gowri panchangam Sprituality

காவல் தெய்வங்கள்/ பிலாவடி கருப்பசாமி

மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி மலை பல அற்புதங்கள் நிறைந்த ஓர் மலை. சதுரகிரி மலையில் அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். சதுரகிரி வனப்பகுதியில் சுந்தர மகாலிங்கம் கோவில் தவிர்த்து எண்ணற்ற சிறு தெய்வ கோவில்களும் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் பிலாவடி கருப்பசாமி கோவில்.




எங்கு அமைந்துள்ளது?

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பாதையில் நீரோடைக்கு எதிரே அமைந்துள்ளது இந்த பிலாவடி கருப்பசாமி கோவில். பலா மரத்தடியில் அமையப்பெற்ற காரணத்தால் மக்கள் இதை பிலாவடி கருப்பசாமி என்று அழைக்கின்றனர். சதுரகிரி சுந்தர மகாலிங்கத்திற்கு காவலராகஇருக்கும் இந்த பிலாவடி கருப்பசாமியை மலையேறும் பக்தர்கள் வழிபட்டு செல்வது வழக்கம்.




புராண கதைகள் :

பொதுவாக கருப்பசாமி என்றாலே காவல் தெய்வம் தான் அந்த வகையில் சதுரகிரி மலையில் உள்ள இந்த பிலாவடி கருப்பு ஒட்டு மொத்த சதுரகிரி மலையையும் காவல் காக்கிறார் என்பது மக்களின் நம்பிக்கை. இந்த பிலாவடி கருப்புக்கு இரண்டு விதமான புராண கதைகள் கூறப்படுகின்றன.

ஆயிரம் ஆண்களுக்கு முன்பு சதுரகிரி மலை அடிவாரத்தில் உள்ள தாணிப்பாறை கிராமத்தில் பச்சைமால் என்பவர் மாடு வளர்த்து வந்தார். அவர் தினசரி சதுரகிரி மலைப்பகுதிக்கு மாடுகளை மேய்க்க அழைத்து வருவார். அப்போது ஒரு மாட்டில் மட்டும் தினசரி பால் குறைந்து வருவதை கண்டறிந்த பச்சைமால், அடுத்த நாள் மாட்டை பின்தொடர்கிறார் அப்போது ஒரு புதரில் மாட்டின் பாலை யாரோ குடிப்பதை கண்ட பச்சைமால் தன் குச்சியால் புதரில் அடித்தார்.

அதன் பின்னர் தான் தெரிந்தது அது சுந்தர மகாலிங்கம் என்று, இன்றும் கூட சுந்தர மகாலிங்கம் லிங்கத்தின் மேற்பகுதியில் காயம் காணப்படுவதாகவும் அது பச்சை மால் ஏற்படுத்தியது தான் என்பர். பின்பு உண்மையறிந்த பச்சைமால் சிவனிடம் மன்னிப்பு கேட்க அவர் பச்சைமாலை சதுரகிரி மலையின் காவலனாக மாற்றுகிறார். அதாவது பச்சைமால் பிலாவடி கருப்பாக மாறுகிறார் என்பது ஒரு கதை.




சிவனுக்கு கோவில் :

மற்றொன்று, முன்னொரு காலத்தில் வணிகர் ஒருவர் சிவனுக்கு கோவில் கட்ட விரும்பினார். ஆனால் அவரிடம் போதிய பணம் இன்றி வழி தேடி சதுரகிரி மலைக்கு வந்து அங்கு காளங்கிநாத சித்தரை சந்திக்கிறார். சித்தர் மூலிகை தைலத்தை பயன்படுத்தி உலோகங்களை தங்கமாக மாற்றி வணிகர் கையில் கொடுத்து கோவில் கட்ட சொல்லி அனுப்புகிறார்.

பின்பு மீதம் இருக்கும் தைலத்தை யாரும் எடுக்க கூடாது என்பதற்காக அதை ஒரு கிணற்றில் போட்டு அதை மண்ணால் மூடி , அந்த கிணற்றை பாதுகாக்க கருப்பசாமியை காவலுக்கு வைக்கிறார். அன்று முதல் கருப்பசாமி தைலகிணற்றை பாதுகாக்கிறார் என்பது ஒரு கதை. தமிழ் சித்தர் போகர் எழுதிய ஜென்ம சாகரம் என்ற நூலில் கூட தைல கிண்ற்றை பற்றிய குறிப்புகள் உள்ளன. தைல கிணறு மற்றும் சதுரகிரி மலையின் காவல் தெய்வமாக உள்ள பிலாவடி கருப்பசாமி இன்று மலையை காவல் காக்கிறார் என்று மக்கள் நம்புகின்றனர்.




What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
0
Would love your thoughts, please comment.x
()
x
error: Alert: Content is protected !!