Serial Stories uravu solla oruvan உறவு சொல்ல ஒருவன்  

உறவு சொல்ல ஒருவன் – 11

                                              11

வேகமாக அவனது பார்வையிலிருந்து தன்னதை விலக்கிக்கொண்டு நடக்க முனைந்தவளிடம் …

” நீயும் வருகிறாயா சத்யா …? “

” அவள் எதற்கு அவளுக்கென்ன தெரியும் …? ” ஜெபசீலி .

” தெரியவில்லையென்றால் கற்றுக்கொடுத்து விடலாம் .வா ..” ஒற்றை விரலால் அவளை அழைத்தபடி முன்னால் நடந்தான் .

வீட்டு உறுப்பினர்கள் அனைவரும் அங்கே குழுமியிருக்க முழு வெள்ளை உடையில் கையில் சிலுவையோடு பாதர் நின்றிருந்தார் .

” பாதர் ஜெபம் பண்ண வந்திருக்கிறார் ” மெல்ல அவளிடம் சொல்லிவிட்டு நகர்ந்து போய் ஆண்களுடன் போய் நின்று கொண்டான் .

எதிரியைப் போல் பார்த்துக்கொண்டிருந்த பெண்களுடன் போய் சேர்ந்து கொள்ள தயங்கியவளை கிறிஸ்டியனின் பார்வை உந்த அந்த இடத்தை விட்டு நகர துடித்த கால்களை அடக்கி அவர்களுடன் சேர்ந்து கொண்டாள் .

அனைவரும் மண்டியிட்டு பிரார்த்திக்க ஆரம்பிக்க ஜெபசீலி சாந்தனுவை தன்னருகே வைத்துக்கொண்டு அவனுக்கு ஜெப முறையை சொல்லிக்கொடுத்தபடி தொழ தொடங்கினாள் .

அதனையே தனக்குமானதாய் பின்பற்றி மண்டியிட்ட சத்யா உதட்டில் ஒட்டாத ஜெப வார்த்தைகளுக்காக சிரம்ப்பட்டாள் .

எதிரில் மண்டியிட்டிருந்த கிறிஸ்டியனின் சைகையில் பக்கத்திலிருந்த பெண்களை பார்த்து சுடிதார் சாலினை தலையில் முக்காடிட்டு கொண்டாள் .ஒட்டாத மனதுடன் ஆரம்பித்தாலும் போகப் போக மனதில் ஒரு ஈடுபாடு வர மௌனமாக ஜெபத்தில் ஆழ்ந்தாள் .

ஜெபித்து முடித்து எழுந்த போது மனதில் ஒரு அமைதி வந்திருந்த்து .தெரியாத மதத்தை முயன்று செய்தவளுக்கு ஒரு ஆதரவு பார்வை கூட இல்லாமல் நகர்ந்தனர் ஆடம்ஸ்சும் , ஜெபசீலியும் .

” ஒன்றும் சிரமமாக இல்லையே …? ” கிறிஸ்டியனின்  கவனமான கேள்வியில் இருந்த சிறு உறுத்தலும் மறைய இல்லையென்ற  தலையாட்டலுடன் அவன் விழி சந்திக்காமலேயே நகர்ந்தாள் .

” என்னோடு கொஞ்சம் வெளியே வருகிறாயா சத்யா …? ” கிறிஸ்டியனின் குரலில் இருந்த எதிர்பார்ப்பிற்கு பயந்து ம்ஹூம் என தலையாட்டி நகர்ந்தாள் .

” நீ எவ்வளவு முயன்றாலும் எங்கள் வீட்டோடு ஒன்ற உன்னால் முடியாது …” குரோதமாய் ஒலித்த ஷீபாவின் பேச்சு புரியாமல் நடிக்க முடியாதபடி அவள் ஆங்கிலத்தில் பேச ….

” அப்படி நான் நினைத்தால் உங்களால் என்னை தடுக்க முடியாது ….” எரிச்சலுடன் பதில் சொன்னாள் .

” அந்த பையன் மட்டும் கொஞ்சம் இங்கே பழகட்டும் .பிறகு எல்லோரும் சேர்ந்து எங்கள் வீட்டை விட்டு உன்னை விரட்டுகிறோமா  இல்லையா பார் …?”

அந்த பையனாம் ….பற்களை கடித்தவள் …

” உங்கள் வீட்டிற்கு நீங்கள் போகவில்லையா ஷீபா …? உங்கள் வீட்டில் …உங்கள் கணவர் உங்களை தேட மாட்டாரா …? ” ஷீபாவின் இடத்தை அவளுக்கு நினைவுபடுத்த அவள் முகம் கொதித்தாள் .

” ஏய் திமிரா என்னையே விரட்டுகிறாயா …? உன்னை இந்த வாகமண் பக்கமே வர முடியாதபடி செய்கிறேன் பார் ….” கோபத்தில் ஷீபா பேசிய தாய்மொழியை புரியவில்லை என சைகை செய்து விட்டு வாசல்பக்கமாக போய் கொண்டிருந்த கிறிஸ்டியனிடம் சென்றாள் .

” வெளியே போகலாம் என்றீர்களே ..போகலாமா …? ” கண்கள் மின்ன திரும்பிய கிறிஸ்டியன் பின்னால் நின்ற ஷீபாவை பார்த்து விட்டு …சிறு சலிப்புடன்

” நான் காரை எடுத்து வருகிறேன் ….” என போகும் போதே ….

” ஷீபாவிற்கு நன்றி ….” என முணுமுணுத்து விட்டு சென்றான்.

அலைக்கு தப்பி உலையில் விழுகிறோமோ என எண்ணியபடி சாந்தனுவை அழைக்க போனாள் .அவன் இப்போது அதிக நேரம் ஜெபசீலியிடம்தான் இருந்தான் .
” எங்கேடா போகிறாய் ..? ” சாந்தனுவின் கையை தன்னுடன் இறுக்கியபடி மகனிடம் கேட்டாள் ஜெபசீீலி .

” சத்யாவிற்கு நம் ஊர் பாரா க்ளைடிங் காட்டலாமென்று நினைத்தேன்மா …..” சத்யாவை முறைத்தான் .

” பறக்கிற இடத்திற்கு சின்ன பையன் எதற்கு …? அவன் இருப்பான் .நீ இவளை மட்டும் கூட்டிப் போ .அங்கே நமது பாரம்பரியம் , பலத்தையெல்லாம் இவளுக்கு நன்றாக விளக்கி சொல்லு ” சாந்தனுவை அனுப்ப உறுதியாக மறுத்தாள் .

ஆக , சத்யா சந்தேகப்பட்டது போலவே …அவளை அடிக்கடி வெளியே அழைத்து போவது இவர்களின் பெருமையை பீற்றுவதற்காகத்தான் ….மனம் கசந்த்து சத்யாவிற்கு .

ஷீபா ,ஜெபசீலியின் குத்தல் பேச்சுக்களும் , இறுகிய முகத்துடன் கார் ஓட்டி வந்த கிறிஸ்டியனுமாக சேர்ந்து சோர்ந்திருந்த சத்யாவின் மனது வானில் சிறு பறவை போல பறந்து கொண்டிருந்த கிளைடர்களை கண்டதும் தளை நீங்கி பறந்த பறவையாய் சிறகடித்தது .

கிரௌன்டிற்குள் நுழைந்த உடனேயே கிறிஸ்டியனை நான்கைந்து பேர்  சூழ்ந்து கொண்டார்கள் .ஏன் இந்த பக்கம் வரவில்லை …? உங்களை மிகவும் மிஸ் பண்ணினோம் ..என்பது போன்ற உபச்சார வார்த்தைகளுடன் .

ம்க்கும் ….இவர்களது பந்தா …பெருமை …அலட்சியத்துடன் நினைத்தபடி தள்ளிப்போய் நின்று அண்ணாந்து வேடிக்கை பார்க்க தொடங்கினாள் .

” இது  ரொம்ப நல்லாயிருக்கும் சத்யா .நீ பறந்து பார்க்கிறாயா …? “

டிரைனர்களின் துணையோடு நிறைய பேர் வானிலேறி பறவையாய் நீந்திக்கொண்டிருப்பதை பார்த்தவள் , ஆசையை அடக்கிக்கொண்டு …

” ம்ஹூம் .பயம்மா இருக்கு …” என்றாள் .

” உள்ளத்து ஆசைகளை வெளியே சொல்லவே மாட்டாயா …? ” உலர்ந்த குரலில் கேட்டுவிட்டு உட்காரும்படி அவளிடம் சைகை காட்டிவிட்டு ஒரு க்ளைடரை நோக்கி நடந்தான் .

பிரமிப்புடன் சத்யா விழி விரித்து பார்த்துக்கொண்டிருக்கும் போதே பெல்ட்டுகளை தன்னுடலில் பிணைத்துக்கொண்டு , விசையை முடுக்கியவன் கால்களை தரையில் பரவி உதைத்து எளிதாக பறவையாகி வானில் பறந்தான் .

கிட்டதட்ட அரைமணி நேரம் பல வித்தைகளுடன் சாகசங்கள் சிலவும் நிகழ்த்தி விட்டு கீழே இறங்கும் போது லாவகமாக கால்களை வேகத்திற்கேற்ப சிறிது  ஓடவிட்டு அகற்றி ஊன்றி நின்றான். நிறைய பேர் ஓடிவந்து  அவனுக்கு கை குலுக்கினர் . அவனை பாராட்டினர் .

ஓ…இவன் இந்த விளையாட்டில் தேர்ந்தவனாக இருக்க வேண்டும் .இவர்களெல்லோரும் இவனின் ரசிகர்கள் போல …தன்னை நோக்கி வந்தவனை பார்த்து …

” இது உங்களுக்கு மிக நன்றாக தெரியும் போல …? “

” ம் .இதில் நானும் , டேவிட்டும் சேம்பியன்கள் …இப்போது பயப்படாமல் வருகிறாயா … ஒரு ரவுண்ட் போய் வரலாம் …”

பயம் கலந்த ஆசையுடன் தலையாட்டியவளின் உடலில் பெல்ட்டுகளை பிணைத்தான் .டிரெயினிக்கு பதிலாக தன்னை அவளருகே சேர்த்து கட்டிக்கொண்டான் .

நீதான் வருவாயா …? அவளது தயக்கமான விழிக்கு …

” நிச்சயம் நானேதான் வருவேன் …” உறுதியாக பதிலளித்து விட்டு கிளைடரை இயக்கினான் .கால்களை எப்படி வைத்து மேலேற வேண்டுமென அவன் விளக்கினாலும் அதை செய்ய முடியாமல் தடுமாறி பிரண்ட கால்களால் பயந்து கண்களை இறுக மூடிக்கொண்டாள் சத்யமித்ரா .

சிலீரென்ற காற்று உடல் முழுவதுமாக தழுவ உடல் சிலிர்த்தவளின் காதுகளில் ” கண்ணை திறந்து பார் பேபி …” என்ற கிறிஸ்டியனின் குரல் மந்திரம் போல் ஒலித்தது .எனக்கு மேலேயிருக்கிறான் .நான் கண்ணை மூடியிருப்பது இவனுக்கு எப்படி தெரியும் …நினைத்தபடி கண்களை திறந்த சத்யாவிற்கு மூச்சடைப்பது போலிருந்த்து .

எவ்வளவு அழகு …!! என்ன நேர்த்தி …!  அடடா ..இதை இந்த அற்புத அனுபவத்தை இழக்க இருந்தேனே ….இதற்கு மேல் விரிக்க முடியாதென தோன்றும்படி விழிகளை அகல விரித்து சுற்றிலுமுள்ள இயற்கையை விழுங்கினாள் .

” மிஸ் பண்ண பார்த்த இல்ல …? ” கதகதப்பாய் ஒலித்தது கிறிஸ்டியனின் குரல் .

வீசலாய் வீசும் காற்றில் சுற்றியிருந்த கூதலில் ஒரு அடி தள்ளி பெல்ட் மாட்டி அவளுடன் பறந்து வந்த அவனது உடலின் கதகதப்பு எப்படி தனக்குள் ஊடுறுகிறது .இந்த விந்தையினை அறியாது குளிரும் , சூடுமான அந்த இனிய நெருக்கத்தை அனுபவித்தபடி இயற்கையை பார்வையிட்டாள் .

மெல்லிய குரலில் உடன் பறந்தபடி அவளுக்கு சிறு குரலில் சுற்றுப்புற அழகை விளக்கினான் .அவனது அருகாமையும் , ஆழ்ந்த குரலும் , சுற்றிய இயற்கையுமாக ஏதோ ஓர் தேவலோகத்தில் சஞ்சரிப்பது போன்ற உணர்வில் ஆழ்ந்தாள் சத்யமித்ரா .

மீண்டும் இறங்கும் போது காலூன்ற இயலாது தடுமாறியவளை பின்னிருந்து இடையோடு சேர்த்து தன்னோடு அணைத்து ஆசுவாசப்படுத்தி நிறுத்தினான் .இடையை சுற்றி வளைத்த கரங்களை விலக்க எண்ணி அந்த கரங்களின் மேல் படிந்த அவளது கரங்கள் விலக மனமின்றி அங்கேயே படிந்துவிட  உள்ளம் படபடக்க நிமிர்ந்தவள் ….

எதிரே நின்று கைகளை கட்டிக்கொண்டு இவர்களையே பார்த்துக்கொண்டிருந்த ரேச்சலை பார்த்து திகைத்தாள் .

What’s your Reaction?
+1
2
+1
4
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
Subscribe
Notify of
guest

0 Comments
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!