19
“ஹை இந்த ஸ்விம்மிங் பூல் ரொம்ப நல்லா இருக்கே..” மொட்டை மாடியில் இருந்த அந்த ஸ்விம்மிங் பூலை பார்த்ததும் குதூகலித்தாள் சஸாக்கி..
“குளித்தால் ரொம்பவே நன்றாக இருக்கும் சஸி குளிக்கலாமா..?” கார்த்திகா அழைக்க உடனடியாக தலையாட்டியதோடு குளத்தினுள் குதித்தும் விட்டாள் சஸாக்கி..
“ஹேய் ஸ்விம்மிங் தெரியுமா உங்களுக்கு..?”
சஸாக்கி பதில் சொல்லவில்லை.. செய்து காட்டினாள் நீருக்கடியில், மேலே மிதந்தபடி என பலவகை நீச்சல்களை செய்து காட்டினாள்..
இருவருமாக அரைமணி நேரமாக அந்த குளத்தை கலக்கினர்..
“ஏய் உங்கள் சத்தம் என் ரூம் வரை கேட்கிறது.. என்ன செய்கிறீர்கள்..?” என்றபடி பாலகுமரன் வந்தான்..
“அண்ணா சஸி அழகாக நீச்சல் அடிக்கிறார்கள் அண்ணா பாருங்கள்..” தங்கை காட்டிய திசையில் பார்த்தவனுக்கு தனது விழியை நகற்ற முடியவில்லை..
அண்ணனின் பார்வையை கவனித்த கார்த்திகா தோள்களை குலுக்கிக் கொண்டாள்..
“நீங்களும் குளிங்க அண்ணா.. நான் போகிறேன்..” வெளியேறி விட்டாள்..
பாலகுமரன் ஆவலோடு உள்ளே இறங்கினான்.. குளத்தினடியிலேயே சுற்றி விட்டு மேலேறி வந்த சஸாக்கி.. “தண்ணீர் சூப்பரா இருக்கு பாலா..” அவன் தோள் பற்றி குதூகலித்தாள்..
“நீயும் சுப்பராக இருக்கிறாய் சகி..” முணுமுணுத்தபடி அவள் கன்னத்தில் இதழ் பதித்தான்..
“ப்ச் விடுங்க நான் ஸ்விம் பண்ணனும்…” சிணுங்கியபடி அவனிடமிருந்து விடுபட்டு நீரினுள் பாய்ந்தாள்..
சுழன்று வளைந்து கயலாய் துள்ளியவளை மோகமாய் பார்த்து நின்றான் பாலகுமரன்.. அவனை கடந்து நீந்தி போக முயன்றவளை இடை பற்றி தன்னருகே இழுத்து இறுக்கினான்..
“டால்பின் மாதிரி துள்ளுற சகி.. கொஞ்ச நேரம் இங்கே நில்லேன்..”
“ம்.. ம்ஹூம்..” சிணுங்கியபடி தன் காதை குடைந்தாள் அவள்..
“காதுக்குள் தண்ணி போயிடுச்சு பாலா..” குழந்தை போல் புகாரளித்தவள் அவனது பொறுமையை மிக சோதித்தாள்..
அவளை தொடுவதை அவள் அவ்வளவாக விரும்ப வில்லை என்பதை உணர்ந்து கொஞ்ச நாட்களாக விலகி இருந்தவனால் இப்போதும் அப்படி இருக்க முடியவில்லை.. தனை மறந்து அவளை தனக்குள் இழுத்து அவளுள் தான் முழுக முனைந்தான்.. முதலில் சில நிமிடங்கள் எந்நேரமானாலும் தன்னை உதறுவாளென்றோ.. தள்ளுவாளென்றோ.. அறையக் கூட செய்வாளொன்றோ ஒரு சிறு ஜாக்கிரதை உணர்வோடே அவளை அணுகியவன், நேரம் செல்ல செல்ல தனையே மறந்து சஸாக்கியுடன் பிணைந்திருந்தான்..
அவன் எதிர்பார்த்தது போன்ற எந்த எதிர் வினையும் சஸாக்கி பக்கமிருந்து வராமல் போகவே, பாலகுமரன் கள்ளுண்ட வண்டானான்.. ஆக்ரோசமாக அவளை இழுத்தணைத்து முத்தமிட்டபடி கரையேறிய வனிடமிருந்து நழுவி மீண்டும் நீருக்குள் விழுந்தாள் சஸாக்கி..
இவள் இப்போது என்ன சொல்ல போகிறாள்.. யோசனையோடு பாலகுமரன் அவளை பார்க்க..
“கட்டிக்கோங்க பாலா..” என் கை உயர்த்தினாள் அவள்..
கரை தழுவும் அலையாய் பாய்ந்து அவளை அணைத்துக் கொண்டவன், கைகளில் அவளை சுமந்தபடி தன் அறைக்குள் நுழைந்தான்..
எடுக்க எடுக்க தீரவில்லை.. கொடுக்க கொடுக்க போதவில்லை இருவருக்கும்… எங்கோ ஓர் அந்நிய தேசத்தில், அடுத்தவர் வீட்டில் தவறோ என்ற குற்றவுணர்வுடனேயே முன்னொரு நாள் அவளை சேர்ந்தவன், இன்று தனது சொந்த வீட்டில் உரிமை உணர்வில் முழு சுதந்திர உணர்வுடன் அவளை சேர்ந்தான்..
ஆவலும், ஆக்ரோசமுமான அவனது வேகத்திற்கு சற்றும் குறைந்ததாயில்லை சஸாக்கியின் துடிப்பு.. உணர்வாய், உரிமையாய் தன்னை அவன் கையில் ஒப்புக் கொடுத்தாள் அவள்..
வெகு நேர காதல் போராட்டத்தின் பின் இருவரும் களைத்து, சோர்ந்து படுக்கையில் கிடந்த போது அவள் காது மடல்களில் முத்தமிட்டு அவன் கேட்டான்..
“அன்று நான் கட்டிய தாலியை ஏன் கழட்டி வைத்து விட்டு போனாய் சகி..?”
சஸாக்கி விழிகளை இறுக்க மூடினாள்.. இமையோரம் கண்ணீர் துளிகள் உருண்டன..
“சொல்கிறேன்..” என்றவள் அவனை இழுத்து மீண்டும் தன் மேல் போட்டுக் கொண்டாள்.. என்னை தவிர வேறு பேசாதேயேன் என்ற அவளது செய்கையில் அவனும் மற்றதை மறந்தான்.. அவளையே நினைந்தான்..
“நான் மீண்டும் சஸாக்கி கழுத்தில் தாலி கட்ட விரும்புகிறேன் அம்மா..”
தீர்மானமாய் நின்ற மகனை யோசனையாய் பார்த்தாள் அபிராமி..
“ஏன் குமரா..? உங்கள் திருமணம் அன்றே முடிந்து விட்டதே..?”
“அன்று நீங்கள் யாரும் இல்லையே அம்மா.. இப்போது உங்கள் அனைவரின் முன்னாலும் நாங்கள் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன்..”
அன்று கட்டிய தாலியை கழட்டி வைத்து விட்டு சஸாக்கி போனதை தன் தாயிடமிருந்து மறைத்து விட்டான் பாலகுமரன்.. அது அபிராமிக்கு ஏற்புடையதாய் இருக்காது என்பதை அவன் அறிவான்..
அவன் நினைவுகள் ஜப்பானுக்கு சென்றன..
உடை மாற்றி வந்தவர்களை திடுமென தாலி கட்டிக்கொள்ள அகிரோட்டோ சொல்ல பாலகுமரன் அதிர்ந்தான்..
“இதெல்லாம் எங்கள் உறவினர்கள் முன்பு செய்ய வேண்டிய சடங்கு அகிரோட்டோ..”
“இதோ இத்தனை பேர் இருக்கிறோமே.. எங்களை உங்கள் உறவினர்களாக எண்ணிக் கொள்ளுங்கள் பாலகுமரன்..”
சாதாரணம் போல் தெரிந்தாலும் அன்று அகிரோட்டோ செய்தது மறைமுகமான வலிவான வற்புறுத்தல்தான்.. இதுபோன்ற வற்புறுத்தல்கள், வலியுறுத்தல்களுக்கு பணிபவன் பாலகுமரன் அல்ல..
ஆனால் இங்கே அந்த வற்புறுத்தலும், வலியுறத்தல்களும் சஸாக்கியாக இருந்தாள்.. எனவே இவற்றை பாலகுமரன் இன்பமாக ஏற்றுக் கொண்டான்..
“இது என்ன கயிறு பாலா..?” கழுத்தில் கிடந்த தாலியை காட்டி சஸாக்கி கேட்டபோது அவனுள் சிறு குற்றவுணர்வு..
இதை பற்றி முழுமையாக அவளுக்கு கூறாமலேயே அவளை இந்த பந்தத்தில் சிக்க வைத்து விட்டேனா..? தயங்காமல் மன்னிப்பு கேட்டுக் கொண்டான்.
“சாரி சகி.. இது தாலி.. இதை அணிந்து கொண்டதும் நாம் இருவரும் கணவன் மனைவி ஆகி விடுவோம்.. இனி காலம் முழுவதும் நாம் ஒத்த கருத்தோடு சேர்ந்து வாழ வேண்டும்.. இதனை உனக்கு விளக்கி விட்டுத்தான் உன் கழுத்தில் அணிவித்திருக்க வேண்டும்.. ஆனால் சூழ்நிலை..”
“பரவாயில்லை பாலா.. நீங்கள் தானே.. எது செய்தாலும் சரிதான்..” என்றவளின் நம்பிக்கை அவனை நெகிழ்த்த இழுத்து அணைத்து இதழ் சேர்த்தான்..
பயமும், தயக்கமும், காதலும், மோகமும், அறியாமையுமாக இருந்தது அவர்களது அன்றைய கூடல்..
நடு இரவில் அரைத் தூக்கத்தில் பாலகுமரனது கைகள் அருகில் படுத்திருந்தவளை தேட, வெற்றிடம் தட்டுப்பட்டது.. திடுக்கிட்டு எழுந்தவனின் பாதம் பட்டு எதுவோ கட்டிலிலிருந்து கீழே விழ, விளக்கை போட்டு அதை கையில் எடுத்து பார்த்தவன் அதிர்ந்தான்..
அது சற்று முன் அவன் சஸாக்கி கழுத்தில் கட்டிய தாலி..
What’s your Reaction?
+1
1
+1
1
+1
+1
+1
+1
+1