பங்குனி உத்திரம் 2024: – தமிழ்க்கடவுள் முருகனை மனதில் நினைத்து வழிபடும் தினமே பங்குனி உத்திரம். அதாவது தமிழ் மாதங்களில் 12-வது மாதமான பங்குனியும், நட்சத்திரங்களில் 12-வது நட்சத்திரமான உத்திரம் இவை இரண்டும் இணையும் நாள் தான் பங்குனி உத்திரம். அனைத்து மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு ஆனால் பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திற்கு தனிசிறப்புண்டு.
இந்த நன்னாளில் பக்தர்கள் முருகனுக்கு தேர் இழுத்தும், அபிஷேகம் செய்தும் அவர்களது வேண்டுதலின் நேர்த்திக்கடனை செலுத்திடுவார்கள். சரி இப்பதிவில் பங்குனி உத்திரம் வரலாறு (panguni uthiram history in tamil) மற்றும் அதன் முக்கியத்துவத்தை பற்றி படித்தறியலாமா..
பங்குனி உத்திரம் 2024 தேதி
தமிழ் மாதம் பங்குனி 11, ஞாயிற்றுக்கிழமை அன்று பங்குனி உத்திரம்.
பங்குனி உத்திரம் வரலாறு – :
சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதலாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.
இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகு செய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, மந்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா: பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதம் இருப்பார்கள்.
அதாவது பகல்பொழுது உணவருந்தாமல், இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் எடுப்பார்கள். இந்த விரதத்தை கல்யாணசுந்தர விரதம் என்றும் சொல்வார்கள்.
கல்யாணசுந்தர விரதம்:
திருமணம் தடை நீங்க பங்குனி உத்திரம் நாளில் கல்யாணசுந்தர விரதம் இருந்து சிவனை வழிபட்டால் வெகுசீக்கிரம் நல்ல வரன் அமைந்து இல்லற வாழ்வு மிகவும் மகிழ்ச்சியானதாக அமையும்.
அதாவது சிவபெருமான் அம்பாளை கரம்பிடித்த இந்த நன்னாளில் பசுவாகிய தங்கள் ஆன்மா, பதியாகிய சிவனை அடைய வேண்டும் என்பதற்க்காக பக்தர்கள் கல்யாணசுந்தர விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
தொடர்ந்து 48 ஆண்டுகள் பங்குனி உத்திரம் நன்னாளில் கல்யாணசுந்தர விரதம் இருந்து சிவபெருமானை வழிபடுவதால் அடுத்த பிறவியில் தெய்வநிலையை அடைவார்கள் என்பதும் ஐதீகம்.
உத்திரம் நட்சத்திரத்தின் சிறப்பு:
சுபகாரியங்களை பொதுவாக உத்திரம் நட்சத்திரத்தில் நடத்துவது இந்துக்களின் வழக்கம். இதன் காரணமாகவே பல தெய்வங்களின் திருமணங்கள்கூட பங்குனி உத்திரத்தில் நடைபெற்றதாகத் தெரிவிக்கின்றன ஞானநூல்கள். சரி எந்த தெய்வங்களுக்கெல்லாம் பங்குனி உத்திரம் அன்று திருமணம் நடைபெற்றது என்பதை அறியலாமா.
பார்வதி – பரமேஸ்வரர் திருமணம், ஶ்ரீராமர் – சீதை திருமணம், பரதன் – மாண்டவியின் திருமணம், லட்சுமண – ஊர்மிளை திருமணம், சத்ருக்ணன் – சுருதகீர்த்தி திருமணம், முருகப் பெருமான் – தெய்வானை திருமணம், ஆண்டாள் – ரங்கமன்னார் திருமணம், அகத்தியர் – லோபாமுத்திரை திருமணம், ரதி – மன்மதன் திருமணம், இந்திரன் – இந்திராணி திருமணம், நந்தி – சுயசை திருமணம், சாஸ்தா – பூரணை, புஷ்கலை திருமணம், சந்திரன் – 27 நட்சத்திர மங்கையர் என அனைத்துத் திருமணங்களும் பங்குனி உத்திர நன்னாளில் தான் நடைபெற்றன.
பங்குனி உத்திரம் சிறப்பு:
-
திருமகள் கல்யாணசுந்தர விரதம் இருந்து திருமாலின் மார்பில் இடம்பிடித்த நாள்.
-
கலைமகளும் பிரம்மாவின் நாவில் இந்த நாளில்தான் அமர்ந்தாள்.
-
பார்க்கவ மஹரிஷியின் மகளாக மகாலட்சுமி, பார்கவி என்ற பெயரில் பூமியில் பிறந்த நாளும் பங்குனி உத்திர நாளில் தான்.
-
உத்திர நட்சத்திரத்தில் கூடியிருக்கும் சந்திர பகவான் இந்த நன்னாளில் கலையுடன், கன்னி ராசியிலிருந்து களங்கமின்றி காட்சி தருவான். இந்த சமயத்தில் சந்திரனை வணங்கினால் குடும்பத்தில் ஏற்படும் சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
-
அதேபோல் வள்ளிப்பிராட்டி அவதரித்ததும், தர்ம சாஸ்தாவான ஸ்ரீஐயப்பன் உதித்ததும் இந்த நன்னாளில் தான்.
பங்குனி உத்திரம் நாளன்று செய்யக்கூடிய சுபநிகழ்ச்சிகள்:
பங்குனி உத்திரம் அன்று திருமண ஓலை எழுதுதல், தாலிக்கு பொன் உருக்குதல், சீமந்தம் செய்தல், புதிய பொருட்களை வாங்குதல், பூ முடித்தல், புதிய சிகிச்சை சொல்லுதல், செடி நடுதல், புதிய கோயிலில் சிலைகள் பிரதிஷ்டை செய்தல், வேலையில் சேருவது, வியாபாரம் தொடங்குவது, புதிய இடத்திற்கு மாறுவது, போர்ப் பயிற்சி மேற்கொள்வது மற்றும் நீர் நிலைகளை உருவாக்குவது போன்ற சுபகாரியங்களை செய்வதற்கு மிகவும் சிறந்த நாளாக பங்குனி உத்திரம் விளங்குகிறது. எனவே இந்த நாளில் மேல் கூறப்பட்டுள்ள சுபநிகழ்ச்சிகளை மேற்கொள்ளும்போது அனைத்து காரியங்களும் நன்மையில் முடியும்.
What’s your Reaction?
+1
+1
1
+1
+1
+1
+1
+1