Serial Stories

நந்தனின் மீரா-35 (நிறைவு)

35

சுடரேற்றி நிற்கும் உன்
சூரபத்ம வதை பொழுதுகள்
குறவள்ளி கர்வத்தையெனக்கு
கொடுக்கின்றன …
மலை பிளக்கும் கூர்வேல் காலங்களுக்கு முன்
மமதை பிளந்தெனை ஆட்கொள்ளடா
அசுரனளிக்கும் அசுரா…

” என்றைக்கு ….அன்று மொட்டைமாடியிலா …? மீராவின் குரல் வறண்டிருந்தது .

” ஏய் அது எப்படி உனக்கு தெரியும் …? ஓ …அன்று நீ எங்களை பார்த்தாயா மீரா .அதனால்தான் பிறகு என்னிடம் தள்ளியிருந்தாயா …? என்ன மீரா இது என்னிடமே நேரடியாக அன்றே கேட்டிருக்கலாமே …?” வருத்தத்துடன் எழுந்தவன் சன்னலருகே போய் நின்று வெளியில்  வெறித்தான் .

,” அன்று இரவு நான் எவ்வளவு ஆசையுடன் உன்னருகில் வந்தேன் . நீ என்னை ஒதுக்கியது எனக்கு எவ்வளவு வேதனையை தந்தது தெரியுமா …? “

தானும் எழுந்து கணவன் பின்னால் நின்றவள் ” நான் என்ன கேட்கமுடியும் …? அவள் உங்கள் அத்தை மகள் .உங்கள் காதலி .அன்று நம் வீட்டினுள் நுழைந்ததிலிருந்து ஒவ்வொரு இடத்திலும் அவளது உரிமையை நிலை நாட்டிக் கொண்டிருக்கிறாள் .நீங்கள் எல்லோரும் அவளை வராது வந்த தேவதையை போல் பார்க்கிறீர்கள் .இரவில் யாரும் இல்லாத போது அவளை கட்டியணைத்து நிற்கிறீர்கள்..? நான் ஏதாவது கேட்டால் ஆமாம் நான் அப்படித்தான் என்றுவிட்டால் ….அன்றுதான் ..?சற்று முன்தான் ..உங்களை ஆசையோடு அணைத்த என்னை நீங்கள் …தள்ளி விட்டீர்கள் …இந்த நிலைமையில் நான் …” மீராவின் குரல் தழுதழுக்க தொடங்கியது .

நந்தகுமார் சட்டென திரும்பி அவளை இறுக அணைத்துக்கொண்டான் .” முட்டாள் …இப்படியெல்லாமா தப்பு தப்பாக யோசித்து மனதை புண்ணாக்கி வைத்திருப்பாய் …? அன்று நீ என்னை அணைத்தபோதே  உன்னை இறுக்கிக் கொள்ளத்தான் தோன்றியது .ஆனால் அன்றைய நம் வீட்டு சூழல் ….மேலும் அந்த கணம் வரை நான் மிருணாளினியை காதலிப்பதாகத்தானே நினைத்துக்கொண்டிருந்தேன் .அந்தக் குழப்பத்தையும் அவளே தீர்த்துவைத்துவிட்டாள் .

அன்று மொட்டைமாடியில் அவளது திருமணம் தட்டி தட்டி போவதாகவும் …நான் அவளுக்கு துரோகம் செய்து விட்டதாகவும் ஏதேதோ புலம்பி அழுதபடி இருந்தவள் திடீரென என்னை அணைத்துக் ….ஏய் மீரா இரு …அவள் அன்று உன்னை பார்த்துவிட்டுத்தான் என்னை அணைத்திருக்க வேண்டும் .அதுவரை கைப்பிடி சுவரில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தவள் தீடீரெனத்தான் என்னை அணைத்தாள் .உடனேயே அவளை தீச்சுட்டாற் போல் தள்ளி விட போனவனை …இரண்டே நிமிடம் அத்தான் .இது ஆசையான அணைப்பில்லை .ஆறுதலான அணைப்பு …என ஏதேதோ பேசி நிறுத்தினாள் .




ஆசையாக என்னை அணைத்தால் தள்ளிவிடலாம் ..ஆனால் அழுகையோடு அணைத்தால் …அதுவும் அவள் வாழ்வை பாழாக்கிவிட்டதாக ஒரு குற்றச்சாட்டோடு ….பல்லைக் கடித்துக்கொண்டு பேசாமல் நின்றேன் .முழுதாக ஒரு நிமிடம்தான் இருந்திருக்கும் மீரா அந்த அணைப்பு .அதுதான் எனக்கு உனக்கும் …அவளுக்குமிடையேயான வித்தியாசத்தை சொன்னது .எனது காதல் யார் மீதென்று எனக்கு விளக்கியது .இப்போது மிருணா என் மாமன் மகளாக மட்டுமே இருந்தாள் .தயங்காமல் அவள் தலையை வருடி சமாதானப்படுத்தினேன் .அப்போதுதான் நீ எங்களை பார்த்திருக்க வேண்டும் .சரியா …? “

” அப்போ நமது திருமணத்திற்கு முன் நீங்கள் மிருணாவை ….” தயங்கி நிறுத்தினாள் .

” அணைத்ததில்லையா என கேட்கிறாயா …? நான்தான் சொன்னேனே மீரா நான் பெண்களுடன் ஒன்றி வாழ்ந்தவன் .அவர்கள் ஸ்பரிசங்களை உணர்ந்தவன் .ஆனால் பாசமாக மட்டுமே .காதல் என்பது என் மனைவியுடன் மட்டும்தான் என உறுதியாக இருந்தவன் .வருங்கால மனைவியென்ற நிலையில் மிருணா இருந்தாலும் , நாங்கள் ஒரே வீட்டிற்குள் புழங்கிக் கொண்டிருந்தாலும் அம்மாவின் கண்டிப்பின் முன் நாங்கள் அப்படியெல்லாம் பழகிவிட முடியாது மீரா .அம்மாவிற்கு ஒழுக்கம் மிகவும் முக்கியம் .ஆண்பிள்ளை என்பதற்காக எங்களுக்கு எந்த அதிக சுதந்திரமும் கொடுத்ததில்லை .பெண் பிள்ளைகளுக்குரிய அதே கட்டுப்பாடுகள் எனக்கும் சசிக்கும் எப்போதும் உண்டு …இதையெல்லாம் தாண்டும் தைரியம் வேண்டுமென்றால் அதற்கு கண்மூடித்தனமான காதல் வேண்டும் . அது எங்கள் இருவரிடமுமே என்றுமே இருந்ததில்லை …”

” ஆனால் அப்படி உங்கள் இருவருக்குமிடையே ஏதோ ஒன்று இருந்ததாக என்னை நம்ப வைக்க வேண்டுமென்றுதான் அவள் முயற்சித்துக் கொண்டிருந்தாள் ….”

” அதை நீ ஏன் என்னிடம் கேட்கவில்லை மீரா ..? அந்த அளவு உரிமை உனக்கு என்னிடம் இல்லையா …? ” வருத்தமாக கேட்டான் .

” ஒரு பெண்ணாக இருந்தால்தான் இதை உங்களால் புரிந்து கொள்ளமுடியும் .உங்களுக்கு இருந்த அம்மா பாசத்தை மையமாக வைத்து அவள் காய் நக்ற்றிக் கொண்டிருந்தாள் .பொய்யற்ற அந்த உண்மை பாசத்தை நான் நன்கு அறிந்திருந்ததாலேயே என்னால் எதுவும் கேட்டு தெளிய முடியவில்லை …ஒரு வேளை உங்கள் அம்மா சொல்லி நீங்கள் என்னை விலக்கி வைத்துவிட்டால் …”

நந்தகுமாரின் உடல் மெல்ல அதிர்ந்த்து .

” இதோ பார் மீரா உனது இந்த வார்த்தையிலேயே எனது உடல் அதிர்கிறது .இதனை என்னால் செய்கையில் செய்ய முடியுமா …? அம்மாவிற்காக மிருணாளினியை ஒதுக்க என்னால் முடிந்தது . ஆனால் உன்னை …அது என் உயிர் போன பின்னால்தான் முடியும் ….”

மீரா தாவி கணவனை கட்டிக்கொண்டாள் .

” ஏன் இப்படியெல்லாம் பேசுகிறீர்கள் ….? அவள் விதம் விதமாக பேசி என்னை நம்ப வைக்க முயற்சித்தாள் என்றுதான் சொன்னேனே தவிர நான் நம்பினேன் என்று சொல்லவில்லையே .அப்படி ஒரு தைரியத்தை எனக்கு பாட்டிதான் அளித்தார்கள் …”

” ஒரு கணவனாக உனக்கு நான் அளித்திருக்க வேண்டிய தைரியம் அது .ம் …சரி விடு …அப்படி என்னென்ன சொன்னாள் ….? “

” அது எதற்கு இப்போது விடுங்கள் …”

” இல்லை மீரா எனக்கு தெரியவேண்டும் .அவளை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டும் .உன் வேதனையை முழுதுமாக நான் உணர வேண்டும் .சொல்லு ….”

” உங்கள் போன் பாஸ்வேர்டு …அவளுக்கு தெரிந்திருக்கிறது ….”

” என் போனில் எந்த ரகசியமும் கிடையாது .அதனால் என் போன் பாஸ்வேர்டு நம் வீட்டில் எல்லோருக்குமே தெரியும் ….”

” நீங்கள் கார் வாங்க போவதாகவும் , அவள்தான் முதலில் ஸ்டார்ட் பண்ண போவதாகவும் ….”

” இதனை நான் அவளறியாமல் செய்யமுடியாது மீரா .ஏனென்றால் சண்முகம் மாமா அந்த தொழில்தான் செய்கிறார்.பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் .ரொம்ப நாட்களாகவே என்னை ஒரு கார் வாங்கும்படி நச்சரித்துக் கொண்டிருப்பார் .அதற்கு முக்கிய காரணம் அவர் மகளை காரிலேற்றி ஊர் சுற்ற வேண்டுமென்பதே .மிருணா வேறு கார் வாங்கியதும் நான்தான் என் கையால் முதல் கியர் போட்டு தருவேன் …என அவளுக்கு அவளே ஒரு தகுதியை உண்டாக்கிக் கொண்டிருந்தாள் .எனக்கு அப்போது கார் ஆடம்பரம் என்று தோன்றியது .அதனால் கார் வாங்குவதை தவிர்த்து வந்தேன் .ஆனால் அன்று நீ ஸ்கூட்டி ஓட்டியதை பார்த்ததும் உன்னை கார் ஓட்ட வைத்து பார்க்க வேண்டுமென்ற ஆசை வந்தது .உடனே கார் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டேன் .

முதன்முதலாக நீதான் காரில் ஏறி கியர் போட்டு ஸ்டியரிங் பிடித்து உட்கார வேண்டுமென்பது என் ஆசை .மிருணாளினி காரை முடித்ததும் சாவியை எடுத்துக்கொண்டு நான் உட்காருவேன் என்றாள் .அது என் மீராவிற்கு என்று சாவியை பிடுங்கிக்கொண்டு வந்தேன் .முதன்முதலில் நீ உட்கார வேண்டுமென்றுதான காரை இன்னமும் நம் வீட்டிற்கு கொண்டுவராமல் மாமாவின் ஆபிஸிலேயே நிறுத்தியிருக்கிறேன் .அதற்குள் பாட்டியின் மரணம் ….”

” சாரி ….” அழுதபடி கணவனின் மார்பில் முகத்தை புதைத்தாள் .

” இன்னமும் ஏதாவது இருந்தாலும் கேட்டுவிடு மீரா ….”

” நீங்களும் , அவளும் கபாலி படம் பார்க்க தியேட்டர் போனீர்களே ….” திணறி திணறி கேட்டாள் .

” அன்று நீயும் அங்கே வந்தாயா மீரா …? “




” எனக்கு ஒரு டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்து தந்தாள் ….”

” சை …எவ்வளவு குறுக்கு புத்தி இந்த பெண்ணிற்கு .அன்று அவளும் , தனசேகரும் சேர்ந்து படம் பார்க்க ஏற்பாடு பண்ணியிருந்தேன் .தனசேகர் என்னுடைய நண்பன் .மிருணாளினிக்கு அவனை மாப்பிள்ளையாக மாமாவிடம் அறிமுகப்படுத்தினேன் .மிக விரைவில் அவளது திருமணத்தை முடித்து அவளை அனுப்ப வேண்டுமென நினைத்தேன் ஏனென்றால் எப்போதும் நம் இருவருக்குமிடையே அரூபமாக அவள் ஏதோ ஒரு வகையில் நின்று கொண்டிருப்பதை போல் , கண்ணுக்கு தெரியாமல் உனக்கு ஏதோவோர் துன்பத்தை கொடுத்துக் கொண்டிருப்பது போல் ஒரு பிரமை எனக்கு இருந்து கொண்டேயிருந்தது .

அதனால் அவளை நம் வாழ்க்கையிலிருந்து விலக்க அவளது திருமண ஏற்பாடுகளில் முழு மூச்சாக நானே இறங்கினேன் .மிருணாளினியை பார்க்கும் யாருக்கும் அவளை உடனே பிடிக்கும் .தனசேகருக்கும் , அவன் வீட்டினருக்கும் அவளை மிகவும் பிடித்தது .ஆனால் அவள் தனசேகருடன் தனியாக பேசவேண்டுமென்றாள் .திருமணத்திற்கு முன் அவர்களிருவரையும் தனி இடமெதிலும் சந்திக்க வைக்க பிடிக்காமல் …கூட்டம் அதிகமாக இருக்கும் கபாலி பட தியேட்டரை தேர்ந்தெடுத்து இருவரும் பேசிக்கொள்ள ஏற்பாடு செய்தேன் .

அன்று தனசேகர் அவசர வேலையால் ஒரு அரைமணி நேரம் தாமதமாகுமென்றதால் , அதுவரை தியேட்டரில் மிருணாவை தனியாக விட மனமின்றி அவன் வரும் வரை நானிருந்தேன் .ஆனால் அதனை அவள் இப்படி பயன்படுத்திக் கொள்வாளென எனக்கு தெரியாது ….”

” அவளுக்காக பார்க்க போய் அவள் என் வாழ்க்கையை கெடுக்க நினைத்து விட்டாளே ….” அழுத்தமாக தலையை பிடித்து கொண்ட கணவனின் கையை விலக்கியவள் அவனை மார்போடு அணைத்துக் கொண்டாள் .

” விடுங்க …அவள் குணம் அவ்வளவுதான் .ஆனால் எவ்வளவு முயற்சித்தும் அவள் திட்டமெல்லாம் தோல்வியில்தானே முடிந்தது ….”

மீராவின் மார்பில் முகம் புதைத்த நந்தன் மெல்ல தலையை கீழே சாய்த்து அவள் வயிற்றில் சேலையை விலக்கி விட்டு மென்மையாக முத்தமிட்டான் .

” இரண்டு மாதமாக இதை கூட என்னிடம் சொல்லாமல் விட்டு விட்டாயே மீரா ….” ஏக்கமாக வந்தது அவன் குரல் .

” ஐயோ …இது எனக்கே தெரியாதுங்க .என் மனது இருந்த குழப்பத்தில் நான் இதை கூட சரியாக கவனிக்கவில்லை ….”

” ஓ…அப்போது சரி …இதை எனக்கு நிரூபித்துக் காட்டு …”

” அதெப்படி காட்டுவதாம் …? ” கிண்டலாக கேட்ட மனைவிக்கு உதடுகளை குவித்து காட்டினான் …

” இப்படி …”

” ம் …காட்டுவேன் .பிறகு …அப்படியில்லை …இப்படியில்லை என குறை சொல்லக்கூடாது …”

” அது போல் ஒரு உயிர்ப்பில்லாத முத்தம் இனி உன்னிடமிருந்து வருமா என்ன …?இப்போது கொஞ்சம் முன்னால் கொடுத்தாயே …ஹப்பா …என்ன முத்தம் அது …” தனது தலையை தடவி சிலிர்த்தவன் …

” இந்த மொட்டைத்தலையில் வில்லனை போல் தெரிகிறேனா மீரா …” என்றான் சிறு கவலையுடன் .

” இல்லை …எனக்கே எனக்கான …என்னுடைய மட்டுமான ஹீரோ போல் இருக்கிறீர்கள் …” கணவனின் தோள்களை அழுத்தி அவனை கட்டிலில் அமர்த்தியவள் …உள்ளத்து காதலையெல்லாம் தனது இதழ்களில் தேக்கி அழுத்தமாக அவன் உச்சந்தலையில் முத்தமிட்டாள் .

” ஆஹா …” என உடல் சிலிர்த்தவன் அவளை முரட்டுத்தனமாக இழுத்து இதழ்களை சிறை செய்தான் .
அவசரமாக அவன் மீராவை கட்டிலில் சரித்தபோது …

” மீரா …” வெளியிலிருந்து சுந்தரியின் குரல் .

” இந்த வெந்நீர் பானையை எங்கேம்மா .ஆளாளுக்கு தூக்கி வெந்நீர் போட்டாங்க .இப்போ பாத்திரத்தையே காணோம் .கொஞ்சம் பார்க்கிறியாம்மா ….”

இருவருக்கும் சிரிப்பு வந்தது .

” கடமை அழைக்கிறது கணவனே …”

” சென்று வா மனைவியே .நமக்காக இரவு நீண்டு காத்திருக்கிறது …” நெற்றியில் பாசமானதொரு இதழ் ஒற்றலுடன் மனைவியை விடுவித்தான் நந்தன் .

பொங்கும் காதலுடன் எப்போதும் அணைக்க தயாரென்ற பார்வையுடன் நின்ற கணவனை பெருமிதத்துடன் பார்த்தபடி தனது கடமையாற்ற வெளியேறினாள் நந்தனின் மீரா.

நிறைவு




What’s your Reaction?
+1
26
+1
16
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
Subscribe
Notify of
guest

1 Comment
Inline Feedbacks
View all comments
P Bargavi
P Bargavi
14 days ago

Nice story Nandan Meera nice pair

1
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!