ஆண்கள் பெண்களுக்கு மட்டுமல்ல, பூக்களுக்கும் இலைகளுக்கும் பருவங்கள் உண்டு.
பூவின் பருவங்கள்!
1.அரும்பு – அரும்பும் நிலை. பூக்கும் செடிகொடிகளில் மலரும் முன் இதழ்கள் குவிந்து இருக்கும் மொட்டு அல்லது மொக்குள் நிலைக்கும் மிக முன்னே மிகச் சிறியதாக இருக்கும் மொட்டின் நிலை. அரும்பு பெரிதானால் மொட்டு அல்லது மொக்கு நிலையை அடையும். அரும்பின் மூன்று நிலைகள் – *நனை, *முகை, *மொக்குள்.
2.மொட்டு – மொக்குவிடும் நிலை. அரும்பு பெரிதாகி மலரும் முன் இருக்கும் நிலை.
3.முகை – முகிழ்விக்கும் நிலை.
எ.கா:
பாடிமிழ் விடர்முகை முழங்க ஆடுமழை இறுத்ததெங் கோடுயர் குன்றே (நற்றிணை)
நறுமுகையே நறுமுகையே நீ ஒரு நாழிகை நில்லாய் (திரைப்பாடல்)
4.மலர் – மலரும் நிலை
5.அலர் – மலர்ந்த நிலை. அல் + அர் = அலர்; விரி-தல்.
6.வீ – வாடும் நிலை. வீ என்பது ஓரெழுத்து ஒரு மொழியாகும். . இதற்கு வீழுகின்ற அல்லது வீழ்ந்த மலர் என்றுப் பொருள்.
எ.கா:
”கருங்கால் வேங்கை வீஉகு துறுகல்..” (குறுந்தொகை)
7.செம்மல் – வதங்கும் நிலை
இதே போன்று தாவர இனத்தில் ஓர் இலையின் வளர்ச்சி நிலையில் பல்வேறு வகையான பருவத்தைச் சுட்டும் சொற்கள் உள்ளன. கொழுந்து, தளிர், இலை, பழுப்பு, சருகு ஆகிய சொற்கள் இலையின் பல பருவங்களை வெளிப்படுத்தும் .