கு முதலில் குறட்டை வர என்னென்ன காரணங்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு குறட்டையை எப்படி தவிர்க்கலாம் என்பது புலப்படும்.

 

குறட்டை என்பது எல்லோருக்கும் இருக்கும் ஒரு பொதுவான பிரச்சனை ஆகும். நீங்கள் படுக்கும் தோரணை, உணவுப் பழக்க வழக்கங்கள், மதுப்பழக்கம், புகைப்பழக்கம் இப்படி ஏராளமான காரணிகளைக் கொண்டு வருகிறது. இதையே உடல்கூறு ரீதியாக பார்த்தால் தூங்கும் போது நாம் சுவாசிக்கும் காற்று மூக்கு மற்றும் தொண்டை வழியாக நகர முடியாமல் ஒரு வித சத்தத்தை ஏற்படுத்துகிறது. அதுவே குறட்டை. ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் போது நம் தொண்டையில் உள்ள தசைகள் ஒய்வெடுக்கின்றன. இவை சில நேரங்களில் தடையை ஏற்படுத்தும். இதனால் தான் குறட்டை சத்தம் வெளிவருகிறது. அதே போல் ஆல்கஹால், புகைப்பிடித்தல் போன்ற பழக்கங்கள் காற்று பாதையில் அடைப்பை உண்டாக்கி குறட்டைக்கு காரணமாகின்றன. சரி வேறு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன என்பதை கீழே பார்ப்போம்.

 

  • தூக்கமின்மை,

  • சீரணமின்மை

  •  ரத்த அழுத்தம்

  • தூக்க மாத்திரைகள்  இவைகள் தான் குறட்டை ஏற்பட காரணமாக கருதப்படுகிறது.




அதிகப்படியான உடல் எடையைக் குறைத்தல், மதுப்பழக்கத்தை தவிர்த்தல், பக்கவாட்டு நிலையில் படுத்து உறங்குதல், சற்று உயரமான தலையணையைப் பயன்படுத்துதல் போன்ற ஒரு சில வாழ்வியல் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலமாக குறட்டை விடுவதை நிறுத்த முடியும். இதுதவிர குறட்டை பிரச்சினையை தீர்ப்பதற்கு இயற்கையான வழிகள் சிலவற்றைக் காண்போம்.

நீராவி பிடித்தல்: குறட்டைக்கான காரணங்களில் ஒன்று மூக்கில் ஏற்படும் அடைப்பு. இதனால், தூக்கத்தில் மூச்சுத்திணறல் ஏற்படும். இதற்கு ஒரு பாத்திரத்தில் கொதிக்கும் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் இருந்து வரும் நீராவியை 10 நிமிடங்களுக்கு மூக்கு வழியாக உள்ளிழுக்க வேண்டும். படுக்கைக்குச் செல்லும் முன்பு இவ்வாறு செய்யலாம். இதனால், மூக்கில் உண்டாகும் அடைப்பு நீங்கி, குறட்டை விடுவது நிற்கும்.

புதினா மற்றும் வெந்தயம்: செரிமானப் பிரச்சினைகளாலும் குறட்டை ஏற்படலாம். இதற்கு, புதினா மற்றும் வெந்தயம் சிறந்த தீர்வாகும். வெந்தயம் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டது. சிறிதளவு வெந்தயத்தை தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைத்து, அதை தூங்கச் செல்வதற்கு முன்பு சாப்பிடலாம். அதேபோல், ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் வெந்தயப் பொடி மற்றும் சிறிதளவு புதினா இலைகளைப் போட்டு 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். இந்த நீரை வடிகட்டி, அதில் சிறிது தேன் கலந்து குடிக்கலாம். இதனால், செரிமான பிரச்சனை நீங்குவதுடன், இரவில் நிம்மதியான உறக்கமும் கிடைக்கும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் தேன்: அரை டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் அரை டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் இரண்டையும் நன்றாகக் கலந்து, படுக்கைக்குச் செல்லும் முன்பு சாப்பிடலாம். இதுதவிர ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டேபிள் ஸ்பூன் தேன் கலந்து தூங்கச் செல்வதற்கு முன்னர் குடிக்கலாம். இது தொண்டைக்கு இதமாக இருப்பதுடன், குறட்டையையும் தடுக்கும்.

பூண்டு: பூண்டில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. இது சுவாச மண்டலத்தைச் சுத்தப்படுத்தி, நாசி பாதையில் சளி படிவதைத் தடுத்து குறட்டையைக் குறைக்கும். 2 அல்லது 3 பூண்டு பற்களை எடுத்து மென்று சாப்பிடவும். பின்னர் ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கவும். படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் குறட்டை நிற்கும்.




What’s your Reaction?
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!