ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆண்டியூர் கிராமத்தின் அருகில் உள்ள மலைப் பகுதியில் உள்ளதே காட்டுப் பாளையம். ஒரு காலத்தில் அங்கு வெள்ளாய கௌண்டர் என்ற செல்வந்தர் வசித்து வந்தார். அவர் தெய்வ பக்தி மிகுந்தவர். ஆகவே காட்டில் சென்று யோகா பயிற்சிகளை செய்து விட்டு திரும்புவார். ஒரு நாள் அவர் காட்டில் நடந்து கொண்டு இருந்தபோது உருவம் தெரியாத எதோ ஒரு சக்தி தான் திரும்பிச் செல்வதை தடுத்து நிறுத்துவது போல உணர்ந்தார்.
எப்படியோ சமாளித்து அதனிடம் இருந்து தப்பி வந்தார். ஆனால் அது தினமும் நடக்கத் துவங்க அங்கு எதோ ஒரு இனம் புரியாத தெய்வம் உலாவுவதாக எண்ணி அதை கிராமத்தினரிடம் கூறினார். அங்கிருந்து சிறிது களிமண்ணை எடுத்து வந்து அதை கருப்பு எனும் தேவதையின் சிலையாக வடிவமைத்து அதை பூஜித்து வரலானார்.
தினமும் அந்த இடத்துக்குச் சென்று உணவும் தூக்கமும் இல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தார். அது முதல் அவர் கிராமத்தினருக்கு குறி கூறவும் ஆரம்பித்தார். அதன் பின் சில காலத்தில் அவர் மரணம் அடைந்தார். அவரை அங்கேயே புதைத்து அவருக்கும் ஒரு சிலை செய்து அதை தவசியப்பன் எனப் பெயரிட்டு அவரை தெய்வமாகவே வணங்கி வரலானார்கள். அது போல இன்னொரு இடத்திலும் முனி இருப்பதாக நம்பிய கிராமத்தினர் முனியப்பருக்கும் ஆலயம் அமைத்தனர்.
உள்ளூர் கிராமத்தினர் அந்தக் காட்டில் தவசியப்பனும் மற்ற தேவதைகளும் தவம் இருப்பதாகவும், அதனால் அவர்களுக்கு தொந்தரவு தரக் கூடாது என்பதற்காக அந்த கிராமத்தில் உள்ள அனைத்து ஆலயத்திலும் மணி அடிப்பதை நிறுத்தினார்கள்.
தவசியப்பன் ஆலயத்தில் அன்னப்பாறை என்ற ஒரு பாறை உள்ளது. அந்த ஆலயத்து பூசாரிகள் காட்டில் சென்று சில மூலிகைகளைக் கொண்டு வந்து அந்த அன்னப்பாறை மீது வைத்து அறைத்து சாறு எடுப்பார்கள். அது பல வியாதிகளை குணப்படுத்தும், முக்கியமாக பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்தது என்பதினால் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் அதை பக்தர்களுக்குத் தருவார்கள். ஆகவே அந்த தினங்களில் கூட்டம் அதிகமாக வருகின்றது.
மக்கள் தவசியப்பன் ஆலயத்துக்கு வந்து செப்பு, தாமிரம் மற்றும் தகரத்தில் செய்த யந்திரங்களை தந்து விட்டுச் செல்வார்கள். அதை அங்குள்ள பூசாரி ஆலயத்தின் சிலைக்குப் பின்னல் வைத்து விட்டு ஐந்து வாரங்களுக்குப் பிறகு ஒரு கயிற்றுடன் சேர்த்துத் தருவார். அதை பக்தர்கள் தாயத்து போல கழுத்தில் அணிந்து கொள்வார்கள். பில்லி சூனியம் போன்ற தீய ஆவிகளினால் பிடிக்கப்பட்டவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து சில நாட்கள் தங்க அவர்கள் குணம் பெறுகிறார்கள்.
அந்த மூன்று ஆலயங்களும் ஒரே இடத்தில் இல்லை என்றாலும் அவை மூன்றுமே ஒரே கடவுள் என்றே கிராமத்தினர் கருதுகிறார்கள்.தவசியப்பருக்கு பொங்கல் படைகின்றார்கள். சித்திரை மாத (ஏப்ரல் மற்றும் மே மாதங்கள்) மூன்றாம் செய்வாய் கிழமையில் இரவு வேளைகளிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. அடுத்த நாள் மலை கருப்பசாமிக்கு பலிகள் தரப்படுகின்றன. அப்போது ஆலயங்களில் மணி சப்தம் எழுப்பப்படும். மேளங்கள் முழங்கும்.
———————————–
செல்லும் வழி:
காட்டுப்பாளையம் மிக செழிப்பான பூமியாகும். திருப்பூர் ரயில் நிலையத்துக்குச் சென்றே காட்டுப் பாளையத்திற்கு செல்ல வேண்டும். அல்லது ஈரோடு, திருப்பூர், கோயம்பத்தூர் மற்றும் பிற இடங்களில் இருந்து பேருந்துகளில் செல்லலாம்.காட்டுப்பாளையத்தின் அருகில் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் வெங்கட்ரமணசாமி மற்றும் பொன்காளியம்மன் என்ற இரண்டு ஆலயங்கள் உள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1