gowri panchangam Sprituality

காக்க காக்க கனகவேல் காக்க- 22 (சென்னை கந்தசுவாமி கோயில்)

கந்தக்கோட்டம் என்று அழைக்கப்படும் சென்னை முத்துக்குமார சுவாமி கோயில், ஆயிரம் வருடங்களுக்கு மேல் பழமையான கோயில் என்று அறியப்படுகிறது. சிதம்பர சுவாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள், வள்ளலார் சுவாமிகள் (ராமலிங்க அடிகள்) இத்தல முருகப் பெருமானை (கந்தசுவாமி) போற்றிப் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை பாரிமுனை அருகில் உள்ள இக்கோயிலில் கந்தப் பெருமான் விரும்பி நின்றதால், பீடம் ஏதும் இல்லாமல் தரையில் நின்றபடியே பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். உற்சவர் முத்துக்குமார சுவாமி தனி கொடிமரத்துடன், முகத்தில் புள்ளிகளுடன் அழகு பொருந்தியவராக காட்சி அருள்வது தனிச்சிறப்பு.




தல வரலாறு

அந்நியர்கள் ஆட்சியில் பல கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன. அதுசமயம், செங்கல்பட்டு அருகில் உள்ள திருப்போரூர் கோயிலில் இருந்த கந்தசுவாமி விக்கிரகத்தை பக்தர்கள் அருகில் இருந்த புற்றுக்குள் மறைத்து வைத்தனர். பல்லாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திருப்போரூர் கோயிலில் வழிபாடு நடைபெறத் தொடங்கியது. பழைய விக்கிரகத்தைக் கண்டுபிடிக்க இயலாததால், புதிய விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்த பக்தர்கள், பழையபடி வழிபாட்டைத் தொடர்ந்தனர்.

சென்னை பாரிமுனை பகுதியில் சிவாச்சாரியார் ஒருவர் வசித்து வந்தார். ஒருசமயம், அவர் திருப்போரூர் தலத்துக்குச் சென்று கந்தசுவாமி பெருமானை தரிசித்துவிட்டு, சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அவருடன் சில ஆச்சாரியர்களும் வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் வரும்வழியில் திடீரென்று கனமழை பெய்தது. நேரம் ஆக ஆக வெள்ளம் பெருக்கெடுத்தது. ஊர் திரும்ப முடியாமல் சிவாச்சாரியாரும், ஆச்சாரியர்களும் தவித்தனர். சுற்றும் முற்றும் பார்த்து, அருகில் இருந்த ஒரு மடத்தில் தங்கினர். அன்றிரவு சிவாச்சாரியாரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான், “நான் உனக்கு அருகில் உள்ள புற்றில் குடி கொண்டுள்ளேன். எனக்கு கோயில் கட்ட வேண்டும்” என்று திருவாய் மலர்ந்தார்.

கண்விழித்த சிவாச்சாரியார் அருகில் இருந்த புற்றில் முருகப் பெருமான் சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். மழையும் சற்று ஓய்ந்தது. உடனே, முருகப்பெருமான் சிலையுடன் சிவாச்சாரியார் மற்றும் ஆச்சாரியர்கள் அங்கிருந்து கிளம்பி தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

நீண்ட நேரம் பயணித்ததால், களைப்படைந்த அவர்கள் ஓரிடத்தில் முருகப் பெருமான் சிலையை வைத்துவிட்டு, சற்று ஓய்வெடுத்தனர். சிறிது நேரம் கழித்து, அங்கிருந்து அவர்கள் கிளம்ப முற்பட்டபோது, சிலையை அங்கிருந்து எடுக்க முடியவில்லை. முருகப் பெருமான் அங்கேயே தங்க முடிவுசெய்துவிட்டார் என்பதை உணர்ந்த அவர்கள், அதே இடத்தில் அவருக்கு கோயில் எழுப்பினர்.




திருப்போரூர் சென்றுவிட்டு திரும்பும் வழியில் கிடைத்த விக்கிரகம் என்பதால் இந்த மூர்த்தி ‘கந்தசுவாமி’ என்ற பெயரால் அழைக்கப்பட்டார். ‘பெத்தநாயக்கன் பேட்டை’ என்று அழைக்கப்பட்ட இத்தலம், முருகன் கோயில் அமைந்த பிறகு ‘கந்தக்கோட்டம்’ என்று அழைக்கப்பட்டது.

கோயில் அமைப்பும் சிறப்பும்

கந்தசுவாமி கோயிலின் வடக்குப் பகுதியில் பிரதான நுழைவாயிலும், 5 நிலை ராஜ கோபுரமும் அமைந்துள்ளது. மூலவருக்கும் கொடிமரத்துக்கும் இடையே துளைகளுடனான சுவர் மட்டுமே உள்ளது. நேர் வாயில் கிடையாது.

கந்தசுவாமியே விரும்பி இத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார். அளவில் மிகவும் சிறிய மூர்த்தியாக அருள்பாலிக்கும் முருகப் பெருமான், நின்ற கோலத்தில் தனித்து காட்சி அருள்கிறார். வள்ளி, தெய்வானை ஆகியோர், முருகப் பெருமானுக்கு இருபுறமும் தனித்தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கின்றனர்.

கோமாதா பூஜை

இந்தக் கோயிலில் கோமாதா பூஜை சிறப்பாக நடைபெறுகிறது. தினமும் எண்ணற்ற பக்தர்கள் வந்திருந்து கோபூஜை செய்கின்றனர். கோபூஜை செய்தால் குடும்பத்தில் அனைத்து செல்வங்களும் பெருகும் என்பது ஐதீகம்.

நோய்கள், தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பசுமாட்டுக்கு பழங்கள், கீரைகள் கொடுத்து வழிபாடு செய்தால் தோஷ நிவர்த்தி ஆகும் என்பது நம்பிக்கை. தோல் நோய் மற்றும் சரும கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் கோபூஜை செய்து, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, சரவணப் பொய்கை தீர்த்தத்தில் வெல்லம் கரைப்பது வழக்கம்.

திருவிழாக்கள்

வைகாசி வசந்த உற்சவம், ஆடிக் கிருத்திகை விழா, பங்குனி உத்திரத் திருவிழா, ஐப்பசி கந்த சஷ்டி திருவிழா, தை மாதத்தில் பிரதான திருவிழா (18 நாள்) உள்ளிட்டவை இங்கே சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!