20
நர்மதாவிற்கு மீண்டும் மயக்கம் தெளிந்த போது அந்த அறை மிகவும் அந்நியமாகத்தான் தோன்றியது. இது என்ன இடம் …? நான் எங்கே இருக்கிறேன்…? எழுந்து ஆராய நினைத்தாள். ஆனால் அவளது உடம்பு அதற்கு ஒத்துழைக்க மறுத்தது .கொஞ்சம் இருள் கண்ணுக்கு பழகியதும் இப்போது அறைக்குள் லேசான வெளிச்சம் வருவது போல் தோன்றியது .முதலில் கண்ணில் பட்டது எதிர் சுவரில் இருந்த மரப்படிகள் தான்.
அரை மயக்கத்தில் இந்த படிகள் வழியாகத்தான் அவள் நடத்தி இங்கே கூட்டி வரப்பட்டாள் . அதற்கு முன்பு …இன்னமும் அவள் முளையை கசக்கி கஷ்டப்பட்டு யோசிக்க , அங்கே வீட்டில் அவளை அழைத்தது யார் ….சுமித்ரா ,மாதீரன் என்று உருவங்கள் மிதந்து கொண்டிருந்த அவள் மனக் குளத்திற்குள் அந்த முகம் தெளிவாக தெரிந்த போது அவள் அதிர்ந்தாள்.
தாண்டவன்…? அவனா…?
இப்போது எதிரே இருந்த மரப்படி லேசாக அசைய படி வழியாக இறங்கி வந்தவன் தாண்டவன்தான்.
” எப்படி இருக்கிறாய் நர்மதா ? ”
” தாண்டவா நீயா ? என்னை ஏன் இங்கே கூட்டி வந்தாய் ? இது எந்த இடம் ? ”
” நானேதான் .உன் தாண்டவன்…”
அந்த ‘ உன் ‘ னில் சுளித்த அவள் முகத்தை பார்த்தவன் ” வெறுமனே சொல்வதைக் கூட உன்னால் தாங்க முடியவில்லை …ம் ” உறுமினான் .
இப்போதுதான் அவனது அதட்டலை உணர்ந்த நர்மதா ” ஏய் என்ன சொல்கிறாய் ? ஒழுங்காக பேசித் தொலை ” எரிந்து விழுந்தாள் .
” நீ என்னுடையவள் …என்னவள் என்று சொல்கிறேன் ”
” என்ன …? ஏய் பைத்தியம் பிடித்து விட்டதா உனக்கு ? அப்பா காதில் மட்டும் இந்த பேச்சு விழுந்த்து உன் தோலை உரித்து தொங்கவிட்டு உப்புக்கண்டம் போட்டுவிடுவார் ” நர்மதா சொன்ன மறுநிமிடம் தாண்டவனின் கை இடியாக அவள் கன்னத்தில் இறங்கியது .
” எவ்வளவு திமிர்டி உனக்கும் உன் குடும்பத்திற்கும் ? உங்கள் வீட்டிற்கு ஏவல் வேலை பார்க்க நான் பிறந்தேனென்று நினைத்தீர்களா ? உங்கள் தேவைகளுக்கு கடைகளுக்கு ஓடிக்கொண்டு , தோட்டத்தில் பாத்தி கட்டிக் கொடுத்துக் கொண்டு , கீரைக்கட்டு எண்ணி விற்றுக் கொண்டு உங்கள் வீட்டை சுற்றி வரும் நாய் என்று நினைத்தீர்களா ? ”
நர்மதா அடி வாங்கிய கன்னத்தை அதிர்ச்சியுடன் தடவினாள் .” தா…தாண்டவா …” பயமாக அவனைப் பார்த்தாள் .
” இப்படி அடிமை வேலை செய்து கொண்டேனும் உங்கள் வீட்டையே சுற்றி வந்த்தற்கு காரணம் என்ன தெரியுமா ? நீ …நீ மட்டும்தான் .என்றாவது ஒரு நாள் உன் அப்பா உன்னை எனக்கு திருமணம் செய்து கொடுப்பார் என்று நம்பினேன் .ஆனால் …அந்த ஆள் திடீரென ஒரு நாள் என்னுடன் வாடா , நர்மதாவிற்கு ஒரு மாப்பிள்ளை பார்த்திருக்கிறேன் .அங்கே போய் விசாரிக்க வேண்டும் என்கிறார் .எனக்கு எப்படி இருந்திருக்கும் ? ”
அடுத்தடுத்த மூளையை தாக்கிய இடிச் செய்திகளிலிருந்து மீள முடியாமல் பேந்த விழித்து அமர்ந்திருந்தாள் நர்மதா .
” இந்த மாப்பிள்ளையை பற்றி இல்லாத்தும் , பொல்லாத்தும் சொல்லி உன்னைக் குழப்பி வீட்டை விட்டு வெளியேற வைத்தேன் .ஆனால்அந்த திட்டம் தோல்வி .பிறகும் திருமணத்தை நிறுத்த நான் எடுத்த எல்லா முயற்சிகளும் தோல்விதான் .எவ்வளவு படித்து படித்து உன்னிடம் பேசி தயார் செய்தாலும் கடைசியில் உன் அப்பா காலில் விழுந்து விட்டாய் .செக்காரக்குடிக்கு வந்த்தும் கல்யாணத்தை நிறுத்தும் வழியை நான் தேடிக் கொண்டிருக்க நீ ஜாலியாக அந்த மாட்டுக்காரனுடன் வண்டியில் ஊர்வலம் வருகிறாய் .ஓவ்வொருதடவையும் மூளையை கசக்கி புதிது புதிதாக நான் யோசிக்க வேண்டியதாயிற்று ”
” அ…அப்படி யோசித்து என்னென்ன செய்தாய் ? ” நர்மதாவின் குரல் நடுங்கியது .
தாண்டவன் அவளைப் பார்த்த பார்வையில் குரூரம் இருந்த்து .” என்னால் முடிந்த்தை செய்தேன் .அந்த மாதீரனை குழப்பினேன் .உனக்கு அவனைப் பிடிக்கவில்லை என்றேன் .அவனோடு வாழும் நிலை வந்தால் நீ தற்கொலை செய்து கொள்வாய் என்றேன் ”
” அடப்பாவி இதையெல்லாம் எப்போது செய்தாய் ? ”
” கல்யாணத்திற்கு இங்கே வந்து இறங்கிய் முதல் நாளே …அவனை தேடிப் போய் நேரடியாகவே பேசினேன் .நீ உன்னுடன் காலேஜில் படித்த ஒருவனை காதலிப்பதாகவும் , கல்யாணத்தை நிறுத்தி விடுமாறும் சொன்னேன் . பாவம் பய …நடுங்கிட்டான் .அப்படியே இஞ்சி தின்ன குரங்கு மாதிரி மூஞ்சை வச்சிட்டு நின்னான் .” எக்களித்து கை கொட்டி சிரித்தான் தாண்டவன் .
நர்மதாவிற்கு மாதீரனின் சில புரிந்து கொள்ள முடியாத நடவடிக்கைகளுக்கான காரணம் புரிந்த்து . சாதாரணமாக சந்திரனுடன் தான் பேசிக் கொண்டு நின்றதைக் கூட அவன் தவறாக நினைத்ததன் காரணம் இப்போது புரிந்த்து .
” உனக்கு சோறு போட்டு படிக்க வைத்து வளர்த்தற்கு எங்கள் குடும்பத்திற்கு நீ காட்டும் நன்றிக்கடன் இதுவா ? ”
” என்னை நாயென்று நினைத்தாயா …உங்கள் பின்னாலேயே வாலாட்டிக் கொண்டு வர ? உங்களுக்காக எப்படி உழைத்தேன் …? என்னை மாப்பிள்ளையாக்கிக் கொள்ளும் எண்ணம் வீட்டில் யாருக்கும் வரவில்லையே …” பொருமினான் .
” தெருநாயை எல்லாம் வீட்டிற்குள் கொண்டு வந்து வைக்க என் அம்மாவும் , அப்பாவும் முட்டாள்கள் இல்லை ” நர்மதா மீண்டும் அவனிடம் அடி வாங்கினாள்.
” யாருடி நாய் ? நான் சிங்கம்டி .எப்படி நினைத்ததை சாதித்தேன் பார்த்தாயா ? இதோ இத்தனை பேர் உன்னைச் சுற்றி இருக்கும் போதே அவர்கள் எல்லோர் கண்களிலும் மண்ணை தூவி உன்னைத் தூக்கி வந்துவிட்டேன் பார்த்தாயா ? இங்கே இரண்டு நாட்கள் தங்குகிறோம் .பிறகு மும்பையில் எனக்கு வேலை கிடைத்திருக்கிறது .நாம் இருவரும் அங்கே போய் புது வாழ்க்கையை தொடங்க போகிறோம் ”
நர்மதா கர்வமாக சிரித்தாள் ” உனக்கு என் புருசனை பற்றி தெரியாது .அவர் ராணுவ வீரன். உண்மையிலேயே வீரன் . நீ சொன்ன பொய்களையெல்லாம் தாண்டி என் மீது மிகுந்த காதல் வைத்திருப்பவர்.அவரை தாண்டி உன்னால் என்னை நெருங்க முடியாது ”
” பெரிய்ய வீரன் …அந்த வீராதிவீரன் இப்போது என்ன சொல்லிக் கொண்டிருக்கிறான் தெரியுமா ? நீ்உன் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிப்போய்விட்டதாக உன் அப்பாவிடம் சொல்லிக் கொண்டிருக்கிறான் .”
” இல்லை .நான் நம்பமாட்டேன் .நீ பொய் சொல்கிறாய் ” நர்மதா வீறிட்டாள் .
” சத்தியம் நர்மதா .இதோ இப்போதுதான் என் காதால் அவன் பேச்சைக் கேட்டு விட்டுத்தான், சந்தோசமாக உன்னைப் பார்க்க வந்தேன் .அப்படியே சந்தேகம் வந்து தேடினாலும் அவனால் இந்த இடத்தை கண்டு பிடிக்கவே முடியாது “
நர்மதா இமை அசைக்காமல் அதிர்ச்சியுடன் உட்கார்த்து விட்டாள் .” இல்லை .அப்படி இருக்காது .அவர் அப்படி இல்லை ” புலம்பினாள் .
” நான் அந்த ஆளுக்கு கொடுத்த நம்பிக்கை அப்படி .உங்கள் கல்யாணத்திற்கு முன்பிருந்து இதோ இப்போது சற்று முன் வரை அவனை நன்றாக குழப்பி விட்டு வந்திருக்கிறேன் .”
” என்ன இப்போதுமா ? ”
” ஆமாம் , போன வாரம் கூட இன்னமும் வாட்ஸ்அப்பில் நீ டவுன்லோட் செய்யாமல் வைத்திருந்த அவனுடைய போட்டோவை எடுத்துக் காட்டினேன் . இப்படி போட்டோவில் கூட உன் முகம் பார்க்க அவளுக்கு பிடிக்கவில்லை என்றேன் ”
” அடப்பாவி …அது ஒரு சாதாரண விசயம் …”
” அவனுக்கு அப்படி இல்லையே. பேயறைந்த்து போல் நின்றான் .எனது பொய்களுக்கு வசதியாக இந்த ஊரில் சந்திரன் வந்து மாடடினான். அவனே உன் காதலன் என தோன்றும்படி நான் பேசிக் கொண்டிருக்க நீ திடீரென அவனுக்கும் அந்த சுமித்ராவிற்கும் கல்யாணம் முடித்து வைத்துவிட்டாய் .அடுத்து என்ன செய்வதென நான் குழப்பத்தில் இருந்த போது நீயாகவே வீட்டை விட்டு விரட்டி விட்டார்களென வந்து நின்றாய் .சரி அவ்வளவுதான் இனி நம் ராஜாங்கம்தான் என்று நினைத்திருந்த போது அடுத்த இடைஞ்சல் .உனது கர்ப்பம் …” அளவில்லா வெறுப்பைக் கக்கின அவன் கண்கள் .
” இ…இது உனக்கு எப்படித் தெரியும்? ”
” உன்னை ஒவ்வொரு நிமிடமும் கண்காணிப்பவன் நான் .எனக்கு தெரியாதா ? எனக்கு மட்டுமில்லை உன் புருசனிக்கும் கூட இது தெரியும் ”
நர்மதா அதிர்ந்தாள் .வயிற்றில் அவர் குழந்தையை சுமக்கிறேன் எனத் தெரிந்த பிறகுமா என்னைப் பிரிய நினைக்கிறார் …விம்மல் வெடித்து கிளம்பியது அவளிடமிருந்து
” உனக்கு பிடிக்காத குழந்தை இது .இதனை நீ அபார்சன் செய்து கொள்ள நினைக்கிறாய் என்று அவனிடம் சொல்லி வைத்திருக்கிறேன்.”
” அடப்பாவி உருப்படுவாயா நீ ..? ” கை உயர்த்தி் சாபம் இட்டாள் .
” எனக்கு குழந்தை பிறக்க போகிறது .இனி நாங்கள் பிரியமாட்டோம் என்று என்னிடமே வந்து சொல்கிறான் .எனக்கு எப்படி இருக்கும் .அதுதான் அவனுக்கு இந்த அதிர்ச்சி கொடுத்தேன் .உன் தங்கையின் வாழ்க்கையை சரி செய்துவிட்டு , கருவை கலைத்துவிட்டு நீ உன்னுடன் படித்த சந்திரனின் நண்பனான உன் காதலனுடன் போய்விடப் போகிறாய் என்று அவனை நம்ப வைத்திருக்கிறேன் ”
” சீ நீயெல்லாம் மனிதனாடா ? ” சட்டையை பிடித்து உலுக்கியவளை எளிதாக கீழே பிடித்து தள்ளினான் . தடுமாறி கீழே விழுந்தவள் சுற்றிலும் பார்வையை ஓட்ட , இப்போது அந்த இடம் அவளுக்கு பிடிபட்டது .
” டேய் இது எங்கள் வீடு .என் பிறந்த வீடு .இங்கேயா என்னை பிடித்து வைத்திருக்கிறாய் ? ”
” அட கண்டுபிடித்து விட்டாயே .இது உன் அப்பாவின் வீட்டில் அடியில் இருக்கும் நிலவறை .இப்படி ஒரு அறை இருப்பது உன் அப்பாவை தவிர யாருக்கும் தெரியாது .உன் வீட்டிலேயே உன்னை வைத்திருப்பேன் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் .அதனால் உன்னைக் காப்பாற்ற யாரும் வரமாட்டார்கள் .”
நர்மதாவின் முகத்தில் பயம் பரவினாலும் நம்பிக்கை போகவில்லை .அது அவள் காதல் கணவனின் மேல் வைத்த நம்பிக்கை .
” ஒரு நாள் …ஒரே ஒரு இரவு உங்கள் இருவரையும் தனிமையில் இருக்க விட்டேன் .அன்று எனக்கு வேறு வழி் தெரியவில்லை .அதுவும் இரண்டு பேரும் சண்டை போடுவதற்கான எல்லா வித பேச்சுக்களையும் இருவரிடமும் பேசித்தான் அனுப்பினேன் .அதற்குள்ளாகவே உங்களுக்கென ஒரு குடும்பத்தை உருவாக்கியிருக்கிறீர்கள் .எனக்கு எவ்வளவு ஆத்திரம் இருக்கும்? ” பற்களை கடித்தான் .
” அதன் காரணம் எங்கள் இருவருக்குள்ளும் இருக்கும் காதல் .அது உனக்கு சொன்னால் புரியாது .இதோ இப்போதும் நீ எத்தனையெத்தனை பொய்களை சொன்னாலும் அவற்றையெல்லாம் தாண்டி அவர் என்னைக் காப்பாற்ற வருவார் பாரேன் ”
” கிழித்தான் .நான் என்ன சொன்னாலும் நம்புகிறான் .அவனே இப்போது ஊருக்குள் சொல்லிக் கொண்டிருப்பான் …என் பொண்டாட்டி ஓடிப் போய்விட்டாள் என்று ” ஆணவமாக பேசிக் கொண்டிருந்த தாண்டவன் திடுமென அலறியபடி துள்ளி வந்து அவள் கால்களில் விழுந்தான் .
” என் பொண்டாட்டி தங்கம்டா .அவளை அப்படி நினைப்பேனென நினைத்தால் நீதான்டா முட்டாள் ” சொன்னபடி பின்னால் நின்றிருந்தவன் மாதீரன் .காலால் ஓங்கி மிதித்து தாண்டவனை கீழே தள்ளியிருந்தான் .
” என் உயிர்டா அவள் .என் உயிரையே நான் சந்தேகப்பட்டால் பிறகு நானெல்லாம் மனிதனே இல்லைடா .செத்த பிணம் .உன்னுடைய பேச்சுக்களால் குழம்பினேனே தவிர அவளை சந்தேகப்படவில்லை .என்னுடைய குழப்பமெல்லாம் அவளுக்கு என்னைப் பிடிக்கவில்லையோ என்பதுதானே தவிர அவளது குணத்தின் மீது அல்ல ” பேசிக் கொண்டே தாண்டவனை புரட்டி எடுத்துக் கொண்டிருந்தவனை கண் கலங்க பார்த்தபடியிருந்தாள் நர்மதா .
” நீ சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவது போல் நடித்துவிட்டு , உன்னை முன்னால் போகவிட்டு பின்னால் வந்திருக்கிறேன் ” மாதீரனின் வேகம் குறையவில்லை .
” மச்சான் போதும் போதும் அவனை விடுங்கள் ” கத்தியபடி உள்ளே வந்தான் சந்திரன் .அவனோடு முனியாண்டியும் , வீரபாகுவும் .
” மாப்பிள்ளை இவனை போலீஸ் ஸ்டேசனுக்கு கூட்டிப் போங்கள் ” முனியாண்டி தாண்டவனின் சட்டையை பிடித்து இழுத்து சந்திரனிடம் தள்ளினார் .சந்திரனும் , வீரபாகுவும் அவனை இழுத்துப் போயினர் .
” மாது நீயும் வா .நாம் போய் ஸ்டேசனில் ஒரு கம்ப்ளைன்ட் எழுதிக் கொடுத்து விட்டுவந்து விடலாம் ” என்றபடி திரும்பிய முனியாண்டி ஒருவரையொருவர் பார்த்தபடி நின்ற இருவரையும் பார்த்ததும் ….
” மருமகளை வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு ஸ்டேசனுக்கு வா மாது ” என்றுவிட்டு கிளம்பினார் .
விழுங்கும் விழிகளால் மனைவியை பார்த்தபடியே அவள் அருகே நெருங்கிய மாதீரன் , அவள் முன் மண்டியிட்டான் .அண்ணாந்து அவளைப் பார்த்தான் .
” ஏதாவது ஒரு சிறு சந்தர்ப்பத்திலாவது உன்னை சிறு துளியளவிலேனும் சந்தேகமாய் பார்த்திருந்தேனானால் அதற்காக என்னை மன்னித்துவிடு நர்மதா ” சொல்லிவிட்டு அவள் கால்களைக் கட்டிக் கொண்டு வயிற்றில் முகம் புதைத்துக் கொண்டான்.
அடி வாங்கி் அழும் குழந்தையாய் மடி புதைத்திருந்த கணவனின் தலையை வருடினாள் நர்மதா .” போதும் எழுந்திருங்க ”
” ம் …” என்றவன் அவள் வயிற்றில் முத்தங்கள் பதிக்க ஆரம்பித்தான் .” நம் குழந்தை …நாம் உருவாக்கிய நமது உயிர் …”
அப்பாவின் முத்தங்களில் சிலிர்த்து மேலும் மேலும் வளர ஆரம்பித்தது நர்மதாவின் கரு
– நிறைவு –
Recent Comments