17 கலைடோஸ்கோப் – விஜய், சதானந்தன்
“இனி விஜய். விஜய் இதை எடுத்திருக்கலாம்ங்கறதுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கு. சந்தர்ப்பமும் அவருக்கு வாகா அமைஞ்சது.
“ஆனா அவருடைய உடைமைகள் ஹோட்டலில் முழுமையாகச் சோதனை போடப்பட்டுவிட்டன. மோதிரம் இல்லை. மோதிரம் இருந்தால் சொத்து என்ற நம்பிக்கை அவருக்கும் இல்லை. பத்மா ஒரு அழகான பெண் என்ற வரையிலே அவருக்கு ஒரு அட்மிரேஷன் இருக்கே தவிர அது சீரியஸான ‘காதல்’ இல்லை. சும்மா பார்க்கிற எல்லாப் பெண்கள் கிட்டயும் வழிகிற வயசு அவருக்கு. அதோடு அவருடைய அப்பாவின் நிலை என்ன, அவர்கள் பிஸினஸ் என்ன நிலையில் இருக்கு, இதெல்லாம் தெரிஞ்சுக்கற, அதுக்காக ஆக்ஷன் எடுக்கற, மெச்சூரிடியோ, ரெஸ்பான்சிபிலிடியோ, இவருக்கு இல்ல.”
விஜய் வெட்கித் தலைகுனிந்தாள். “சொல்லம்மா! இன்னும் நல்லா அந்தப் பயலுக்கு உறைக்கற மாதிரிச் சொல்லு” என்றார் சதானந்தன்.
“அடுத்து நீங்க தான் ஹைனஸ்” என்றாள் தன்யா புன்னகையோடு. “நீங்க என்ன நிலையில் இருக்கிங்கன்னு உங்களுக்கே தெரியும்னு நினைக்கிறேன். 1. மோதிரத்தோட சக்தி மீது நம்பிக்கை உள்ளவர் நீங்க, 2. உங்க பிஸினஸில் ஏகப்பட்ட நஷ்டம் வந்திருக்கு, குடும்பச் சொத்தை வைத்துத்தான் நீங்க அதை மீட்கணும், 3. ஹேமா அன்னிக்குப் பேசும்போது நீங்களும் இருந்தீங்க, 4. சாதாரணமாய் நீங்க ஹேமாவோடு பேசியதேயில்லை, அதனால் அவள் உங்ககிட்டப் பேசறதை யாராவது பார்த்தால் விஷயம் வெளியாயிடும், தனக்கு லாபமில்லாமல் போயிடும்னும் அவ நினைச்சிருக்கலாம், அதனால் இப்படி மறைமுகமா எல்லார் முன்னாடியும் பூடகமாகப் பேசியிருக்கலாம், 5. குடும்ப கௌரவத்திற்காக எதையும் செய்யலாம்னு நினைக்கற காரெக்டர் நீங்க, யாரோ ஒரு வேலைக்காரி இராஜவம்சத்தைச் சேர்ந்த உங்களை ப்ளாக்மெய்ல் பண்றான்னா, அவளை… அப்புறப்படுத்திட்டா… என்னன்னு உங்களுக்குத் தோன்றினால் வியப்பில்லை.”
சதானந்தன் உறைந்தார். சில விநாடிகளில் சுதாரித்துக் கொண்டார். “நீ சொன்ன காரணம் எதையும் நான் மறுக்க முடியாதும்மா. ஆனால் நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவன். ஒரு உயிரைக் கொல்றது மகா பாவம்னு நினைக்கிறவன். இதை உங்களையெல்லாம் எப்படி நம்பவைக்கிறதுன்னுதான் எனக்குப் புரியல” என்றார் சோகையாய்.
“உங்களோட ஒரே ஒரு செயல் தான் இந்த பாட்டர்னிலிருந்து வித்தியாசப்படறது, ஹைனஸ். இந்தப் ப்ராபர்டி …”
“பட்டம்னு சொல்லும்மா …” என்றார் சதானந்தன்.
“வாட் எவர். இந்தப் பட்டத்தைப் பாஸ்கர் விட்டுக் கொடுத்தார். பொறுப்பு உங்க கையில் வந்தது. நீங்க அதை விஜய்க்குத்தான் கொடுக்கப் போகிற மாதிரி நடந்துக்கிட்டீங்க. இது எல்லாம் ஓகே. ஆனா ஒரு ஸ்டேஜில் அதை சுஜாதாவுக்குக் கொடுத்தீங்க பாருங்க, அப்போதான் பாட்டர்ன் விலகிடுச்சு. இந்தச் சொத்தை அடைய வேறு யாரோ முயற்சி செய்யறாங்கன்னும், அவங்களை நினைச்சு நீங்க பயப்படறீங்கன்னும் புரிஞ்சது.”
“ஆமா, சுஜாதா தானே, கஷ்டப்பட்டா படட்டும்னு நினைச்சுட்டார்” என்றாள் சுஜாதா இடைப்புகுந்து.
“அப்படியெல்லாம் தப்பா நினைக்காதே சுஜாதா. இந்த இராஜப்பட்டத்தை ஏத்துக்கறதுக்குச் சகல தகுதியும், இதன் பொறுப்புகளைத் தாங்கும் திறமையும், தைரியமும் உனக்கு இருக்கு, அதனாலேதான் உங்கிட்ட பட்டத்தைக் கொடுக்க முடிவு பண்ணினேன்” என்று சதானந்தன் பரிதாபமாய்ச் சொன்னார்.
அவர் சொன்னதை யாருமே, விஜய், பாஸ்கர் உட்பட, நம்பவில்லை என்பது அவர்கள் முகங்களிலிருந்த வெறுப்பிலிருந்து தெரிந்தது.
இந்தக் குடும்பச் சண்டையில் தன்யா கலந்துகொள்ளவே இல்லை. அமைதியாகப் பேச்சைத் தொடர்ந்தாள்.
What’s your Reaction?
+1
6
+1
4
+1
+1
+1
2
+1
+1