Serial Stories சரணடைந்தேன் சகியே

சரணடைந்தேன் சகியே – 16

16

 

 

 

 

டப்டப்பென்ற தாள லயத்துடன் பந்துகள். அடிபடும் ஓசை தோட்டத்து பக்கமிருந்து கேட்க, வாசல் படியேறும் முடிவை மாற்றிக் கொண்டு தோட்டத்திற்கு போனான் பாலகுமரன்..
நடுவில் நெட் கட்டிக்கொண்டு இருபுறமும் நின்று டென்னிஸ் மட்டையால் பந்தடித்து விளையாண்டு கொண்டிருந்தார்கள், சஸாக்கியும், கார்த்திகாவும்…
“ஹையோ என்னமா அடிக்கிறீங்க..? இவ்வளவு அழகா டென்னிஸ் விளையாடுவீங்கன்னு தெரியாம போச்சே..” கார்த்திகா முன்னால் ஓடி வந்து அந்த பந்தை அடித்தாள்..




“நானா.. நான் விளையாடுவதெல்லாம் சும்மா.. நீங்க என்ன அழகாக விளையாடுகிறீர்கள்..? ஒவ்வொரு பந்தையும் மிக சரியாக அடிக்கிறீர்கள்..” பதிலளித்த சஸாக்கிக்கு மூச்சிரைத்தது..
“மண்ணாங்கட்டி இதெல்லாம் ஒரு விளையாட்டா..? இப்படியெல்லாம் நம் வீட்டிற்குள் பேசுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.. வெளியே போய் பேசினீர்களானால் எவனாவது டென்னிஸ் ப்ளேயர் உங்கள் மேல் கேஸ் போடப் போகிறான்..”
பாலகுமரன் கிண்டல் செய்தபடி லேப்டாப் பேக்கை கழட்டி வைத்து விட்டு அங்கே கிடந்த மர பெஞ்சில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தான்..
“அண்ணா வேண்டாம்.. எங்கள் வம்பிற்கு வராதீர்கள்.. நாங்கள் லேடீஸ் விளையாடும் இடத்தில் ஜென்ட்ஸுக்கு என்ன வேலை..? அந்தப் பக்கம் போங்க..”
“ஆமாமாம் நீங்களாக விளையாண்டால் தானே.. நீ சானியா மிர்சா.. நான் ஸ்டெபி கிராப் என பேசிக் கொள்ளலாம்..”
“சானியா மிர்சா தெரியும்.. அது யாரு ஸ்டெபி கிராப்.. உங்களுக்கு தெரியுமா..” கார்த்திகா கேட்க சஸாக்கி உதடு பிதுக்கினாள்..




“அவுங்களும் உங்களை மாதிரியே கிரிக்கெட் விளையாடுறவங்கதான்.. சை இந்த இது.. என்ன விளையாட்டு.. ஆ.. டென்னிஸ் விளையாடுறவங்கதான்..” அவர்களை நக்கலடித்தபடி வந்தான திவாகரன்..
“யு டூ திவா..?” பந்தடிப்பதை நிறுத்திவிட்டு கேட்ட கார்த்திகாவின் கண்கள் நீருண்ட மேகமாய் மாற தயாராவதை கவனித்த திவாகரன் பதறினான்..
“இல்லடா கார்த்தி.. நான் உன்னை சொல்வேனா..? நான் பொதுப்படையாக பேசினேன்டா..” திவாகர் மனைவியிடம் தலை குப்புற கவிழ,
“என்ன விளையாட்டுன்னு தெரியாமலேயே பார்க்க வந்தீர்களா அண்ணா..?” திவாகரை கேட்டபடி திரும்பிய சஸாக்கி பாலகுமரனின் பார்வையில் முகம் சிவந்தாள்..
“விளையாட்டை பார்க்க யார் வந்தார்கள்..? நான் பார்க்க வந்ததே வேறு..” மூச்சிரைக்க நின்றிருந்தவளை உதட்டில் வைத்த கடலை மிட்டாயை பற்களால் கடித்து தின்னும் வேகத்தோடு பார்த்திருந்தான் அவன்..
விளையாட்டில் வியர்த்து ஊறியிருந்த உடலில் திடுமென சில்லென்ற சாரலை உணர்ந்தாள் சஸாக்கி.. பக்கத்தில் தங்கையை வைத்துக் கொண்டு பார்க்கிற பார்வையை பார்.. எச்சரிக்கை பார்வை ஒன்றை அவனுக்கு அனுப்ப அவன் தோள்களை குலுக்கி காட்டினான்.. அங்கே கார்த்திகாவும், திவாகரும் சுற்றுப்புறம் மறந்து ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி பெஞ்சில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்..
“ரொம்ப மூச்சு வாங்குது.. இப்படி உட்கார்..” தனக்கு அருகாமை இடத்தை காட்டினான்..
அவன் பார்த்த பார்வைக்கு அவனருகே அமர மிக யோசித்தாள் சஸாக்கி.. இரையை கவ்வ காத்திருக்கும் நாகமாக அந்நேரம் அவன் அவளுக்கு தென்பட்டான்..
“இரண்டு மாதங்களில் நன்றாக உடல் தேறி விட்டாய் சஸாக்கி..” மேய்ச்சலை குறைத்துக் கொள்ளவில்லை அவன் விழிகள்..
அபிராமியும், அன்னமும் போட்டி போட்டுக் கொண்டு சஸாக்கியின் உடலை கவனித்து அவளை ஓரளவு தேற்றி உட்கார வைத்திருந்தனர்..
சஸாக்கி அவனுக்கு பதில் சொல்லாது தன் விரல் நகங்களை ஆராய்ந்தபடி இருந்தாள்.. பாலகுமரனின் தாக பார்வையை தாங்க முடியாது அவள் தேகம் நடுங்கியது..
“சரண்யா எங்களுக்கு டிபன் இங்கே கொண்டு வந்துவிடு..” குரலை உயர்த்தி சொன்னான் பாலகுமரன்.. சரண்யா அப்போதுதான் வேலை முடிந்து தன் ஸ்கூட்டியில் உள்ளே வந்து கொண்டிருந்தாள்.. பாலகுமரனுக்கு தலையசைத்து விட்டு போனாள்..
“இன்னமும் எத்தனை நாட்கள் சும்மா பார்த்துக் கொண்டே இருப்பது சகி..” அவள் புறம் சாய்ந்து மெல்லிய குரலில் பாலகுமரன் கேட்டபோது உடல் பதற சஸாக்கி எழுந்துவிட்டாள்..
“என்னாச்சு சஸி..? ஏன் எழுந்துட்டீங்க..?” அவள் எழுந்த வேகத்தில் திரும்பி பார்த்து கேட்டாள் கார்த்திகா..
“இ..இல்லை.. ஒ..ஒன்றுமில்லை..”
“என்ன மச்சான்.. அடிச்சீங்களோ.. தங்கச்சி இப்படி பதறுறாங்க..” நடுங்கி நின்ற சஸாக்கியை பார்த்தபடி கேட்டான் திவாகர்..




“ஏண்ணா.. நைசா கிள்ளி விட்டீங்களோ..?” கார்த்திகாவின் சந்தேகம் இது..
பாலகுமரனுக்கு மிகுந்த எரிச்சல் வந்தது.. சஸாக்கியை முறைந்தான்..
“சும்மாவே பயந்து போய் நிக்கிறாங்க.. இதில் முறைக்க வேறு செய்றீங்களேண்ணா..” கார்த்திகா எழுந்து சஸாக்கியின் கை தொட்டு ஆதரவாக அருகே அமர்த்திக் கொண்டாள்..
“ஆமாம் மடியில் தூக்கி வைத்துக் கொள்.. எல்லோருமாக இப்படி பொத்தி பொத்தி வைத்துதான் அவள் இன்னமும் குழந்தையாகவே இருக்கிறாள்..” எரிச்சலை மறைக்காமல் காட்டினான்..
சஸாக்கி அப்படித்தான் இருந்தாள்.. எப்போதும் பயந்தாள்.. எதற்கும் நடுங்கினாள்.. இன்னமும் தனது குழந்தையை கூட சரியாக கவனித்து தூக்கி வளர்க்க தெரியாதவளாக இருந்தாள்..
முன்பு இவ்வளவு பயப்படமாட்டாளே பாலகுமரன் யோசித்த போது, ஜப்பான் பூகம்பத்தை நேரில் பார்த்த பிறகு அவள் இப்படி மாறி விட்டதாக அன்னம் தெரிவித்தாள்..
“காபி டிபன் எடுத்துக்கோங்க..” சரண்யா டிபனை கொண்டு வந்து வைத்து விட்டு.. அதனை பரிமாற முயல, அப்போது வாக்கிங் போல் வீட்டை சுற்றி நடந்து கொண்டிருந்த அன்னமும், அபிராமியும் அங்கே வந்தனர்..
“நீ போ சரண்யா.. நாங்க பார்த்துக்குறோம்..” என அவளை அனுப்பினாள் அபிராமி..
“சஸி எல்லோருக்கும் காபி, டிபன் கொடும்மா..” சஸாக்கியை ஏவ அவள் தலையசைத்து அனைவருக்கும் சிறு தட்டுக்களில் பிஸ்கெட்டை வைத்து எடுத்து கொடுத்தாள்..




பிறகு காபி கலந்து கப்பில் ஊற்றி டிரேயில் வைத்து ஒவ்வொருவருக்காக கொடுத்து வர, பாலகுமரனுக்கு கொடுக்கும் போது கை நடுங்கி கப் சரிய, காபி அவனது சட்டையை பாழாக்கியது..
“ஸ்டுப்பிட்..” கத்தியபடி எழுந்தான் அவன்.. சஸாக்கி பதறி தள்ளி நின்றாள்.. அவள் கண்களில் இருந்து அவளை அறியாமல் கண்ணீர் வடிய தொடங்கியது..
“அட விடு குமரா.. சிறு தவறு இதற்கு ஏன் இத்தனை கோபம்..? போய் சட்டையை மாற்றிக் கொள்..” அபிராமி கண்டிக்க, வேக எட்டுக்களுடன் வீட்டிற்குள் போனான் பாலகுமரன்..
அழுது நின்ற மகளை அணைத்து சமாதானப் படுத்தினாள் அன்னம்..
“உள்ளே கூட்டிப் போங்க அன்னம்.. அவளை ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க..” அபிராமி சொல்ல, மகளை அணைத்தபடி அழைத்து போனாள்..
“நான் தெரியாமல் கை தவறி போட்டுட்டேன்.. மம்மா.. அதற்கு ஏன் அப்படி கத்தினார்..?” தேம்பியவளை அணைத்துக் கொண்டவள்..




“நீ தெரியாமல் தான்டா செய்தாய்.. ஆனால் அவருக்கு அது வலித்திருக்கும் தானே.. காபி சூடாக இருந்ததே.. அவர் மேல் பட்டால் சுடாதா..?”
“ஷ் ஆமாம் மம்மா.. அவர் பாவம்.. காந்துமே..”
“ம்.. நீயே போய் ரொம்ப சுடுதான்னு கேளுடா.. இதோ இந்த மருந்தை அவருக்கு போட்டு விடு..” ஆயின்மென்டை கொடுத்தாள்..
தலையசைத்து வேகமாக மூன்றாவது மாடியிலிருந்த பாலகுமரனின் அறைவரை வேகமாக வந்தவள், வாசல் வந்ததும் தயங்கி நின்றாள்..
உள்ளே விடுவானா..? மேலே காபி கொட்டியதற்கு அடிப்பானோ..? பயமாக நின்றாள்..

What’s your Reaction?
+1
2
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!