15
சிறு சிறு பறவைகளை தள்ளிவிட்டு
பெருங்கழுகாய் வியாபித்துவிட்டாய்
என் பிரபஞ்சமெங்கும் ,
பேசு …ஏதாவது…எதையாவது…
உன் சிறு வார்த்தையின் ” அ ” வில் கூட
பாதுகாப்பாய் சுருண்டு கொள்வேன்.
” அத்தை எனக்கு இது வேண்டாம் அத்தை .இது எனக்கு பிடிக்கவில்லை .ரொம்ப வலிக்கிறது …” வயிற்றை பிடித்துக்கொண்டு துடித்துக்கொண்டிருந்தாள் திவ்யா .
ஒரு பெண்ணாக அவளது வேதனையை உணர்ந்து கொண்ட மீரா , அவளை சமாதானப்படுத்த முயன்றாள் .
” திவ்யா …இதோ பாரம்மா .இது எல்லா பெண்களுக்கும் வருவதுதான் . நீ பெரிய பிள்ளையாக வேண்டாமா …? அதற்காகத்தான் இதெல்லாம் நடக்கிறது .கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாகிவிடும் ….”
” இல்லை வேண்டாம் .நான் பெரிய பெண்ணாக வேண்டாம் .சின்ன பிள்ளையாகவே இருந்துவிட்டு போகிறேன் .இந்த வலியும் , வேதனையும் மட்டும் எனக்கு வேண்டாம் …” கத்தினாள் திவ்யா .
” நீ சின்ன பிள்ளையாகவே இருந்தாயானால் எப்படி நிறைய படிப்பாய் …? பெரிய வேலைக்கெல்லாம் போய் உன் அம்மாவை காப்பாற்றுவாய் …? ….” நந்தகுமாரனின் குரல் கேட்டதும் திவ்யா இன்னமும் கொஞ்சம் தன்னை மீராவினுள் குறுக்கினாள் .
இந்த சூழ்நிலையில் ஒரு ஆணை சந்திக்க கூசும் அவளது பெண்மையை புரிந்துகொண்ட மீரா …
” நீங்கள் கொஞ்சம் வெளியே இருங்கள் .நான் பேசிக்கொள்கிறேன் …” என்றாள் .
ஆனால் அவன் நகராமல் ” ஏன் …? ” என்றான் .
” ஏன்னா…. இப்போது அவளுக்கு கூச்சமாக இருக்காதா …? ” கோபமாக கேட்டாள் .
” எதற்கு கூச்சம் …? ஏதாவது தப்பு செய்துவிட்டாளா என்ன ….வெட்கமும் கூச்சமும் பட ….திவ்யா இங்கே திரும்பு மாமாவை பார் …”
மீராவின் மடியில் சாய்ந்திருந்த திவ்யாவை வலுக்கட்டாயமாக எழுப்பி தன் முகம் பார்க்க வைத்தான் .
” இது வேதனையோ வெட்கமோ பட வேண்டிய விசயம் இல்லை .இப்போதுதான் நீ நல்ல உடல்நிலையுடன் , இருக்கிறாய் என்று அர்த்தம் .உனது உடல் ஆரோக்கியத்தை இயற்கை இப்படி எடுத்து காட்டுகிறது .இதற்கு போய் யாராவது அழுவார்களா …? ” தலையை வருடியபடி மென்மையாக பேசினான் .
” ஆனால் இது எனக்கு ரொம்ப வலிக்குதே ….”
” இந்த உலகத்தில் நல்ல விசயங்கள் எல்லாமே ஆரம்பத்தில் வேதனையாகத்தான் இருக்கிறது .வேதனை இல்லாமல் சாதனைகள் இல்லை .நீ பெரிய படிப்பு படித்து வேலை பார்த்து சம்பாதித்து உன் அம்மாவிற்கு நகையாக வாங்கிப் போடவேண்டுமென்ற உன் கனவுகளெல்லாம் என்ன ஆவது …? இப்படி ஒரு சிறு உடல் வலிக்கே சோர்ந்து போகிறவள் நாளை எப்படி மாவட்ட கலெக்டராக போகிறாய் …?
அக்காள் மகளை லட்சியங்களை நினைவு படுத்தி அவளை வலியிலிருந்து மீட்க முயற்சித்தான் .அவனது இந்த இதமான அணுகுமுறையை பிரமிப்பாய் பார்த்தாள் மீரா.
” உனக்கு ஐ.ஏ.எஸ் கோச்சிங்கிற்காக என் நண்பன் ஒருவன் மூலமாக சப்-கலெக்டர் ஒருவரிடம் விபரம் கேட்டு வைத்திருந்தேன் .அடுத்த வருடத்திலிருந்தே கோச்சிங் ஆரம்பித்துவிடலாமென அவர் சொல்லியிருந்தார் .முதலிலிருந்தே கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும் என்றார் .எங்கள் வீட்டு பெண் தைரியசாலி .உழைக்க அஞ்சாதவள் …என்றெல்லாம் சொல்லியிருந்தேனே .நீ என்னவென்றால் …..”
” இல்லை ….இல்லை …நான் தைரியசாலிதான் .நான் எதற்கும் பயப்படமாட்டேன் ….” முகத்தை துடைத்தபடி நிமிர்ந்தாள் திவ்யா .
” என்னம்மா பெண்கள் அனுபவித்தே ஆகவேண்டிய இந்த இயற்கையான சிறிய வேதனைக்கே இப்படி துவண்டுவிட்டாய் .கலெக்டருக்கு படிப்பதும் பிறகு அந்த பதவியில் இருப்பதும் எவ்வளவு பெரிய விசயங்கள் தெரியுமா …? இதையெல்லாம் நீ ….”
” அதெல்லாம் நான் சமாளித்துக்கொள்வேன் .மாமா என்னை அந்த சப்கலெக்டரிடம் அழைத்து போங்கள் .நானே அவரிடம் கோச்சிங் விபரம் பேசுகிறேன் .நாளையே போகலாம் மாமா ….”
விபரம் தெரிந்தது முதல் கலெக்டர் ஆகவேண்டுமென்பது திவ்யாவின் கனவு .அந்தக்கனவை நினைவுபடுத்தியதும் உடல் உபாதைகளை புறந்தள்ளி நிமிர்ந்தாள் சிறுமி .
இது பொதுவாக பெண்களின் குணம் .தனக்கான தேவைகளில் அவள் உறுதியாகும் போது , எதிர்படும் இடையூறுகளெல்லாவற்றையும் எளிதாக அவள் உதறிவிடுவாள் .பெண்ணின் மென்னுடலை காட்டி அவளை பலவீனமானவளாக காட்ட முயன்றாலும் மிகுந்திருக்கும் மனவலிமையால் அவள் ஆணை விட ஆயிரம் மடங்கு பலம் பெறுவாள் .அதனால்தான் அவளை சக்தி என்கிறோம் .
இதனாலேயே இயற்கையே அவளுக்கு தந்திருக்கும் பல உடல் இன்னல்களையும் தாண்டி ஆணுக்கு நிகராக அவளால் உடலாலும் சாதிக்க முடிகிறது .பெண்ணினுள் இருக்கும் இந்த வன்குணத்தை தூண்டிவிட ஒரு சிறு தூண்டுகோல் போதும் .அன்பான பார்வை , அனுசரணையான பேச்சு போதும் .இந்த உலகையே வென்று காலடியில் போட்டுவிடுவாள் .
அதனைத்தான் இப்போது நந்தகுமார் செய்து கொண்டிருந்தான் .தன் பலம் தெரியாமல் தவித்திருந்த குழந்தைக்கு நல்வழி காட்டிக்கொண்டிருந்தான் .
” வெரிகுட் குட்டிம்மா .இப்போதான் நீ இந்த மாமாவோட செல்ல மருமகள் . ஓடிப்போய் முகம் கழுவிவிட்டு வா .அவளுக்கு குடிக்க ஏதாவது கொடு மீரா. பாவம் அழுதழுது தொண்டை காய்ந்திருக்கும் ….” கிண்டலாக சொன்னான் .
” ம் …நான் ஒண்ணும் அழலை .சும்மாதான் ….”
” ஓ…அழலையா …? கண்ணு வேர்க்குதா …? “
” திரும்ப திரும்ப கிண்டலா பண்றீங்க …? ” மாமனின் முதுகை மொத்த ஆரம்பித்தாள் .
” திவ்யா இந்த ஜூஸை குடித்து உடம்பில் தெம்பு ஏற்றிக்கொண்டு பிறகு உன் மாமாவை தைரியமாக அடி ….” மீரா ஜூஸை நீட்டினாள் .
” அடிப்பாவி புருசனை அடிக்கிறவங்களுக்கு ஜூஸெல்லாம் கொடுத்து பலமேற்றி விடுவாயா நீ…? திவ்யா பாருடா இந்த கொடுமையை .இவள் கூட நான் எப்படி குடும்பம் நடத்த …? “
” வேணும் …உங்களுக்கு அப்படித்தான் வேணும் ….” உடல் உபாதை மறந்து மலர்ந்த முகத்துடன் குதிக்க தொடங்கினாள் திவ்யா .
ஆதரவாய் அவள் தலை வருடியவன் ” திவுக்குட்டி இப்போ மாமாவை பார்த்து சொல்லு .வலி இல்லைதானே உனக்கு …? ” என்றான் .
” இதெல்லாம் இல்லை மாமா .நாம் அந்த சப்கலெக்டரை பார்க்க நாளை போகலாமா …? “
” அடுத்த வாரம் போகலாம் .நீ அதுவரை வீட்டில் இருந்து நல்லா சத்தான சாப்பாடு சாப்பிட்டு உடம்பை தேற்றி வைப்பாயாம் .சரியா …? இப்போது எல்லோரும் வரும் முன் ஒரு குட்டி தூக்கம் போடு போ ….”
அவளை உள்ளே அழைத்து சென்று பூப்படைந்த பெண்ணிற்கான தேவைகளை மீரா விளக்கி கொண்டிருந்த போது , வெளியேயிருந்து அழைத்த நந்தகுமார் ….
” மீரா ….கடையில் எதுவும் வாங்கவேண்டுமா ..? ” குறிப்பாக கேட்டான் .
” இல்லை என்னிடம் இருக்கிறது ….” என்றுவிட்டு சிறுமியிலிருந்து பெரியவளாகி திகைத்து நின்று கொண்டிருந்த சிறுபெண்ணிற்கு அவளுடைய பாதுகாப்புகளை பக்குவமாக விளக்கி அவளை தூங்கவைத்து விட்டு வந்தாள் மீரா .
இடையில் அழைத்த பாட்டியிடம் தான் பேசுவதாக சொல்லி சென்ற நந்தகுமார் …பாட்டிக்கு சொல்லிவிட்டு தனது அக்காவிடம் அவள் மகள் விசயம் பேசிவிட்டு அம்மா , அப்பா என ஒவ்வொருவராக அழைத்து பேசத்தொடங்கினான் .
அவன் பேசி முடிக்கும் வரை அவனைப் பார்த்தபடியிருந்த மீரா அவன் போனை அணைத்து பாக்கெட்டில் போட்டுவிட்டு ” நிறைய வேலை இருக்கிறது மீரா …” என்றபோது அவனருகில் நெருங்கி நின்றாள் .
நிமிர்ந்து அவன் கண்களுக்குள் தன் கண்களை கலந்தவள் …
” சற்று முன் இந்த கணவனை அடைந்ததற்காக நீ வருத்தப்படவில்லையா …என்று கேட்டீர்கள் . இப்போது சொல்கிறேன் . பெண்ணை …பெண் உணர்வுகளை மதிக்கும் உங்களை கணவனாக அடைந்ததற்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன் .இதை நீங்கள் எப்படி எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை. இப்போது என் மனதில் பொங்கிக்கொண்டிருக்கும் உணர்ச்சிகளை என்னால் இப்படித்தான் ….”
என்றவள் அப்படியே அவன் மேல் சாய்ந்து அவனை இறுக கட்டியணைத்தாள் .அவனது பரந்த முதுகில் படர்ந்த தனது கைகளை இறுக்கியபடி ஒரு நிமிடம் நின்றவள் , பிறகு நுனிக்கால்களால் எம்பி அவனது கன்னத்தில் தனது இதழ்களை அழுந்த பதித்தாள் .
நந்தகுமாரின் உடல் இறுகி கல்லானது .
What’s your Reaction?
+1
25
+1
20
+1
+1
+1
3
+1
+1
Nice