5
“மிருது …மிருதுளா…. குட்டி …எழுந்திரு …விழித்துக்கொள் …” ஒரு குரல் நொய் நொய் என்று காதுக்குள் கேட்டுக்கொண்டே இருக்க ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மிருதுளா புரண்டு படுத்தாள் .காதுகளை தேய்த்துவிட்டுக் கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தாள்.
” ஏய் , மிருதுளா எழுந்துருடி …” மென்மையாய் ஒலித்துக் கொண்டிருந்த அந்தக் குரலில் இப்போது கடினம் வந்திருந்தது .கொஞ்சம் கொஞ்சமாய் மாறி மனிதர்களின் குரலோடு ஒப்பிட முடியாத அளவிற்கு கர்ண கடூரமாய் ஒலித்தது அது.
” எழுந்திரு… எழுந்திரு…” யானையின் பிளிறல் போன்றோ புலியின் உறுமல் போன்றோ ஏதோ ஒரு மிருகத்தின் சாயலில் அந்த குரல் இருக்க மிருதுளா திக்கென விழி திறந்து கொண்டாள் .அவளது அறை முழுவதும் இருட்டிலிருந்தது .இரவு விளக்கை எரிய விட்டுவிட்டு தானே படுத்தேன் ?இப்போது ஏன் இவ்வளவு இருட்டு ? படுத்தபடியே விழிகளை மட்டும் சுழற்றினாள்.
இப்போது அறையினுள் மெல்லிய கீற்றாய் ஒரு வெளிச்சம் வர ஆரம்பித்தது. எங்கிருந்து வருகிறது இது… கணிக்க முடியாமல் இருந்தது .மிருதுளா மெல்ல எழுந்து அமர்ந்தாள் .அந்த ஒளிக்கீற்றினை கூர்ந்து கவனித்தாள் .முதலில் சிறு புள்ளியாக ஆரம்பித்த ஒளி பின் சிறிது சிறிதாக நீண்டு கோடாக மாறி கோடு சதுரமாக மாறி ஒரு பிரேம் போல் அமைந்தது .இப்போது அந்த பிரேம் ஒளிற ஆரம்பித்தது .கொஞ்சம் கொஞ்சமாக அதன் வெளிச்சம் அதிகமாகி கொண்டே போனது….
கண்கள் கூசும் அளவு ஒளி அதிகரித்து கண்கள் வலித்து தலை வலி வரும் வகையில் அந்த ஒளியின் காய்ச்சல் இருந்தது .கூடவே முனகலாய் ஒரு ஒலியும்….
” யா… யார் அது ? ” மிருதுளாவின் உதடுகள் நடுங்கின .அவளது நடுங்கல் கேள்விக்கு பதிலாகவோ என்னவோ இப்போது அந்த ஒளி பிரேமின் நடுவே ஒரு பிம்பம் தோன்றலாயிற்று . நெற்றி புருவம் கண் மூக்கு வாய் என்று ஒவ்வொன்றாகத் தோன்றி முகமாக முழுமையடைந்த போது மிருதுளாவின் விழிகள் திகிலாய் விரிந்தன.
” மது… மதுரா… அக்கா ”
ஒளி பிம்பமாய் தோன்றிய மதுரா மெல்ல சிரித்தாள் .நேரம் செல்ல செல்ல அவள் மென்மையான சிரிப்பு கடுமையாக மாறியது .சாந்தம் வழிந்து கொண்டிருந்த அவளது விழிகளில் வன்மமும் கொடூரமும் நிறைந்தன. மிருதுளாவை அடித்து நொறுக்குவது போல் இருந்தது அந்த சிரிப்பும், பார்வையும்.
மிருதுளா கண்களை இறுக மூடிக்கொண்டு உச்சபட்சமாக அலறினாள்.
” மிருது… குட்டி… என்னடா என்ன ஆயிற்று ? ” தான் தொடர்ந்து உலுக்கப்பட கண்களை திறந்து பார்த்தாள் .அறைக்குள் எல்லா விளக்குகளும் போடப்பட்டிருக்க வெளிச்சம் வந்திருந்தது .அந்த ஒளிக்கீற்று காணாமல் போயிருந்தது .மகிபாலன் அவளருகே கட்டிலில் அமர்ந்து அவள் தோள்களை உலுக்கிக் கொண்டிருந்தான் .
” மகி ” கேவலுடன் அவன் கழுத்தை கட்டிக்கொண்டாள் மிருதுளா.
” மிருது என்னடா ? ஏன் இப்படி கத்துகிறாய் ? “
” மகி இ…இங்கே இ..இப்போது மதுரா வந்தாள் ”
” என்ன உளறுகிறாய் ? மதுரா அவள் தோழிகளுடன் டூர் போய் இருக்கிறாள் .இந்த ராத்திரி நேரத்தில் இங்கே எப்படி வருவாள் ? ”
” வந்தாள் . நான் பார்த்தேன் .அதோ அங்கே அந்த சுவரிலிருந்து ஒளியாக வந்தாள் .பயங்கரமாக சிரித்தாள் ”
” சரிதான் ” பெரும் சலிப்புடன் பெட்டில் நன்றாக அமர்ந்துகொண்டான் மகிபாலன் .” திரும்பவும் கனவு கண்டாயாக்கும் ”
அவன் கேள்வியில் திகைத்து மிருதுளா புருவம் சுளித்து யோசித்தாள் கனவு கண்டேனா… அது கனவா ? இன்னமும் அவள் உடம்பில் அதிர்ந்து கொண்டிருந்த திசுக்கள் இல்லை இல்லை என்று அலறின.
” என்ன குட்டி இது ?சின்ன பிள்ளை போல இப்படி இரவு பயந்து அலறிக் கொண்டு …நல்லவேளை அத்தையும் மாமாவும் கீழே இருப்பதால் விழிக்கவில்லை .பாவம் இந்நேரத்தில் அவர்களையும் எழுப்பி பயமுறுத்திக் கொண்டு…” சலிப்புடன் கை மறைவில் ஒரு கொட்டாவியை வெளியேற்றினான் மகிபாலன்.
” அது கனவு போல் இல்லை மகி ” கெஞ்சும் குரலில் நம்பேன் என்ற இறைஞ்சலுடன் அவனை பார்த்தாள் மிருதுளா.
” அங்கே பார் ” சற்று முன் மிருதுளா காட்டிய இடத்தை சுட்டினான் .” அங்கே மதுராவின் போட்டோ இருக்கிறது .அதை பார்த்து தான் ஏதோ நினைவில் பயந்து இருக்கிறாய் நீ.” மகிபாலன் சொன்னதில் உண்மை இருக்கலாமோ என நினைக்க ஆரம்பித்தாள் மிருதுளா. ஏனெனில் சதுர ஒளியாக தெரிந்தது அந்த போட்டோ தான் போலும். இப்போது சாதாரணமாக இருந்தது அந்த போட்டோ. அதனுள் அழகாக சிரித்துக்கொண்டிருந்தாள் மதுரா .கல்மிசங்கள் ஏதுமற்ற அழகான சிரிப்பு.
இந்த போட்டோவா சற்று முன் என்னை பயமுறுத்தியது மிருதுளாவால் நம்ப முடியவில்லை.
” எதையாவது நினைத்துக் கொண்டு மனதை குழப்பிக் கொள்ளாமல் படுத்து தூங்கு குட்டி ” அவள் நெற்றியை வருடிவிட்டு எழுந்து கொள்ளப் போன மகிபாலனின் கையை அவசரமாக பிடித்தாள் மிருதுளா.
“எனக்கு பயமாக இருக்கிறது மகி. நீங்கள் இங்கேயே இருங்களேன் “
“ஏய் என்னடா பேசுகிறாய் ? இது இரவு நேரம். இப்போது நான் உன்னுடன் ஒரே அறையில் இருந்தால் பார்ப்பவர்கள் என்ன பேசுவார்கள் ? ”
“அம்மா அப்பா தானே …அவர்களிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். ப்ளீஸ் மகி என்னைவிட்டு போகாதீர்கள் ” கெஞ்சலாய் அவனை நோக்கி உயர்ந்த கையைப் பற்றி கொண்டவன் ஆதரவாய் வருடியபடி” சரி நான் இங்கே இருக்கிறேன் நீ தூங்கு “மீண்டும் கட்டிலில் அமர்ந்தான்.
“இன்னமும் இரண்டு பால் பணியாரங்கள் வைக்கட்டுமா குட்டி ? ” கேட்ட மாரீஸ்வரியிடம் முன்தினம் இரவு அவர்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்ததை அறிந்து கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை.
காலையில் காபி எடுத்துக்கொண்டு வந்த வேலைக்காரி ஒரே கட்டிலில் அருகருகே படுத்து தூங்கிக் கொண்டிருந்த இவர்கள் இருவரையும் ஒரு நிமிடம் திகைத்து பார்த்து பிறகு மௌனமாக காபியை வைத்து விட்டு வெளியேறி இருந்தாள் .அவள் அறைக் கதவைத் திறந்து வரும்போதே விழித்து விட்ட மிருதுளா அவள் செயல்களை கவனித்துக் கொண்டுதானிருந்தாள்.
அம்மா கேட்கும் கேள்விகளுக்கான விளக்கங்களை அவள் தனக்குள் சேகரித்துக் கொண்டு இருக்கும்போது மாரீஸ்வரியோ கலிவரதனோ அதைப் பற்றிய எந்த கேள்விகளும் இல்லாமல் தங்களது அன்றாட பணிகளில் இருந்தனர்.
“நேற்று நைட்டு மிருதுளா பாதி ராத்திரியில் விழித்துக்கொண்டு கத்தினாள மாமா. ஏதோ கனவு கண்டிருப்பாள் போலும் .அதனால்தான் நான் அவளுக்கு துணையாக அவள் அறையிலேயே படுத்து கொள்ள வேண்டியதாயிற்று” மகிபாலனின் விளக்கத்தை மெல்லிய தலை அசைவுடன் ஏற்றுக்கொண்ட தந்தையை ஆச்சரியமாக பார்த்தாள் மிருதுளா.
“அம்மாவும் அப்பாவும் உங்கள் விஷயத்தில் எப்படி இப்படி தலைகீழாக மாறினார்கள் மகி ? “
“எல்லாம் ஐயாவோட மகிமையைத் தெரிந்து கொண்டதால்தான் ” மகிபாலன் காலரை உயர்த்தி விட்டுக்கொண்டான்.
“பெரிய மகிமைதான் ” சிரித்தவளின் முகத்தை பார்த்தவன் ” ஆனால் இனி இது போன்ற சோதனைகளை எனக்கு வைக்காதே மிருது .கடந்து வர மிகவும் கடினமாக இருக்கிறது” என்றான்.
“என்ன சோதனை ? ” புரியாமல் பார்த்தாள்.
” பாதி குளியலில் பாத்ரூமிலிருந்து ஓடி வந்து கட்டிக் கொள்வது, கட்டிலில் அருகருகே படுத்து அசையாமல் உறங்கச் சொல்வது ்… இவற்றையெல்லாம் கடந்து வருவது எவ்வளவு கடினமாக இருக்கிறது தெரியுமா ? ”
மிருதுளாவின் முகம் சிவந்தது .இதோ இப்படி சரசமும் குறும்புமாக பேசும் மகிபாலன் அவளுக்கு புதியவன்தான் .முன்பும் அன்பும் அக்கறையும் ஆக பேசுவான்தான் . நன்றாக படிக்க சொல்லுவான் .படிப்பு விஷயத்தில் நிறைய உதவுவான். உறவினர் வீட்டு விசேஷங்களுக்கு போகும்போது பொது இடங்களில் சந்திக்கும் நேரம் சில தவறான பார்வைகளை உணர்த்தி பாதுகாப்பாக உடன் நின்று இருக்கிறான். இது அத்தனையும் மதுரா ,மிருதுளா இருவருக்குமே சேர்த்து செய்தவைகள்தான். இதுவரை மிருதுளா அவனை ஒரு பாதுகாப்பான உறவினராக மட்டுமே உணர்ந்து இருந்திருக்கிறாள்.
இப்போது சட்டென மாறிவிட்ட அவனுடைய செயல்பாடுகள் மிருதுளாவிற்கு நம்ப முடியாதவையாக இருந்தன .நம்பமுடியாமல் இருந்தனவே தவிர மறுக்க கூடியதாக இல்லை என்பதை இனிமையாக உணர்ந்த மிருதுளா தலை குனிந்து தனது சுடிதார் ஷாலின் முனையை திருகினாள்.
” நீங்கள் ஐந்து வருடங்களுக்கு முன்பு பார்த்தவர் போல் இல்லை மகி. ரொம்பவே மாறி விட்டீர்கள் ” ரகசியம் பேசியது அவளது குரல்.
” ஐந்து வருடங்களுக்கு முன்பு எப்படி இருந்தேன் மிருது ? ” அறியா பிள்ளை போன்ற அவனது கேள்விக்கு மென்மையாக முறைத்தாள்.
” கேட்டதற்கு பதில் சொல்லிக்கொண்டு , சொல்வதை செய்துகொண்டு அக்கறையாக எங்களைப் பார்த்துக்கொண்டு …மிகவும் நல்ல பிள்ளையாக இருந்தீர்கள் .இப்போதோ ….” மேலே பேசமுடியாமல் உதட்டை கடித்துக் கொண்டாள்.
” இப்போது …சொல்லுடா குட்டி, ஏன் நிறுத்தி விட்டாய் ? ” மகிபாலனின் ஆட்காட்டி விரல் நீண்டு பற்களின் கீழே அழுந்தி கிடந்த அவளது உதட்டை வருடி விடுவித்தது. “மனதில் படுவதை பேசிவிட வேண்டும் .தடை விதிக்கக்கூடாது .அதுதான் நம் இருவருக்கும் நல்லது ”
” அப்போது நீங்கள் நல்லவனாக இருந்தீர்கள் . இப்போது ரொம்பவும் கெட்ட பையன் ஆகிவிட்டீர்கள் ” விளையாட்டாக அவன் தோள்களில் குத்தினாள்.
” ஐயோ அப்படியா மாறிவிட்டேன் ? டேய் மகி என்னடா இது …? மாமன் மகளிடம் கெட்ட பெயர் வாங்குவது மடத்தனம் தெரியுமா ? ” தனக்குள்ளே போல பேசிக் கொண்டவனை ரசனையாய் பார்த்தாள்.
” இதோ இப்படி நடிக்க கூட புதிதாக கற்றுக் கொண்டுள்ளீர்கள் ”
“நடிப்பா ?இல்லை மிருது உண்மையாகவே …நீ என்னை ரொம்பவே தொந்தரவு செய்கிறாய் ” உள்ளார்ந்து ஒலித்தது அவனது குரல்.
காட்டாறுகள் ஓட ஆரம்பித்து விட்ட தனது ரத்த நாளங்களை வருடி சமாதானப்படுத்தியபடி ” திடீரென்று என் தொந்தரவு உங்களுக்கு எப்படி வந்தது மகி ? ” என்றாள்
மகிபாலன் தோள்களை குலுக்கி கொண்டான் ” தெரியவில்லையே எப்போதும் பார்த்துக்கொண்டிருப்பவள்தான் நீ .ஆனால் அப்போதெல்லாம் மிகவும் சிறு பெண்ணாக இருந்தாயா …அதனால் ஒன்றும் தோன்றவில்லை போலும் ” என்று அவன் இதழ் குவிக்க மீண்டும் தடுமாறினாள் மிருதுளா.
” உன் அப்பாவிற்கும் எனக்கும் சின்ன சண்டை நடந்து கொஞ்ச நாட்களாக நாம் ஒருவரை ஒருவர் சரியாக பார்த்துக் கொள்ளவில்லை தானே மிருது ? ” கேட்டவனின் குரலும் மிருதுவாகவே இருந்தது.
ஆமாம் அப்படித்தான் மகிபாலன் அவர்கள் வீட்டிற்கு வருவதை நிறுத்திய பிறகு உறவினர்கள் வீடுகளில் எப்போதாவது அவனை பார்ப்பதுதான். அதுவும் பக்கத்தில் போய் பேசுவது கிடையாது தள்ளி தூரமாக பார்ப்பது. அப்போதெல்லாம் மதுராவும் அவளுடன் இருப்பாள்.
அத்தானிடம் போய் பேசலாமா… என்று கூட இவளிடம் கேட்டிருக்கிறாள். மிருதுளா அம்மாவின் நினைவில் பயத்துடன் தலையாட்டி மறுத்துவிடுவாள் .
மனதில் ஓடிய சிந்தனையின் இடையே மதுரா வந்துவிட மிருதுளாவின் கண்கள் இலக்கின்றி அலை பாயத்துவங்கியது. கண்களில் சுவற்றில் மாட்டியிருந்த மதுராவின் போட்டோ பட ஏதோ ஒரு பய மின்னல் உடலை ஊடுருவ நடுங்கிய கைகளுடன் அருகில் அமர்ந்திருந்த மகிபாலனின் தோள்களைப் பற்றிக் கொண்டாள்.
திடுமென தன் தோள்களைத் தழுவிக்கொண்ட மாமன் மகளை நெகிழ்வுடன் பார்த்த மகிபாலன் ” என்னடா குட்டி ? ” என்றபடி ஒற்றை விரலால் அவள் கன்னம் வருட மிருதுளா பார்த்துக்கொண்டிருந்த மதுராவின் புகைப்படம் கிடுகிடுவென ஆடத்தொடங்கியது .கூடவே ஓ எனும் பேரிரைச்சலும் எழுந்தது.
சொதசொதவென வியர்த்து ஊற்ற மிருதுளா சட்டென மகிபாலனின் தோள்களை தழுவிக்கொண்டாள் ” எனக்கு பயமாக இருக்கிறது ” விழிகளை இறுக்க மூடிக்கொண்டாள்.
” என்னடா ? என்ன பயம் ? “அவள் தலையை வருடியபடி மகிபாலன் கேட்க அப்போது அங்கே வந்த கலிவரதனும் மாரீஸ்வரியும் வெளிப்படையாக உடல் நடுங்கிக் கொண்டிருந்த மகளை கவலையாக பார்த்தனர்.
” குட்டி எதற்காக இப்படி பயப்படுகிறாய் ? ” என தோள்களை தொட்ட தந்தையை நிமிர்ந்து பார்த்தவளின் ஓரப்பார்வை சுவர் போட்டோவையும் பார்த்தது. இப்போது மிக அமைதியாக இருந்தது அந்த போட்டோ.
” அக்காவிடம் பேசுவதற்கு எதுவும் முயற்சி செய்தீர்களா அப்பா ? ”
” இல்லையடா அவள் வேர்ல்ட் டூர் போய் இருக்கிறாள் . ஒவ்வொரு இடமாக சுற்றிக் கொண்டிருப்பேன் நீங்கள் கூப்பிட வேண்டாம் நானே போன் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு போய் இருக்கிறாள் .அதனால் அவளை தேடவில்லை “
” இல்லையப்பா எனக்கு மனதிற்கு ஒரு மாதிரி இருக்கிறது .எப்படியாவது அக்காவை தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்யுங்கள் ”
” அவ்வளவுதானே அந்த பிரச்சனையை என்னிடம் விடு .நான் பார்த்துக்கொள்கிறேன். நீ மட்டும் இந்த பகலிலும் கனவு காண்பதை நிறுத்திவிட்டாயானால் எங்கள் மூன்று பேருக்குமே மிகவும் நன்றாக இருக்கும் ” கேலி் போல பேசி மகிபாலன் சூழ்நிலையை மாற்ற ,மிருதுளா பொய்க்கோபத்துடன் அவன் தோள்களை குத்தினாள் .புன்சிரிப்புடன் அவர்களை பார்த்தபடி இருந்தனர் கலிவரதனும் மாரீஸ்வரியும்.
What’s your Reaction?
+1
6
+1
+1
+1
1
+1
+1
+1