10
” ஒரு பெண் திடீரென்று காணாமல் போய் இருக்கிறாள் .அவளுக்கு என்ன ஆயிற்றோ என்ற பதைப்பு வருவதற்கு பதிலாக அவளது கேரக்டர் மேல் சந்தேகம் வருமா இது என்ன நியாயம் ஞாயம் மகி ? ” வருத்தத்தோடு கேட்டுக்கொண்டிருந்தாள் மிருதுளா.
” பெற்ற மனது மிருது .பதறுகிறது …அத்தை மாமாவை குறை சொல்வதற்கு ஒன்றும் இல்லை என்றே நினைக்கிறேன் ”
” அப்படியானால் நீங்களும் அக்காவை தப்பாக நினைக்கிறீர்களா ? ”
‘ முழுமையாக அப்படி சொல்வதற்கில்லை .ஆனால் இருக்கலாமோ என்று சந்தேகப்படுகிறேன் ”
” எதனால் உங்களுக்கு இந்த சந்தேகம் வந்தது மகி ? ” அவனை வெறித்துப் பார்த்தாள்.
” நான் மதுராவை பற்றி மேற்கொண்டிருக்கும் விசாரணைகள் அவ்வளவு திருப்திகரமாக இல்லை .காவல்துறையில் இருக்கும் என்னுடைய கல்லூரி நண்பன் ஒருவனிடம் மதுரா சம்பந்தமான விசாரிப்புகளை ஒப்படைத்திருக்கிறேன் .அவன் கொடுத்த தகவல்கள் சரியாக இல்லை ”
“என்ன அப்படி என்ன தகவல்களை உங்கள் பிரண்ட் கொடுத்துவிட்டார் ? ”
” வேண்டாம் மிருது. அவை உன் மனதை மிகவும் கஷ்டப்படுத்தும். நாம் அவற்றை விட்டு விடுவோம் ”
” அதெப்படி விடமுடியும் ?மதுரா என் உடன் பிறந்தவள் மகி 22 வருடங்களாக நாங்கள் இருவரும் ஒன்றாக ஒரே வீட்டில் ஒற்றுமையாக வளர்ந்திருக்கிறோம் .இன்ப துன்பங்களை பரிமாறிக் கொண்டிருக்கிறோம் .இப்போது திடுமென்று அவள் இல்லை மறந்துவிடு என்று சொன்னால் என்னால் எப்படி முடியும் ? ”
” முடியும் மிருது நீ மதுராவை மறந்துவிட்டு பிற விஷயங்களில் கவனம் செலுத்தினால் நிச்சயம் முடியும் ” மென்மையாக குழைந்து ஒலித்த மகிபாலனின்குரல் அவள் கவனம் செலுத்த விரும்பும் விஷயத்தை கோடி காட்ட அதனை உணர்ந்து கொள்ளும் நிலையில் மிருதுளா இல்லை.
” அந்த உங்களுடைய நண்பரை நான் சந்திக்க வேண்டும் மகி .மதுரா பற்றி அவர் சேகரித்த விபரங்கள் எனக்கு தெரிய வேண்டும் .அதன்பிறகுதான் நான் மற்ற எதைப் பற்றியும் சிந்திப்பேன் “உறுதியாக ஒலித்த மிருதுளாவின் குரலில் மகிபாலன் அவள் அருகில் இருந்து எழுந்து விட்டான்.
” மிக நல்லது .அதற்கான ஏற்பாடுகளை செய்கிறேன் ” விடுவிடுவென்று போய்விட்டான்.
கோபமோ என்று ஒரு கணம் மனம் கலங்கினாலும் மறுகணம் தன்னை நிமிர்த்திக் கொண்டாள் மிருதுளா. எனக்கு மதுராவை பற்றி தெரியவேண்டும் தனக்குள் உறுதியாகக் கூறிக் கொண்டாள்.
” உங்கள் அக்கா வேர்ல்ட் டூருக்காக தோழிகளோடு சேர்ந்து திட்டமிட்டிருக்கிறார்கள் .ஆனால் திடீரென்று வரவில்லை என்று விலகி இருக்கிறார்கள். அதன் பிறகு உங்கள் தொழில்களைத் தான் கவனித்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள். தொழிலுக்காக மீனவர்கள் ஸ்ட்ரைக் பண்ணிய போதுகூட அவர்களிடம் நிறையத் தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள் .அது தோல்வியில் முடிந்திருக்கிறது .இதனால் அவர்கள் கொஞ்சம் மன உளைச்சலில் இருந்து இருக்கிறார்கள் .பிறகுதான் திடீரென்று ஒரு நாள் காணாமல் போய்விட்டார்கள் ”
முத்துமாணிக்கம் மிருதுளாவிற்கு விளக்கமாக தான் சேகரித்த தகவல்களை சொல்லிக்கொண்டிருந்தான் .முதல்நாள் மிருதுளா தனக்கு விவரங்கள் வேண்டும் என்று கேட்ட உடனேயே மறுநாளே இந்த சந்திப்பிற்கு மகிபாலன் ஏற்பாடு செய்து விட்டான்.
தலையில் அணிந்திருந்த டிபார்ட்மெண்ட் தொப்பியை சுழற்றி மேஜை மேல் வைத்த முத்துமாணிக்கம் வியர்வையில் நனைந்திருந்த தலைமுடியை கோதி விட்டுக்கொண்டான்.” பாலாவுக்காக இதனை நான் டிபார்ட்மெண்ட் க்கு வெளியே அன் அபீஷியலாக செய்துகொண்டிருக்கிறேன் மேடம் .நான் கேள்விப்பட்ட தகவல்கள் அவ்வளவு திருப்தியாக இல்லை. ”
” உங்களுடைய இந்த பதில் கூட எனக்கு திருப்தி இல்லை .எனக்கு மிகத் தெளிவாக நீங்கள் விசாரித்த விபரங்கள் வேண்டும் ” கறாராக பேசினாள் மிருதுளா.
கொஞ்சம் தயங்கி எச்சில் விழுங்கிக் கொண்டான் முத்துமாணிக்கம் .சங்கடத்துடன் மிருதுளாவை பார்த்தான் .” உங்களுக்கு கஷ்டமாக இருக்கும் ”
” பரவாயில்லை சொல்லுங்கள் ” மிருதுளா பிடிவாதமாக இருந்தாள்.
கலிவரதன் மகிபாலன் முகங்கள் இறுக மாரீஸ்வரி பரிதவிப்புடன் முத்து மாணிக்கத்தை பார்த்தபடி இருந்தாள் .தன்னைப்போலவே அன்னைக்கும் எந்த விபரமும் கொடுக்கப்படவில்லை என உணர்ந்த மிருதுளா ” சொல்லுங்கள் ” தூண்டினாள்.
மீனவர்களுடனான பேச்சுவார்த்தையின் போது அங்கே மீன்பிடி இளைஞர்களுக்கு தலைவரை போலிருந்த ஒருவருடன்… பெயர் ஜான் பீட்டர் .அவருடன் உங்கள் அக்காவிற்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது .அவரை வைத்து மீனவர்களை சரிப்படுத்தி விடலாம் என்று கொஞ்சம் அதிகமாகவே அவருடன் பழகி இருக்கிறார். ஆனால் தொழிலை தாண்டியும் அவர்களுடைய பழக்கம் ….”
” போதும் நிறுத்துங்கள். என் அக்காவின் மீது இப்படி ஒரு அபவாதத்தை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் ”
மாரீஸ்வரி அழுதபடி முகத்தை மூடிக்கொள்ள மகிபாலன் கலிவரதன் அவமானம் போல் தலை குனிந்து தரையை பார்த்து அமர்ந்திருந்தனர்.
” நான் விசாரித்ததை சொன்னேன் மேடம் .இதில் முன்னுக்கு பின்னாக சொல்வதற்கு எனக்கு என்ன இருக்கிறது ? நான் முழுவதுமாக சொல்லி முடித்து விடுகிறேன் .பிறகு நீங்களே உங்கள் அக்காவை பற்றிய முடிவிற்கு வாருங்கள் ‘
மிருதுளா சொல்லி முடி என்பது போல் இதழ்களை கடித்துகொண்டாள்.
” இப்போது உங்கள் அக்காவையும் காணவில்லை .அந்த ஜான்பீட்டரையும் காணவில்லை .இருவரும் எங்கே போய் இருக்கிறார்கள் என்ற தகவல் எவ்வளவு விசாரித்தும் யாருக்கும் தெரியவில்லை .எல்லாவற்றையும் கொட்டி விட்டேன் .இனி நீங்களே முடிவு செய்துகொள்ளுங.கள் ” தனது போலீஸ் தொப்பியை மீண்டும் தலையில் எடுத்து வைத்துக் கொண்டான் முத்துமாணிக்கம்
” சார் இதற்கு மேலும் அவர்களைப் பற்றிய தகவல் வேண்டும் என்றால் சொல்லுங்கள் நான் அதனையும் முயற்சி செய்கிறேன் ” கழிவரதனை பார்த்து சொல்ல அவர் அவசரமாக மறுத்தார்
” இல்லை இல்லை எனக்கு எந்த தகவலும் வேண்டாம். அவளைப் பற்றிய எந்த செய்தியையும் தெரிந்து கொள்ள நான் விரும்பவில்லை ”
” உங்கள் விருப்பம் சார் ” என்றவன் மகிபாலனை பார்த்து தலையசைத்துவிட்டு வெளியேறினான்
அவன் சொல்லிச் சென்ற செய்தியின் தீவிரத்தில் இடிந்துபோய் அமர்ந்திருந்த மிருதுளா அவன் தூரமாக வாயிலை தாண்ட போவதை மூளை உணர்ந்ததும் ” இன்ஸ்பெக்டர் சார் கொஞ்சம் நில்லுங்கள் ” கத்தினாள் .முத்துமாணிக்கம் அதற்குள் வெளியே போய் விட்டிருந்தான்.
” மிருதுளா இன்னும் அவனிடம் பேச வேண்டுமா”
” நீங்கள் அவரிடம் என்ன சொன்னீர்கள் அப்பா ? “
“இனி மதுராவை தேட வேண்டாம் என்று சொன்னேன்“
“இல்லை அப்பா இனி தான் நாம் அக்காவை தீவிரமாக தேட வேண்டும் .அப்படி யாரோ ஒருவனை நம்பி போன அவளின் நிலைமையை நாம் தெரிந்து கொள்ள வேண்டாமா?”
“வேண்டாம் குட்டி விட்டுவிடு அவள் நம் குடும்பத்திற்கு உகந்த காரியம் செய்யவில்லை“
“ஐயோ அப்பா உங்களுக்கு புரியவில்லை .மதுரா… இப்போது ….நான் எப்படி உங்களுக்கு விளக்குவேன்” மிருதுளா பரிதவித்தாள் .
மகிபாலன் தன் இடத்திலிருந்து எழுந்து மிருதுளா அருகில் அமர்ந்தான். அவள் தோளை வளைத்து தன்னோடு சேர்த்து கொண்டு மென்மையாய் வருடினான் ” குட்டி என்னடா ஏன் எதை எதையோ நினைத்துக் கொண்டு உன்னை நீயே குழப்பிக் கொண்டிருக்கிறாய் ? மதுராவை நாம் மறந்துவிடுவோம் .தானாகவே திரும்பி வரட்டும் என்று விட்டு விடலாம் ”
” ஐயோ மகி அவள் வருவாள் என்று நம்பிக்கை எனக்கு இல்லை ”
” ஏன் எதனால் அப்படி சொல்கிறாய் ? ”
” வ..வந்து …அ…அவள் இ…இப்போது உ…உயிரோடு இல்லை என்று எனக்கு தோன்றுகிறது ”
” என்ன ? ” மூவருமே ஒன்றுபோல் அதிர்ந்தார்கள்.
” எப்படி …எப்படி இதனை சொல்கிறாய் ? ” மகிபாலன் படபடத்தான்.
” இதனை நீங்கள் எல்லோரும் எப்படி எடுத்துக் கொள்வீர்கள் என்று எனக்கு தெரியாது .ஆனால் இதுதான் உண்மை என்று நான் உறுதியாக நம்புகிறேன் .அதனால் தான் மதுரா விஷயத்தில் இவ்வளவு தீவிரமாக இருக்கிறேன் ”
” ப்ளா ப்ளா என்று எதையாவது உளறாமல் ஒழுங்காக பேசு ” தந்தையின் கட்டளையை நம்பமுடியாமல் பார்த்தவளை அணைத்து இறுக்கி தன் ஆதரவை சொன்னான் மகிபாலன்.
” நீங்கள் சும்மா இருங்கள் மாமா .அவள் மனம் விட்டு பேசட்டும் நீ சொல்லு குட்டி ”
” அக்கா அடிக்கடி அரூபமாக என்னிடம் வந்து பேசிக் கொண்டிருக்கிறாள் .” மிருதுளாவின் பேச்சிற்கு பிறகு அங்கே குண்டூசி அமைதி நிலவியது.
” எதையாவது உளறாதே குட்டி” முதலில் வாயை திறந்தது கலிவரதன் தான்.
” இல்லையப்பா இதுதான் உண்மை .இரவுகளில் என் கனவுகளில் பிறகு பகலிலும் கூட சிலநேரம் சில வழிகளில் அவள் என்னிடம் ஏதோ சொல்ல முயல்வது போல் எனக்கு தோன்றுகிறது ”
” அப்போது அப்படி வரும்போது அவளிடமே நீ கேட்டு தெரிந்து கொள். இப்படி எங்களை இம்சை செய்யாதே ” மாரீஸ்வரி மகளிடம் கோபம் காட்டினாள் .
” நீங்கள் யாரும் என்னை நம்ப மாட்டீர்கள் இல்லையா ? ” மிருதுளாவின் கண்களில் கண்ணீர் வழியத் தொடங்கியது.
” நான் உன்னை நம்புகிறேன் மிருது ” ஆதரவுடன் அவள் தோளில் சாய்த்துக் கொண்டான் மகிபாலன் .நான் பார்த்துக் கொள்கிறேன் என்ற ஆதரவு பார்வையை அவள் பெற்றோருக்கு கொடுத்தான்.
What’s your Reaction?
+1
1
+1
3
+1
+1
+1
+1
+1