அம்மனின் சக்தி பீட வரிசையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கடையூர் அபிராமி அம்மன் கோயிலும் பிரதானமாகக் கருதப்படுகிறது. கால சக்தி பீடமாகக் கருதப்படும் இக்கோயிலில் அபிராமி அந்தாதியை அருளச் செய்துள்ளார் தேவி. பக்தர்களின் வாழ்வில் இருள்நீக்கி, ஒளியேற்றி, அவர்கள் வேண்டியதை எல்லாம் அம்பிகை அருள்வதால்,எப்போதும் இங்கே பக்தர்கள் குவிந்தவண்ணம் இருப்பது வழக்கம்.
தல வரலாறு
ஒருசமயம் பிரம்மதேவர், ஞான உபதேசம் பெறும் எண்ணத்தோடு கயிலாய மலை சென்றார். சிவபெருமானும் பிரம்மதேவரின் எண்ணத்துக்கு செவி சாய்த்து, அவரிடம் வில்வ விதைகளை அளித்தார். பூவுலகில் எந்த இடத்தில், விதைக்கப்பட்ட ஒரு நாழிகைக்குள் (24 நிமிடங்கள்) வில்வ மரம் வளர்கிறதோ, அந்த இடத்தில் ஞான உபதேசம் அளிப்பதாக உறுதி அளிக்கிறார். அதன்படி பிரம்ம தேவர், இத்தலத்துக்கு வந்து சிவபெருமானை வழிபட்டார்.
சிவபெருமானும் அவருக்கு அருட்காட்சி அளித்து ஞான உபதேசம் செய்து வைத்தார். கோயிலில் மூல மூர்த்தியாக, சிவனே ஆதி வில்வநாதராக தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறார். பாற்கடலைக் கடைந்து, அமிர்தம் கிடைக்கப் பெற்ற தேவர்கள், மகிழ்ச்சியில், விநாயகப் பெருமானை தரிசிக்காமல் சென்றனர். இதில் கோபமடைந்த விநாயகர், அந்த அமிர்தக் கலசத்தை மறைத்து வைத்தார்.
தங்கள் தவற்றை உணர்ந்த தேவர்கள், விநாயகரை வணங்கி, அவரிடம் இருந்து அமிர்தக் கலசத்தைப் பெற்று, சிவபூஜை செய்வதற்காக இத்தலத்தில் வைத்தனர். அப்போது அமிர்தக் கலசம் இருந்த இடத்தில் சிவலிங்கம் தோன்றியது. அப்படி அமிர்தத்தில் இருந்து தோன்றியதால், சிவபெருமான், ‘அமிர்தகடேஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.
கோயில் சிறப்பு
பிரகாரத்தில் ஒரு சந்நிதியில் பார்வதி, முருகப் பெருமானை வலது மடியில் அமர்த்திய கோலத்தில் ‘குகாம்பிகை’யாக அருள்பாலிக்கிறார். ‘கள்ளவாரண விநாயகர்’ துதிக்கையில் அமிர்தக் கலசத்தை வைத்தபடி அருள்பாலிக்கிறார். இத்தலம் விநாயகப் பெருமானின் அறுபடைவீடுகளில் மூன்றாம் படை வீடாகும்.
துயரம் நீங்கி மன அமைதி பெற, வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு ஆகியவற்றுக்காக பக்தர்கள் இங்கு வந்து நேர்த்திக் கடன் செலுத்துவர். சங்காபிஷேகம் ருத்ராபிஷேகம், சப்த திரவிய மிருத்யுஞ்சய ஹோமம், அம்மனுக்கு புதுத்தாலி சாற்றுதல், அன்னதானம் ஆகியவற்றை செய்து பக்தர்கள் வழிபாடு செய்வது இன்றும் நடைபெறுகிறது.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1