3
” ஆரத்தி எல்லாம் எதற்கு அம்மா ? ” ஆரத்தி சுற்றிய மாரீஸ்வரியை ஆட்சேபித்தாள் மிருதுளா.
” ஹாஸ்பிடலில் இருந்து வீட்டிற்கு வந்தால் இதெல்லாம் செய்வார்கள் .நீ பேசாமல் இரு குட்டிம்மா ” மாரீஸ்வரியின் சுற்றுக்கள் முடிந்ததும் வேகமாக உள்ளே ஓடிய மிருதுளா ” மது்.. மதுரா எங்கே இருக்கிறாய் ? ” என கத்தினாள்.
ஆரத்தியை வாசலில் கொட்டி விட்டு வந்த மாரீஸ்வரி அவளது இந்த தேடலில்
ஸ்தம்பித்தாள் ” குட்டி யாரை தேடுகிறாய் ? ”
” உங்கள் மூத்த மகளை… என் அக்காவை .அவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் என்னை பார்ப்பதற்கு ஹாஸ்பிடல் வராமல் வீட்டிலேயே இருந்திருப்பாள் ? அவளை …மது எங்கடே இருக்கிற ? ” மிருதுளா படபடவென படி ஏறி மாடிக்கு போனாள்.
வாசலில் நின்று போன் பேசிக்கொண்டிருந்துவிட்டு அப்போதுதான் உள்ளே நுழைந்த கலிவரதனை கண்கலங்க பார்த்தாள் மாரீஸ்வரி.
” ஏன் ஈஸ்வரி முகம் ஒரு மாதிரியாக இருக்கிறது ? மிருதுளாவை எங்கே ? ”
” மா… மாடியில் அவள் ம.. மதுராவை தேடுகிறாள் ” கலவரம் மின்னியது .மாரீஸ்வரியின் கண்களில் கலிவரதனின் அதிர்ச்சி துல்லியமாக தெரிந்தது.
” அவளிடம் என்னங்க சொல்வது ? எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது ” மனைவியின் கேள்விக்கு கலிவரதனிடம் பதில் இல்லை.
” அப்பா அக்காவை மாடியிலும் காணவில்லை .எங்கே போய்விட்டாள் ? ” மிருதுளா மீண்டும் கீழே இறங்கி வந்து விட்டாள்.
” அ… அது அ…அவள் ” கலிவரதன் தடுமாற,
” மது இங்கே இல்லை ” அழுத்தமான குரலுடன் வந்தான் மகிபாலன்.
” இங்கே இல்லையா ? எங்கே போய் இருக்கிறாள் ? நீங்கள் அவளை ஏதாவது ஆபீஸ் வேலையாக வெளியூருக்கு அனுப்பி இருக்கிறீர்களா அப்பா ? ”
கலிவரதன் தடுமாற்றத்துடன் தலையை அசைத்தார். அதனை எப்படி எடுத்துக் கொள்வது ஆமாம் என்றா… இல்லை என்றா …மிருதுளா குழம்பினாள்.
” மதுராவை மாமா எங்கேயும் அனுப்பவில்லை மிருது. அவள் தோழிகளுடன் சின்னதாக ஒரு டூர் போய் இருக்கிறாள் ” மகிபாலன் சொன்னான்.
” ஓ ஏன் திடீரென ஊர் சுற்ற கிளம்பி விட்டாள் .ஏன் அம்மா உங்கள் மூத்த மகளை கண்டிக்க மாட்டீர்களா ? ” இடுப்பில் இரு கையையும் வைத்துக்கொண்டு தன்னிடம் அதிகாரம் காட்டிய இளைய மகளை மாரீஸ்வரி அணைத்துக்கொண்டாள்.
” அவள் பேச்சை விடுடா குட்டி .நீ உன்னுடைய அறைக்குப் போய் ஓய்வெடு”
” போகிறேன் அக்காவிடம் போன் பேசிவிட்டு பிறகு போகிறேன் ” மிருதுளா தனது போனை எடுத்து மதுராவின் நம்பரை அழுத்த துவங்க மீண்டும் மூவரும் அதிர்ச்சியடைந்து நின்றிருந்தனர்.
” ப்ச் போனை எடுக்கவில்லை ” சலித்தபடி மிருதுளா தன் போனை கட் செய்ய மூவரும் ஆசுவாசம் அடைந்து கொண்டார்கள்.
“உடம்பெல்லாம் அந்த ஹாஸ்பிடல் வாடை .நான் போய் குளிக்கிறேன்” மாடி ஏறிய மிருதுளாவை யோசனையுடன் பார்த்தபடி இருந்தான் மகிபாலன்.
மாடியில் தன் அறைக்கு சென்ற மிருதுளா மாற்று உடைகளை அலமாரியை திறந்து எடுத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைந்தாள் . கதவின் மேல் பெரிதாக்கி ஒட்டப்பட்டிருந்த அந்த போட்டோவை பார்த்தபடி நின்றாள் .அது மதுராவின் போட்டோ .அந்த அறை அவர்கள் இருவருமாக உபயோகப் படுத்திக் கொண்டிருந்தது. விதம் விதமாக தன்னை போட்டோக்கள் எடுத்து அறை முழுவதும் மாட்டி வைப்பதில் மதுராவிற்கு மிகுந்த ஆர்வம் உண்டு .இதோ பாத்ரூம் கதவை கூட விட்டுவைக்கவில்லை அவள்.
ஸ்லீவ்லெஸ் அடர் சிகப்பு கலர் முட்டிவரை தொட்ட மினி கவுனில் நாகரீகமும் நறுவிசுமாக அழகாக மிளிர்ந்து கொண்டிருந்தாள் மதுரா .அந்த போட்டோவில் குடை போல் விரிந்து நின்ற அவள் இமைகளை மெல்ல வருடிய மிருதுளா ” அழகுடி நீ ” என்று அக்காவிற்கு ஒரு பாராட்டை கொடுத்துவிட்டு கதவை தாழிட்டாள் .
குளித்துக்கொண்டிருந்த போது மிருதுளாவினுள் அந்த உணர்வு .யாரோ அவளை கவனித்துக் கொண்டிருப்பது போன்ற உள்ளுணர்வு .கண்களை சுழற்றி அறையை ஆராய யாரும் இல்லை .மிருதுளா தனது குளியலை தொடர்ந்தாள் . மீண்டும் அதே உணர்வு ஈட்டியாய் அவள் உடலில் பாய்ந்த பார்வை.
மிருதுளா சட்டென திரும்பிப் பார்க்க உடனடியாக அவள் பார்வையில் பட்டது பாத்ரூம் கதவில் இருந்த மதுராவின் போட்டோ .சற்று முன் பார்த்தபோது புன்னகை மலர்ந்திருந்த போட்டோ மதுராவில் இப்போது இறுக்கமான முகம் தென்பட்டது போல் இருந்தது .அவள் மெல்ல நடந்து போட்டோவின் அருகே வந்து நின்று பார்த்தாள்.
உற்சாகம் வழிந்து கொண்டிருந்த முன் பார்வை இப்போது மதுராவில் இல்லை .மிருதுளாவை முறைத்தபடி தெரிந்தன நிழல்பட விழிகள். திக்கென்று அதிர்ந்தது மிருதுளாவின் இதயம் .இது எப்படி சாத்தியம் …? கண்களை சிமிட்டிக் கொண்டு மீண்டும் பார்த்தாள் .இன்னமும் அவளை முறைத்துக் கொண்டு தான் இருந்தன போட்டோ விழிகள். கூடுதலாக கோபத்தின் சாயல் கூட அந்த விழிகளில் இப்போது தெரிய ஆரம்பிக்க மிருதுளாவின் உடல் நடுங்க தொடங்கியது.
கனத்தடவல் ஒன்றினால் தனது உடம்பை சுற்றிக் கொண்டவள் பாத்ரூமை விட்டு வெளியே செல்ல நினைத்தாள் .ஆனால் அதற்கு கதவு அருகே தானே செல்ல வேண்டும் .கால்கள் நடுங்க முடிந்தவரை மதுராவின் போட்டோவை பார்க்காமல் தரையில் பார்வையை பதித்தபடி மெல்ல சென்று கதவைத் திறந்தாள் .அறையை விட்டு வெளியேறும் முன் தன்னையறியாமல் போட்டோவை பார்க்க அங்கே மதுரா இப்போது கண் இமைகளை சிமிட்டினாள் .கருவிழிகளை உருட்டி கோபமாக இவளைப் பார்த்தாள்.
” அம்மா ” என்று அலறியபடி மிருதுளா அறைக்குள் ஓடி வந்து கட்டிலின் மேல் விழுந்தாள்.
” மிருதுளா என்னம்மா ? என்ன ஆயிற்று …?” அறைக்கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் மகிபாலன்.
” மகி ” கேவலுடன் அவன் தோளில் சாய்ந்தாள் மிருதுளா .” அ…அங்கே …பா…பாத்ரூமில் …ம…மதுரா …எனக்கு பயமாக இருக்கிறது ”
“என்ன சொல்கிறாய் மிருது ? ஒன்றும் புரியவில்லை .பாத்ரூமில் என்ன பல்லியா ?கரப்பான் பூச்சியா ? ”
” இல்லை மதுரா…அ… அங்கே மதுரா இருக்கிறாள் ”
” உளறாதே …வா .எதைப் பார்த்து பயந்தாய் ? ” மகிபாலன் அவள் தோள் பற்றி மீண்டும் பாத்ரூமிற்கு இழுக்க மிருதுளாவின் உடல் நடுங்கியது.
” வேண்டாம் மகி எனக்கு பயமாக இருக்கிறது ”
” நான்தான் இருக்கிறேனே பிறகு ஏன் பயப்படுகிறாய் குட்டி .வா ” மகிபாலனின் ஆதரவான அணைப்புடன் மிருதுளா இப்போது பார்த்த மதுராவின் புகைப்படம் சாதாரணமாக இருந்தது .மயக்கும் புன்னகையுடன் இயல்பாக சிரித்து நின்றிருந்தாள் மதுரா.
” இந்த போட்டோவை பார்த்தா பயந்தாய் ? ” மகிபாலன் செல்லமாய் கடிந்து கொள்ள மிருதுளாவிற்குமே இப்போது தனது பயத்தை நினைத்து கொஞ்சம் கூச்சமாகவே இருந்தது.
” ஏதோ நினைவு…க… கனவு போல் இருந்தது ”
” சரிதான் குளிக்கும்போதும் கனவு காண்பாயா நீ ?இதெல்லாம் உனக்கு பெரிய ஆபத்தை தந்துவிடும் மிருது ” மிரட்டலாக பேசினான்
” ஏன் இதில் என்ன ஆபத்து ? ” அலட்சியமாக உதட்டை சுளித்தபடி அவனை ஏறிட்ட மிருதுளா முகம் சிவந்தாள்.
“இதோ இப்படி வந்து நின்றால் ஆபத்து வராதா ? ” மெல்லிய குரலில் கிசுகிசுப்பாக அவன் கேட்ட பிறகுதான் டவல் சுற்றி நின்ற தனது கோலத்தை உணர்ந்தாள் .கோழி குஞ்சை தூக்க பார்க்கும் பருந்தின் பார்வையை அவனிடம் கண்டவள் வேகமாக தனது வெற்று தோள்களிரண்டையும் கைகளால் பொத்திக்கொண்டு உடல் மறைத்துக்கொள்ள ஏதாவதை சுற்றுமுற்றும் தேடினாள் .
கட்டில் மேல் கிடந்த போர்வை ஒன்றினை எடுத்து அவள் தோள்களை மூடி விட்டவன் ” போய் ட்ரெஸ் மாற்றிக் கொள் மிருது ” என்று கன்னம் தட்டினான்.
எதுவும் பேசவோ நிமிர்ந்து அவனை பார்க்கவே முடியாமல் தலைகுனிந்து அமர்ந்திருந்த மிருதுளா அவன் அறைக்கதவை திறந்து வெளியே போகும்போது நிமிர்ந்து அவனைப் பார்த்தாள் .அந்நேரமே அவனும் அவளைப் பார்க்க இரண்டு விழிகளும் ஒன்றுடனொன்று கைகோர்த்துக் கொண்டன.
” அழகான பாடி ஷேப் குட்டி உனக்கு ” ரசனை மிளிர்ந்த குரலுக்கு தோதாக அவன் விழிகளும் அவள் உடலை வருட மின்னலின் தீண்டல் ஒன்றை தன் மேனியில் உணர்ந்தாள் மிருதுளா.
What’s your Reaction?
+1
6
+1
1
+1
+1
+1
+1
+1