விஷ்ணு விஷால், ரம்யா நம்பீசன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து 2011ஆம் ஆண்டு, மார்ச் 25ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் தான், குள்ளநரி கூட்டம்.
மதுரை என்றாலே வன்முறை கலாசாரம் என்ற பொதுப்புத்தியை மாற்றி, யதார்த்த மனிதர்களின் நம்பிக்கையை, காதலை அதன்பின் வரும் லட்சியத்தை திரையில் சொன்ன படம். இப்படத்தை ஸ்ரீபாலாஜி இயக்க, செல்வ கணேஷ் இசையமைத்து இருந்தார். லஷ்மண் குமாரின் ஒளிப்பதிவில் மதுரையின் அழகியலும் படத்தில் மிளிர்ந்தது. படமும் சூப்பர் ஹிட்டடித்தது.
குள்ளநரி கூட்டம் படத்தின் கதை என்ன?: கதையின் நாயகனான வெற்றிவேல் சண்முக சுந்தரம் எம்.பி.ஏ படித்துமுடித்துவிட்டு, சரியான வேலை கிடைக்காமல், தனது குடும்பத்தினருடன் இருந்துகொண்டு, குடும்பவேலைகளை செய்து வருகிறார். அவரது தந்தை மிகவும் ஸ்ட்ரிக்ட் ஆனவர். தவிர, வெற்றிவேல் சண்முகசுந்தரத்துக்கு அண்ணனும் அண்ணியும் அம்மாவும் கொஞ்சம் மறைமுக சப்போர்ட்டாக இருக்கின்றனர்.
ஒரு நாள் வெற்றிவேல் சண்முகசுந்தரத்திடம், அவரது தந்தை 1500 ரூபாயைக் கொடுத்து அவரது போனுக்கு ரீசார்ஜ் செய்யவேண்டும் என ஒரு பணியைக் கொடுக்கிறார். அப்போது மொபைல் கால் ரீசார்ஜ் செய்யும் கடையில், ரீசார்ஜ் செய்யும்போது தனது தந்தையின் செல்போன் எண்ணை வேகமாக சொல்கிறார். அதைப் பதிவுசெய்யும் கடைக்காரப் பெண், தவறுதலாக வேறு ஒரு செல்போன் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்துவிடுகிறார். அதன்பின்னர், அது பிரியா என்னும் பெண்ணுக்கு உரியது என அறிகிறார், வெற்றி.
அப்போது வெற்றிக்கும், பிரியாவுக்கும் ஒருவரைப் பற்றி, ஒருவர் தெரியவருகிறது. பிரியாவும் அந்தத் தொகையை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து கழிக்க முயற்சிக்கிறார்.
அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் பார்த்துக்கொள்ள முடிவு செய்கின்றனர். நேரில் பார்த்து தனது தொகையை கொஞ்சமாகப் பெற முயற்சிக்கையில், இருவருக்கும் ஒருவரையொருவர் பிடிக்கத்தொடங்கி விடுகிறது.
மெல்ல மெல்ல போனில் பேசி காதல் வளர்கிறது. பின், மதுரையின் காதலர் ஒன்றுகூடும் இடங்களான திருமலைநாயக்கர் மஹால், திருப்பரங்குன்றம் போன்ற இடங்களில் இருவரும் சந்தித்து தங்களது காதலை வளர்த்துக் கொள்கின்றனர்.
அதன்பின், ஒரு நாள் பிரியா தனது தந்தையிடம், தனது காதலைப் பற்றி தெரிவிக்கிறார். மேலும், ஒருநாள் வெற்றியை, தனது தந்தையை வந்து பார்க்கும்படி கூறுகிறார். வெற்றியும் ராணுவப்பேட்டையில் இருக்கும் பிரியாவின் தந்தை சேதுராமனை போய் பார்க்கிறார். அப்போது சேதுராமன் தன்னுடைய மகளைத் திருமணம் செய்துகொள்ள நினைப்பவர்கள் ராணுவத்திலோ, குறைந்தபட்சம் காவல்துறையிலோ பணிசெய்யவேண்டும் என்று நினைப்பதாக கூறுகிறார். அதனால், வெற்றியிடம் ராணுவத்திலோ, குறைந்தபட்சம் தமிழ்நாடு காவல்துறையிலோ பணியைப் பெற்றால் தன் மகள் பிரியாவை, தங்களுக்கு மணமுடித்து கொடுப்பதாக வாக்கு கொடுக்கிறார்.
அதன்பின், காவல்துறையில் ஆள் எடுக்கும் இடத்துக்கு முதல் நாள் இரவு செல்லும் வெற்றிக்கு, தங்க இடம் கூட அந்த நகரில் கிடையாது. நண்பர்கள் தெரியாது. அப்போது காவல்துறை தேர்வுநடக்கும் மைதானத்துக்கு அருகில் படுத்துத் தூங்குகின்றார். அப்போது முருகேசன் மற்றும் அங்கிருக்கும் சிலர் நண்பர்களாகி விடுகின்றனர். அவர்கள் தமிழ்நாடு காவல்துறையில் இருக்கும் தேர்வுகளைப் பற்றி, வழிகாட்டுகின்றனர். தேர்வுக்குழுவில் நடக்கும் மட்டமான அரசியலைத் தாண்டி, வெற்றி எப்படி வைராக்கியமாக செயல்பட்டு, போலீஸ் செலக்ஷனில் ஜெயித்தார், காதலியுடன் எப்படி ஜோடிசேர்ந்தார் என்பது படத்தின் மீதிக்கதை.
இப்படத்தில் வெற்றிவேல் சண்முகசுந்தரமாக விஷ்ணு விஷாலும்; பிரியா சேதுராமனாக ரம்யா நம்பீசனும், சேதுராமனாக பரமசிவமும், நண்பர் முருகேசனாக சூரியும், லெனின் என்னும் கதாபாத்திரத்தில் அப்புக்குட்டியும் நடித்துள்ளனர். நண்பர் நசீராக ஹரி வைரவனும் நடித்துள்ளனர்.
இப்படத்துக்கு வெண்ணிலா கபடிக்குழு படத்திற்கு இசையமைத்த வி.செல்வகணேஷ், இசையமைத்திருந்தார். இப்படத்தில் நா.முத்துக்குமார் வரியில் கார்த்திக் மற்றும் சின்மயி பாடிய விழிகளிலே விழிகளிலே பாடல் மிகப்பிரபலம் அடைந்தது.
மதுரையின் மிடில் கிளாஸ் குடும்பத்தை, அதன் அழகியல் குறையாமல் காட்சிப்படுத்தியமைக்காகவே, படம் வெளியாகி 13 ஆண்டுகளைக் கடந்தாலும் குள்ளநரிக்கூட்டம் படத்தை, எப்போது பார்த்தாலும் படம் போர் அடிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1